Showing posts with label ஓரினச்சேர்க்கை. Show all posts
Showing posts with label ஓரினச்சேர்க்கை. Show all posts

Friday, 10 July 2009

ஓரினச்சேர்க்கை - ஒரு எதிர்வினை

வாசு,
இந்திய மாதிரி ஒரு பழங்கால நாடு தனது நூற்றாண்டு தூக்கங்களை விட்டு சோம்பல் முறிக்க ஆரம்பித்து இருக்கு, அதுல போய் மண்ணை போடலாமா? முதலில் ஒரு பின்னூட்டமாக எழுதலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் பின்னூட்டம் மிகவும் பெரியதாக போகவே , ஒரு எதிர்வினை.

ஆனால் கவலை படவேண்டாம், இது இஸ்லாமிற்கு எதிரானது, அதனால வோட்டு வங்கி அரசியல் இதனை சட்டமாக்காது.

திருமணத்தில் ஆண் பெண் என்பதற்கு பதில் ஆண் ஆண் அவ்வளவுதான், இதனால், திருமண சான்றிதழ் , டிவோர்ஸ் எப்படி குடுப்பது, ரேஷன் கார்ட் எப்படி குடுப்பது, இதை குடும்பம் என்று எப்படி சேர்ப்பது இதெல்லாம் பிரச்சினையே அல்ல , சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இதே கேள்விகளை மற்றும் நீ சொல்லும் கல்லால் அடிப்பார்கள் போன்ற விஷயங்களை ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்யும் மக்களை நோக்கி கேட்டார்கள், இப்போதும் கல்லால் அடிக்காமல் சொல்லால் அடிக்கிறார்கள், சில சமயம் கல்லாலும் அடிக்கிறார்கள், ஆனால் அதையும் மீறி காதல் திருமணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

இந்த பாலியல் வறட்சி மற்றும் கல்லால் அடிக்கும் குணம் காரணமாகத்தான் தமிழகமும் இந்தியாவும் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான கள்ளக்காதல் கொலைகளை சந்தித்து வருகிறது.வெளிப்படையாக விவாகரத்து செய்தால் கல்லால் அடிப்பார்கள் என்று ,தெரியாமல் கொலை செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய irony கேலிக்கூத்து.வளர்ச்சி அடைந்த நாடுகளில் கள்ளகாதல் கொலைகள் மிக மிக குறைவு ஏன்? பிடிக்கவில்லை என்றால் நண்பர்களாக பிரியும் சுதந்திரத்தினால்.

மேலும் இது ஒரு உணர்வு, இப்படி கல்லால் அடித்தே அரவாணிகளை பிச்சை எடுக்க வைத்தோம், விதவை மறுமணத்தை எதிர்த்தோம் , சதியில் தீமூட்டினோம், கைம்மை நோன்பு எடுக்க எடுக்க வைத்து ஒரு வேளை உப்பில்லா உணவும், படுக்க தலைக்கு மரத்தாலான மனையை தந்தோம்,முதியவர்களை பாலுறவில் இருந்து தள்ளி வைத்தோம், இளம்பெண்களை கிழவர்களுக்கு கட்டி கொடுத்தோம், காதல் ஒரு முறைதான் வரும் என்று வசனம் பேசி இரண்டாம் காதலை கள்ளக்காதல் ஆக்கினோம்

நீ சொல்வதில் தற்கால சிக்கல்களில் முக்கியமான ஒன்று வாடகைக்கு வீடு கிடைப்பது மற்றும் அது தொடர்பான சமுதாய சிக்கல்கள் , அது மட்டுமே மக்களின் மனப்பாங்கு பொருத்த கேள்வி , தீர்க்க வேண்டிய பிரச்சினை. அதற்கு அரசு, மீடியாக்கள் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களின் ஆதரவும் இருக்க வேண்டும்.தமிழ்நாடு மாதிரி ஒரு கடுமையான பாலியல் வறட்சி இருக்கும் , கட்டுபெட்டி பிரதேசத்தில் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வீடு தேட மாட்டார்கள்(ஏதாவது மேன்ஷனில் தங்கிக்கொள்வார்கள்! :-)) )

