Friday 7 May 2010

கொல்கத்தா மக்களுக்கு ஒரு தமிழனின் வேண்டுகோள்

உங்கள் ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு "தமிழ்" பெண்ணை திருமணம் செய்ததாலும் மற்றும் என் பணி காரணமாகவும், என் கிரகம் உங்க ஊருக்கு ஒரு வருஷத்துக்கு நாலு இல்ல அஞ்சு முறை வரேன். எந்த அடிப்படைல உங்க ஊரை "மெட்ரோ" கணக்குல கொண்டு வந்தாங்களோ தெரில ஆனா நிச்சயம் அது அந்த வகையறா கிடையாது. உங்க ஊருக்கு அஞ்சு வருஷமா வந்து போறவன் அப்படின்ற முறையில சில வேண்டுகோள் வெக்கிறேன். தயவு பண்ணி கொஞ்சம் மாற முயற்சி பண்ணுங்க.

1. மம்தா பானர்ஜிக்கு வெளிக்கு வரலேனா கூட சிகப்பு கொடி பிடிக்கறீங்க. இதுல என்ன பிரச்சனை அப்படின, நீங்க சிகப்பு கொடி பிடிச்சு ஊர்வலம் போற பக்கம் பஸ் விட மாட்டேன்கறான். காலைல ஒரு ஸ்டாப்ல எறங்கிட்டு அதுக்கு எதிர் ஸ்டாப்பிங் போய் சாயங்காலம் நின்னா பஸ் வர மாட்டேன்குது. கேட்டா ஊர்வலம் போற பக்கம் பஸ் வராதுங்கறான். எங்களை மாதிரி வெளியூர்காரன் எப்படி அங்க வாழறது?

2. கொல்கத்தா பெண்களே, இது உங்களுக்கு. நீங்க எங்கள அண்ணன் மாதிரி நெனைச்சு தான் பஸ்ல பக்கத்துல நெருக்கிகிட்டு உட்கார்றீங்க. ஆனா, எங்களுக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் ஒரு சமயம் போல இருக்க மாட்டான். கூட்டம் தள்ளினா எங்க மேல விழறது, உங்க சொத்துக்களை எங்க மேல வெச்சு தேய்க்கறது எல்லாம் தாங்க முடில. நாங்கெல்லாம் தமிழன். அக்கா, தங்கச்சி, அம்மா தவிர எல்லாமே எங்களுக்கு பிகர் தான். உங்க அளவுக்கு சகோதரத்துவம் எல்லாம் எங்களுக்கு கிடையாது.

3. கொல்கத்தா ஆண்கள் கவனிக்க. பஸ் சீட்ல கொஞ்சம் அடக்கமா ஒக்காருங்க. கவட்டைய நல்ல விரிச்சிக்கிட்டு பக்கத்துக்கு சீட்ல முக்கால் பகுதியை எடுத்துகாதீங்க. நாங்களும் மனுஷங்க தான். அப்பறம், கைல பொட்டி, பை இதெல்லாம் வெச்சி இருந்தா
எறங்கற எடம் வரைக்கும் அத நீங்களே வெச்சுக்குங்க. யவன் ஒக்காந்து இருக்கானோ அவன் மடில அஞ்சு கிலோவை எறக்கி வெக்காதீங்க.

4. எச்சை துப்பும் போது சுத்திப் பாருங்க. யாரும் வரலேனா துப்புங்க. மேல துப்பிட்டு கூச்சமே இல்லாம, "ஏன்டா நான் துப்பும் போது வந்தேன்னு கேக்கறீங்க?". என்ன நியாயம் இது?

5. நாடு ரொம்ப முன்னேறியாச்சு. ரயில் பயணத்துக்கு முன்பதிவு எல்லாம் கம்ப்யூட்டர் உபயோகிச்சே செய்யலாம். அதை எல்லாம் தெரிஞ்சுக்குங்க. இன்னும் ஐம்பது வருஷம் பின் தங்கியே இருக்கீங்க. அதே மாதிரி, காளி மாதாக்கு பான் பராக் போட்ட வாயோடையே பூஜை எல்லாம் செய்யாதீங்க. உங்களுக்கு அது பிரச்சனை இல்ல. என்ன மாதிரி வெளியூர்காரனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

6. கொல்கத்தா கணினி பொறியாளர்களே, நீங்களும் ஆபீசுக்கு பான் பராக், ஜர்தா எல்லாம் போட்டுட்டு வராதீங்க. எனக்கு புரியுது, அது உங்க குல வழக்கம். இருந்தாலும் பக்கத்துல இருக்கறவனுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும் அப்படின்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அத மாதிரி கண்ட இடத்துல சிகரட் பிடிக்காதீங்க. பொது இடங்களில் புகை பிடிக்க தடை இருக்கு. ஆனா, உங்க ஊர்ல அதெல்லாம் விஷயமே இல்ல. அந்த சட்டத்தை அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்தப்போ அப்படி தான் பிடிப்போம்னு சொன்னவரு உங்க முதலமைச்சர். "யதோ ராஜா, ததோ பிரஜா".

