Saturday 6 August 2011

புறநகர் ரயில் பயணம்

அலுவல் காரணமாக சில வாரங்களுக்கு முன் கிண்டி வரை செல்ல வேண்டி இருந்தது. காரை எடுத்து செல்லலாம் என்றால் மேடவாக்கத்தில் டிராபிக் ஜாம். சரியென்று காரை வீட்டில் பார்க் செய்துவிட்டு பஸ் பிடித்து தாம்பரம் ரயில்நிலையம் சென்றேன். லேப்டாப் எல்லாம் தோளில் வைத்துக்கொண்டு தடம் எண் T51 ஏறிய என்னை பேருந்தே விநோதமாக பார்த்தது. எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் "இவன்தானா இவன்தானா" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது. நீ என்ன பெரிய மன்மதனா என்று பின்னூட்டம் எல்லாம் போடக் கூடாது. அது ரேஞ்சுக்கு நான் சுமாராக இருந்தேன்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க நின்ற கூட்டத்தை பார்த்தவுடன் மயக்கமே வந்துவிட்டது. ஒரு வழியாக பத்து நிமிடம் வரிசையில் நின்று கவுண்டர் அருகே சென்றவுடன் "இந்த கூட்டம் தானே ரயிலிலும் வரும், பேசாமல் முதல் வகுப்பில் செல்வோம், அதில் கூட்ட நெரிசல் இருக்காது" என்றெண்ணி, எழுபத்தாறு ரூபாய் கொடுத்து தாம்பரம்-கிண்டி தடத்திற்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டேன். கவனிக்கவும், இரண்டாம் வகுப்பு தாம்பரம்-கிண்டி பயணச்சீட்டு ஆறே ரூபாய்.

மூன்று வருடங்கள் கல்லூரி முடித்த பின் புறநகர் ரயில் பயணம் அரிதாயிற்று. வெகு நாட்களுக்கு பின் இந்த பயணம். முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தேன். முதல் வகுப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெண்டார்ஸ் பெட்டி. இன்னொரு புறம் பெண்கள் பெட்டி. ஒன்றரை வயது கைக்குழந்தை கூட எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் முதல் வகுப்பில் குதித்து டிக்கெட் பரிசோதகர் வருவதை பார்த்தவுடன் மீண்டும் தன் பெட்டிக்கே செல்லலாம்.அப்படியொரு வசதி.முதல் வகுப்புக்கு என்ன சிறப்பு வசதி செய்யலாம் என்று யோசித்து முடிவாக முன்னால் பெண்கள் பெட்டியாவது வைத்து கண்களை குளிர்விக்கலாம் என்பது தென்னக ரயில்வே நிர்வாகத்தின் எண்ணம் போலும்.

என் வரிசையில் ஜன்னலோரம் இருந்தவர் "பொன்னியின் செல்வன்" படித்துக்கொண்டிருந்தார். சானடோரியத்தில் கொஞ்சம் கூட்டம் ஏறியது. நகர்ப்புற கணினி அலுவலகங்களில் பணியில் உள்ள சிலர் தங்கள் மடிக்கணினி சகிதம் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்து காதில் ஐபாட் பொருத்திக் கொண்டு மடிக்கணினியை திறந்து தங்கள் உலகத்தில் ஆழ்ந்தனர். பத்து வருடம் முன் முதல் வகுப்பில் இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது. இவர்கள் எல்லாம் அமெரிக்க ரிடர்னாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். Sanjose-Sanfrancisco, Fremont போன்ற வழித்தடங்களில் பெரும்பாலானோர் இப்படி பயணம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த பாதிப்பு போலும்.கக்கூசில் உட்கார்ந்தால் கூட ஐபாடுடன் அமர்ந்தால் தான் இப்போது பெருமை. ஔவை இன்று இருந்தால்,"ஐபாட் இல்லா ஊரில் ஐந்து நிமிடம் கூட இருக்காதே" என்று புது ஆத்திச்சூடி எழுதி இருப்பாள்.

ரயில்வே துறையின் கடைநிலை ஊழியருக்கு கூட இந்த முதல் வகுப்பு பிரயாண சலுகை உண்டு போலும். கிரோம்பேட்டை(ஆம், அப்படி தான் பெயர் பலகையில் இருந்தது) ரயில் நிலையத்தில் கடப்பாரை, ஒயர், சிமெண்ட் பலகை என்று சகலத்தையும் ஏற்றி தானும் ஏறிக்கொண்டு ஒரு கூட்டம்.முதல் வகுப்பிற்கு மூச்சு திணறல் ஆரம்பித்தது.

கிரோம்பேட்டை மாமா ஒருவர், பொன்னியின் செல்வனை பார்த்து, "இந்த ஜெனரேஷன் இதெல்லாம் கூட படிக்கறதா, பேஷ்" என்றார். ஜன்னலோர சீட்டு வாய் முழுக்க பல்லாக,"டமில் மேல ரொம்ப லவ். எங்க டாடி படிப்பாங்க. அந்த புக் கிழிஞ்சு போச்சு, புது எடிஷன் வாங்கி படிக்கிறேன் சார். பாருங்க, அட்டை படமெல்லாம் கலர்புல்லா இருக்கு. எப்படியும் ஒரு ஒன் இயர்குள்ள படிச்சுடுவேன். வேலை ரொம்ப ஜாஸ்தி, அதான்." என்றது. மாமா மீண்டும், "நீங்க எல்லாம் தமிழ் படிக்கறதே சந்தோஷம், என் புள்ள தமிழ் படிக்கறதே இல்லை, இங்கிலீஷ் புக்ஸ் தான். ரொம்ப வருத்தமா இருக்கு" என்று சந்தில் சிந்து பாடிற்று.

