Thursday 23 February 2012

பாரதியார் கவிதைகள்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் "மகாகவி பாரதியார் கவிதைகள்" என்கிற தொகுப்பை சில நாட்களுக்கு முன் வாங்கினேன். புத்தகம் வாங்கும் போதே ஜெயமோகன் மற்றும் எம்.டி.எம் உருவங்கள் மனதில் வந்து சென்றன. தேசிய கீதங்கள், தெய்வப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், பல்வகைப் பாடல்கள் என்று நிறைய தலைப்பில் முண்டாசு கவியின் வரிகள். சரி, ஞானப் பாடல்கள் பகுதியை பார்ப்போம் என்று சென்றேன். முதல் பாடல், அச்சமில்லை அச்சமில்லை. எத்தனையோ முறை கேட்ட வரிகள் தான் இருப்பினும் ஒவ்வொரு முறை இதை படிக்கும் போது எழும் உணர்வு சொல்லில் அடங்காது. குறிப்பாக இவை:

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

(நீ ஏன் இப்படி டிரஸ் போட்டுட்டு வர, பொண்ணுங்க இப்படி டிரஸ் பண்ணா தான் பசங்களுக்கு பார்க்க தோணுது என்று வாதாடும் இந்த தலைமுறை ஆண்களுக்கு ஏற்ப)

கச்சணிந்த கொங்கை கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே


எனக்கென்னவோ "பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்" என்று கவிராஜன் சொல்லும் போது, பரங்கியர் தலைமையில் இருந்த நம் மக்களின் வாழ்வை சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போல, பேயோ, பிசாசோ குறித்து அச்சம் தேவையில்லை என்று சொல்லாதவர், "கச்சை அணிந்த கொங்கை மாதர் பார்வை" குறித்து அச்சம் தேவையில்லை என்கிறார். இன்னும் கொஞ்ச நாளைக்கு குளம்பியகத்தில் பாரதி பாடல்கள் தான்.