Sunday 8 July 2012

எனக்குள் எம்.ஜி.ஆர்

"எனக்குள் எம்.ஜி.ஆர்" என்ற பெயரில் கவிஞர் வாலி அவர்கள் துக்ளக்கில் ஒரு தொடர் எழுதி வருகிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். கடந்த இருபத்தைந்து வாரங்களாக இந்த தொடரை படித்து வருகிறேன். கலைஞருக்கு நெருக்கமாக இருந்து கொண்டு எம்.ஜி.ஆர் பற்றி இப்படி எழுத கூடிய ஒரு மனிதர் வாலி அவர்களாக தான் இருக்க முடியும். கலைஞரின் இன்றைய நண்பர்கள்/கட்சியினர் பலர் எம்.ஜி.ஆர் மூலம் ஒரு காலத்தில் ஆதாயம் பெற்றவர்களே. ஆனால், அவர்கள் யாருக்கும் வாலியின் தைரியம் இருக்கும் என்று தோன்றவில்லை.

இந்த வார தொடரில், "தன்னை குடிப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் வெளியே கொண்டு வந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்" என்கிறார் வாலி. இது குறித்து ஒரு விமான பயணத்தில் எம்.ஜி.ஆரிடம் வாலி சொல்ல, "ஒரு தமிழ்க் கவிஞனை மீட்டுக் கொடுத்த முத்துராமன் வாழ்க" என்றாராம் எம.ஜி.ஆர். மேலும் இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,

"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை, நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

எம்.ஜி.யார் அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் வாலி.

"ஆயினும் அத்தகு எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது; ஒரு படத்தில் அவர் குடிகாரனாகவே வந்தாக வேண்டிய கட்டாயம்! எப்படி அதை எதிர்கொள்வது என்று என்னை கூப்பிடு ஆலோசித்தார் எம்.ஜி.ஆர்" என்று இந்த வாரத்தை முடிக்கிறார் வாலி.

இந்த தொடரின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் பற்றியது. எழுதும் போது ஆளும் கட்சி ஆட்களையும் நினைவில் கொள்ள வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அரசியலாக்கி விடுவார்கள்.

Vaali is doing the tightrope walk so well. Hats off sir..