Thursday, 28 March 2019

சீமான்

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பரிணாம வளர்ச்சியாகத்தான் நான் சீமானை பார்க்கிறேன். நான் சீமானின் பேச்சு வந்தமைக்கு எப்போதும் ரசிகன் இங்கே நான் சொல்வது அவரது கருத்து பற்றிய விமர்சனமே.

Video:

https://www.youtube.com/watch?v=SRHuv7vWrWY

இந்த பேச்சில் 11:38 - 12:20 வரைக்குமான உரைக்கு மட்டும் இந்த பதில்.

சீமான் மிகச்சிறப்பாக பேசுகிறார் அவர் பொய் பேசவில்லை ஆனால் பாதி உண்மையை பேசுகிறார் அது பொய் பேசுவதை விட ஆபத்தாய்  ஒரு வித போலி அறிவார்ந்த தன்மையுடன் (Pseudo Intellectualism) இருக்கிறது . Disingenuous என்பது  இன்னொரு பதம்..

அவர் குடியரசு தலைவர் பற்றி பேசுகிறார் . குடியரசு தலைவர் ஒரு அலங்கார பதவி . அது பண்டைய 'அரசர் ' பதவியை போன்றது ஆனால் அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. அவர் 'குடி அரசர்' ஆனால் மக்களாட்சியில் அரசர் என்ற பதவி அதிகாரத்துடன் இருக்க கூடாது அதே சமயம் ஆளும் கட்சியின் கேபினெட்  இல்லாத சமயங்களில் (மற்றும் ஒரு அரசு வரும் வரை) குடியரசு தலைவர் அதிகாரத்துடன் இருப்பார் ஆனால் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது.அதாவது புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது, அதற்கு நிதி ஒதுக்க முடியாது , சட்டங்களை இயற்ற உத்தரவு போட  முடியாது.

Under the draft constitution the President occupies the same position as the King under the English Constitution. He is the head of the state but not of the Executive. He represents the Nation but does not rule the Nation. He is the symbol of the Nation. His place in the administration is that of a ceremonial device on a seal by which the nation's decisions are made known.


DR. B.R.Ambedkar

 (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D#%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)

இப்படி இருக்கும் ஒரு பதவிக்கு ஒரு தேர்தல் தேவையா ? அதனால் என்ன பயன்?  அதன் மூலம் இந்தியாவிற்கு என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும். அப்படி ஒரு தேர்தல் நடந்து இருந்தால் இதே சீமான் 'எந்த முடிவும் எடுக்க முடியாத பதவிக்கு தேர்தல் ஒரு கேடா ?' என்று கேட்டு இருப்பார்.


ஆனால் இந்த கூட்டத்தில் இது ஒரு புரட்சிகர கேள்வி.

இந்த பேச்சில் 10:50 - 11:25 வரைக்குமான உரைக்கு  இந்த பதில்.

அதே போல் மாநிலங்கவை உறுப்பினர் .. நாம் தேர்ந்து எடுக்கும் உறுப்பினர்களே மாநிலலங்களவை உறுப்பினரை தேர்ந்து எடுக்கின்றனர் அது தேர்ந்தெடுத்த அரசுக்கு மக்கள் கொடுக்கும் அதிகாரம் . சில சமயம் பிரதமர் / கேபினெட் உறுப்பினர்கள் விரும்பும் அங்கத்தினர் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அவர்களை பதவியில் உட்கார வைக்கும் அதிகாரம். அது உண்மையில் 'நிபுணர்களை' பதவியில் உட்கார வைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது (துறை சார் நிபுணர்களால்  குவார்ட்டர் பிரியாணி சரியாக பங்கு வைக்க முடியாது என்பதால்).அப்படி கேவலமான உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பது பிடிக்கவில்லை என்றால் தாராளமாக அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீர்கள் , எம்.எல்.ஏ இல்லாத பட்சத்தில் அவர்களால் யாரையும் ராஜ்ய சபாவிற்க்கு அனுப்ப முடியாது.

இந்த கூட்டத்தில் இது இன்னொரு புரட்சிகர கேள்வி.

இதற்கு வாய் பிளக்க சில பேர்.

ஒரு கட்சியை திட்டலாம் (பா .ஜ .க , தி.மு.க அ தி மு க போல) அது ஒரு அரசியல் பேச்சு ஆனால் அதே வேகத்தில் அமைப்பை குறை கூறும்போது கொஞ்சம் யோசித்து கூற வேண்டும்.

Monday, 4 March 2019

இஷா யோகா - தமிழ் போராளிகள்

இஷா யோகா மேல் தமிழ் இணைய போராளிகளுக்கு என்ன கோபம்?

வேறு ஒன்னும் இல்லை அது இந்தியதை சொல்கிறது..இந்து மதம் என்னும் பண்பாட்டு வெளியை உறுதி செய்கிறது ..தமிழ் தேசியம் இந்திய தேசியத்திற்கு எதிரானது என்று பகிரங்கமாக கூவும் இந்த மாநிலத்தில் அது கண்ணை உறுத்துகிறது ..இல்லை என்றால் 'உபவாச ஜெபத்திற்கு' பொங்காதவர்கள் இதற்கு பொங்குவது ஏன்? சும்மா காடு மலை என்று உதார் விட வேண்டாம் பொதுவாக இணைய போராளிகள் இடம் ஆள் பார்த்துதான் பொங்குவார்கள் ...அவர்களுக்கு தெரியும் வைகுண்டராஜன் வேறு, ஜக்கி  வாசுதேவ் வேறு, மேல்மருவத்தூர் சாமியார் வேறு  என்று. அவர்கள் நீதி ஆளுக்கு தகுந்த மாதிரி மாறுபடும்.

Thursday, 1 January 2015

இந்தியத் தத்துவம்

நண்பர் ஒருவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் "Indian Philosophy" புத்தகம் இரண்டு பாகங்களையும் ஆறு மாதம் முன்பு பரிசளித்தார். நேற்று தான் முதல் பாகத்தை படிக்கத் துவங்கினேன். அற்புதமான ஆங்கிலம். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆசிரியர் நாள் தவிர ஒரு போதிலும் நாம் நினைப்பதில்லை. அவர் எவ்வளவு பெரிய மேதை என்பதை விக்கிபீடியா படித்து தெரிந்து கொண்டேன்.

புத்தகத்தின் முதல் சில பக்கங்களிலேயே எத்தனை ஐரோப்பியர்கள் இந்திய தத்துவத்தை ஆராய்ந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயர்களையும் தருகிறார் ராதாகிருஷ்ணன். Monier Williams என்ற பெயரை பார்த்தவுடன் ஜெயமோகன் நினைவு வந்தது. வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவில் அவரை சிலாகித்து பேசினார் ஜெயமோகன்.முழு நூலையும் படித்து விட்டு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.

Thursday, 6 November 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி.

பாலகுமாரன்: கமல், நான் வேலையை விட்டுட்டு சினிமாக்கு வரலாம்னு இருக்கேன்.
கமல்: ஏன்? எதுக்கு?
பாலகுமாரன்(மனதிற்குள்): என்ன பதில் சொல்ல?
கமல்: நான் கேட்ட பிறகு காரணத்தை யோசிக்கறீங்களா? நான் கேள்வி கேக்கட்டுமா உங்களுக்காக? பணம், இல்ல. மொசைக் போட்டு சொந்த வீடு இருக்கு, ஸ்கூட்டர் இருக்கு. புகழ் இல்ல. இன்னைக்கு தேதில பெரிய எழுத்தாளர். இரும்புக் குதிரைகள் வெளியீடு விழால வைரமுத்து உணர்ச்சி வசப்பட்டு பேசினார் தெரியுமா? வைரமுத்து அவ்வளோ சீக்கரம் யாரையும் புகழ மாட்டார். வேற என்ன?
பாலகுமாரன்: எனக்கு அந்த பியட் கார் வேணும் கமல்.
கமல்: குட், அப்போ நீங்க தேடறது லக்சரி. இவ்வளோ நாளா என்ன பண்ணீங்க. வீடியோ வந்து சினிமா அழிக்கற டைம்ல வரீங்க.
"நகுதற் பொருட்டன்று நட்பு"..யாரோ கமல்ஹாசனுக்கு விளக்கமாய் சொல்லியிருக்க வேண்டும்.
சீண்டினால் கூட நண்பர்களிடம் இதமாய் பேசும் கமல் அன்று கோபப்பட்டார். நான் இரண்டாய் கிழிக்கபட்டேன்.

(சில நாட்களுக்கு பிறகு) கமல்: என்ன கவிதாலயால சேர்ந்துட்டீங்க போல இருக்கு?
பாலகுமாரன்: ஆமாம், ஆனா அன்னைக்கு நீங்க நான் சினிமால..
கமல்: சினிமால சேரட்டுமானு அபிப்பராயம் கேக்கக் கூடாது. முடிவு உங்களோடதா இருக்கணும்னு தான் அப்படி பேசினேன். இப்போ சேர்ந்துட்டீங்க. இதுல உள்ள நெளிவு சுளிவு நான் சொல்லித் தரேன்.

"செட்டுக்கு முதல் ஆளா வாங்க. கடைசி ஆளா போங்க. செய்னு சொல்றதுக்கு முன்னாடி வேலை செய்யுங்க. யாராவது மூஞ்சில எச்சை துப்பினா தேங்க்ஸ் அப்படின்னு சொல்லிட்டு வந்துடுங்க. கோபத்த உள்ளுக்குள்ள வெச்சுக்குங்க. பின்னாடி உதவும். நான் நெறைய அனுபவப்பட்டிருக்கேன். இதோ இப்படி கால் அகட்டி நிக்கறீங்களே இது கூட தப்பு. இன்னும் பணிவா இருக்கணும். திமிர் பிடிச்சவன்னு சொல்லிடுவாங்க. இன்னொன்னு சொல்லட்டுமா?கொஞ்சம் கொஞ்சமா நீங்க எழுதறத குறைச்சுக்கனும்."

