Monday, 10 December 2012

எதை அணிந்து கொண்டு குடிக்கலாம் ?

ஞாயிறு தினமலர் நாளிதழுடன் வரும் வாரமலர் புத்தகத்தில் இதை படித்தேன்:

"உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், "கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான். நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, "மச்சான்ஸ்...' என்றது.

கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன. உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.

இதை எப்படி ஆசிரியர் வெளியிட்டார் என்று தெரியவில்லை. சரக்கு அடித்தால் லுங்கிக்கு பதிலாக பெர்முடா அணியுங்கள் என்று ஒரு குடிமகன் பிற குடிமகன்களுக்கு அறிவுரை தருகிறார். அதை ஒரு நாளிதழ் பிரசுரிக்கிறது. கலி காலம்.

Saturday, 8 December 2012

வலியின் வரிகள்

Viktor Frankl எழுதிய "Man's Search For Meaning" புத்தகத்தை படிக்க நேர்ந்தது. Neurology மற்றும் Psychiatry துறை பேராசிரியராக வியன்னா பல்கலைகழகத்தின் மருத்துவப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை பணிபுரிந்தார் Frankl. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசி ஆட்சி ஏறத்தாழ அறுபது லட்சம் யூதர்களை Concentration மற்றும் Extermination camps மூலம் கொன்று குவித்தது.ஆஸ்திரியாவில் தன் மனைவியுடன் கைது செய்யப்பட்டு Auschwitz Concentration கேம்பிற்கு மாற்றப்பட்டார் Frankl.அடுத்த மூன்று ஆண்டுகள் Auschwitz, Dachau மற்றும் வேறு சில Concentration கேம்ப்களில் இருந்தார் Frankl. Holocaust என்று அழைக்கப்படும் இந்த கொலைகளில் இருந்து தப்பிய ஒருவர் தான் Frankl.

Man's Search For Meaning அவரது மூன்றாண்டு கேம்ப் அனுபவங்களை பற்றியது. மனித வாழ்க்கையில் எத்தனை துன்பம் நேர்ந்தாலும், மனிதன் தன் வாழ்வின் அர்த்தத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்கிறார் Frankl. புத்தகத்தில் பல இடங்களில் ஜெர்மன் வேதாந்தி நீட்ஷேவின் எழுத்துக்களை குறிப்பிடுகிறார் Frankl. "He who has a Why to live for can bear almost any How" என்னும் நீட்ஷேவின் வரிகளை, எந்த நிலையிலும் வாழ்வாசை கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

கூட்டம் கூடமாக விஷவாயு பீழ்ச்சி கேம்பில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள், இரக்கமற்ற ஹிட்லரின் கைகூலிகளும் அவர்கள் கேம்பில் இருந்தவர்களை நடத்திய விதமும் பற்றியெல்லாம் படிக்கும் போது மனம் கனக்கிறது. வாழ்வில் விரக்தி அடைந்த பலருக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது இந்த நூல்.

Monday, 12 November 2012

காசி - 2

காசி நடப்பதற்கு ஏற்ற ஊர். சிறிய தெருக்களில் நடந்தே ஊரை தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும் முதல் முறை என்பதால் வழிகாட்டி ஒருவரின் உதவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் தங்கியிருந்த விடுதியில் பனராஸ் ஹிந்து பல்கலையில் வணிகவியல் படிக்கும் குல்தீப் என்னும் இளைஞன் நட்பானான். "நீங்கள் விரும்பினால் பணம் கொடுங்கள், எனக்கு வழிகாட்டுவது பிடிக்கும், உங்களுடன் வருகிறேன்" என்றான். முகல்சராய் வந்து இறங்கி காசி சென்றடைய இரவு 9 ஆகி விட்டது. "மயானங்களை பார்க்க படகு தான் சிறந்த வழி. காலை ஆறு மணிக்கு விடுதிக்கு வந்து உங்களை படகோட்டியிடம் அழைத்துச் செல்கிறேன். நான் உள்ளூர்வாசி என்பதால் என்னால் உங்களுக்கு பேரம் பேச உதவ முடியாது. நீங்களே பேசிக் கொள்ளுங்கள்" என்றான் குல்தீப்.

சொன்னபடி ஆறு மணிக்கு விடுதியில் இருந்தான் குல்தீப். விடுதியில் இருந்து வெளியே வர மழை தூர ஆரம்பித்தது. காசியில் உள்ள அனைத்து படித்துறைக்கும் படகில் செல்ல ஆறாயிரம் ஆகும் என்றான் படகோட்டி. எனக்கு மணிகர்ணிகா மற்றும் ஹரிஷ்சந்திரா படித்துறைகள் பார்த்தால் போதும் என்றேன். அதற்கு நாலாயிரத்து ஐநூறு ஆகும் என்றான். குல்தீபிடம் நடந்தே செல்வோம் என்றேன். அது நல்ல முடிவு என்று பின்னர் புரிந்தது. ஹரிஷ்சந்திரா காட்டில் ஒரு பிணம் எரிக்க தயாராய் இருந்தது. மழை நன்றாக பிடித்துக் கொள்ள, இப்போது சிதையை எரிக்க மாட்டார்கள் என்றான் குல்தீப். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து மணிகர்ணிகா அமைந்திருந்த நகரின் மையப் பகுதிக்கு வந்தோம்.

