Thursday 10 December 2009

தெலுங்கானா நாடகம்

ஆக,தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படும் என்று சிதம்பரம் நேற்றிரவு அறிவித்துவிட்டார். உடனே KCR தனது பதினோரு நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு விட்டார். இப்போது பிரச்சனை ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் சேருமா இல்லையா என்பது தான். ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா தேவையில்லை என்கிறது TRS(Telungaana Rashtriya Samithi). என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இது சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் இறங்குவது வீண். சுதந்திரம் வாங்கியவுடன் இந்தியாவை மொழி வாரியாக பிரிக்க வேண்டும் என்ற முடிவின் விளைவை
தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இனி மற்ற மாநிலங்களிலும் இந்த ஓசை கேட்கும். காஷ்மீர் விஷயத்தில் தெலுங்கானா முன்னுதாரணமாக காட்டப்படும். ஒரிசாவை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் நேற்று சொன்னார் "எங்க ஊரும் இப்படிதான். புவனேஸ்வர்,கட்டாக் போன்றவை வளர்ச்சி காண்கின்றன. ஆனால், ஒரிசாவின் மற்ற பகுதிகளில் அந்த வளர்ச்சி இல்லை. ஆகையால், இப்படி ஒரு தனி மாநில அந்தஸ்து கேட்டு ஒரிசாவிலும் போராட்டம் தொடங்கும் என்று நினைக்கிறேன்". இந்த தனி மாநில விஷயத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன சும்பன்களா? "அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு" கோஷத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்போம். மொத்தத்தில் நாடு துண்டாகும்.

இதனால் ஒரு நன்மை நடக்கலாம். LET(Lashkar E Toiba), Indian Mujahideen போன்ற அமைப்புகள் தங்கள் வேலை சுலபமாயிற்று என்று தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளை கொஞ்சம் தளர்த்தலாம். நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்ளும் போது, வெளியில் இருந்து எதற்கு அதை செய்யப் போகிறார்கள்?

ஆனால்,TRS தலைவர் KCR ஒரு விதத்தில் பாராட்டப்பட வேண்டியவர். ஆந்திராவே YSR மறைவு, ஜகன் ரெட்டி பிரச்சனை என்று குழப்பத்தில் கிடக்க ஒரே உண்ணாவிரதத்தின் மூலம் அந்த ஊரே தன்னை பார்க்கும் படி செய்தார். "தூள்" படத்தில் அமைச்சர் உண்ணாவிரதம் அறிவிப்பார், அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

ஜெய் ஹிந்த்