Tuesday 3 January 2012

சென்னை புத்தக்க்காட்சியில்..

திரு.ஞாநி அவர்களின் வலைத்தளத்திலிருந்து இந்த அறிவிப்பு:

ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சென்னைப் புத்தக்க்காட்சியில் என் ஞானபாநு பதிப்பகத்தின் அரங்கு எண் 310. தினசரி மாலைகளில் என்னை(ஞாநி அவர்களை) அங்கே சந்திக்கலாம்.

இந்த முறை எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F35 அரங்கில் இந்த சந்திப்புகள் நிகழும். இதை நெறிப்படுத்தும் பொறுப்பை நானும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் மேற்கொண்டுள்ளோம்.

பங்கேற்கும் எழுத்தாளர் பட்டியல்:

வெள்ளி - ஜனவரி 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி
சனி ஜனவரி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்
ஞா ஜனவரி 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி – எஸ்.ராமகிருஷ்ணன்
தி ஜனவரி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்
செ ஜனவரி 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்
பு ஜனவரி 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்
வி ஜனவரி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்
வெ ஜனவரி 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்
சனி ஜனவரி 14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்
ஞா ஜனவரி 5- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்
தி ஜனவரி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா
செ ஜனவரி 17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்

Sunday 1 January 2012

பாண்டிச்சேரி

"புயலடிச்சு ஒஞ்சா மாதிரி இருக்கு" என்பார்கள். புயல் அடித்து ஓய்ந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நேற்று. பாண்டிச்சேரி "பாதிச்சேரி" ஆகியுள்ளது . புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகரை தரிசிக்கலாம் என்று பாண்டி சென்ற எனக்கு ஜிப்மர் மருத்துவமனை நெருங்கிய நிமிடமே "தானே" ஆடிய கோரத் தாண்டவம் விளங்கிவிட்டது. தெருவெங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. "நானே விழும் போது நீ என்ன கொசுறு" என்கிற மாதிரி மின்சாரம் மற்றும் தொலைபேசி வயர்களை இழுத்துக்கொண்டு சாய்ந்துள்ளன. பேனர்கள், கொடிக்கம்பகள், தகர கூரைகள் என்று ஒன்று விடாமல் துவம்சம் செய்துள்ளது தானே. தகர கூரைகளை எல்லாம் எடுத்து சென்று கிடைத்த விலைக்கு விற்றுள்ளது ஒரு கூட்டம்.

பல இடங்களில் இன்னும் மின்சார இணைப்பு வரவில்லை. டீஸல் நிரப்பிவிட்டு கடன் அட்டையை நீட்ட, "சார், இன்னும் பத்து நாளைக்கு இதெல்லாம் யூஸ் பண்ண முடியாது" என்றார் அங்கிருந்த பணியாளர். தானே பாண்டியை தாக்கிய வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் பால், தண்ணீர் எல்லாம் ஐந்து மடங்கு விலையில் விற்கப்பட்டுள்ளது. அரை லிட்டர் பால் அறுபது ரூபாய் என்றார் என் உறவினர். இத்தனைக்கும் நடுவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறையவில்லை புதுவையில். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள இளைஞர் கூட்டம் கிங்பிஷர், ஐந்தாயிரம் சகிதமாக அங்கெங்கே நின்று கொண்டு வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

நாலு நாளாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி நேற்று மதியத்திற்கு மேல் தான் வெளியே வர தொடங்கியுள்ளனர். எந்த பெட்ரோல் பங்க், ஏ.டி.எம் சென்றாலும் கூட்டம். காரை எடுத்துக்கொண்டு பீச் வரை சென்று பார்க்கலாம் என்று போனேன். பல கட்டிடங்கள் உடைந்து விழுந்துள்ளன. அலைகள் பீச் சாலை முழுதும் ஆக்கிரமித்ததற்கு அடையாளமாக சாலை முழுதும் கற்கள் மற்றும், கடல் நீர். கடலூரில் இதை விட மோசம் என்றார்கள். மணக்குள விநாயகரை தரிசிக்க அளவே இல்லாமல் வரிசை நீண்டு கொண்டே போனதால் வெளியில் இருந்தே தரிசித்து விட்டு வந்தேன்.

கோவிலின் வெளியே இருந்தே யானைக்கு "லக்ஷ்மி" என்று பெயர் போலும். அதை ஒரு கார்டில் எழுதி மென்பொருள் தொழிலில் பணிபுரியும் ஊழியர் கழுத்தில் இருப்பது போல மாட்டியிருந்தனர். முன்னங்கால் இரண்டிலும் வெள்ளிக் கொலுசு. யானைக்கு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு பத்து குடும்ப உறுப்பினர்களை ஆசிர்வாதம் செய்ய சொன்ன வரை கடிந்து கொண்டிருந்தான் பாகன். யானை அவர்களை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது. அதன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று எண்ணினேன். ஜெயமோகனின் "யானை டாக்டர்" சிறுகதையை நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து கிளம்பி திண்டிவனம் மார்கமாக சென்னை வந்தடைந்தேன். மதுராந்தகம் அருகே "கும்பகோணம் டிகிரி காபி" என்று ஒரு காபி கடை திறந்திருக்கிறார்கள். பித்தளை டபரா செட்டில் காபி இருபது ரூபாய். செம்ம கூட்டம் வருகிறது. "யக்ஷ பிரச்னம்"(யக்ஷன் யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்விகள்) என்னவென்று ஒரு போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். வித்தியாசமாக இருந்தது.

யக்ஷ பிரச்னம் பற்றி தெரியாதவர்களுக்கு - இது மகாபாரதத்தில் ஒரு பகுதி. நதியை காக்கும் யக்ஷன் ஒருவன் பாண்டு புத்திரர்களை தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தண்ணீரை குடித்தால் மரணமடைவீர்கள் என்று எச்சரித்தும் அர்ஜுனன், பீமன், நகுலன் மற்றும் சஹாதேவன் ஆகியோர் அதைப் புறக்கணித்து குடித்து மரணமெய்து விட, அவர்களை தேடி வரும் தர்மபுத்திரரையும் எச்சரிக்கிறான் யக்ஷன். அவன் கேள்விகளுக்கு சரியான பதில்களை அவர் தர, நான்கு சகோதரர்களில் ஒருவரை உயிர்பிக்கிறேன் என்கிறான் யக்ஷன். தர்மபுத்திரர் நகுலன் அல்லது சஹாதேவனை கேட்கிறார். ஏன் என்று யக்ஷன் கேட்க, குந்தி மைந்தர்களில் தான் ஒருவன் உயிரோடு இருப்பதால் மாத்ரி மைந்தன் ஒருவன் உயிருடன் வேண்டும் என்கிறார் அவர். எந்த நிலையிலும் தர்மத்தை விட்டு விலகாமல் உள்ள அவர் பாராட்டி நால்வரையும் உயிர்ப்பிக்கிறான் யக்ஷன்.