Tuesday 25 October 2011

தீபாவளி நிகழ்ச்சிகள்-அரைச்ச மாவை அரைப்போமா?

தொலைக்காட்சியில் எந்த அலைவரிசைக்கு சென்றாலும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல். விதி விலக்காக தெரிவது பொதிகை மட்டுமே. இந்த நிகழ்ச்சி பட்டியலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய், சன், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகளின் format ஒன்று தான். காலை மங்கள இசை, எதாவது நடிகர் அல்லது நடிகையின் பேட்டி, தீபாவளியன்று திரைக்கு வரும் படம் பற்றி அதன் நடிகர், நடிகை, இயக்குனருடன் ஒரு நிகழ்ச்சி, பட்டிமன்றம், மீண்டும் நடிகர்/நடிகை பேட்டி, சிறப்பு திரைப்படம் etc etc..

இந்த நிகழ்ச்சிகளைத் தான் பார்ப்பேன் என்று நாமெல்லாம் என்ன சங்கல்பமா செய்து கொண்டிருக்கிறோம்? கொஞ்சம் மாறுதலான நிகழ்ச்சிகளை அளித்தால் என்ன? உதாரணமாக தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மக்கள் அதை எப்படி கொண்டாடுகிறார்கள், அவர்கள் தீபாவளி கொண்டாடும் கதை என்ன என்று ஒரு கவரேஜ் செய்யலாம். மருத்துவம், போலீஸ் போன்ற துறையினருக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை விடுமுறை எதுவும் இல்லை. சில பிரபல மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களின் குடும்பத்தினரை பிரத்யேகமாக பேட்டி காணலாம். இந்த பேட்டியின் வாயிலாக அவர்கள் பணியில் உள்ள தங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறலாம்.

பார்வை இழந்தவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் போன்றவர்கள் பிரபலங்களுடன் சில மணி நேரம் தீபாவளி கொண்டாட வழி செய்து அதை படமாக்கி ஒளிபரப்பலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்று அறிஞர் பெருமக்களை வரவழைத்து அதைப் பற்றி பேசச் செய்து தமிழ் மறந்த இன்றைய தலைமுறையினருக்கு இலக்கிய அறிமுகம் செய்யலாம். இதை மட்டுமே ஒளிப்பரப்பினால் வருமானம் தேறாது என்பது உண்மைதான். இருந்தாலும் இப்படி ஒன்றிண்டு நிகழ்ச்சிகள் தயாரித்து ஒளிபரப்புவதில் தவறில்லையே?

1 comment:

Vasu. said...

Thanks Raja. Deepavali Wishes to you..