Friday 17 June 2011

கோர்த்து விடுதல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படியிருக்க... டைரக்டர் சீமானோ... ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது... அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

நன்றி: தினமலர்

பஞ்ச் பாண்டி:
இந்த செய்திக்கும் நான் கீழ கொடுத்திருக்கிற சுட்டிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே இருக்கு.அஜித் வாழ்க்கைல உண்மையிலேயே அவருக்கு சந்தோஷம் கொடுத்த விஷயம் இதுவா தான் இருக்கும்.அடுத்த அஜித் படம் சீமானோட தான்.

http://www.youtube.com/watch?v=dfgqeBOFJfk"

Thursday 16 June 2011

அமெரிக்க பஸ் பயணம்


Sleeping with the Enemy படத்தில் Greyhound பஸ் பிடித்து Julia Roberts Iowa செல்லும் காட்சியை பார்த்த காலத்தில் இருந்தே அமெரிக்காவிற்குள் இயங்கும் தொலைதூர பேருந்துகளில் ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை உண்டு(இப்படி தான் ஆரம்பிக்கணும். கலைஞர் சொல்வாரே, பெரியார் சிறுவனாய் இருந்த காலம் தொட்டே எனக்கு தி.க மீது ஈடுபாடு உண்டுன்னு. அந்த ஸ்டைல் இது)

இந்த அமெரிக்க பயணத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. கென்டகி மாநிலத்தில் உள்ள எலிசபெத்டவுன் நகர் சென்று அங்கிருந்து சின்சின்னாட்டி, சிகாகோ நகரங்களில் அலுவல் பொருட்டு சிலரை சந்தித்து விட்டு மீண்டும் சென்னை வருவதாக பயண திட்டம்.
சிகாகோவில் இருந்து நாற்பத்தைந்து நிமிட பயணத்தில் லூயிவில் சென்றடையலாம். லூயிவில்லில் இருந்து முப்பது மைல் தொலைவில் உள்ள எலிசபெத்டவுன் நகரில் எனக்கு ஒன்றரை வாரம் அலுவலக பணி. பணி முடியும் தருவாயில் வாடகை கார் ஒட்டிக்கொண்டு நாமே சின்சின்னாட்டி, சிகாகோ செல்லலாம் என்று முடிவு செய்து சில பிரபலமான வாடகை கார் கம்பெனிகளை அணுகிய போது, இந்தியாவில் பெற்ற அசல் ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றார்கள். அது என்னிடம் இல்லாததால் வேறு மாற்றீடுகளை யோசிக்க ஆரம்பித்தேன்.

ரயில் பயண நேரம் அதிகமாக இருந்தாலும் மேலும் நான் இருந்த இடத்தில் இருந்து சின்சின்னாட்டிக்கு நேரடி ரயில் வசதி இல்லாததாலும் பேருந்தில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். உடனே Greyhound நினைவிற்கு வர, எலிசபெத்டவுன்-சின்சினாட்டி, சின்சினாட்டி-சிகாகோ தடங்களுக்கு முன்பதிவு செய்து கொண்டேன். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு Greyhound பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொல்லப்போனால் Greyhound அளவிற்கு அமெரிக்க நகரங்களை இணைக்கும் வேறு பெரிய பேருந்து பிணையம் எதையும் நான் இணையத்தில் பார்க்கவில்லை.

கடந்த செவ்வாய் இரவு பத்து மணிக்கு சின்சின்னாட்டி செல்ல பேருந்து. பத்து மணி பஸ்சுக்கு நான் ஒன்பது மணிக்கே பஸ் நிறுத்தம் சென்றுவிட்டேன். இங்க பஸ் நிறுத்தம் அப்படின்னு சொல்றது ஒரு பெட்ரோல் பங்க். அதுக்குள்ள இருந்த ஒரு கடைல தான் பஸ் டிக்கெட் கொடுத்தாங்க. டிக்கெட் கொடுத்த போதே இங்க தான் வந்து பஸ் ஏறனும்னு சொன்னங்க. சரி நம்ம தான் சீக்கிரமா வந்துட்டோம் நேரம் ஆக ஆக கூட்டம் வரும்னு பார்த்தா பத்து மணி வரைக்கும் பஸ்ஸே வரல. அத்துவான காடு, அந்த கடைய தவிர ஒண்ணுமே இல்ல பக்கத்துல.மனசுக்குள்ள "அமெரிக்க பெட்ரோல் பங்கில் இந்திய வாலிபர் சுட்டுக் கொலை" அப்படின்னு தலைப்பு செய்தி எல்லாம் ஓட ஆரம்பிச்சுது. பத்தரை ஆச்சு, பதினொன்னு ஆச்சு பஸ்ஸை காணும். ஒரு வழியா பதினோன்னேகாலுக்கு வந்து சேர்ந்துச்சு.

