பாரத ரத்னா எம்.ஜி.ஆர் இறந்தது 25-12-1987.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி , ப்ரெசிடென்ட் ஆர்.வெங்கட்ராமன், வைஸ் ப்ரெசிடென்ட் ஷங்கர் தயாள் ஷர்மா மூவரும் தனி விமானங்களில் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள், இது போன்று இந்த மூன்று பதவியில் இருப்பவர்களில் ஒரே நேரத்தில் டெல்லியை விட்டு கிளம்பியதில்லை.
மத்திய அரசு தன் எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்தது, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா , கோவா , ஹரியானா,மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களும் விடுமுறை அறிவித்தன.
ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் முதல்வர் குண்டு ராவ், காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா , குஜராத் முதல்வர் அமர்சிங் சௌத்ரி, முன்னாள் குடியரசு தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீலங்கா அரசின் சார்பில், மந்திரி தொண்டைமான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஹிந்தி நடிகர்கள் திலிப்குமார், தேவ் ஆனந்த, பிரான்,தர்மேந்திரா,ஹேமாமாலினி , பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் , நாகேஸ்வரராவ் , ராஜ்குமார் மற்றும் தமிழ் தெலுகு கன்னட மலையாள திரையுலகத்தினர் பலர் வந்திருந்தனர்.
ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் , மலேசியா ரஷ்ய நாடுகளின் பார்லிமென்ட்களில் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன.
திருச்செந்தூர், திருப்பதி, திருவேற்காடு , பார்த்தசாரதி பெருமாள், காஞ்சிபுரம் உள்பட பல கோவில்களில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடைய கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா , கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரம் ரசிகர்கள் அவர் இறந்த துக்கதிற்காக மொட்டை அடித்துக்கொண்டனர்.
இந்தியாவின் எல்லா மாநில சட்ட சபைகளிலும் அவர் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தூர்தர்ஷன் ,தமிழகத்தில் செய்த முதல் நேரடி ஒளிபரப்பு,அவர் இறுதி யாத்திரைக்குதான்.
தமிழக அமைச்சர்கள் தவிர, பூட்டா சிங், நரசிம்ம ராவ் ,பா.சிதம்பரம் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.இறுதி ஊர்வலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். டிசம்பர் 25, 1987 மதியம் 1:20க்கு இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. ராணுவ வண்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது, அண்ணா சாலை , ஜெமினி, கதீட்ரல் ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் கடற்கரைக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. வழி நெடுக ஹெலிகாப்ட்டர் மூலம் எம்.ஜி.ஆர் உடல் மீது மலர் தூவப்பட்டது.
இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் சுமார் ஐந்து லட்சம் தோட்ட தொழிலாளர்கள் துக்கம் அனுஷ்டித்து பணிக்கு செல்லவில்லை. N.T.ராமராவ், குண்டுராவ் , டீ.ஜி.பி ராஜேந்திரன் , போலீஸ் கமிஷனர் தேவாரம் ஆகியோர் இராணுவத்தினரோடு சேர்ந்து கயிற்றை பிடித்து அவரது உடல் அடங்கிய சந்தன பெட்டியை கீழே இறக்கினார்கள். வழி நெடுக கட்டிடங்களில் இருந்து பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
கூட்டத்தின் நெரிசலில் ஐந்து பேர் சிக்கி இறந்தனர். எம்.ஜி.ஆர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில் இறந்தோர் நான்கு பேர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டோர் 25 பேர்.
எம்.ஜி.ஆர் இறந்தபின் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.
-எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் நூலில் இருந்து