Friday 18 February 2011

செவ்வரளி

ஜெயமோகனின் "யானை டாக்டர்" சிறுகதை படிக்கும் போது பாலகுமாரனின் "செவ்வரளி" நினைவுக்கு வந்தது. குறிப்பாக அதில் வரும் குதிரை டாக்டர் ராமநாதன் பாத்திரம். "மாரு பல்கே குன்ன வேமிரா" என்று தியாகையர் கிருதி பாடிக்கொண்டு அவர் குதிரை அருகில் சென்று அதற்கு வைத்தியம் பார்ப்பது, கல்யாணம் தேவையா என்ற கேள்விக்கு குதிரையை உதாரணமாக கொண்டு அவர் சொல்லும் பதில், கூண்டிற்குள் இருக்கும் மலைப்பாம்பிற்கு ரப்பர் துண்டுகளை போடும் பார்வையாளர்கள், அதை உண்பதால் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் பாம்பு இறந்து போவது, மேஜைக்கு அடியில் பலான படங்களை பார்க்கும் ஆடிட்டர் அது போன்ற படங்களை பார்த்ததுண்டா என்று விலங்கு மருத்துவனான கதையின் நாயகனை கேட்கும் போது அவன், "சாரை பாம்பும் நல்ல பாம்பும் பின்னிக்கொள்வது போல தானே இதுவும்" என்று கூறுவது போன்ற பகுதிகளை அசை போட்டுக்கொண்டிருந்தேன்.

யானை டாக்டர் போல செவ்வரளியிலும் மனிதனை விலங்கோடு ஒப்பிடும் இடங்கள் ஏராளம். Romulus Whitaker அவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கேரக்டர் ஒன்று செவ்வரளியில் உண்டு. பெரும்பாலும் அந்த கதாப்பாத்திரத்தின் வழியாக நிறைய கருத்துக்களை சொல்லியிருப்பார் பாலா. "ஒரு மானை புலி வேட்டையாடும் போது முதலில் அதன் கழுத்து நரம்பை தாக்குகிறது. அந்த நரம்பு ஏழு வினாடிகளில் அறுபடும். அது அறுபடும் வரையில் மட்டுமே மானுக்கு வலி. ஆனால், வண்டியில் மாட்டை கட்டி பொதி சுமக்க வைத்து அதன் கழுத்து பகுதியில் உண்டாகும் ரணம் காலத்திற்கும் போவதில்லை" என்று சொல்வார். மிருகங்களுக்கு மனிதனை காட்டிலும் கருணை உணர்வு அதிகம் என்று பொட்டில் அடிப்பது போல் சொல்லும் காட்சி அது. அதே போல் மரணத்திற்கு அஞ்சுவுதில் மனிதனை மிஞ்ச எந்த உயிரும் இல்லை என்ற கருத்தை செவ்வரளியில் பதிவு செய்திருப்பார் பாலகுமாரன்.

எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயற்கை மற்றும் சக உயிரினங்கள் மீது அலாதியான பற்றுள்ளது. சுஜாதா, எஸ்.ரா, சாரு, ஜெயமோகன், பாலகுமாரன் என்று பலரை படிக்கும் போது அவர்களிடம் பொதுவாக இந்த உணர்வு மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது.

Monday 14 February 2011

வந்தியதேவனாக விஜய்


மணிரத்னம் இயக்கம் அடுத்த படம் "பொன்னியன் செல்வன்" நாவலின் கதையாம். இது சரித்திர கதையா இல்லை பொன்னியின் செல்வனை தழுவி ஒரு சமுதாய கதையா (ராமாயணத்தை தழுவி ராவணன் எடுக்கவில்லையா அப்படி..) அப்படின்னு தெரியலை.. பார்ப்போம்.

இதில் இதயத்தை உறைய வைக்கும் செய்தி "வந்தியத்தேவனாக" நடிப்பது இளைய தளபதி. விக்ரமும் நடிக்கிறார் (அநேகமாக அருண்மொழி, அதாவது ராஜா ராஜா சோழனாக இருக்கும்)

மற்றபடி ஒரு சூப்பர் டூப்பர் தோல்வி இருக்கிறது(சரித்திர கதையாக இருக்கும் பட்சத்தில்) , காரணம் ,

௦. இந்த காலத்தில் சரித்திர கதையை மக்கள் ஒத்துகொள்வது ரொம்ப கஷ்டம்.