பொட்டியை டிரைவர் கிட்ட கொடுத்து வண்டியோட வயிற்றுப் பகுதியில போட்டுட்டு உள்ள ஏறினா நல்ல கூட்டம். பெரும்பாலும் கறுப்பர்கள். உட்கார எடம் கேட்டா நம்மூர் மாதிரி ஆள் வருது, ஒன்னுக்கு போயிருக்காங்க அது இதுன்னு கதை. இருட்டுல ஒருத்தர் முகமும் தெரிய வேற இல்ல. பெரிய மனசு பண்ணி கடைசில ஒரு ஏழடி உருவம் பக்கத்துல ஒக்கார இடம் கொடுத்துச்சு. ரொம்ப சோர்வா இருந்ததால கொஞ்சம் கண் அசந்து பக்கத்து சீட்டு ஏழடி பயணி மேல சாஞ்சிட்டேன் போல. "Get the F*** off my shoulder" அப்படின்னு கத்தினபோ தான் அது பொம்பள புள்ளைன்னு தெரிஞ்சுது. சிறுக்கி மவ, உடம்பு முழுக்க போர்வைய போட்டு மறைச்சு வெச்சிருக்கா. பேருக்கு டிரஸ்ன்னு ஏதோ போட்டு இருந்தா. அவ கத்தின கத்துல அடுத்த முறை தூங்கி விழுந்தா வன்புணர்ச்சி பண்ணிடுவாளோன்னு பயந்துகிட்டே தூங்காம ஒரு வழியா மூணு மணிக்கு சின்சினாட்டி வந்து சேர்ந்தேன்.இங்கெல்லாம் பஸ்சுக்குல்லையே கழிப்பறை வசதி.நம்மூர் மாதிரி,"மாப்ள, ஒன்னுக்கு போக வண்டி எப்படியும் விழுப்புரத்துல அரை மணி நேரம் நிக்கும்.பக்கத்துல இருக்கற டாஸ்மாக்ல அஞ்சே நிமிஷத்துல ஒரு கட்டிங்க போட்டுட்டு வந்திரலாம்னு" எல்லாம் இங்க பிளான் பண்ண முடியாது போல.

சின்சின்னாடில வேலை முடிச்சிட்டு திரும்ப புதன் மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து சிகாகோ பயணம். இதலேயும் பெரும்பாலும் கறுப்பர்கள் தான் ஆனா கூட்டம் அதிகம் இல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் எங்கேயும் நிறுத்தலை.ஒரே ஒரு எடத்துல மட்டும் குடிக்க எதாவது வாங்கிக்கிங்கனு ஒரு அஞ்சு நிமிஷம் நிறுத்தினாறு டிரைவர். வழி முழுக்க நல்ல மழை. ஐபாடுல இளையராஜா ஹிட்ஸ். மழையை ரசிச்சுகிட்டே சாயங்காலம் ஆறு மணிக்கு சிகாகோ வந்து சேர்ந்தேன்.

Tuesday 14 June 2011

காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!



ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை.

விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.

விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.

நன்றி: தினமலர்

பஞ்ச் பாண்டி: பாஸு, அப்படியே சுறா,வேட்டைக்காரன்,குருவி,வில்லு எல்லாத்தையும் சீன மொழியாக்கம் செஞ்சு பாக்க வையுங்க அவனுங்கள. என்ன சேட்டை பண்றானுங்க அருணாச்சல பிரதேசத்துல, மவனே ஒரு பய படம் பாத்துட்டு உசிரோட வீடு போகக் கூடாது.

