Showing posts with label கலாச்சார தலிபான்கள். Show all posts
Showing posts with label கலாச்சார தலிபான்கள். Show all posts

Thursday, 25 June 2009

கான்பூர் ஜீன்ஸ்

சில நாட்களுக்கு முன்பு , கான்பூர் நகரில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் ஜீன்ஸ் அணிய தடை விதித்தது கான்பூர் பலகலை கழகம்.இப்போது உத்திரபிரதேச அரசு அந்த தடையை ரத்து செய்து உத்திரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதை விட மோசமான தடைகளை தமிழ்நாடு அண்ணா பல்கலை கழகம் பின்பற்றுகின்றது , அதை தமிழக அரசும் ஆமோதித்துள்ளது.

பின்தங்கிய உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு மன நிலை கூட 'முன்னேறிய' தமிழ்நாட்டில் இல்லை, ஒரு கலாசார தலிபான்கள் நிறைந்த பிரதேசத்தில் வாழும் உணர்வு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு Dark color T-shirt அணிந்ததாக ஒரு வட இந்திய மாணவனை சத்யபாமா கல்லூரி சஸ்பெண்ட் செய்தது, அதனை எதிர்த்து அந்த மாணவனின் தந்தை அந்த கல்லூரியில் இருந்தே டி.சி வாங்கி கர்நாடகாவில் உள்ள வேறு ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டார்.

ஆனால் தமிழக அப்பாக்களும் , மகன்களும் மிகவும் ஒழுக்கமானவர்கள் , நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள் (மகள்களையும் அம்மாவையும் பற்றி கேட்பானேன்) படிப்புதான் முக்கியம் என்று இருப்பவர்கள் , நியாயவான்கள் , எனவே எந்தவித dress code கொடுத்தாலும் அதை கடைப்பிடிப்பவர்கள். நாளைக்கே பெண்கள் சேலையும் ,ஆண்கள் முழுக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றாலும் அதனையும் செய்வார்கள். Globalization மற்றும் IT வேலை வாய்ப்பு வந்து இந்த மந்தை தனத்திற்கு ஆமாம் சாமி போட வைத்திருக்கிறது மக்களை.

தமிழக கல்லூரிகளில் மிகக்கேவலமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றது, கல்லூரி அளவில் பெண்களும் ஆண்களும் பேசக்கூடாது என்ற விதியும், மீறினால் அபராதமும் இருக்கும் அவலமும் இருக்கின்றது.இந்த கேவலங்கள் எல்லாம் நல்லது என்று சொல்ல பழமை கூட்டமும், அதனை ஆதரிக்க கலாசார தலிபான்கள் நிறைந்த குண்டர் படைகளும் முழு அளவில் இருக்கின்றது.

முற்போக்கு, திராவிட, தேசிய கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.கெட்ட கேட்டிற்கு பெரியார் வழி வந்த திராவிட கட்சிகள் வேறு.சில நாட்கள் முன்பு 'கல்வித்தந்தை' ஜேப்பியாரை மாணவர் அடித்து விரட்டியது இம்மாதிரி extreme disciplinary actions என்பதால்தான்.கல்லூரி அரசியல் ரவுடிகளிடம் இருப்பதால் , படிக்காத முட்டாள்களாகிய அந்த சமுதாய பெரிய மனிதர்கள் கல்லூரியின் தரத்தை ஆண் பெண் உறவில் மட்டுமே பார்க்க முடிகிறது.

மாணவ மாணவியரின் ஒழுக்கத்தை பேணுவது அரசியல் ரவுடிகள், இந்த முரண்பாட்டை எந்த பத்திரிகைகளும் கேட்காது, ஆக , பத்திரிக்கைகள் , அரசு, பெற்றோர், அரசியல் ரவுடிகள் என்று எல்லா தரப்பும் ஆண் பெண் உறவில் , உடையில் , ஒரே நிலைப்பாடு கொண்டு இருப்பதை காணலாம்.

இது ஒன்றும் வித்தியாசமான விஷயமில்லை, சவுதி அரேபியாவிலும் இதை பார்க்கலாம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இங்கே இதை ஜனநாயகம் என்ற பெயரில் செய்கிறார்கள். மேலும் சினிமா என்ற ஆபாச களஞ்சியத்தையும், interner-இல் வரும் pornography-களையும் இந்த கலாசார தலிபான்கள் கண்களுக்கு தெரியவே தெரியாது. சரி இண்டேரநெட்டாவது ஒரு பொட்டிக்குள் இருப்பதால் இந்த கலாச்சார போலீஸ் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதாக வைத்துக்கொண்டாலும், மிக ஆபாசமான தமிழ் சினிமாவை இவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு , அதை இருட்டறையில் ரகசியமாக பார்க்கிறார்கள்.

ஆக இருட்டறையில் , மற்ற மாநிலக்கரர்கள் ஆபாசமாக ஆடுவதை பார்க்கலாம், ஆனால் தமிழக கல்லூரிகளில் Jeans போன்ற உடைகளுக்கு கூட அனுமதி இல்லை.இப்படி

கலாச்சார தலிபான்கள் மிரட்டி நடத்தும் கல்லூரிகள் ,
ஏன் என்று கேட்க ஆளில்லாமல் இருக்கும் அரசு கல்லூரிகள்,
ஆளை வெட்டி போடும் ரவுடி கல்லூரிகள்

(மிகுந்த புத்திசாலிகள் படிக்கும் கல்லூரிகளை விட்டு விடுவோம்!)

இவைதான் தமிழக கல்லூரிகளின் வகைகள்.கல்லூரி முடிந்தும் ஒருவன் பள்ளி மாணவனாகத்தான் வெளியே வருகின்றான்,வருகின்றாள் மன முதிர்ச்சி இல்லை, தெளிவு இல்லை, ஏதோ சம்பாதிக்க கற்று கொடுக்கும் ஒரு இயந்திர சாலையாகத்தான் கல்லூரிகள் இருக்கின்றன.