பாலகுமாரன்: ஐயோ.
கமல்: நான் பேசறது கைய அறுத்து டிஞ்சர் போடறா மாதிரி இருக்கு இல்ல? உண்மை இதமா இருக்காது பாலா.
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே."

Saturday, 4 October 2014

சிக்கெனப் பிடித்தேன்

நான் வசிக்கும் Fremont நகரிலிருந்து சற்று தள்ளி Concord என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றேன். விநாயகர், முருகர், சிவன், துர்க்கை சந்நிதிகள். அர்ச்சனை செய்த சிவாச்சார்யார் திருவாசகத்தில் உள்ள

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே."

என்ற பாடலை கணீர்க் குரலில் பாட, எனக்கு இந்த "சிக்கெனப் பிடித்தேன்" என்கிற வரியை எங்கேயோ கேட்டிருக்கிறோமோ என்று வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஏழாம் உலகத்தில் பண்டாரம் பழனியில் உருப்படிகளை விற்றது தெரிந்து பிக்பாக்கெட் திருடன் ஒருவன் பண்டாரத்தின் பின்னேயே வெகு நேரம் அலைந்து ஒன்றும் தேறாமல் அவரிடமே வந்து தேநீர் வாங்கிக் தரச் சொல்வான். அப்போது "நம்ம ஊர்ல ஆழ்வார் பிரபந்தம் பாடுவாங்களே, 'சிக்கெனப் பிடித்தேன்னு' அப்படி தான் அண்ணாச்சிய பிடிக்கலாம்னு வந்தேன் என்பான்.

கதையில் அந்த வரியை படித்த போது, "பணம், குடும்பம், வேலை" என்று எத்தனையோ விஷயங்களை "சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டியுள்ளது" ஆனால் ஒருபோதும் இறைவனை அப்படி பற்றிக்கொள்ள தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன். கோவிலில் இந்த வரிகளை கேட்டபோது மறுபடியும் அதே நினைவு வந்தது.அது சரி, பிரபந்தம்னு சொல்லிடு இங்கே திருவாசக வரிகளை போட்டிருக்கேனேனு கேக்கறீங்களா..இதோ பிரபந்தம்..

வைகுந்தா!மணிவண்ணனே!என்பொல்லாத்
திருக்குறளா!என்னுள் மன்னி,
வைகும் வைகல் தோறும்
அமுதாய வானேறே,
செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்
தீர்த்தசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே.

Monday, 29 September 2014

2 ஸ்டேட்ஸ்

சேத்தன் பகத்தின் இந்த புத்தகத்தை மனைவியிடம் இரவல் வாங்கி படித்தேன். சுவாரசியமான புத்தகம். புத்தகத்தில் எனக்கு பிடித்த இடம் கதை நாயகன் க்ரிஷ் சென்னை வந்து படும் அவஸ்தைகள். சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் பேசும் கெட்டவார்த்தை எல்லாம் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறார் சேத்தன் பகத். நம்மை மீறி பல இடங்களில் சிரிக்கிறோம். புத்தகத்தில் பகத் தனது முதல் நிறுவனமான Citibank பற்றி எழுதிய பகுதிகளை படித்த போது எனக்கு என் முதல் வேலை நினைவுக்கு வந்தது. வணிகவியல் முடித்து என்ன செய்வது என்று தெரியாமல் நாளிதழ்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து "walk in" என்று போட்டிருக்கும் இடங்களுக்கு நானும் என் நண்பனும் செல்வோம்.

முகப்பேரில் அந்த மருந்து தயாரிக்கும் அலுவலகம் இருந்தது. சிறிய தொழிற்சாலை அவர்களுக்கு ராமாபுரத்தில் இருந்தது. விற்பனைப் பிரதிநிதி தமிழகம் முழுதும் தேவை என்று சொன்னது விளம்பரம். ஒரு சனிக்கிழமை காலை பல்லாவரத்தில் இருந்து முகப்பேர் சென்றோம். பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்று வரவேற்பறையில் லேசாக புடவை விலகி செழுமை தெரிய அமர்ந்திருந்த அந்த சுமார் பெண்ணிடம் பெயர் கொடுத்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தோம். எங்களை அழைத்த போது மதியம் மணி மூன்று. இரண்டு பச்சை வாழைப்பழம், ஒரு டீ வயிற்றில் இருந்தது.

நேர்முகத் தேர்வு, குழு கலந்துரையாடல் எல்லாம் முடிந்து இறுதி பெயர்ப் பட்டியல் வந்த போது மணி ஏழு. எங்கள் பெயர் இருந்தது. பத்துநாட்கள் முகப்பேரில் பயிற்சி. பயிற்சி முடியும் இறுதி நாளன்று நிறுவன தலைவருடன் நேர்முகம். அவர் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு வேலை. பத்து நாள் பயிற்சி ஆரம்பித்தது. நிறுவனத்தில் மருந்து பெயரை சரியாக உச்சரிப்பது தான் முதல் பயிற்சி. "செபெக்ஸ்" என்பது மருந்தின் பெயர். அதன் பிறகு, மருத்துவரை சந்திக்கும் போது எப்படி பேச வேண்டும், மருந்து அட்டையை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகள். கிட்டத்தட்ட முப்பது பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கொடுத்தவர் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் சேர்ந்த ஒருவர்.

செபெக்ஸ் என்ற பெயர் சபெக்ஸ், சபீக்ஸ், சபேக்ஸ், செக்ஸ், சிக்ஸ் என்று ஒவ்வொருவர் வாயிலும் மாறி மாறி வந்த போது பயிற்சி கொடுத்தவர் பதட்டப்படாமல் சொன்ன ஒரே வரி "கடைசி நாள் முதலாளி முன்னால் இப்படி சொல்லாதீர்கள்" என்பது தான். அது ஏன் என்று அப்போது புரியவில்லை. என் விடலை பருவத்தின் உச்சம் அந்த காலகட்டம். நானும் என் நண்பனும் அவர் சொன்ன எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் மருந்து பெயரை சரியாகவே உச்சரித்தோம்.

பயிற்சியின் கடைசி நாள் வந்தது. மதிய உணவு வேளை முடிந்த பின் நிறுவனத் தலைவர் வந்தார். எங்கள் எல்லாரையும் அவர் பார்க்கும் மாதிரி ஒரு வட்ட மேஜை போடப்பட்டு நாங்கள் அவரை சுற்றி அமர்ந்திருந்தோம். என்னை மருத்துவராக பாவித்து நீங்கள் பயிற்சியின் போது "கத்துகிட்ட வித்தைகளை மொத்தமாக இறக்குங்கள்" என்றார் லிங்குசாமி போல.

முதல் நபர் "சபெக்ஸ்" என்றார். "தே மவனே, நான் கஷ்டப்பட்டு மார்க்கெட் பிடிச்சிருக்கேன்டா, ஏன்டா பேரை மாத்தறே?" என்றார். அறையில் மயான அமைதி. நானும் என் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அடுத்த நபரை பார்த்து "நீ சொல்லு" என்றார் தலைவர். அவர் "செபிக்ஸ்" என்றார். முதலாளி அமைதியாக, "தம்பியோட அப்பா என்ன செய்யறாரு?" என்றார். "எண்ணெய் வியாபாரம் ஊர்ல", என்றார் நம்ம செபிக்ஸ். "அப்போ உங்க அப்பன் கூட சேர்ந்து அந்த மயித்தையே செய்ய வேண்டியதானே. இங்க எதுக்கு வந்த? என் உசிர வாங்கவா? எந்த நேரத்துல உங்க அப்பன் கோவணத்த அவுத்தானோ" என்றார்.

என் நண்பன் இயல்பாகவே கொஞ்சம் முன்கோபி. என்னிடம், "ஒம்மாள, நம்மள எதாவது சொன்னான், ஒத்த இவன நாளைக்கே பசங்ககிட்ட சொல்லி தூக்கறோம் மச்சான்" என்றான். நல்லவேளையாக எங்களுக்கு முன்னே இருந்தவர்கள் செய்த தவறுகளில் இருந்து நாங்கள் கொஞ்சம் கற்றுக்கொண்டு ஒழுங்காக பேசினோம். பெரிய அளவில் எங்களை எதுவும் சொல்லவில்லை அவர். ஆனால், மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது. கடைசியில், வெளியூர் போக சொன்னதால் அந்த வேலை வேண்டாம் என்று முடிவு செய்தோம் நானும் என் நண்பனும். அப்பறம், தகவல் தொழில்நுட்பம் தான் நிறைய பணம் தரும் என்று ஞானம் பெற்று அதற்காக பயிற்சி பெற்று வேளைக்கு வந்ததை எல்லாம் புத்தகமாகவே போடலாம்.

மீண்டும் குளம்பியகத்தில்

பல்வேறு காரணங்களினால் எழுதுவது ரொம்பவே குறைந்துவிட்டது. வேலை, இடமாற்றம் எல்லாம் காரணம் தான் என்றாலும் மனம் சொல்கிறது "சோம்பல்" தான் நிஜமான காரணம் என்று. மீண்டும் எழுத உத்தேசித்திருக்கிறேன். குறைந்தது இரண்டு பதிவு வாரம் ஒன்றிற்கு. எனக்கு ஊக்கமளிப்பது நீங்கள் படிப்பதும் பின்னூட்டம் போடுவதும் தான். அதை எதிர்நோக்கி..

நன்றியுடன்,

வாசு

Wednesday, 7 May 2014

ஹம்சலேகா, சந்திரபோஸ், மரகதமணி (கீரவாணி)...