"ரூபாய்க்கு ரெண்டு கொய்யப்பழம், சீப்பான பூவன் பழம்மா டசன் பத்து ருபாய், மல்லி மொழம் அஞ்சு ரூபாம்மா, சார், சீசன் டிக்கெட், ரேஷன் கார்டு, பால் கார்டு கவர் எல்லாம் சேர்த்து ஒரே கவர் பத்து ரூபாய், வேர்கல்லை வேர்கல்லை " என்ற குரல்கள், "மல்லிகை முல்லை, பொன்மணி கிள்ளை", "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையை கண்டேனே", "அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ" போன்ற பாடல்களை பாடும் கண் தெரியாத அதே பிச்சைக்காரர், "இந்தியாவோட முதல் பிரதமர் யார் தெரியுமா" என்று ஆரம்பித்து இன்றைய பிரதமர் வரை சொல்லும் குடிகார அறிவாளி என்று நான் கல்லூரி வாழ்க்கையில் பார்த்த அனைவருமே இந்த புறநகர் ரயிலை நம்பி தான் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை கிரோம்பேட்டை ஆரம்பித்து கிண்டி வரை கண்டேன்.

Thursday 4 August 2011

அமெரிக்காவில் ஆவணி ஆவிட்டம்

ஆகஸ்ட் பதிமூன்று ஆவணி ஆவிட்டம்(யஜுர் வேதம்), பதினாலு காயத்ரி ஜபம். சில வருடங்களுக்கு முன் ஆவணி ஆவிட்டத்திற்கு Sunnyvale பகுதியில் இருந்தேன். அங்கிருந்த ஹிந்து கோயில் சென்று பூணூல் மாற்றிக்கொண்டு காலை உணவிற்கு கோவிலில் ஓசியில் சுடச்சுட கிடைத்த பொங்கல்-கொத்சு ஒரு பிடி பிடித்து விட்டு இரை உண்ட மலைப்பாம்பை போல நகர முடியாமல் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.அது "வாலிப வயசு".

இந்த வருடம் நான் இருக்கும் Elizabethtown பகுதியில் கோவில் எதுவும் இல்லை. அருகில் உள்ள Louisville நகரில் உண்டு. ஆனால் இங்கிருந்து Louisville நாற்பது மையில்.டாக்ஸி எடுத்துக்கொண்டு சென்று வந்தால் 200 டாலர். இதையெல்லாம் மனதில் கொண்டு சென்னையில் இருந்து வரும் போதே வேஷ்டி, தர்பை, பவித்ரம், கூர்ச்சம் பஞ்ச பாத்திரம் எல்லாம் எடுத்து வந்தாயிற்று.நேரே மந்திரத்தை ஓதி பூணூல் மாற்ற வேண்டியது தான்.

ஆனால் மந்திரம் ஓதுவதில் ஒரு குழுப்பம். இந்தியாவாக இருந்தால் சங்கல்பம் செய்யும் போது "மமோ பார்த்த சமஸ்த துரித..பாரத வருஷே, பரதக் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்த்தே சகப்தே அஸ்மின்னு வர்தமானே வ்யவஹாரிக்கே.." என்று சொல்லிவிடலாம். இங்கிருந்து கொண்டு எப்படி பாரத வருஷம் பரத கண்டம் என்று சொல்வது?. கர வருஷம், ஸ்திர வாஸரம்(சனிக்கிழமை), நக்ஷத்திரம் எல்லாம் கூட ஓகே ஆனால் "பாரத" பிரச்சனை மட்டும் நீங்கவில்லை. இரண்டு நாளாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ரொம்ப வருடமாய் இங்கிருக்கும் நண்பர் ஒருவரை அலைபேசியில் அழைத்து "நீங்க எப்படி பண்றீங்க?" என்றேன்.

அவர் வடிவேலு கிரி படத்தில் சொல்லும் கணபதி ஐயர் போல் சிம்பிளாய், "அமெரிக்க வருஷே, அமெரிக்க கண்டே..அவ்வளோதான்" என்றார். நெஜமா வாத்தியார்(ஐயர்) இங்க அப்படி தான் சொல்வாரா? என்றேன். அவர் சொன்னார், "வாசு, இங்க எல்லாம் நம்ம வசதி தான். உனக்கே தெரியும், நியாயமா பார்த்தா ஆவணி ஆவிட்டம் ஹோமம் பண்ணனும். இங்க வீட்ல அவ்வளோ நெருப்பு கொளுத்தி புகை வந்தா, NYPD, LAPD எல்லாம் வந்துருவான். அதனால, ஹோமம் பண்ண முடியாது. உலகத்தோட இந்த பக்கத்துல இருக்கறதால அமெரிக்க வருஷம், கண்டம் அவ்வளோதான்". எங்க இருந்தா என்ன, பண்ணனும்" என்றார். அதுவும் சரி தான் என்று பட்டது.