7. எந்த கேள்விக்கும் சுருக்கமா பதில் சொல்ல முயற்சி செய்யுங்க. ஒரு எடத்துக்கு எப்படி போகணும் அப்படின்னு என்ன மாதிரி ஒரு வெளியூர்க்காரன் கேட்டா, அவனுக்கு அந்த எடத்தோட வரலாறு, பூகோளம் எல்லாம் சொல்லாதீங்க. நாங்களே நெறைய பேசறவங்க. ஆனா உங்க கூட பேசும் போது எங்களுக்கு கண்ணை கட்டுது.

8. எடுத்த உடனே சண்டைக்கு வராம, உங்க பக்கம் தப்பு இருக்கான்னு ஒரு வாட்டி நிதானமா யோசிங்க. முக்கியமா சண்டை போடும் போது ரோட்ல ஓரம் கட்டி சண்டை போடுங்க. உங்க சண்டைய பாக்க பஸ் டிரைவர், பஸ்ல இருக்கறவன் எல்லாம் போறானுங்க. நாங்க எல்லாம் எப்போ வீடு போய் சேரர்து?

9. குப்பைய எல்லாம் ஊருக்கு ஒதுக்கு புறமா எங்கயாவது போட சொல்லுங்க உங்க மாநகராட்சிய. இப்போ எங்கள பாருங்க. பள்ளிக்கரனை அப்படிங்கற எடத்தை குப்பை போடற எடமாவே மாத்திட்டோம். அந்த மாதிரி எதாவது செய்யுங்க. நடு ரோட்ல குப்பைய போட்டா நல்லாவா இருக்கு?

10. கடைசியா, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் ஒட்டு போடறதுன்னு முடிவு பண்ணிடீங்க. அதுல கொஞ்சம் படிச்சவனா, பண்புள்ளவனா பார்த்து ஓட்டுப் போடுங்க. உங்க ஊரு முன்னேற நீங்க பார்த்து எதாவது செஞ்ச தான் உண்டு.

Sunday 2 May 2010

என்னை செதுக்கியவர்கள்

திரு.சிவகுமார் அவர்கள் ஒரு நல்ல நடிகர் என்று தெரியும் ஆனால் அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை நேற்று தான் தெரிந்து கொண்டேன்."என்னை செதுக்கியவர்கள்" என்ற தலைப்பில் "பாவை பொறியியல் கல்லூரியில்" கடந்த மாதம் அவர் பேசியதை விஜய் டிவி நேற்று ஒளிபரப்பியது. நாற்பது வருடங்களுக்கு முன் அவர் நடித்த படங்களில் இருந்து வசனங்கள், பாரதி பாடல்கள், கலியன் பூங்குன்றனார் பாடல்கள் என்று ஒன்றை கூட எழுதி வைத்துக் கொள்ளாமல் அவர் பேசியது அவரது அபாரமான ஞாபக சக்திக்கு உதாரணம். அவர் தமிழும் அற்புதம்.

ஒரு சினிமா நடிகன் படும் கஷ்டம் என்ன என்று அனைவருக்கும் தெரியும் விதம் ஒரு சம்பவத்தை விவரித்தார். "கவிக்குயில்" படத்திற்காக மழையில் அவர் படுத்திருப்பது போல் ஒரு காட்சி. காட்சி படமாக்கப்பட்ட இடம் ஒரு மலை போலும். வழக்கம் போல் செயற்கை மழை பெய்ய, காட்சியை படம் பிடிக்க ஆரம்பித்த குழு அப்போது தான் அந்த மலையை சுற்றியிருந்த கிராம மக்கள் அந்த மலையை தங்கள் இயற்கை உபாதைகளுக்காக பயன்படுத்துவதை உணர்ந்தார்களாம். வேறு இடம் தேட முடியாது என்பதால் காட்சியை படமாக்க முடிவு செய்யப்பட்டது. மழையில் அந்த மலக் கழிவுகள் நீரோடு கலந்து சிவகுமார் அவர்களின் முகம், உடல் என்று எங்கும் படர, மூன்று மணி நேரம் அதற்கு நடுவில் இருந்து அந்த "ஷாட்" எடுக்கப்பட்டது என்றார். அந்த நிகழ்ச்சி மனதை வேதனைப்படுத்தியது என்றாலும் அந்த காலகட்டத்தில் மனித மலம் அள்ள ஒரு கூட்டம் இருந்ததே, அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை நினைத்து எவ்வளவு வேதனை அடைவார்கள் என்று நினைத்து பார்த்தேன். அதோடு ஒப்பிட்டால் என் கஷ்டம் பெரிதல்ல என்று மனதை தேற்றிக் கொண்டேன் என்றார்.

திரு ஏ.வி.எம் செட்டியார் அவர்கள் தான் பாரதியாரின் பாடல்களை பொதுவுடைமை செய்தவர் என்ற புது தகவலையும் தெரிவித்தார். சிவாஜி அவர்களின் நேரம் தவறாமை, தொழில் பக்தி, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வசனம் எழுதும் திறமை மற்றும் அனைவரையும் சரி சமமாக நடத்தும் அவர் பண்பு என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வெகு நாளைக்கு பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி முன் நேரம் செலவழித்தேன். நிறைவாக இருந்தது.