இன்று கொடி பறக்குது படத்தின் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு' படத்தின் பாடலை கேட்டு கொண்டு இருந்தேன். இசை:ஹம்சலேகா ..ஆனால் பலர் இளையராஜா என்றே நினைத்திருப்பர். ஹம்சலேகா, சந்திரபோஸ், மரகதமணி (கீரவாணி)   போன்றோர் ஜொலிக்காமல் போனதற்கு காரணம். அவர்கள் இசையை மக்கள் இளையராஜா இசை என்று நினைத்ததே. பாடல்கள் அற்புதமாக இருந்தாலும் , அது இளையராஜா இசையிலிருந்து வேறுபடவில்லை, அதனால் Hero Worship உச்சத்தில் இருந்த தமிழகத்தில் இளையராஜாவை அசைக்க முடியவில்லை.

சில உதாரணங்கள்

ரஜினியின் மனிதன் - இசை சந்திரபோஸ்
பார்த்திபனின் புதிய பாதை - இசை சந்திரபோஸ்
பாலச்சந்தரின் அழகன் - இசை மரகதமணி(கீரவாணி)
பாலச்சந்தரின் ஜாதி மல்லி - இசை மரகதமணி
பாரதிராஜாவின் கொடி பறக்குது - இசை ஹம்சலேகா
பாரதிராஜாவின் வேதம் புதிது - இசை தேவேந்திரன்

இளையராஜா இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையை தந்த ரஹ்மானே கடைசியில் வெற்றி பெற்றார்.


Monday, 5 May 2014

மெல்ல பேசும் கள்ளப் பார்வை...

இன்று தற்செயலாக உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடலான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' கேட்டேன். அதில் வரும் ஒரு வரி என்னை உலுக்கி விட்டது..

மெல்ல பேசும் கள்ளப் பார்வை ஜாதிப்பூவின் மென்மை
நான் வாழ்வில் காதலித்தது இல்லை..ஆனால் காதலிக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டது இந்த வரி.

இதுதான் கவிஞரின் (வாலி) வெற்றி போல..

Thursday, 20 February 2014

அர்னாபும் விஜயவாடா மக்களும்...

இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வழக்கம் போல் அர்னாப் ஹய் பீபீயில் கத்திக்கொண்டு இருந்தார் , என்ன விஷயம் என்று பார்த்தால், நாடாளுமன்றத்தில் பேப்பர் ஸ்ப்ரே அடித்த காட்சியும், பிறகு ராஜ்ய சபாவில் அதன் செக்ரெட்ரி ஜெனெரலை பார்த்து அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டே அவர் கையில் இருக்கும் பேப்பரை வலுக்கட்டாயமாக பிடுங்கும் காட்சியும், ஜம்மு காஷ்மீரில் எம் எல் ஏ ஒருவர் சபை மார்ஷலை அடிக்கும் காட்சியும் , உபி யில் சட்டையை கழட்டி போராட்டம் பண்ணும் இரு எம் எல் ஏ பற்றிய காட்சிகளையும் காட்டிக்கொண்டு இருந்தனர். வழக்கப்படி அர்னாப் ஒரு செத்த பாம்பை (காங்கிரஸ் கட்சி பிரமுகர்) அடி அடி என்று வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார்.






இதில் அந்த காஷ்மீர் எம் எல் ஏ கலந்து கொண்டு மிக தெளிவாக அர்னாப் சொல்வதை ஒரு கணம் கூட காது கொடுத்து கேட்காமல் , ஏறக்குறைய உருதுவில் தனி ஆவர்தனம் நடத்திக்கொண்டே இருந்தார், ஒரு கட்டத்தில் ஆனானப்பட்ட அர்னாபே வேறு வழியில்லாமல் செத்த பாம்பிடம் திரும்பி அடிக்க ஆரம்பித்தார் (செத்த பாம்புதான் அர்னாப் பேச இடம் கொடுத்தார் , ஆங்கிலத்திலும் பேசினார்).

அந்த தெலுகு மனவாடுகள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவேயில்லை. அவர்களை கலந்து கொள்ள வைக்கவும் முடியாது.









இந்த மனவாடுகள் போலதான் தமிழ், கர்நாடக , பீகார் , உ பி , வங்காள , மற்றும் பல மாநில கட்சிகளின் எம் எல் ஏ - க்கள் எம் பி கள் இருக்கின்றனர் , இந்தியாவை ஆட்சி செய்வது இவர்களே , பணம் குவிவதும் இவர்களிடமே.. இவர்கள் தவறியும் டைம்ஸ் நவ் போன்ற விவாத மேடைகளுக்கு வர மாட்டார்கள், வர வைக்கவும் முடியாது.







மேலும், இவர்கள் அனைவரும் அடுத்த எலக்ஷனில் ஜாம் ஜாமென்று மீண்டும் எம். பியாக வருவார்கள் , அதாவது, மிளகு ஸ்ப்ரே அடித்தது, அதிகாரியின் கையில் இருந்த தீர்மானத்தில் நகலை பறித்தது எல்லாமே அந்த எம்.பி இல்லை, அதற்கு பின்னால் அவரை தேர்ந்தெடுத்த , அவைக்கு அனுப்பிய ஒரு தொகுதி இருக்கிறது.ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உண்மையிலேயே அவர்கள் எம்.பியிடம் விசுவாசம் கொண்டோ , பணம் வாங்கி கொண்டோ , மற்ற வழியில் ஆதாயம் கொண்டோ, ஒட்டு போட்டோ , போடாமலோஅந்தந்த எம்பிக்களை அவைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். அர்னாபும், அந்த மக்களின் மனநிலை பற்றி, ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி  கேட்கவே போவதில்லை.

Those MPs are just the mirrors of Morally corrupt average Indian, and that moral corruption of that aam aadhmi will never be questioned and the reason behind the moral corruption will never be explained by Mr. Arnab Goswami..He will always fight with Mirror image and we are safe watching the mirror image.

(மூன்றாவது படம் , ஹைதராபாதில் உள்ள மனவாடு எம்.பி சி.எம் ரமேஷ்காருவின் இல்லு)

Wednesday, 12 February 2014

புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்

சுஜாதாவின் "புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்" புரட்டிக் கொண்டிருந்தேன். சில சுவையான பாடல்களை பகிர்கிறேன்.

வாழ்க்கை தடுக்கிறது

பாடியவர் - ஒரேருழுவர்
திணை - பொதுவியல்
துறை - பொருண்மொழிக் காஞ்சி

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

பொருள்:

தோல் நிறமுள்ள
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான்போல
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது

ஒரு வீட்டில் சாவு ஒன்றில்

பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்
திணை - பொதுவியல்
துறை - பெருங்காஞ்சி

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க! இதன் இயல்பு உணர்ந்தோரே.

பொருள்:

ஒரு வீட்டில் சாவுப் பறை
மற்றொரு வீட்டில்
கல்யாண மேளம்
மணமக்கள் பூச்சுட,
கணவரை இழந்த பெண்கள்
கண்ணீர் விட
இவ்வாறு உலகம்
படைத்தவன் பண்பில்லாதவன்
உலகம் கொடுமையானது
இதை உணர்ந்தவர்கள் தான்
இனிமையைக் காண்பர்.

Sunday, 19 January 2014

ஜெயமோகன் பற்றி சுஜாதா

சுபமங்களா மார்ச் 1993 இதழில் ஜெயமோகனின் "திசைகளின் நடுவே" சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து சுஜாதா எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள்.

தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதி வரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் "கதா" என்கிற அகில இந்திய நிறுவனம் வெளியிட்ட தொகுப்பில் இவர் கதையான 'ஜகன் மித்யை' இடம் பெற்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வந்து ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்) சிறு பத்திரிகைகளில் எழுதி வரும் ஒரு எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.

என்னைப் பொறுத்தவரையில், நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்து விடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.

இந்தப் பரிட்சையில் ஜெயமோகனின் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்ற கதைகள் நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை. உதாரணம் 'ஜகன்மித்யை' என்கிற கதையை அகில இந்திய அளவுக்கு உயர்த்தித் தேர்ந்தெடுக்க அக்கதையில் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஆனால், அதைத் தேர்ந்தெடுத்த சுந்தர ராமசாமி ரசித்திருக்கலாம். மாறாக இந்த தொகுப்பில் உள்ள 'பல்லக்கு' என்கிற கதை அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதுகிறேன். இதை எப்படி அவர்கள் எப்படி விட்டிருக்க முடியும் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பல்வேறு வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார். தன் முன்னுரையில் 'அறச்' சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களின் கூட! என்று ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே 'நதி', 'விலை', 'போதி', 'படுகை' போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது. அறச்சார்பு என்று எதைச் சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும், ஒரு தொகுதிக்கு ஒரு 'பல்லக்கு' வந்தாலே போதும்.

Saturday, 18 January 2014

சக்கரை இனிக்கிற சக்கரை

கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக உள்ளதென கண்டேறியப்பட்டது. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மருந்தின் மூலம் இப்போது ஓரளவு குறைந்துள்ளது என்றாலும் முழுமையாக அது இருக்க வேண்டிய அளவிற்கு வரவில்லை. கட்டையில் போகும் காலம் வரை இந்த நோயுடன் தான் நீ இருந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.

