Friday 23 September 2011

கர்நாடக இசைக் கலைஞர்கள்: நேற்றும் இன்றும்

"இசையின் பயனே இறைவன் தானே" என்ற பாடல் வரியை நாம் கேட்டதுண்டு. இறை குறித்த தேடலில் இசைக்கு முக்கிய பங்குண்டு என்பதே இதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன். இஸ்லாம் மத சூபி இசை, பாரம்பரிய கர்நாடக இசை போன்ற வடிவங்கள் இறையருள் பெரும் முக்கிய நோக்குடனே அமைக்கப்பட்டவை. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், தீக்ஷதர், சியாமா சாஸ்திரி போன்றவர்கள் இறையை அடையும் பொருட்டே வெவ்வேறு ராகங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இசை கொடுத்த ஆன்மீக தொடர்பு அதிகம் இருந்ததாலேயே குடி, பரத்தையருடன் கூடுதல் போன்ற social taboos இவர்களை அண்டாமல் இருந்திருக்க கூடும். இவர்களின் பிராமண பின்புலம் மற்றுமொரு முக்கிய காரணம்.பிராமணன் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட தவறு என்று நினைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் குடிப்பது எல்லாம் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. ஆனால்,மும்மூர்த்திகளை தொடர்ந்து வந்த இசை விற்பன்னர்கள் பலர், காலப் போக்கில் விதிகளை கொஞ்சம் தளர்த்திக் கொண்டனர். ஆறு மணிக்கு மேல் ஒரு கிளாஸ் சல்பேட்டா, தாசி வீட்டுக்கு செல்வது போன்ற விஷயங்கள் தவறில்லை என்று நினைத்தார்கள். ஜெயமோகனின் ஒரு அக்கினிப்ப்ரவேசம் என்ற கட்டுரை எம்.எஸ்.சுப்புலட்சுமியை மையமாக கொண்டது என்றாலும், மேலே சொன்னவற்றை பற்றிய குறிப்புகளை சுமந்து வருகிறது. ஆனால், "ஆம், நான் இப்படிதான்" என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் அப்போது யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை.

ஆக, சமூகம் குறித்த பயம், சாதி நிறுவிய விதிகள் எல்லாம் இன்று ஒரு பொருட்டே இல்லை என்ற நிலை வந்தாகி விட்டது. சமீபத்தில் ஹிந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கர்நாடக இசைக் கலைஞர் தி.எம்.கிருஷ்ணா, "ஒரு லார்ஜ் சிங்கிள் மால்ட் விஸ்கி" தனக்கு பிடித்த பானம் என்கிறார். சில மாதங்களுக்கு முன் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலின் பாருக்கு சென்ற போது ஒரு பிரபல சங்கீத வித்வானை சந்திக்க நேர்ந்தது. நல்ல கூட்டம் இருந்த போதிலும் யாருக்குமே அவரை தெரியவில்லை. நான் சென்று முகமன் கூறி, அவர் கச்சேரிகளை பற்றி பொதுவாக பேச ஆரம்பித்த போது அவர் கேட்ட முதல் கேள்வி, "உங்களுக்கு என்னை எப்படி தெரியும்? நீங்க எதாவது பத்திரிகை ஆசாமியா?" என்றார். நான் இல்லை என்றேன். நான் பத்திரிகை நிருபர் என்று சொல்லியிருந்தால் கூட அவர் அலட்டிக் கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை. உன் தொழில் முடிஞ்சு ஒரு ஓய்வுக்கு தானே நீ இங்க வர, அப்படி தான் நானும் என்கிற ரீதியில் தான் அவர் இருந்தார்.

கை கால் முழுக்க பட்டை, கழுத்தில் ருத்திராச்ச கோட்டை,பஞ்சகச்சம் இவற்றுடன் தான் கச்சேரி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை இன்று. "ராமா, உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா, என்னை விட்டுடாதே" என்னும் தியாகய்யர் கதறலை உணர்ச்சி பொங்க மேடையில் பாடும் கலைஞர், மேடைக்கு வெளியே, "I an am athiest" என்கிறார்.நிறைய கட்டுப்பாடுகள், கர்நாடக இசை கலைஞர்கள் சாட்சாத் கடவுளே, கர்நாடக இசை கற்க வேண்டும் என்றால் காலை நான்கு மணிக்கு எழுந்து சாதகம் செய்ய வேண்டும், குடித்தால் கடவுள் தண்டிப்பார் என்று வளர்க்கப்பட்ட எனக்கு அந்த பிம்பங்கள் உடையும் இந்த நேரம் குழப்பம் கலந்த உவகை ஏற்படுகிறது.