இதை சட்டமாக்குவதில் ஒரு மிகப்பெரிய ஆதாயம் என்னவென்றால் , எய்ட்ஸ் நோயை தடுப்பது, இப்போது ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது அதனால் அவர்களுக்கு பாலியல் நோய் வந்தால் அதற்கு மருத்துவரை நாட முடியாது.மாட்டர்கள் , எங்கே வெளியே தெரிந்து விடுமோ என்ற பயம்.அந்த பயத்தை இப்போது குறைக்கலாம் (அதாவது சட்டம் வந்தால்).இதன் மூலம் ஓரினச்சேர்க்கை மக்களின் பாலியல் நோய் மட்டுபடுத்தபடலாம்.இதுதான் அரசாங்கம் இந்த முடிவை எடுக்க வைக்கும் அசல் காரணம், 1860-இல் போட்ட இந்த சட்டம் போட்டு இருக்கும்போது aids இருந்து இருக்காது.உலகின் மிக அதிக Aids நோயாளிகள் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, கல்லால் அடிக்கும் புனிதர்களில் இந்த நோயாளிகள் எப்படி உருவாகுகிறார்கள்?

மேலும் , நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் வாசு? சென்னை புழல் சிறையில் ஒருவன் ஆறு மாதம் இருந்து வந்தால் அவனை நான்கு பேராவது வன்புணர்ச்சி செய்து இருப்பார்கள்,அதில் போலீஸ்காரர்களும் அடக்கம், இதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு முன்பே ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் செய்தி வந்தது.இது சட்டமாக வந்தால்,ஆண்கள் சிறைகளில் காண்டம் இயந்திரம் வைக்கலாம். ஒருவன் ஒரு சிறு தவறு செய்து ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்து அதனால் அவனுக்கு Aids வந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமை.வாழ்க்கையே நரகம் அல்லவா?

அறிவியல் பூர்வமாக பார்த்தால் ஓரின சேர்க்கையில் இடுபடுபவர் ஜீனில் உள்ள கோளாறு என்று தெரிகிறது, அதாவது அவன் autism (இதற்கு தமிழில் சரியான வார்த்தை தெரியவில்லை , கற்கும் குறைபாடு என்று சொல்லலாம்) குழந்தையை போன்று, ஆடிசம் உள்ள குழந்தைகளையே 'நீ சராசரியாய் ஏன் இல்லை' எனக்கேட்டு நாம் கொடுமைபடுத்தி வருகிறோம் (ஆமிர் கானின் தாரே ஜமீன் பர் படத்தில் இதனை காணலாம்.), ஓரினச்சேர்க்கையை பற்றி கேட்பானேன் இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளை அடிப்பதும் இதே கல்லால் அடிக்கும் பார்வைதான்.

ஆக,

இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளை அடிப்பது, எந்த பொதுக்கழிப்பிடத்திலும் ஊனமுற்றவருக்கு எந்த வசதியும் செய்யாமல் வைத்திருப்பது, பார்வையற்றவர்கள் படிக்க எந்த ஜனரஞ்சக பத்திரிக்கை இல்லாமல் இருப்பது, குழந்தைகளுக்கான தனியான சினிமா இல்லாமல் இருப்பது, எல்லோரும் டாக்டர், அல்லது இன்ஜினியர் மட்டும்தான் படிக்கவேண்டும் என்று நினைப்பது, தன்னுடைய மதம்தான் உலகில் இருக்க வேண்டும் என்று நினைப்பது, ஆணாக அல்லது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது,எல்லோரும் திருமணமான இரண்டாவது வருடத்தில் குழந்தை பெற்றே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது,இவை எல்லாம் வளர்ச்சி அடையாத சமுதாயத்தின் குறிகள். எல்லாமே சராசரியாய் இருப்பவர்க்கு சராசரியாய் நடக்கும் சம்பவங்கள், சராசரியாய் இல்லாமல் இருப்பவர்க்கு கண்டங்களாகவும் வெளியே சொல்ல முடியாத அவமான சின்னங்களாகவும் இருக்கின்றன. இது போன்ற செய்கைகளே நாம் குழந்தைதனமாக மந்தைத்தனம் உள்ள, பிற்போக்கான, சக மனிதரின் துயரை பற்றி நினைக்க மறுக்கும், தன்னை சுற்றி நிகழ்வதை பார்க்க மறுக்கும், ஒற்றை தன்மையை பறை சாற்றும்,மாற்று கருத்தை மறுக்கும்,சிந்திக்கும் முறையை காட்டுகிறது.தமிழ்மணத்தில் உன்னை போல பல பேர் எழுதி இருப்பதை காணவும் முடிகிறது.இது ஒரு சிறுவர் விடுதியில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவனை மற்ற சிறுவர்கள் எள்ளி நகைப்பது போல இருக்கிறது.

சராசரியாய் இருப்பது ஒரு வரம் , ஆனால் சராசரியாய் இல்லாமல் இருப்பது ஒரு சாபம் அல்ல.