குடும்பத்தில் யாருக்கும் இந்த நோய் இல்லை, அதிகமாக இனிப்புகள் எடுத்துக்கொள்ளும் ஆளும் இல்லை என்கிறாய், இருந்தாலும் 35 வயதில் உனக்கு ஏன் இது வந்தது என்று தெரியவில்லையே என்றார் மருத்துவர். சரி, வந்தாயிற்று, நம் கர்மா என்று விட வேண்டியது தான் டாக்டர் என்றேன். அது சரி, ஆனால் உன்னால் முடிந்த வரை இந்த நோயை பற்றி பிறருக்கு எடுத்து சொல்லு(முக்கியமாக குழந்தைகளுக்கு). ஏனென்றால், வருங்காலத்தில் இந்தியாவில் இரண்டில் ஒருவருக்கு இந்த நோய் வரும் அபாயம் இருக்கிறது. தனி மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே இந்த நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றார். நிச்சயம் செய்கிறேன் என்றேன்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதை கவனிக்காமல் இருப்பவர்கள் பல உடல் உபாதைகளுக்கு உள்ளாவார்கள் என்பது உண்மை. உடனே எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் சில வருடங்களில் பார்வை மங்குதல், சிறுநீரக பாதிப்பு, இதய நோய் போன்றவை சாதாரண மனிதர்களை காட்டிலும் இவர்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் 50% அதிகம் உள்ளது. இதையெல்லாம் விட பெரிய உபாதை "அறிவுரை" சொல்லியே நம்மை சாகடிக்கும் நண்பர்/உறவினர் கூட்டம். "51 வயசு பக்கத்துக்கு வீடு ஆளுக்கு. சுகர் 700 போச்சு ஆனா திடீர்னு 55 வந்து கோமால போனான். பத்து நாள் தான். ஆள் போய்ட்டான். அவனுக்கு பரவாயில்ல ரெண்டு ஆம்பிள பசங்க. உனக்கு ரெண்டு பொண்ணுங்க. என்ன பண்ணுவா உன் பொண்டாட்டி? இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணியிருக்க இல்ல? எனக்கு பாரு 75 ஆயாச்சு. உடம்புல ஒரு பிரச்சனை இல்ல. என்னத்த IT கம்பெனி வேலையோ. சுகர் வந்தது தான் மிச்சம்." என்பார் பக்கத்து வீட்டு மாமா.

"இந்த அலோபதி எல்லாம் நம்பாதே. திருநெல்வேலி கிட்ட நமக்கு தெரிஞ்ச சித்த மருத்துவர் இருக்காரு. கான்சர் ஆளுங்களையே நூறு வருஷம் வாழ வெச்சவரு. சுகர் எல்லாம் சும்மா. நீ அங்கே போய்டு. சுத்தமா சரி பண்ணி அனுப்புவாரு" என்பார் இன்னொருவர்."டேய், அனாவசியமா மனசை போட்டு அலட்டிக்காத. காலம்பற வெறும் வயத்துல வெந்தயத் தண்ணி குடி. இல்லேனா வெண்டைக்காவ தண்ணில மொதல் நாள் ராத்திரி ஊற போட்டு அந்த தண்ணிய மறுநாள் காலம்பற குடி. சுகர் எப்படி கொறையும் பாரு. எங்காத்து மாமாக்கு 19 வயசுல சக்கரை வியாதி. சாகும் போது 82 வயசு. மருந்தா சாப்டார்? எல்லாம் என் கை வைத்தியம் தான்" என்பார் ஒரு மாமி.

இந்த மாதிரி அறிவுரைகள் ஆரம்ப நிலையில் பயங்கர ஆறுதல் அளிக்கும். எல்லாவற்றையும் முயற்சி செய்ய சொல்லும். ஆனால், சக்கரை நோயை நிரந்தரமாக குணமாக்கவே முடியாது. அதை கட்டுப்படுத்த மட்டும் தான் முடியும். இந்த நிதர்சனம் புரிய ஆறு மாதம் ஆகும். மேலும், உங்கள் உடல் வாகை பொறுத்தே மருந்து, மாத்திரை, வெந்தய தண்ணி, வெண்டைக்காய் எல்லாம். எல்லாருக்கும் ஒரே மாதிரி வைத்தியம் உதவாது. ஆக, சக்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்களுக்கென ஒரு மருத்துவரை தேர்ந்தெடுத்து அவரிடம் முறையான சிகிச்சை பெறுவது தான்.அலோபதி, சித்தா, ஆயுர்வேதா எதுவாக இருந்தாலும் ஒரு மருத்துவரை அணுகி தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெறுங்கள்.

சக்கரை ரத்தத்தில் ஏறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம்(Stress) கூட ஒரு காரணம். அதற்கு Stress induced sugar என்பார்கள். ஆகையால், சக்கரை அளவுக்கு அதிகம் என்று பார்த்தவுடன் பதட்டம் வேண்டாம். HbA1C எனப்படும் Glycosylated Haemoglobin டெஸ்ட் எடுத்துப் பார்க்கவும். அது ஏழுக்கு மேலே இருந்தால் நீங்கள் கொஞ்சம் கவலைப்பட வேண்டும். அது தான் நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்ய மருத்துவர் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம். இந்த டெஸ்ட் உங்களுக்கு சர்க்கரை திடீரென்று இன்றோ நேற்றோ வந்ததல்ல சில மாதங்களாக/வருடங்களாக இருக்கிறது என்று உறுதி செய்யும். அடியேனுக்கு 11.9 இருந்தது. எந்த நேரமும் Heart attack அல்லது Stroke வரலாம் என்றார்கள்.

சர்க்கரை நோய் உள்ளது என்று உறுதி செய்யபட்டால் மற்ற எல்லா சோதனைகளையும்(சிறுநீரகம், இருதயம், கண்கள்) ஒரு முறை செய்து விடவும். இந்த சோதனைகளை விடாது வருடத்திற்கு ஒரு முறை செய்யவும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் திட்டமிட்டு உடற் பரிசோதனை செய்து கொள்வதே இல்லை என்பது மருத்துவர்களின் பெரிய குற்றச்சாட்டு. வியாதி வந்த பின் தான் மருத்துவரை தேடிச் செல்கிறார்கள். முதலிலேயே வியாதி இருப்பது தெரிந்தால் இன்சூரன்ஸ் போன்ற சமாசாரங்களை அதற்கு ஏற்றார் போல் திட்டமிடலாம்.

சக்கரை நோய் வந்த பின் சக்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது இன்று குழந்தைக்கு கூட தெரியும் என்பதால் நான் அதையெல்லாம் சொல்லப்போவதில்லை. எதை சாப்பிடலாம் அல்லது சாப்பிட வேண்டாம் என்றும் சொல்லமாட்டேன். Glycemix Index என்று ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு உணவிற்கும் இது உண்டு. இதை பார்த்துக் கொள்ளவும்(கூகுள் செய்தால் ஒரு வண்டி தகவல் கிடைக்கும்). இது எந்த உணவு ரத்தத்தில் சக்கரையின் அளவை விரைவாக/குறைவாக ஏற்றும் என்பதின் சுட்டு. இதற்கு ஏற்றவாறு உங்கள் உணவை திட்டமிடவும்.

சிலர் சுகர் ப்ரீ சேர்த்துக் கொள்ளலாமே என்பார். அவரவர் உடல் நிலையை பொறுத்து உபயோகிக்கலாம். சிலருக்கு சுகர் ப்ரீ சேர்த்தால் வயிற்றால் போகும். பார்த்துக் கொள்ளுங்கள். சக சக்கரை வியாதி நண்பர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெறாமல் எடுத்துக் கொள்ளாதீர்கள். வெந்தயம், வெண்டைக்காய் போன்றவை சக்கரை அளவை கட்டுப்படுத்தும் தான். ஆனால் முற்றிலும் குறைக்காது. சாப்பிடாமலே இருந்தால் சக்கரை அளவு குறையும் என்று நம்பாதீர்கள். அது சக்கரை அளவை மேலும் ஏற்றும். தினசரி உடற் பயிற்சி செய்யுங்கள். அரை மணி நேரம் வியர்வை சொட்ட நடந்தால் கூட போதும். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Wednesday, 1 January 2014

அர்விந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகி விட்டார். 'டில்லியில் உள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும், தினமும், 667 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து , 50 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைத்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திண்டுக்கலில் இருந்து திருச்சி வரும் வழியில் ATM ஒன்றில் பணம் எடுக்க காரை நிறுத்தினேன். டீ கடைக்காரரும் டீ குடிக்க வந்த ஒருவரும் கெஜிரிவாலை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். "ஊழலை ஒழிக்க ஒருத்தன் வந்துட்டான்யா" என்ற சொல் காதில் விழுந்தது. கெஜிரிவாலை இந்த நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அவர் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்து சொன்னதை எல்லாம் நிறைவேற்றினார் என்றால் இனி எந்த அரசியல்வாதியும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது. ஊழலற்ற ஆட்சி சாத்தியமே என்று இந்திய மக்கள் நம்பக்கூடும்.

இதற்கிடையே நாம் என்ன செய்யலாம்? லஞ்சம் கேட்பதை/கொடுப்பதை நிறுத்த கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம். அரசியல்வாதிகளை மட்டுமே லஞ்சம் வாங்கும் வில்லன்கள் என்று சித்தரித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நமக்கும் பெரும் பங்கிருக்கிறது. நாடெங்கும் நல்லாட்சி அமைய நாம் எடுத்து வைக்கும் முதலடி இதுவாக இருக்கலாம். கெஜிரிவாலுக்கும் அவர் அமைச்சர் குழுவுக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, 18 July 2013

அஞ்சலி









                                                RIP வாலி

Monday, 3 June 2013

சுஜாதா

சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? என்ற இந்த பதிவில் ஜெயமோகன் எழுதியிருக்கும் பதில் அற்புதம். இந்த பதிவை படித்ததிலிருந்து ஞாயிறு தினகரனில் திருமதி.சுஜாதா அவர்கள் அப்படியென்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகி காலை ஆறு மணிக்கே கடைக்கு சென்று ஏடை வாங்கி வந்தேன். எல்லா மனைவிக்கும் தன் கணவர் குறித்து சில குறை இருக்கும். அதையே தான் திருமதி.சுஜாதா அவர்களும் கூறி இருக்கிறார். மேலும், இதை சுஜாதா அவர்களே "தோரணத்து மாவிலைகள்" கட்டுரை தொகுப்பில் "நிஜ சுஜாதா" என்கிற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் வரிகள் அப்படியே இதோ:

நிஜ சுஜாதாவை 'எழுத்தாளன் மனைவி' என்ற தலைப்பில் கட்டுரை எழுதித் தரச் சொன்னேன்.
"எல்லாத்தையும் எழுதிடுவேன்" என்று அச்சுறுத்தினாள்.
"எழுது பரவால்ல" என்று சொல்லியும் பல முறை வற்புறுத்தியும் அவள் எழுதவில்லை

No man is a hero to his wife.

"நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தவிர", என்று அண்மையில் ஒரு முறை அவள் சொன்னது உண்மை தான்.

நான் ஆதர்சக் கணவனில்லை. ஆதர்சத் தகப்பன் இல்லை துறைகளில் என்னை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள ஏதும் இல்லை. என் போன்ற ஒரு சிக்கலான பிரகிருதியுடன், எப்போதும் கோவம், எப்போதும் மௌனம் என்று தெரியாத அநிச்சயமான சூழ்நிலையில் , இருபத்தேழு வருஷம் வாழ்ந்து வருவது அவளுடைய மகத்தான சாதனை.

இதை படித்த பின் இன்றைய தினகரன் நாளிதழுடன் வந்த வசந்தம் புத்தகத்தில் திருமதி.சுஜாதா எழுதியுள்ளதை படித்துப் பாருங்கள்.

Sunday, 14 April 2013

மீண்டும் கமல்

தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கிடையே விளம்பரங்கள் மிகக் குறைவு. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விளம்பரம் தான் என்பதால் "தமிழ் சினிமாவின் விஸ்வரூபம்" என்ற தலைப்பில் இன்று காலை கமல் பேட்டியை தொடர்ந்து இரண்டு மணி நேரம் ரசிக்க முடிந்தது.நகைச்சுவை நடிகர் விவேக்கை தொடர்ந்து இயக்குனர் வசந்த், கார்த்திக் சுப்புராஜ்(பீட்சா பட இயக்குனர்), பாலாஜி மோகன்(காதலில் சொதப்புவது எப்படி இயக்குனர்) ஆகியோர் கமலிடம் பேட்டி கண்டனர்.

தெனாலி படத்தில் தனது தந்தை மற்றும் தாயார் இலங்கையில் யுத்தத்தில் மாண்டதை கமல் மருத்துவரான ஜெயராமிடம் விவரிக்கும் காட்சியை விவேக் "ஒரு காமெடி படத்தில் அந்த காட்சி கண்ணீரை வரவழைக்கும் தருணம் மறக்க முடியாது" என்றார். கமல், "சமூக பிரக்ஞை இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் பலர் சீரியஸ் விஷயங்களை நகைச்சுவை மூலம் தெரிவிப்பார்கள். தெனாலி ஒரு சீரியஸ் படமாக இலங்கை தமிழர்கள் பற்றிய செய்திகளை சொல்லியிருந்தால் அது தடை கூட செய்யப்பட்டிருக்கும்" என்றார்.

இயக்குனர் வசந்துடன் பேசும் போது எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வரிசை கதைகளில் ஒன்றான "நூறு நாற்காலிகள்" பற்றி குறிப்பிட்டார். வசந்தும் பெரிய இலக்கிய ரசிகர் என்பதால் தானும் அதை படித்ததாக சொன்னார். புன்னகை மன்னன் படத்தில் வரும் "மாமாவுக்கு குடுமா குடுமா" பாடலை தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் படமாக்கிய விதத்தை இருவரும் நினைவு கூர்ந்தனர். அன்பே சிவம், மகாநதி படங்களை சிலாகித்து பேசிய வசந்த், "சிவாஜிக்கு பின் நான் உங்களுக்கு மட்டும் தான் ரசிகன்" என்றார்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி மோகன் இருவரிடமும் அவர்கள் தங்கள் படங்களுக்கு எப்படி திரைக்கதை எழுதினார்கள் என்று கேட்டுவிட்டு தான் விஸ்வரூபம் படத்திற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டதாக கூறினார் கமல். தேவர் மகனுக்கு பதினைந்து நாள் ஆனதாம். சினிமா திரைக்கதை என்பது ஒரு மொழி, அதை எழுத நிறைய பயிற்சி வேண்டும் என்றார். ஒருவர் கதை நன்றாக சொல்கிறார் என்பதற்காக அவரை இயக்குனராக்க கூடாது என்றார். இருவரிடமும் அவர்கள் திரைக்கதை குறித்து எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று கேட்டார்.

கடந்த வெள்ளி தான் கமல் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் பொது அறிவில் பட்டையை கிளப்பியதை பார்த்தேன். பேமானி, உட்டாலக்கடி எல்லாம் சென்னை தமிழில் எப்படி கலந்தது என்று அவர் விவரித்ததை கேட்டு "என்ன ஞானம் டா இந்த ஆளுக்கு, எதை பத்தி கேட்டாலும் பதில் சொல்றாரு" என்று வியந்து கொண்டிருந்தேன். இன்று தந்தி தொலைகாட்சி நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் பஞ்ச் டயலாக் இது தான்.

"சிவாஜி சார் மாதிரி ஒரு சிங்கத்துக்கு இயக்குனர்கள் நிறைய முறை தயிர் சாதம் கொடுத்துட்டாங்க. அதான் என் சாப்பாட்டை நானே பண்ணிக்கிறேன்" என்றார்.

Friday, 12 April 2013

நினைவில் நின்ற பாடல்

"அழியாத கோலங்கள்" படத்திலிருந்து "பூ வண்ணம் போல நெஞ்சம்" பாடலை இன்று கேட்டேன். அழுகை பீறிட்டு வந்தது. இந்த படம் வந்த சமயம் எனக்கு ஒன்று அல்லது ஒன்றரை வயது இருந்திருக்கலாம். என் தாயின் மடியில் குழந்தையாய் அமர்ந்து உணவு உண்டபடி இந்த பாடலை வானொலியில் கேட்டிருப்பேன் என்று தோன்றியது. ஒன்றுமே செய்யத் தோன்றாமல் பத்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன்.பிரயிட்(Sigmund Freud) சொல்வது போல, "ஆழ் மனது நீர்த்தேக்கம் போல பல நினைவுகளை தேக்கி வைத்துக் கொள்கிறது".ஏதோ ஒரு சமயத்தில்(பரிட்சயமான விஷயத்தை பார்க்கும்/கேட்கும் போது) அவை வெளியே வருகின்றன.

இந்த பாடல் மற்றும் படம் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு இதோ:

அழியாத கோலங்கள் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பதின்வயதெனும் அடிவானத்தில் பறக்கத் துவங்கிவிடுகிறேன். நாம் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அந்த அடிவானம் மனதின் வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தபோதும் நாமாகச் சென்று அங்கே இளைப்பாறுவதற்கு முடியாது.

ஒரு மாயக்கம்பளம் நம்மை அங்கே அழைத்துக் கொண்டு போனால் மட்டுமே சாத்தியம். இப்படம் அப்படியான ஒரு மாயக் கம்பளம்போல நம்மை மீண்டும் விடலைப் பருவத்தின் கனவுலகிற்குள் கொண்டு போய்விடுகிறது. கலையின் தேவையே இது போன்று நாம் திரும்பிச் செல்ல முடியாத வயதிற்குள், அடையமுடியாத உணர்ச்சிகளுக்குள் மீண்டும் நம்மைக் கொண்டு செல்வதேயாகும்.

அந்த வகையில் பாலு மகேந்திரா அவர்களின் அழியாத கோலங்கள் உயர்வான கலைப்படைப்பாகும். தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு தனிமுயற்சி. மிகுந்த கவித்துவத்துடன் பருவவயதினரின் உலகம் படமாக்கப்பட்டிருக்கிறது. பதின்வயதின் நினைவுகளுக்குள் பிரவேசித்த பிறகு நமக்கு ஊரும் வயதும் இருப்பும் மறைந்து போய் விடுகின்றன. நாம் காண்பதெல்லாம் பதின்வயதின் ரகசியங்கள், சந்தோஷங்கள்,வருத்தங்கள், அவமானங்களே.

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை. எண்ணங்களும் மறைவதில்லை

என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் நினைவின் குடுவையைத் திறந்துவிடுகிறது. உள்ளிருந்த பூதம் தன் முழு உடலையும் வெளிப்படுத்தி நம் முன்னே மண்டியிட்டுக் கேட்கிறது.

என்னை ஏன் மறந்துவிட்டாய்!

என்ன பதில் சொல்வது? கடந்து வந்துவிட்ட காலத்தின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதானே நிஜம்!

விடலைப் பருவமென்பது ஒரு ராட்சசம். அதை ஒடுக்கி அன்றாட வாழ்க்கை, வேலை, குடும்பம் என்று பல மூடிகள் கொண்ட குடுவைக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். எப்போதோ சில தருணங்களில் அந்தப் பூதம் விழித்துக் கொண்டுவிடுகிறது. அதனோடு பேசுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் நமது மௌனத்தின் பின்புள்ள வலியை அது புரிந்தேயிருக்கிறது. அதன் கண்கள் நம்மைப் பரிகசிக்கின்றன. நமது இயலாமையை, சாதிக்கமுடியாமல் போன கனவுகளை அதன் சிரிப்பு காட்டிக் கொடுக்கிறது.

பதின்வயது ஒரு நீரூற்றைப் போல சதா கொந்தளிக்கக் கூடியது. வீடுதான் உலகமென்றிருந்த மனது கலைந்து போய் வீடுபிடிக்காமல் ஆகிவிடுவதுடன், வெளிஉலகம் பளிச்சென கழுவித்துடைத்து புதிய தோற்றத்தில் மின்னுவதாகவும் தோன்ற ஆரம்பிக்கிறது. தன் உடல் குறித்தும், பெண் உடல் குறித்தும் வியப்பும் மூர்க்கமும் ஒன்று கூடுகின்றன. முட்டையை உடைத்து வெளிவந்த பாம்புக்குட்டியின் வசீகரமாக மனதில் தோன்றும் காமவுணர்வுகள் சீற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன.