ஒரு வேளை, இந்தியால இவரு ஒருத்தர் கொடுக்கற கஷ்டம் பத்தாதா, நம்ம வேற எதுக்கு அருணாச்சல பிரதேசத்துல ஏன் படுத்தணும் அப்படின்னு நினைச்சு "அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தமில்லை, இந்தியாவிற்கு தான் சொந்தம்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க".

Monday 13 June 2011

ஏழாம் உலகம், நான் கடவுள்

சில படங்கள் நம்மை தூங்க விடாது. அதற்கு பிரதான காரணம் அந்த படத்தின் பாத்திரங்களை நடிகர்கள் வழங்கும் விதம். உதாரணமாக, இன்றும் மூன்றாம்பிறை இறுதிக் காட்சியில் கமலை பார்க்கும் போது யாராவது ஸ்ரீதேவியிடம் சென்று "நீ பைத்தியமா இருந்தபோ உன்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டது இந்த சீனு தான், அவனை இப்படி விட்டுட்டு போறியே" என்று கேட்கக்கூடாதா என்று தோன்றும்(பாலு மகேந்திராவிடம் இந்த காட்சி பற்றி ஒரு முறை கேட்ட போது, "அந்த காலகட்டத்தில் எனக்குள் ஒரு பெரிய சோகம் இருந்தது. அதை வெளிக்கொண்டு வரும் விதமாக அந்த காட்சியை அமைத்தேன்" என்றார்). ஒரு புதினத்தை படிக்கும் போது இப்படி ஒரு உணர்வு ஏற்படுமாயின் அது அந்த புத்தகத்தின் வெற்றி அல்லவா?

நான் கடவுளின் கருவான ஏழாம் உலகம் படிப்பவரின் மனதை கனக்க செய்யும் புதினம்.
ஏழாம் உலகத்தை படித்து முடித்த போது அதை திரைக்காக பாலா மாற்றிய விதம் வியப்பை தந்தது. நாவல் என்றாலே கதாபாத்திரங்கள் நிறைய உண்டு அதிலும் ஏழாம் உலகம் அமைந்துள்ள களத்தில் கதை மாந்தர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், ஏழாம் உலகம் படித்த பின் நான் கடவுளை பார்த்தால் பாலா நாவலில் இருந்து மிகச் சில பாத்திரங்களையே படத்திற்காக எடுத்திருப்பதை உணர முடியும். ராமையன், குருவி, மாங்காண்டி சாமி(கை, கால் இல்லாமல் ஒரு சாமி வருமே)போன்ற இரண்டு மூன்று நாவல் பாத்திரங்கள் தான் நான் கடவுளில். போத்திவேலு பண்டாரத்தின் லேசான சாயல் கொண்ட பாத்திரம் முருகன்.மற்றபடி ஆர்யா, பூஜா பாத்திரங்கள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம்.

ஏழாம் உலகத்திற்கும் நான் கடவுளுக்கும் உண்டான பொதுவான அம்சங்களில் ஒன்று நகைச்சுவை. படத்தில் "மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க" என்று டி.எம்.எஸ் பாடலை மலையடிவாரத்தில் கேட்கும் அந்த பிச்சைக்கார கூட்ட சிறுவன் ஒருவன், "இவன் யார்ரா, நமக்கு மேல பொலம்பறான், விட்டா நம்ம கூட வந்து ஒக்காந்துருவான் போல இருக்கு என்பான். இதைப் போன்ற இடங்கள் நாவலில் நிறைய உண்டு.

ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்கும் குய்யன் என்னும் பாத்திரம், "ஜோதிலட்சுமி மாதிரி இருக்கா, இவளை எல்லாம் மகாலட்சுமின்னு கூப்படறோம். நாக்கு புளுத்து போக போகுது" என்று சொல்லும். சிறிது நேரம் கழித்து குய்யன் நக்கலாக,"அம்மா தாயே மகாலட்சுமி, தேவடியா மவளே, பிச்சை போடுமா" என்பான். நாவலில் அகமுதுகுட்டி பாத்திரமும் ஜெயமோகனின் நக்கல் கலந்த நகைச்சுவையை பிரயோகம் செய்ய உருவாக்கப்பட்டது. அவன் பேசும் ஆங்கிலமும், அதன் காரணத்தால் சிநேகம் கொள்ளும் ஏட்டையாவும், அவன் பேசும் ஆங்கிலத்தால் கவரப்பட்டு அவனுக்கு ராமையன் வில்ஸ் சிகரட் வாங்கித் தரும் இடங்களும் சூப்பர்.

