Wednesday 30 November 2011

நாவல்களே உலகை ஆள்கின்றன

இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம்.

ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன, சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்கபடுகின்ற பட்டியலில் எப்போதுமிருக்கின்றது.

இன்று ஒரு நாவல் உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால் அந்த எழுத்தாளர் அடையும் குறைந்த பட்ச பணம் பத்து கோடி, திரைப்படஉரிமை, பிறமொழி உரிமை என்று எளிதாக அவர் ஐநூறு கோடி வரை சம்பாதித்துவிட முடியும், அதைவிட நாவலை எழுதுவதற்கு முன்பாகவே அதை யார் வெளியிடுவது என்று பதிப்பகங்கள் ஏலம் விடுகின்றன, எவர் அதிகப் பணத்திற்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களுக்கே நாவலை வெளியிடும் உரிமையை எழுத்தாளர் தருகிறார்.

ஆனால் தமிழ்நாட்டின் சூழல் இதற்கு நேர் எதிரான ஒன்று, இங்கே அதிகம் விற்பனையான நாவல் என்றால் அது ஐந்தாயிரம் விற்பனையாகியிருக்கும், தமிழின் பெஸ்ட் செல்லர் பொன்னியின் செல்வன் கூட இதுவரை மொத்தமாக பத்துலட்சம் பிரதிகள் விற்றிருக்குமா என்பது சந்தேகமே.

ஒவ்வொரு பத்து வருசத்திலும் உலக இலக்கியத்தின் கவனம் ஏதாவது ஒரு தேசத்தின் மீது குவிகிறது, அப்படி தான் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் புகழ்பெற்றன, ஆப்பிரிக்க நாவல்கள் கொண்டாடப்பட்டன, அந்த வரிசையில் இன்று உலகின் கவனம் ஆசியாவின் மீது குவிந்துள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் சீன இலக்கியங்களே உலக இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்படுகின்றன.

புக்கர், புலிட்சர் உள்ளிட்ட பல முக்கிய இலக்கியப்பரிசுகளை இந்தியர்கள் வென்று வருவது இதன் அடையாளமே. குறிப்பாக சித்தார்த்த முகர்ஜி எழுதிய “தி எம்பரர் ஆஃப் ஆல் மாலடீஸ்: எ பயாகிரஃபி ஆஃப் கேன்சர் (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புற்று நோய் பற்றிய ஆய்வு நூலுக்கு புலிட்சர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நுண்மையாகவும் எழுதப்பட்ட புத்தகமது.

காமென்வெல்த் இலக்கியப் பரிசை வென்றுள்ள ரானா தாஸ் குப்தாவின் சோலோ (Rana Dasgupta , Solo) நாவல் சமகால நாவல்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்று, யதார்த்தமும் மாயமும் ஒன்று கலந்து எழுதப்பட்ட இந்த நாவலின் கதை சொல்லும் முறை வசீகரமானது, கதைக்களன்களில் ஒன்றாக டெல்லி உள்ளது, ரானா தாஸ் குப்தா பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், இது அவரது இரண்டாவது நாவல், இப்படி நீண்டு கொண்டே போகிறது இந்தியர்களின் எழுத்திற்கான அங்கீகாரம், ஆனால் இவை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய எழுத்திற்கே கிடைக்கின்றன, பிராந்திய மொழிகளில் எழுதுபவர்கள் இவர்களை விட தரமானதாக இருந்தாலும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்காமலே தானிருக்கிறார்கள்

நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை எழுத்தாளர்கள் உள்ள அளவிற்கு வாசகர்கள் இல்லை என்பதே, எல்லா நாடுகளிலும் புதிது புதிதாக எழுத்தாளர்கள் பெருகிவருகிறார்கள், ஆனால் வாசகர்களின் எண்ணிக்கையோ அந்த அளவிற்கு அதிகமாகவில்லை.

வாசகர்களில் கதை, கவிதை, கட்டுரை என எதையும் எழுதாவர் என்று ஒருசதவீதம் இருப்பார்களா என்று சந்தேகமாகவே இருக்கிறது, ஆகவே அறியப்பட்ட எழுத்தாளர்கள் அறியப்படாத எழுத்தாளர்கள் என்ற இரண்டுவகை தான் இருக்கிறார்கள், இதில் வாசகர்களாக இருப்பவர்களை அதிகம் அறியப்படாத எழுத்தாளர்கள் என்ற வகையில் குறிப்பிடலாம்

இருபது வருசத்தின் முன்பு ஐநூறு பக்க புத்தகத்தை படிக்க மனதிருந்தது, ஆனால் புத்தகம் வாங்குவதற்கு பணமில்லை, இன்று ஐநூறு ரூபாய் பணம் எளிதாக இருக்கிறது, ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிப்பவர்கள் வெகுவாக குறைந்து போய்விட்டார்கள், ஆகவே போன தலைமுறையினரை போல இன்று இலக்கியவாதிகளை ஆதர்சிக்கும், கொண்டாடும் வாசகர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பதே என் எண்ணம்.