மணிகர்ணிகாவில் இரண்டு சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பிணம் எரிக்கும் நபர், அருகில் சென்று பாருங்கள் என்றார். சதை மொத்தமும் எரிந்து எலும்புகள் தெரியும் காட்சியை பார்க்க முடியவில்லை என்னை தந்தையால். "இங்கிருந்து செல்வோம்" என்றார். இரண்டு நிமிடத்தில் கங்கையை அடைந்து குளித்தோம். நாங்கள் மூன்று முங்கு போட்டு எழவும் சூரியன் வெளிவரவும் சரியாக இருந்தது. நான் "ஆதித்ய ஹ்ருதயம்" சொன்னேன். அங்கிருந்து நேராக விஸ்வநாதர் கோயில் சென்று தரிசித்தோம். பின்னர் விடுதிக்கு வந்து உடை மாற்றி ஹனுமான் காட்டில் இருந்த காஞ்சி காமகோடி மடத்தை சென்று பார்த்தோம். அங்கிருந்து விடுதிக்கு வரும் வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டோம். மாலையில் நடக்கும் கங்கா ஆர்த்தி அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. விடுதிக்கு வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விடைபெற்றான் குல்தீப்.

காசியில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி கங்கா ஆர்த்தி. கங்கையை கடவுளாக வரித்துக் கொண்டு அதற்கு செய்யப்படும் பூஜை தான் கங்கா ஆர்த்தி. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்த பூஜையை ஒவ்வொரு நாளும் மாலை செய்கிறார்கள். நூறு ரூபாய் கொடுத்து ஒரு படகில் இடம் வாங்கித் தந்தான் குல்தீப். கங்கையில் நின்று கொண்டிருக்கும் படகில் அமர்ந்து இதை ரசிக்க வேண்டும்.

இரவு காசியில் இருந்து அலகாபாத் பயணம். சென்னையில் இருந்து பாண்டி செல்லும் தூரத்தை சென்றடைய ஐந்து மணி நேரம் ஆயிற்று. சாலை நிலை அப்படி. அந்த சாலையை உபயோகிக்க வரி வேறு. காலையில் எழுந்து திரிவேணி சங்கமம் சென்றோம். கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடம். இரண்டு நதிகளின் நிறமும் தனியாக தெரிகிறது. கரையில் இருந்து சங்கமிக்கும் இடம் சென்ற வர படகு கூலி ரூபாய். படகோட்டி தமிழ் நன்றாகவே பேசுகிறேன். பெரும்பாலும் ஐயர் கூட்டம் வருவதால் பார்த்த உடனே மாமா, மாமி என்கிறான்.அங்கே இருந்த படே ஹனுமான் கோயில் சென்றோம். ஹனுமான் ரங்கநாதர் மாதிரி படத்துக் கொண்டிருந்தார். மிக பெரிய ஹனுமான் சிலை. மேலிருந்து பார்க்க வேண்டும். வடக்கே கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கங்கையை வழிபடும் விதம் பரவசப்படுத்துகிறது. அவர்களுக்கு கங்கை தாய். நம்மூர் ஆடிப்பெருக்கு போல் கங்கைக்கு தினம் பூ, விளக்கு, பழம் என்று பூஜை.

"Male Chauvinism" வடக்கில் அதிகம் என்று தோன்றுகிறது. தங்களுக்கு மட்டும் டீ வாங்கிக் கொள்ளும் கணவன்மார்கள். அவர்களுக்காக திரிவேணி கரையிலேயே அடுப்பு கொளுத்தி சப்பாத்தி செய்யும் மனைவிகள். பீடி பிடித்துக் கொண்டிருக்கும் கணவன் நலத்திற்காக திரிவேணியில் அவனை அமர வைத்து பூஜை. அலகாபாதில் இருந்து பீகார் வழியாக கொல்கத்தாவிற்கு ரயில் பயணம். பீகார் உள்ளே செல்ல செல்ல ஏழ்மை செழுமை அடைகிறது. கொல்கத்தாவிற்கு வேலை தேடி வரும் பீகார் இளைஞர்கள் ரயிலை மொத்தமாக ஆக்கிரமித்து கொள்கிறார்கள். இரவு பயணம் முழுதும் டீ மற்றும் புகையிலை தான் பக்கத்துணை அவர்களுக்கு. காலை நாலு மணிக்கு கொல்கத்தா வந்தடைந்தேன். அங்கே இரண்டு நாள் இருந்து விட்டு சென்னை வந்தேன்.