Wednesday 7 April 2010

ஏன் இந்த கரிசனம்?

"வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசு என்னும் அமைப்பை உடைத்துவிட்டு ஆட்சியை பிடிப்பதே மாவோயிஸ்டுகளின் லட்சியம்".

இதை சொன்னது எந்த மாவோயிஸ்ட் தலைவரும் இல்லை. கடந்த மாதம் புது டெல்லியில் "இடதுசாரி தீவிரவாதம்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்திய உள்துறை செயலர் G.K.Pillai சொன்ன வார்த்தைகள் இவை. 2009 ஆம் ஆண்டு மட்டும் 908 பேர் மாவோயிஸ்ட் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் உதவி செய்துக்கொண்டு இருக்கலாம் என்றும் G.K.Pillai கூறியிருந்தார். அவர் பேசி ஒரு மாதம் கூட ஆகவில்லை. நேற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் எண்பது காவலர்களை மாவோயிஸ்டுகள் கொன்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதையே தான் திரு.A.K.Antony கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திய போது தெரிவித்தார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதில் என்ன தவறு? தீவிரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்று கூறும் இந்திய அரசு உள்நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கும் மாவோயிஸ்டுகளை அழிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? இந்திய நிலப்பரப்பில் 40% மாவோயிஸ்டுகள் வசம் இருக்கிறது என்கிறது விக்கிபீடியா.

"As of 2009, Naxalites are active across approximately 220 districts in twenty states of India accounting for about 40 percent of India's geographical area. They are especially concentrated in an area known as the "Red corridor", where they control 92,000 square kilometers. According to India's intelligence agency, the Research and Analysis Wing, 20,000 armed cadre Naxalites were operating apart from 50,000 regular cadres working in their various mass organizations and millions of sympathisers and their growing influence prompted Indian Prime Minister Manmohan Singh to declare them as the most serious internal threat to India's national security."

உள்நாட்டு பாதுகாப்பிற்கு இத்தனை பெரிய சவால் விடுக்கும் இந்த இயக்கத்தை வேரோடு அறுத்தெறிய வேண்டாமா? இவர்கள் மீது கரிசனம் ஏன்? நேற்று கொல்லப்பட்ட எண்பது காவலர்களின் குடும்பங்கள் என்ன செய்யும்? ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேலையும் தந்தால் அரசின் பொறுப்பு முடிந்து விட்டதா? இவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து என்ன ஆகப் போகிறது?

இந்தியாவை குறிவைக்கும் லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இவர்களை உபயோகிக்காது என்பது என்ன நிச்சயம்? உள்துறை செயலர் பிள்ளை அவர்கள் சொல்வது போல் முன்னாள் ராணுவ வீரர்கள் தான் இவர்களுக்கு போர் தந்திரங்களை கற்றுக் கொடுக்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்தால், அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது அத்தனை கடினமா? திரு சிதம்பரம் அவர்களே, "The buck does not stop with the state. You are responsible too".

Tuesday 6 April 2010

ஜெயலலிதாவிற்கு சில யோசனைகள்

2006 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆரம்பித்த தி.மு.க வெற்றி அதன் பின் நடந்த பத்து இடை தேர்தல்களிலும் தொடர்ந்து இப்போது பதினோரவதாக பென்னாகரத்தில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை அதன் கடைநிலை தொண்டனுக்கு நிச்சயமாக இருக்காது. அ.தி.மு.க தலைமையும் பாவம் என்ன செய்யும்? சிறுதாவூர், கொடநாடு என்று சென்று வெற்றி பெறுவதற்கான வழிகளை யோசித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இதற்கிடையே, தமிழினத் தலைவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் அனுதாப ஒட்டு முழுவதும் அங்கு சென்று விடும்.அழகிரி "பவரை" தாண்டி அ.தி.மு.கவிற்கு கிடைக்கிற பத்து பதினைந்து தொகுதி கூட அந்த நிலையில் கிடைக்காது. இப்படி ஒரு இக்கட்டான சுழலில் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்களை தன் பால் ஈர்க்க ஜெயலலிதா என்ன செய்யலாம்? நம்மால் முடிந்த சில யோசனைகள்.

