Saturday 1 October 2011

என்னத்தை சொல்றது?

என்னுடன் பணிபுரியும் பெண்ணைப் பார்த்து Days Inn ஹோட்டலின் ரிசப்ஷனில் இருந்த அந்த அமெரிக்க பெண் சொன்னார். "உங்களை பார்த்தால் ஹிந்தி நடிகை ரேகா போல இருக்கீறீர்கள்". ஏதோ கவனத்தில் இருந்த நான் சட்டென்று நிமிர்ந்தேன். "உங்களுக்கு இந்த அளவுக்கு இந்தியா பற்றி தெரியுமா?" என்றேன். அவர் சொன்னார், "என் தாய் இரானை சேர்ந்தவர். தந்தை அமெரிக்கர். நான் பார்த்த முதல் இந்தியப் படம், கபி கபி. அதிலிருந்து நான் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. இந்தியாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தே வாழ்கிறீர்கள். பெரியோரை மதிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடிக்கும்". இந்தியாவைப் பற்றி புத்தகத்தில் மட்டும் படித்திருப்பார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

மூச்சு விடாமல் இத்தனையும் சொன்ன அந்த பெண்ணை பார்த்து, "அப்பறம்"? என்றேன். "எனக்கு புடவை கட்டிக் கொள்ள மிகவும் விருப்பம்" என்றார். மரியாதையின் பொருட்டு, "அடுத்த முறை இங்கு வந்தால் உங்களுக்காக ஒரு புடவை எடுத்து வருகிறேன்" என்றேன். "உங்களுக்கு அதை எப்படி அணிவது என்று தெரியுமா?" என்றார். "இல்லை" என்றேன்.

Death at my doorstep புத்தகத்தில் குஷ்வந்த் சிங் ஒரு வெள்ளையரிடம் சொல்வார், "எனக்கு சில புடவைகள் அவிழ்த்து பழக்கம் உண்டு. அவற்றை கட்டி விட்டு பழக்கம் இல்லை".