Friday 14 October 2011

கடவுள் வந்திருந்தார்,அடிமைகள், சுஜாதா

காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!
கானக மாமடுவில் காளியனுச்சியிலே
தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!

- பெரியாழ்வார் திருமொழி(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த "கடவுள் வந்திருந்தார்" குறுந்தகடை வீட்டில் காணவில்லை. Dementia வந்து வருங்காலத்தில் நான் அவதிப் பட நேர்ந்து, என் பேரப் பிள்ளைகள் "என்ன எழவு இந்த கிழத்துக்கு இப்படி ஒரு மறதி, பாட்டி எப்படி தான் சமாளிச்சாலோ" என்று சொல்ல நேர்ந்தால் என் மெமரி எப்படிப்பட்டது என்று அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே நான் எடுத்து வைத்திருந்த பொக்கிஷம் அது.

பக்கம் பக்கமாக சுஜாதா சீனு மாமாவுக்காக எழுதி இருந்த வசனங்களை நினைவில் வைத்து எண்ணூறு பேர் முன் மியுசிக் அகாடமி மெயின் ஹாலில் பேசிய தருணங்களை எப்படி மறக்க முடியும்? மேலே சொன்ன பெரியாழ்வார் திருமொழி கிளைமாக்சில் சீனு மாமா தன்னை பெருமாளின் வடிவம் என்றெண்ணி வரும் ஜனங்கள் முன் பேசும் பகுதியில் வரும்.

வேலையில் இருந்து ரிடையர் ஆகும் சீனு மாமா, அவர் மனைவி, மகள் ஆனந்தி. அவர் மகள் ஆனந்தியை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன். சீனு மாமா வீட்டுக்கு வரும்(அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும்) வருங்கால மனிதன் ஜோ. இவர்களை சுற்றி கதை. ரிடையர் ஆகும் தருவாயில் வீட்டில் மரியாதை இல்லாத நிலை சீனு மாமாவுக்கு. திடீரென்று வேற்றுகிரக மனிதன் ஜோ மாமா வீட்டிற்கு வர அதனால் நடக்கும் ஹாசியமான நிகழ்ச்சிகள் தான் கதை.

ஜோவை வைத்துக்கொண்டு மாமா அடிக்கும் லூட்டி அவர் கடவுள் சக்தி பெற்றவர் என்ற புகழை தேடித் தர, மீண்டும் வீட்டில் மரியாதை. ஒரு கட்டத்தில் ஜோ வீட்டை விட்டு தன் கிரகம் செல்வதாக சொல்ல பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்போது அவர் மகளை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன் அவரை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான். சீனு மாமாவாக நான் நடித்திருந்தேன்.சுஜாதாவின் பன்முகத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த நாடகம்.

ஏற்கனவே சுஜாதா நாடகமான அடிமைகள் தகடை தொலைத்துவிட்டேன். இப்போது இது. அடிமைகள் சுஜாதாவின் மற்றொரு masterpiece. நீட்ஷேவை(Friedrich Nietzsche) எனக்கு அறிமுகப்படுத்திய நாடகம். அதன் பின் நீட்ஷேவின் "Thus Spake Zarathustra" வாங்கிப் படித்து இன்னும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். அடிமைகளில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் எனக்கு. வசனங்கள் கடவுள் வந்திருந்தார் அளவுக்கு இல்லை என்றாலும் கடைசியில் பெரியப்பாவை கொன்று அவர் இடத்தை எடுத்துக்கொள்ளும் பாத்திரம். அற்புதமாக சிருஷ்டித்திருப்பார் சுஜாதா.

கடவுள் வந்திருந்தார், அடிமைகள் பற்றி பேசும் போது இந்த நாடகங்களை இயக்கிய GD என்கிற காயத்ரி தேவி அவர்களை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவரும் ஒரு சுஜாதா ரசிகை. CSS நிறுவனத்தின் Microsoft Technologies பிரிவில் மேலாளராக இருந்தார். BITS Pilani மாணவி. இப்போது WIPRO நிறுவனத்தில் Senior Delivery Manager பொறுப்பில் இருக்கிறார். இவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த நாடகங்கள் நடந்திருக்காது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற ஆட்களை தேர்வு செய்து, ரீடிங் செஷன்ஸ் வைத்து முதலில் வசனங்களை மனப்பாடம் செய்ய வைத்து பின்னர் காட்சிகளை வடிவமைப்பார். கடினமான உழைப்பாளி, எடுத்துக் கொள்ளும் வேலையில் நிறைய சிரத்தை. வார இறுதியில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், போன்ற இடங்களில் ரிகர்சல் நடக்கும். அற்புதமான நாட்கள் அவை. GD, என்னை இந்த நாடகங்களில் நடிக்க வைத்ததற்காக உங்களுக்கு என் நன்றி.

சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாளும் இந்த நாடக தகடுகளை தேடுவது தான் வேலை.