Thursday 12 August 2010

பாலகுமாரன்

ரொம்ப நாளாக பாலகுமாரன் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். தீப்பொறி திருமுகம் a.k.a சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் தனக்கு "ல லே லா லலி ல லா" என்று பாடியிருந்த ஒருவரின் பதிவை வெளியிட்டிருந்தார். அதை பார்த்தவுடன் ஒரு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தோன்றியது.

"தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்பது போல யார் வேண்டுமானாலும் எவரை/எதை பற்றி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்றாகிவிட்டது. நம்ம எங்க இருக்கோம்னு கண்டுபிடிச்சு வரவா போறான் என்கிற எண்ணமே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக சாரு அபிமானி எழுதியுள்ள இந்த பதிவை பார்ப்போம்.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_03.html

பாலகுமாரனின் "தலையணை" நாவல் என்கிறார். பாலா "தலையணை மந்திரம்" என்று எழுதியாக தான் நினைவு. முதல்ல நாவலை படிங்கப்பா. எதையாவது படிச்சிட்டு எழுதாதீங்க. பாலாவுக்கு குடி பழக்கம் கிடையாது. புகை பிடித்து கொண்டிருந்தவர் பின்னாளில் அதையும் நிறுத்திவிட்டார். பாலா குடித்து விட்டு சுஜாதாவிடம் கலாட்டா செய்தார் என்பதெல்லாம் கொடூரமான கற்பனை.சிறுகதை எழுத சுஜாதாவிடம் சில "டிப்ஸ்" பெற்றார். அவ்வளவு தான்.

சினிமாவில் பாலா சில அற்புதமான வசனங்கள் எழுதினர். ரஜினி ரசிகரான சதிஷுக்கு "நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி" மட்டும் தான் நினைவில் உள்ளது. உல்லாசம், முகவரி, மாதங்கள் ஏழு போன்ற படங்கள் பாலாவின் வசனம் எழுதும் திறமைக்கு நல்ல உதாரணங்கள். பாலாவின் சினிமா அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்ள சதீஷ் அவர்கள் "இதற்குத் தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" படிக்கலாம்.

பாலா நிறைய எழுதுவதால் ஒரே விஷயம் பல முறை கூறப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. ஆனால், இதை நிறைய எழுத்தாளர்களிடம் காணலாம். பீமா, சண்டக்கோழி, தாம் தூம், உன்னாலே உன்னாலே போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் சில படங்களில் ஒரே வசனத்தை மீண்டும் பிரயோகம் செய்திருப்பார். அந்த இடத்துக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். அதற்காக அவர் எழுத்தாளரே இல்லை என்பீர்களா? கும்பகோணத்தையும் காவிரியையும் மீண்டும் மீண்டும் எழுதிய தி.ஜா எழுத்தாளர் இல்லையா? சுத்த பேத்தல்.

பாலாவுக்கு தெளிவில்லையாம். நேரக் கொடுமைடா சாமி. "காலடி" என்கிற பாலாவின் நூலை நேரம் கிடைத்தால் படியுங்கள். சிக்கலான அத்வைத தத்துவங்களை மிகச் சுலபமாக புரிய வைத்திருப்பார் பாலா. படித்து தெளிவு பெறுங்கள்.

ஒருவரை விமர்சிக்கும் முன்பு அவரை பற்றிய அறிதல் மிக முக்கியம். நம்மைப் போன்ற இன்று முளைத்த காளான்கள் பாலா, சுஜாதா பற்றி எல்லாம் பேசும் முன்பு நூறு முறை யோசிக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல,"எழத்து என்பது தனக்குத் தானே பேசிக்கொள்வது. அதிர்ஷ்டம் இருந்தால் ஒத்த மனதுடையவர்களுடன் பேசலாம்". சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் என்ன சதீஷ், வாசு, ராமசாமி, கந்தசாமி போன்றவர்களுக்கு புரியவில்லை என்றால் தாங்கள் எழுத்தாளனாக பிறந்த பயனை அடைய மாட்டோம் என்று நினைத்தா எழுதினார்கள்?முதிர்ச்சி பெறுங்கள் சதீஷ்.

நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா?



நம்மில் எத்தனை பேர் தலைவலி ஜுரம் போன்ற சாதாரண உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுகிறோம்? நான் Dolo-650,Saridon, Resteclin 500 Mg போன்ற மருந்துகளை அந்த நோய் தீரும் வரை எடுத்துக்கொள்வேன்.அப்படி ஒரு சாதாரண மருந்தான Combiflam என்ற மருந்து எத்தனை பெரிய பின்விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை படத்தில் பாருங்கள். குணசுந்தரி என்ற இந்த பெண் வைரல் பீவர் எனப்படும் விஷ ஜுரம் ஏற்பட்டு அதற்காக நங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.(இங்கு தான் என் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள்)

அங்கிருந்த மருத்துவர் Combiflam எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். Combiflam ஜுரம் மற்றும் உடல் வலிக்கான மருந்து. Paracetamol மற்றும் iBrufen கலவை. நானே இரண்டொரு முறை இதை உட்கொண்டிருக்கிறேன். குணசுந்தரி ஒவ்வாமை(Allergy) காரணமாக இந்த நிலையை அடைந்துள்ளார். மருந்தில் இருந்த ஏதோ ஒன்று அவருக்கு ஒற்றுக் கொள்ளவில்லை. அந்த பெண் போலீசில் புகார் செய்ய இப்போது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கை பரிசீலித்த அகில இந்திய தலைமை மருத்துவ/மருத்துவர் குழு தலைவர் ரவிசங்கர், "மருந்தின் கலவையால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒவ்வாமை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை பொறுப்பேற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

ஒரு நோயாளியின் முந்தைய உடல் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வது ஒரு மருத்துவரின் கடமை இல்லையா? நோயாளியின் இதர உடல் கோளாறுகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் எப்படி மருத்துவர் ஏதோ ஒரு மருந்தை சிபாரிசு செய்ய முடியும்? Combiflam எனப்படும் இந்த மருந்து 1997 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்கிறது கூகுள் வாயிலாக நான் பார்த்த சில வலைத்தளங்கள். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் எப்படி மருத்துவர் இதை நோயாளிக்கு பரிந்துரைக்க முடியும்?

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது. இத்தனை பெரிய விஷயம் டெக்கான் நாளிழதில் ஒரு ஓரத்தில் வந்துள்ளது. இதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை நமது மீடியா. என்ன பாதுகாப்பு இருக்கிறது நமக்கு இந்தியாவில்? இந்த பெண்ணிற்காக யார் போராடுவார்கள்? இந்த மருந்தை சிபாரிசு செய்த மருத்துவருக்கு குறைந்த பட்ச தண்டனையாவது கிடைக்குமா? எனக்கு நம்பிக்கையில்லை.