உருப்படிகளை வாங்க வரும் மலையாள தரகன் கதாப்பாத்திரத்திற்கு படத்தில் நகைச்சுவை அதிகம் கிடையாது. ஆனால், நாவலில் நிறைய உண்டு. அதிலும் மாங்காண்டி சாமி பாடும் பாடல்களை கேட்டு அவரை அறுபதாயிரம் ரூபாய்க்கு போத்திவேலுப் பண்டாரத்திடம் வாங்கி அவரை சாமியாராக உபயோகித்து பக்தர்களிடம் பணம் வசூலிக்க திட்டம் போடும் மலையாள தரகன் கடைசியில் அவரை போத்திவேலு பண்டரத்திடமே இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பான். ஏனென்று பண்டாரம் கேட்க, "சாமிக்கு கரண்ட் ஷாக், ஆசனவாயில மிளகா எல்லாம் வெச்சு பாத்தாச்சு, சாமி பாட மாட்டேன்குது" என்பான். இதை கேட்கும் குய்யன், "அங்க பால், பழம், வெண்ணை எல்லாம் கொடுத்தாங்க, சாமிக்கு அதை எல்லாம் சாப்பிட்டு குசு தான் வந்துச்சு. பாட்டு வரல" என்பான்.

பார்வையாளர் நலன் கருதி, பாலா படத்தில் மிகக் குறைந்த அளவிலேயே ஏழாம் உலக வாசிகள் தினம் கடக்கும் துன்பங்களை காண்பித்திருப்பார். அதற்கே நம்மூரில் விமர்சனங்கள் எழுந்தன. நாவலில் இருக்கும் சில பகுதிகளை படமெடுத்திருந்தால் சென்சார் பயந்திருப்பார்கள். ராமையன் தன் தொடை சதை பிளந்திருக்கும் இடத்தில காசை சேர்த்து வைப்பது, அதிலிருந்து வடை வாங்க ஐந்து ரூபாய் எடுத்துத் தர, அதை முகர்ந்து பார்க்கும் போத்திவேலு பண்டாரத்தின் ஆள் ஒருவன், குறையுள்ள உருப்படிகளை ஜனிக்க கண், ஒரு கை இல்லாத முத்தம்மையை புணர போத்திவேலு பண்டாரம் ஏற்பாடு செய்யும் ஆட்கள், மலம் குவிந்திருக்கும் இடத்தில் முத்தம்மையை புணரும் கூனன் போன்ற காட்சிகளை படிக்கும் போது மீண்டும் எங்காவது இனி இதுபோன்ற மக்களை சந்தித்தால் நிச்சயம் அவர்களை அடித்து விரட்ட தோன்றாது.

நிஜ வாழ்க்கை கஷ்டங்களை மறக்க மக்கள் நாடும் சாதனம் தான் சினிமா. இதில் மீண்டும் எதற்கு மரணம், அழுகை போன்றவற்றை காண்பிக்க வேண்டும்? மக்கள் சினிமாவிற்கு வருவதே மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க தான் என்று கூறும் இயக்குனர்கள் உண்டு. உண்மை தான். ஆனால், கற்பனையிலேயே வாழ்வது சாத்தியம் இல்லையே. நிஜம் தரும் சூடு புரிய வேண்டுமே. அதற்கு ஏழாம் உலகம் போன்ற கதைகளை படம் எடுக்க வேண்டும். இன்று ஹிந்தி சினிமாவில் அனுராக் கஷ்யப், மதுர் பண்டர்கர், விஷால் பரத்வாஜ் போன்றவர்களின் படங்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன? நிஜ வாழ்கையை பிரதிபலிப்பதால் தானே? அவை வணிக ரீதியாகவும் வெற்றியே.