1. தமிழக மக்கள் ஜாதிப் பற்றுடையவர்கள். உதாரணமாக, அமைச்சர் ஆ.ராசா 3G Spectrum ஊழலில் சிக்கிய போது கலைஞர் என்ன செய்தார் என்று நினைவிருக்கிறதா? ராசா "தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்" என்பதால் தானே அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றார். அவ்வளவு தான். யாரும் வாயை திறக்கவே இல்லை. அது போல்,"நான் பிராமண வகுப்பை சேர்ந்த பெண்மணி என்பதால் தானே தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் என்னை தீண்டத்தகாத ஒருவரை போல நடத்துகின்றன? தமிழக மக்களே, இது நியாயமா?" என்று கேட்கலாம்.தமிழகத்தில் ஜாதிக் கலவரம் உருவாக இது ஒரு நல்ல வழி. சரியாக சட்டசபை தேர்தலுக்கு முன் இதை செய்தால், தேர்தல் நிறுத்தப்பட்டு ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படலாம். அதற்கு பின் நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும்.

2. "ஸ்டாலினுக்கு அனுபவம் குறைவு. கலைஞரின் உடல்நலமோ சரியில்லை. இந்த நிலையில் என்னை விட சிறப்பாக யார் தமிழகத்தை நிர்வகிக்க முடியும்? எனவே, தமிழக மக்கள் ஆட்சிப் பொறுப்பை என்னிடம் கொடுக்க வேண்டும். ஸ்டாலின் எப்போது தயார் என்று "நான்" நினைக்கிறேனோ அப்போதே ஆட்சிப் பொறுப்பை அவரிடம் தந்து விடுகிறேன்" என்று சொல்லலாம்.

எம்.ஜி.யார் உடல்நலம் சரியின்றி அமெரிக்கா சென்ற போது, கலைஞர் என்ன சொன்னார்? "ஆட்சியை என்னிடம் கொடுங்கள், எம்.ஜி.யார் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருப்பித் தருகிறேன்" என்றார். அதை போல தான் இதுவும். எதையும் கூர்மையான மதி நுட்பத்துடனும் தொலைநோக்கு பார்வையுடனும் சிந்திக்கும் தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. "ஸ்டாலினுக்கு அனுபவம் வந்தவுடன் ஆட்சியை தருகிறேன் என்கிறாரே, இந்த பெரிய மனது யாருக்கு வரும்?" என்று பாராட்டுக்கள் வேறு குவியும்.

3. "என்னை பொறுத்தவரை அழகிரி தான் தமிழகத்தை ஆள ஸ்டாலினை விட தகுதியானவர். ராமன் இருக்க பரதனுக்கு முடிசூட்ட நினைக்கும் தசரதனை தமிழக மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பலாம். இது ஜாதிக் கலவரத்தை காட்டிலும் உக்கிரமான விளைவுகளை உருவாக்க கூடியது. குறைந்த பட்சம் தமிழகத்தில் ஆயிரம் பேர் மரணம், நூறு பஸ் எரிப்பு போன்றவை நடக்கும். தேர்தல் ரத்தாகும். தேர்தல் மீண்டும் நடக்கும் பட்சத்தில் மக்கள் உயிருக்கு பயந்தாவது அ.தி.மு.கவிற்கு ஓட்டளிப்பார்கள்.

4. ஜெயா டிவியில் "ஆங்கிலம் சிறப்பாக பேசுபவர் கலைஞரா/அழகிரியா/ஸ்டாலினா?" என்று தென் மாவட்டங்களில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம். ஸ்டாலின் தான் வெற்றி பெற்றார் என்று அறிவித்த உடனே தென் மாவட்டங்களில் உள்ள ஜெயா டிவி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படும். அந்தந்த மாவட்ட தி.மு.க தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சுவரேறி குதித்து உள்ளே வந்து ஆட்களை உதைப்பார்கள். மதுரையில் அழகிரியே கூட பங்கேற்கலாம். இதையெல்லாம் காமெராவில் பதிவு செய்து தேர்தல் வரும் வரை ஒளிபரப்பலாம். அனுதாப ஒட்டு முழுதும் அ.தி.மு.கவிற்கு தான்.

5. தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் இலவச டிவியுடன் DVD ப்ளேயர் இலவச இணைப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். மேலும், DVD வாங்க மக்கள் அலையவேண்டாம், அவை ரேஷன் கடைகளில் விற்கப்படும். இரண்டு கிலோ துவரம்பருப்பு வாங்கினால் ஒரு DVD இலவசம், ஒரே சமயத்தில் பத்து கிலோ மற்றும் அதற்கு மேலாக மளிகை சாமான்கள் வாங்குபவர்களுக்கு புதுப்பட டிவிடிக்கள் கொடுக்கப்படும் போன்ற அறிவிப்புகள் நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க அ.தி.மு.கவிற்கு உதவும்.

6. "அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எனக்கு பாராட்டு விழாக்கள் எதுவும் நடத்தப்பட மாட்டாது" என்று அறிவிக்கலாம். இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், இந்த ஒரு காரணத்திற்க்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.கவிற்கு ஓட்டளிப்பார்கள்.