பருந்து இரையைக் கவ்விக்கொண்டு செல்வதுபோல பதின்வயதில் காமம் நம் உடலைக் கவ்விக் கொண்டு செல்கிறது. நம் உடல் பறக்கிறது என்ற ஆனந்தம் கொண்டபோதும் நம்மை இழக்கப் போகிறோம் என்ற உள்ளார்ந்த உணர்வும் பீறிடுகிறது. பறத்தலின் ஏதோவொரு புள்ளியில் பருந்து தன் இரையை நழுவவிடுகிறது. ஒரு வேளை அதற்காகத்தான் கவ்வி வந்ததோ என்றும் தோன்றுகிறது.

பருந்தின் காலில் இருந்து நழுவும் நிமிசம் அற்புதமானது. எந்தப் பிடிப்பும் இல்லாமல் வானில் எடையற்று விழும் அற்புதமது. ஆனால் அந்த வீழ்ச்சி சில நிமிசங்களில் பயமாகிவிடுகிறது. விடுபடல் ஆகிவிடுகிறது. போதாமை ஆகிவிடுகிறது.

பருந்து மறுமுறை எப்போது தூக்கி செல்லப்போகிறது என்பதைக் கண்டுகொள்வதற்காகவே அதன் கண்ணில் நாம் படவேண்டும் என்ற இச்சை உண்டாகிறது. ஆனால் அடிவானம் வரை சிதறிக்கிடக்கும் மேகங்களுக்குள் பருந்து எங்கே மறைந்து கொண்டது என்று தெரியவில்லை. மனது தன்னை இரையாக்கிக் கொள்வதன் முன்பே ஒப்புக் கொடுக்கவே ஆவலாக இருக்கிறது. காமம் வலியது. யானையின் பாதங்களைப் போல அதன் ஒவ்வொரு காலடியும் அதிர்கிறது.

அப்படி கடந்து வந்த விடலைப்பருவத்தைப்பற்றி இன்று நினைக்கையில் பனிமூட்டத்தினுள் தென்படும் மலையைப் போல அந்த நாட்கள் சாந்தமாக, வசீகரமாக, தன் உக்கிரத்தை மறைத்துக் கொண்டு எளிய நிகழ்வு போல காட்சிதருகிறது.

காதலிப்பதை விடவும் அதைப்பற்றிக் கற்பனை செய்வதுதான் விடலைப்பருவத்தில் சுகமானது. எப்போதும் காதலைப்பற்றி நினைத்தபடியே காதல் பீடித்த கண்களுடன் நிலை கொள்ளாமல் அலைந்த நாட்களை இப்படம் மிக இயல்பாக, உண்மையாக, கவித்துவ நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.

பாலு மகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது.

பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்

பி.சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி. இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை. இப்பாடலை எப்போது கேட்டாலும் மனம் கரைந்து போய்விடுகிறது. பாடும் முறையும் இசையும், அதன் ஊடாக நம் மனது கொள்ளும் கடந்த கால ஏக்கமும் ஒன்று சேரப் பாடலைக் கேட்டுமுடியும் போது நான் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து விடுகிறேன்.

பூவண்ணம் போல நெஞ்சம் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் எவ்வளவு அற்புதமானது என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பாடலை நிசப்தமாக்கிவிட்டு வெறும்காட்சிகளை மட்டும் திரையில் பாருங்கள். நான் அப்படி அந்தப் பாடலைப் பலமுறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைகூ கவிதை.

சிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப்போல அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே என்பதுபோல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.

நாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார். அந்த சிரிப்பு, வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது. ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது. அடிக்கடி தன் மூக்கைத் தடவிக் கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டு செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலைக் கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பதுபோல அவனோடு இணையாக நடப்பதும் என காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்

என்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுவார்.

அதைத்தான் பாலு மகேந்திரா இப்பாடலில் காட்சியாகக் காட்டுகிறார்.

ஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசிய படியோ நடந்து செல்வதும், ஷோபா சொல்வதை மௌனமாக பிரதாப் கேட் டுக் கொண்டிருப்பதும், மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களா கப் பதிவாகியிருக்கின்றன. இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை. என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது. தமிழ்ச் சினிமாவில் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்ட காதல்பாடல் இதுவே என்பேன்.

அழியாத கோலங்கள் என்ற தலைப்பே படத்தின் கதையின் மையப்படிமமாக உள்ளது. நினைவுதான் படத்தின் ஆதாரப்புள்ளி. விடலைப்பருவத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் தொகுப்பாகவே படம் விரிகிறது. இந்து டீச்சரின் வருகையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும் விடலைப் பையன்களின் அன்றாட வாழ்வைத் திசைமாற்றம் செய்கின்றது. காற்றில் பறக்கும் நீர்க்குமிழ் போலிருந்த அவர்கள் வாழ்வு ஒரு மரணத்துடன் இயல்புலகிற்குத் திரும்பிவிடுகிறது. இறுதிக்காட்சியில் நண்பனைப் பறிகொடுத்த பிறகு அவர்கள் அதே மரத்தடியில் தனியே சந்திப்பது மனதை உலுக்கிவிடுகிறது.

அழியாத கோலங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். காரணம், இப்படம் போல அசலாக பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்ததேயில்லை. அதுவும் வசனங்கள் அதிக மில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டிப் பார்ப்பது போல படம் உருவாக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

தனது பதின்வயது நினைவுகளைத்தான் படமாக்கியிருக்கிறேன் என்று பாலு மகேந்திரா அவர்கள் குறிப்பிட்டபோதும் இது யாவரின் விடலைப்பருவமும் ஒன்று சேர்ந்ததுதானே!

பச்சைப் பசேலென விரியும் இயற்கையும் அதனுள் ஓடும் ஆற்றின் ஓடையும் அருகாமையில் கடந்து செல்லும் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே ஓடும் மூவரின் நீண்ட ஓட்டத்துடன் படம் துவங்குகிறது.

ரகு தன் கனத்த சரீரத்துடன் தாவி குதிக்கும்போது, தண்ணீர் அதிர்கிறது. ஆற்றின் கால்வாயும், அருகாமை மரங்களும் மண்பாதைகளும் அந்த மூன்று பையன்களின் சேட்டைகளை நிசப்தமாக வேடிக்கை பார்த்தபடியே இருக்கின்றன. சில காட்சிக் கோணங்களில் இயற்கை அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நாம் உணர்கிறோம். அவர்கள் நீர்விளையாட்டில் ஒருவர் மீது மற்றவர் நீரை அள்ளித் தெறிக்கிறார்கள். அந்த நீர்வீச்சு பார்வையாளனின் முகத்திலும் பட்டுக் கூச்சம் ஏற்படுத்துகிறது.

நாம் திரையில் எவ்வளவு முறை ரயிலைப் பார்த்தாலும் அந்த சந்தோஷம் மாறுவதேயில்லை. இப்படத்தில் கடந்து செல்லும் ரயில் மட்டும்தான் புறஉலகின் தலையீடு. அது அவர்களின் இயல்புலகை மாற்றுவதில்லை. மாறாக, தொலைவில் இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கடந்து போகிறது. அவர்கள் தன்னைக் கடந்து செல்லும் நவீன காலத்தினை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

ஆனால் அந்த ரயிலைப் போலவே புறஉலகில் இருந்து அந்தக் கிராமத்திற்குள் நுழையும் இந்து டீச்சர் அவர்களின் இயல்புலகை மாற்றிவிடுகிறாள். இந்து டீச்சரின் பெயரை மூவரும் சொல்லிப்பார்க்கும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தப் பெயரை ஒரு இனிப்பு மிட்டாயை ருசிப்பது போல மூவரும் ருசிக்கிறார்கள். விடலைப்பருவத்தில் பெண்பெயர்கள் அப்படியான ருசியைக் கொண்டிருந்தது உண்மைதானே.

அப்போது ஒரு கூட்ஸ் ரயில் கடந்து போகிறது. அதை மூச்சு இரைக்க எண்ணுகிறான் ரகு. அது முடிவடைவதேயில்லை. கடந்து செல்லும் ரயில் பெட்டிகளை எண்ணாத சிறுவர்கள் எவர் இருக்கிறார்கள்? அவர்களால் எதிர்கொள்ள முடியாத ஒரு கூட்ஸ் ரயிலைப் போல பிரதாப் என்ற கதாபாத்திரம் அவர்களின் உலகிற்குள் பிரவேசிக்க இருக்கிறான் என்பதையே அது உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

மூவரில் ரகு எப்போதும் மாங்காய் தின்று கொண்டேயிருக்கிறான். அவன் உடைத்துத் தரும் மாங்காயை மற்றவர்கள் தின்கிறார்கள். அவன் தனக்கென ஒரு தனிருசி வேண்டுபவனாக இருக்கிறான். ரகு ஒருவன்தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டி ருக்கிறான். அதனால்தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும்போது பெண் உடல்பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கிக் காணமுடியாமல் தயங்கித் தயங்கிப் பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஓடி விடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கிக் கொள்கிறான்.

அதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும்போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து என தெரியாமல் நண்பன் சொல்லிய மஞ்சள் தாவணிப் பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அதுதான் அவன் மன இயல்பு.

பதின்வயதின் சிக்கல்கள் என்று சமூகம் மறைத்தும் ஒளித்தும் வைத்த நிகழ்வுகளை இப்படம் நேரடியாக விவாதிக்கிறது. உடலுறவு குறித்த ஏக்கம், புகைபிடித்தல், செக்ஸ் புத்தகங்களை வாசித்தல், அத்தை பெண்ணோடு காதல் கொள்வது, டீச்சரைக் காதலிப்பது, நண்பர்களுக்குள் ஏற்படும் கோபம், ஊர் சுற்றுதல், சலிப்பில்லாத விளையாட்டுத்தனம் என்று பருவ வயதில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் சரி தவறு என்று குற்றம்சாட்டாமல் நிஜமாகப் பதிவு செய்துள்ளது அழியாத கோலங்கள்.