சமகால உலக கவிதையுலகில் கவிதையை ஒரு போர்வாளாக மாற்றியவர் என்று புகழாராம் சூட்டப்படுபவர் மஹ்முத் தர்வீஸ் ( Mahmoud Darwish ) இவர் ஒரு பாலஸ்தீன கவிஞர், அரசியல் நம்பிக்கைளுக்காகப் இஸ்ரேலிய ராணுவத்தால் பலமுறை கைது செய்யப்பட்டார், நிலத்தையும் மொழியையும் மீட்டெடுக்க போராடும் ஒரு அகதி நான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் தர்வீஸ், ஆகவே தான் எங்கே சென்றாலும் தனது நிலத்தையும் மக்களின் நினைவுகளையும் அவர்களின் மொழியையும் சுமந்து கொண்டே செல்கிறேன் என்கிறார், , தமிழில் மஹ்முத் தர்வீஸ் கவிதைகள் தொகுப்பு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது

சிறுகதையில் இன்று சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்றிருப்பவர் ஹருகி முராகமி, ஜப்பானிய எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பெருநகரங்களின் அபத்தமான வாழ்க்கையை பகடி செய்யக்கூடியவை, முராகமியின் கதைகளை காப்காவின் கதைத் தொடர்ச்சி என்றே சொல்லத் தோன்றுகிறது, விசித்திரமான நிகழ்வுகளும் மாயமும் யதார்த்தமான விவரிப்பும் கொண்டவை இவரது கதைகள் இவரது The Elephant Vanishes சிறுகதை தொகுப்பு முப்பது லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றது.

முராகமி ஒரு மாரத்தான் ஒட்டப்பந்தய வீரரும் கூட, தனது ஒட்டப்பந்தய அனுபவங்களை What I Talk About When I Talk About Running நூலில் சிறப்பாக எழுதியிருக்கிறார்

சமீபத்தில் நியூயார்க்கர் இதழில் வெளியான இவரது பூனைகளின் நகரம் கதை மிகுந்த பாராட்டுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது

உலக அரங்கில் மூன்று பேர் முக்கியமான நாவலாசிரியர்களாக கொண்டாடப்படுகிறார்கள், ஒருவர் ஒரான் பாமுக், நோபல் பரிசு பெற்றுள்ள துருக்கியை சேர்ந்த எழுத்தாளர், இவரது My Name is Red,, என்ற நாவல் என் பெயர் சிவப்பு எனத் தமிழில் வெளியாகி உள்ளது. நுண்ணோவிய மரபைக் களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் ஆயிரத்தோரு அராபிய இரவுகளை போன்ற கதை சொல்லும் முறையைக் கொண்டது

மற்றவர் கார்லோஸ் ருயுஸ் ஜெபான், இவரது The Shadow of the Wind நாவல் 2001 ம் ஆண்டு வெளியானது, மறக்கப்பட்ட புத்தகங்களுக்கென ஒரு கல்லறைத்தோட்டம் இருக்கிறது, என்றும் அங்கே அனைவராலும் கைவிடப்பட்ட புத்தகங்கள் தங்களை எவராவது நேசிக்கமாட்டார்களான எனக் காத்திருப்பதாகவும், அப்படியான ஒரு கல்லறைநூலகத்திற்குப் போய் புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்கின்றவன் அந்தப் புத்தகத்திற்கு விசுவாசமான ஆளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாகவும் கதை நீண்டு செல்கிறது, புறக்கணிக்கப்பட்ட புத்தகங்களின் குரலாக ஒலிக்கும் இந்த நாவல் உலகை புத்தகங்களே மேம்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது

மூன்றாவது நாவலாசிரியர் கனடாவைச் சேர்ந்த யான் மார்டில் , இவரது Life of Pi நாவல் பாண்டிச்சேரியை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டது, விலங்குகளை ஏற்றிக் கொண்டு போகும் ஒரு கப்பலில் நடைபெறும் சம்பவங்களைக் கதையின் பிரதான களம், இவரது சமீபத்திய நாவலான Beatrice and Virgil.. தொன்மத்தையும் சமகாலத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கபட்ட பகடிவகை எழுத்து, இந்த மூவருமே இன்று அதிகம் பேசப்படும் நாவலாசிரியர்களாகும்

சர்வதேச இலக்கிய அரங்கில் எடுவர்டோ கலியானோவின் ( Eduardo Galeano) கட்டுரைகளுக்கு முக்கியமான இடமிருக்கிறது, இவர் வரலாற்றையும், இலக்கியத்தையும் லத்தீன் அமெரிக்க அரசியலையும் பற்றி அதிகம் எழுதியவர், இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதியிருப்பவர் என்பது கூடுதல் செய்தி

இவரைப்போலவே வில்லியம் டேல்ரிம்பிள் (William Dalrymple) வரலாற்றையும் பயணத்தையும் பற்றி கட்டுரைநூல்களை எழுதும் தனித்துவமான எழுத்தாளர், கடைசி மொகலாய அரசரான பகதூர் ஷா பற்றிய The Last Mughal, The Fall of a Dynasty, Delhi 1857 நூல் விரிவான ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று, தஞ்சை பெரிய கோவில் வரலாறு உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை எழுதிய இவர் சில காலம் டெல்லியில் வசித்தவர்.

சமீபத்தில் என்னை உலுக்கிய புத்தகம் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mother’s Heart , அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், முன்னாள் மத்திய அமைச்சர் என்று பன்முகம் கொண்டுள்ள அருண்ஷோரியின் இப் புத்தகம் அவரது மனவளர்ச்சி குன்றிய மகனைப்பற்றியது, அவனது பிறப்பில் துவங்கி இன்றுவரை அவனுக்காக அருண்ஷோரியும் அவரது குடும்பமும் எவ்வளவு வலிகளை தாங்கிக் கொண்டார்கள், அந்த சிறுவனை எப்படி பாசமாக வளர்த்து வருகிறார்கள் என்பதைப்பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார்,

மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனக்கான தனிவுலகில் வாழ்கிறது, அதன் மீது பரிவு கொள்ளவும். பாசம் காட்டவும் பெற்றவர்கள் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது, சமூகம் அந்தப் பெற்றோர்களை எந்த அளவு பரிகாசம் செய்கிறது என்பதை கண்ணீர்வர எழுதியிருக்கிறார், உண்மை சுடும் என்பார்கள், அதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்

Source: www.sramakrishnan.com