டீச்சர் ஊருக்கு வந்து சேரும் வரை சிறுவர்களின் உலகம் வெறும் விளையாட்டுத்தனமாகவே உள்ளது. அவர்கள் ஊரில் இரண்டே தியேட்டர் உள்ளதற்காக அலுத்துக் கொள்கிறார்கள். பொழுது போக்குவது எப்படி என்று தெரியாமல் சுற்றுகிறார்கள். தபால் ஊழியரின் சைக்கிளை எடுத்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்கிறார்கள். ஆட்டக்காரியின் முன்னால் அமர்ந்து அவள் உடலை வியப்போடு வேடிக்கை பார்க்கிறார்கள். அவளுக்கும் தபால் ஊழியருக்குமான ரகசிய காதலை ஒளிந்திருந்து பார்க்கிறார்கள். அந்தக் காட்சியில் இடிந்த மண்டபத்தில் ஆட்டக்காரியின் உடைகள் களையப்படுவதும், அவர்கள் காம மயக்கத்தில் ஒன்றுகலப்பதும் சிறுவர்களின் கண்ணோட்டத்தில் காட்டப்படுகிறது. காட்சியில் விரசம் துளியுமில்லை. ஆனால் பார்வையாளனின் மனம் காமத்தூண்டுதலில் உக்கிரம் கொண்டுவிடுகிறது. அதுதான் பதின்வயதில் ஏற்பட்ட உணர்ச்சிநிலை. அதை அப்படியே பார்வையாளனுக்குள் ஏற்படுத்தியிருப்பதைக் கலையின் வெற்றி என்றுதான் சொல்வேன்.

ஆட்டக்காரியின் வீட்டிற்குப் போய் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காட்சியில் அவர்கள் அவளைக் கடித்துத் தின்றுவிடுவது போல பார்க்கிறார்கள். அவளுக்கும் அந்தப் பார்வையின் அர்த்தம் புரிகிறது. பிராயத்தின் காமம் வடிகால் அற்றது என்பதை மௌனமாகவே அவர்களுக்குப் புரிய வைக்கிறாள். அவள் கையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததையே பெரிய இன்பமாகக் கருதிய அவர்கள் ஆணுறைகளைப் பலூனாக்கி ஊதி விளையாடியபடியே ஓடுகிறார்கள்.

இந்து டீச்சர் ஒரு வானவில்லைப் போல அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறாள். அவளது தோற்றமும் குரலும் அவர்களை மயக்கிவிடுகிறது. "என் பேர் இந்துமதி. வீட்ல இந்துனு கூப்பிடுவாங்க. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா.

” என்று சொல்லும்போது ஷோபா மெல்லிய படபடப்பை மறைத்துக் கொண்டு காட்டும் வெட்கம் எவ்வளவு அற்புதமானது.

இந்து டீச்சராக ஷோபா வாழ்ந்தி ருக்கிறார். அவர் இந்தப் படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்திருப்பது அவரது ஈடுபாட்டின் சாட்சி. தன்னைத் தேடி திடீரென பிரதாப் வீட்டின் முன்பாக வந்து நிற்கும் காட்சியில் ஷோபா காட்டும் வியப்பும், ஆற்றங்கரைக்குக் குளிக்கக் கிளம்பிய பிரதாப் ஷோபாவைத் தூக்கி சுற்றும்போது அடையும் சந்தோஷம் கலந்த வெட்கமும் இதன் முறையில் திரையில் யாரும் காட்டி அறியாத உணர்ச்சிகள்.

ஷோபாவைப் போலவே படத்தில் பிரதாப்பையும் மிகவும் பிடித்திருக்கிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அவருக்கு பாலு மகேந்திராவே குரல் கொடுத்திருக்கிறார். பிரதாப்பிற்கு மிக குறைவான வசனங்கள். ஆனால் காதலுற்றவனின் கண்கள் அவருக்கு இருக்கின்றன. ஏதோ நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டவரைப் போல அவர் படம் முழுவதும் நடந்து கொள்கிறார். இவர்களைப் போலவே பட்டாபியின் அத்தை பெண், அவள் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்கும் காட்சியில் காலை ஆட்டிக் கொண்டே பட்டாபி கேட்கும் கேள்விக்குப் பதில் தரும்போது அவள் கண்கள் அவனை ஆழமாக ஊடுருவுகின்றன. அவளும் விடலைப்பருவத்தில் தானிருக்கிறாள். ஆனால் அந்தப் பையன்களைப் போல தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கும் உடலின் புதிர்மை குழப்பமாகவே இருக்கிறது. லேசான தலை திருப்பல், மௌனமாகப் பார்ப்பது என்று தனது உடல்மொழியாலே அவள் பேசுகிறாள். நல்ல சினிமா என்பது சின்னஞ்சிறு உணர்ச்சிகளைக் கூட கவனமாகப் பதிவு செய்யக்கூடியது என்பதற்கு இவளது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

ஆசிரியர்களைக் கேலி செய்வது அல்லது படிக்காத மாணவனை அவமானப்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பயன்படுத்துவது என தமிழ்ப்படங்களில் பள்ளியின் வகுப்பறைக் காட்சிகள் பெரும்பாலும் படுகேவலமான நகைச்சுவையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாலு மகேந்திரா காட்டும் வகுப்பறை முற்றிலும் மாறுபட்டது. மாணவர்களின் இயல்பான குறும்புகள், ஆசிரியரின் மென்மையான அணுகுமுறை, ரகுவின் சேட்டையைக் கண்டிக்கும் டீச்சரின் பாங்கு என முற்றிலும் மாறுபட்ட பள்ளி அனுபவத்தை தருகிறது அழியாத கோலங்கள்.

மூன்று சிறுவர்களும் மூன்று வேறுபட்ட அகவேட்கையுடன் இருக்கி றார்கள். பட்டாபி இதில் சற்று துணிந்த சிறுவனாக இருக்கி றான். அவன் இரவில் அத்தைப் பெண்ணைத் தொடுவதற்குச் செல்வதும், செக்ஸ் புத்தகத்தை ரகசியமாக கொண்டுவருவதும் என அவன் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தைரியமாக முயற்சிக்கி றான்.

மற்றவன் டீச்சரை மனதிற்குள்ளாக காதலிப்பதோடு, அவள் வீடு தேடிப் போய் உதவி செய்கிறான். டீச்சரை பிரதாப் காதலிப்பதை அறிந்து பொறாமை கொள்கிறான். அவனுக்குள் மட்டும் காதல் உருவாகிறது. அவனது நடை மற்றும் பேச்சு, செயல்களில் தான் வளர்ந்தவன் என்ற தோரணை அழகாக வெளிப்படுகிறது.

ரகுவோ மற்றவர்கள் செய்வதில் தானும் இணைந்து கொள்ள நினைக்கிறான். பயம் அவனைத் தடுக்கிறது. ஆனால் ஆசை உந்தித் தள்ளுகிறது. அந்தத் தடு மாற்றத்தின் உச்சமே அவனது எதிர்பாராத சாவு. பதின்வயதின் அகச்சிக்கல்கள் ஒருவனின் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொது தளங்களில் இவை விவாதிக்கப்படாமலே ஒளித்து வைக்கப்படுவதும், விடலைப் பருவத்தினரைப் புரிந்துகொள்ளாமல் பெற்றோர் ஒடுக்க முற்படுவதும் சமூகத்தின் நோய்க்கூறுகள் என்றே சொல்வேன். இப்படம் அது போன்ற மனத் தடைகளை உடைத் தெறிந்து காதலையும் காமத்தையும் மரணத்தையும் முதன்முதலாக உணரும் பருவ வயதின் தவிப்பை அசலாகப் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஒரு புதிய பாதையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அதாவது கதை ஒரு புள்ளியில் இருந்து மேலோங்கி வளர்ந்து செல்ல வேண்டியதில்லை. தனித்தனி நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஒரு கோலம் உருவாவது போலவே திரைக்கதை அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு எழுத்தாளனாக இதன் தனித்தன்மை மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. அது போலவே இசையும் மௌனமும் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்வதற்கு இப்படமே ஒரு முன்னுதாரணம்.

சினிமா என்பது காட்சிகளின் மொழியில் எழுதப்படும் நீள்கவிதை என்றே பாலு மகேந்திரா கருதுகிறார். ஆகவே அவர் காட்சிக் கோணங்களைத் தீர்மானிக்கும் விதமும் இயற்கையான வெளிச்சத்தைப் படமாக்கும் விதமும் ஒப்பற்ற உன்னதமாக இருக்கிறது.

பாலு மகேந்திரா போன்ற அரிய கலைஞர்களால் மட்டுமே இது போன்ற படத்தை துணிச்சலாக எடுக்க முடியும். அவ்வகையில் அழியாத கோலங்கள் தமிழ் சினிமாவிற்கு பாலு மகேந்திரா தந்த கொடை என்றே சொல்வேன்.

Wednesday, 27 February 2013

மலையாள நண்பர்கள்

கடந்த மூன்று வாரங்களாக இங்கிலாந்தில் இருந்தேன். மான்செஸ்டரில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் Stoke on Trent என்றொரு இடம். நல்ல குளிர். முதல் இரண்டு நாட்கள் தனிமையில் கழிந்தாலும், பணியிடத்தில் சில நல்ல இந்திய நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் இருவர் கேரளாவை சேர்ந்தவர். ஒருவர் ஆந்திரா. இங்கிலாந்தில் கடந்த ஐந்து வருடமாக வசிப்பவர்கள். பொதுவாக நான் இதுவரை சந்தித்த வெளிநாட்டு இந்தியர்கள் இலக்கியம், சினிமா குறித்த உரையாடல்களில் ஆர்வம் இல்லாதவர்கள். அப்படியே பேசினாலும் சமீபத்திய நடப்புகள் பற்றிய சில விஷயங்கள் தான். மாறாக, மலையாள நண்பர்கள் இருவருமே அவர்களின் இலக்கியம் மற்றும் சினிமா குறித்து நன்கு அறிந்திருந்தனர்(ஜெயமோகனை தெரியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு நண்பரின் வீட்டில் கூடி மணிக்கணக்கில் மலையாள, தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா குறித்து நிறைய விவாதம் செய்தோம். நண்பர்கள் எனக்கு நல்ல மலையாள படங்களை அறிமுகப்படுத்த நான் அவர்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன். உஸ்தாத் ஹோட்டல், ஒழிமுறி போன்ற படங்கள் குறித்து நிறைய விவாதித்தோம். கமலை விட மோகன்லால் சிறந்த நடிகர் என்று நண்பர்கள் வாதாட நான் கமலை holistic ஆக பார்க்கும் போது அவர் மோகன்லாலை விட சிறந்தவர் என்றேன்.

தன்மாத்ரா, ப்ரணயம், ஸ்படிகம், கிரீடம், வானப்ரஸ்தம் போன்ற மோகன்லால் படங்களை எடுத்துக்கொண்டு அதற்கு இணையாக கமல் நடிப்பை வெளிப்படுத்திய படங்களை பட்டியலிட சொன்னார்கள். நான் பதினாறு வயதினிலே, குணா, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, மகாநதி, அன்பே சிவம் ஆகியவற்றை குறிப்பிட்டேன். மலையாள சினிமா பெரும்பாலும் தன் கதைகளை இலக்கியத்தில் இருந்து எடுக்கிறது. இலக்கியம் யதாதர்த்தை தழுவி இருப்பதால் தன்மாத்ரா போன்ற படங்கள் சாத்தியமாகிறது. அந்த நிலை தமிழில் இல்லை என்றேன்.மலையாள சினிமாவில் செலவும் குறைவு. எந்திரன், விஸ்வரூபம் போன்ற படங்கள் நூறு கோடி முதலீடு செய்து தயாரிக்கப்பட்டவை. வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகலாம். ஆனால், மலையாளத்தில் அந்த நிலை இல்லை.ரஞ்சித், பிளஸ்சி, அனூப் மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், அஞ்சலி மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை வல்லுனர்கள் மலையாள சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வந்துவிட்டனர். தமிழில் நல்ல இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை விற்பன்னர்கள் இருந்தாலும் வெகுஜன ரசனையை கருத்தில் கொண்டே அவர்கள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்றேன்.

எம்.டி.வாசுதேவன் நாயர், லோஹிததாஸ் ஆகியோரை பற்றி பேச்சு வந்தது. ஜெயமோகன் வாயிலாக லோகி பற்றி அறிந்ததால் அவர் படங்களை பற்றியும் பேசினோம். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கேரளா பற்றி எப்படி தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்கள்? ஜெயமோகன், சாரு, எஸ்.ரா ஆகியோரை பற்றி சொன்னேன். சத்சங்கம் என்பது நல்லவர்களின் அருகாமையில் இருப்பதை குறிக்கிறது. நல்லவர்களாக மட்டுமன்றி ஞானமும் பொருந்தி இருப்பவர்களின் அருகில் இருக்கும் போது நம்மை நாம் மேலும் செம்மைப்படுத்த உதவுகிறது. நன்றி நண்பர்களே..

Sunday, 3 February 2013

கமல் ....போதும்


 












சில வருடங்களாகவே கமலை பற்றி எதுவும் சிந்திப்பதில்லை என்று முடிவெடுத்து இருந்தேன், அதை மாற்றி விட்டது விஸ்வரூபம். இந்த படம் பற்றிய / தடை பற்றிய பதிவு அல்ல , முக்கியமாக கமலை சிலாகித்து / புகழ்ந்து எழுதும் பதிவும் இல்லை.

இப்போது கமலின் வாழ்வை பார்த்தல் (அதாவது பொதுவாக public தெரிந்த அளவில்)

-கமல் இரண்டு முறை திருமணம் செய்து , இரண்டு முறையும் விவாகரத்து செய்தவர். எனவே இப்போது மனைவி இல்லை .


-கௌதமி பற்றி இப்போது செய்தியில்லை, சேர்ந்து வாழ்கிறார்களா என்று தெரியவில்லை, விஸ்வரூப சர்ச்சையில் அவரை பார்க்கவே முடியவில்லை.


-இரண்டு பெண்கள், அதில் இரண்டாவது பெண் மும்பையில் இருக்கிறார் , முதல் பெண் பெரும்பாலும் ஹைதராபாத்தில் இருக்கிறார் (தெலுகு படங்களுக்காக).


-அண்ணன் சாரு ஹாசன் / அவர் மகள் சுஹாசினி / மணிரத்னம் போன்றவர்களுடன் அவ்வளவு நல்ல rapport கிடையாது.  நடுவில் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது.


-கமலின் வயது 58 .இனிமேல் அவரது கதாநாயக வாழ்வு maximum 2 வருடம்.


-கமல் நடிகர் சங்க கூட்டதை மதிப்பதே இல்லை, சமீபத்தில் நடந்த சேவை வரி பிரச்சினையில் அவர் வரவே இல்லை , வர முடியாததை பற்றி ஒரு அறிக்கையும் இல்லை. அரசியல் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் / போராட்டம் இருந்தால் மட்டுமே கலந்து கொள்கிறார்.


-நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போட வருவதே இல்லை.


-ஆக நடிகர் சங்க ஆதரவு இல்லை. [சில நடிகர்களின் தனிப்பட்ட ஆதரவு தவிர].


-இப்போது பெரும் பண நஷ்டம் , கையில் உள்ள வீடு கூட கடன்காரரிடம் போகப்போகிறது.



ஆக  வாழ்க்கை துணையில்லை , ஓய்ந்து சாய தோளில்லை , பணம் இல்லை , வயதில்லை , வெற்றி எங்கோ தூரத்தில் இருக்கிறது , 

பின்பு ஏன் இந்த ஓட்டம்? 
எதை நோக்கி? 
58 வயதில் 95 கோடியில் படமா? 
எந்த நம்பிக்கையில் 95 கோடியில் ஒரு படம்? ஓய்வு பெறும்  வயதில் எதற்கிந்த போராட்டம்?
யாரிடம் எதை நிரூபிக்க?
எதற்காக இஸ்லாத்தை வைத்து ஒரு சினிமா? அதில் சச்சரவுகள்?

உங்களையே  வருத்தி வருத்தி சில பயிற்சிகள் , தெளிவில்லாத, குழப்பமான output , அதை கிழித்து தொங்கவிட ஒரு கூட்டம் ...

எதற்கிந்த சுமை கமல்?


ஞானி கலைஞரை பார்த்து கேட்டதை , நான் கமலை பார்த்து கேட்கிறேன், தயவு செய்து மற்றவர்கள் உங்களை dismiss செய்யும் முன் ராஜினாமா செய்து விடுங்கள் , இனிமேல் உங்களால் ஒரு படம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை, அப்படி முடிந்தாலும் இன்னொரு சினிமா வேண்டாம், please.உங்களின் பொற்காலம் முடிந்து விட்டது.
 
இளையராஜா , சிவாஜி கணேசன் போன்றவர்களை பின்பற்ற வேண்டாம் , ஜெயகாந்தனை பார்த்தாலே போதும்.

உங்களுக்கு கவிதை,நடனம்,பாடல்,
ஓவியம்,இலக்கிய சிந்தனை,சங்கீத பயிற்சி, தமிழார்வம் , பிறமொழி அறிவு போன்றவை உண்டு , ஒரு நல்ல கலாச்சார ambassador ஆக இருக்க எல்லாவித தகுதியும் உண்டு.

You need rest. you need peace. If you want cinema, write books on cinema, take short films, take documentary films on tamil cinema, do some exhibhition with your paintings,start some film society...உங்களுக்கு சொல்லியா குடுக்க வேண்டும்..?


கடைசியாக  விஸ்வரூபம் பற்றி...

-கமல் இயக்கிய படங்களை வைத்து பார்த்தல் , விஸ்வரூபம் பற்றி என்னால் ஒன்றை கூற முடியும் [இன்னும் படம் பார்க்கவில்லை],
-அது நல்ல படமோ / கெட்ட படமோ /
-இஸ்லாமியர்களுக்கு எதிரான படமோ/ இல்லையோ
-அது வியாபார ரீதியாக ஓடுமோ / ஓடாதோ
ஆனால் நிச்சயமாக அது சுவாரஸ்யமான படமாக இருக்க முடியாது.

ஏன் எனில் கமலால் ஒரு great movie கூட குடுக்க முடியலாம் ஆனால் நிச்சயம் ஒரு interesting movie குடுக்க முடியாது.அவரின்  படிப்பும்  அதன் மூலம் அவரை ஆக்ரமிக்கும் information overflow-உம் அவரை intellectual arrogant ஆக்கி அவரின் படத்தை சுவாரஸ்யமில்லாமல் செய்யும்.அவர் நடித்து வெளி வந்த சுவாரஸ்யமான படங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவானவை இல்லை.


ஆக  இதுவும் அப்படியேதான் இருக்க போகிறது.  ஜெயலலிதா புண்ணியத்தில் மிக பிரமாண்டமான பப்ளிசிட்டி , எந்திரனுக்கு கலாநிதி மாறனின்/ஷங்கரின் /ரஜினியின்   money power/muscle power-இல் கிடைத்த விளம்பரத்தை  , இதில் கமல் வழக்கம் போல தன்னை வருத்தி /அழுது பெற்று இருக்கிறார்.