1. பெரும்பாலான மக்களுக்கு பொன்னியின் செல்வன் கதை தெரியாது. ராமாயணம் , மகாபாரதம் போன்ற வெற்றி பெற்ற தொடர்களுக்கு பின்பு தூர்தர்ஷனில் "சந்திரகாந்தா" என்ற தொடர் வந்தது, தொடர் சூப்பர் ப்ளாப்! ஆக கதை தெரியாமல் புராண / வரலாற்று கதைகளை யாரும் பார்க்க மாட்டார்கள்.

2. உண்மையிலேயே சரித்திர படம் அப்படின்னா, தெலுகு version இல்லாம பண்ண முடியாது (பட்ஜெட் சாமி...), தமிழ்நாட்டிலேயே தெரியாத பொன்னியின் செல்வன்ஆந்திராவில் எப்படி? ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியல் கதையான "இருவர்" ஆந்திராவில் வெற்றிகரமாக 2 நாட்கள் ஓடியது. prince மகேஷ்பாபு இதில் நடிக்கிறாராம் , தமிழிலுமா அல்லது தெலுகில் மட்டுமா ..தெரியலை.
 
3. பொன்னியின் செல்வன் தெரிந்த / அறிந்த மக்கள் எழுத்தில் படித்த கதை மாந்தருக்கு ஒருவித image மனதில் உருவாக்கி வைத்து இருப்பார்கள், திரையில் என்னதான் குட்டிகரணம் போட்டாலும், இவர்களுக்கு திருப்தி வராது.





4 . படத்திற்கு இசை "இளையராஜா ". BGM இசை அமோகமாக இருந்து , பாடல்கள் இளையராஜாவின் தற்போதைய வழக்கப்படி சுமாராக இருக்க போகிறது.

5 . வசனம் திரு.ஜெயமோகன் . இதை இந்திய தத்துவ ஞானத்தின் ஒரு பள்ளியாக (thought school)  பார்க்கலாம், ஆனால் அதற்கு சாங்கிய மற்றும் கர்ம யோகத்தின்  மீ மொழி (meta language) தெரிந்தால் மட்டுமே சாத்தியம். வசனத்தில் சமூக கட்டமைப்புக்கள், ஒரு தொடர்ச்சியான பேரத்தின் , சமரசங்களின் சங்கிலி கோர்வை  இருக்கலாம், வரலாற்றில் அப்படித்தான் இருந்து இருக்கிறது. கி.பி.2011 தொடங்கிய இந்த திரைப்படத்தில் தலைவர் என்ன எழுத போகிறார் என்று பார்ப்போம்.

6. ஒரே ஆறுதல் தயாரிப்பது சன் டிவி.

இவ்வளவு எழுதினாலும், ஒரு பொன்னியின் செல்வன் ரசிகனாக எனக்கு தோன்றியவை

-பெரிய பழுவேட்டரையராக - வினு சக்கரவர்த்தி
-சிறிய பழுவேட்டரையராக - நாசர்
-ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் - பிரகாஷ்ராஜ்,கோட்ட ஸ்ரீனிவாச ராவ்


ஹ்ம்ம்.. ஆசை யாரை விட்டது...

Sunday 13 February 2011

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....



அமைச்சர் ஒருவர் தன் துறையின் அதிகாரியிடம் கடிந்து கொண்டாராம் "5 நிமிஷம் பேசறதுக்கு உரை எழுதி தர சொன்னா , நீ எழுதி தந்ததை படிச்சு முடிக்க 10 நிமிஷம் ஆச்சேய்யா" அப்படின்னு.. அதிகாரி சொன்னாராம் "சார் நீங்க xerox காப்பியும் சேர்த்து படிச்சிட்டிங்க,அதனாலதான் extra அஞ்சு நிமிஷம் "..... இந்த ஜோக்கை  நான் படிச்சு ஒரு பத்து வருஷம் ஆச்சு .. ஆனா இப்போ நம்ம S.M.கிருஷ்ணா தாத்தா (இந்திய வெளியுறவு துறை அமைச்சர்) அந்த ஜோக்கை மெய்பித்து விட்டார்.


ஐ.நா சபை கூட்டத்தில் , அதிகாரி தவறுதலா குடுத்த போர்துகீசிய அமைச்சரின் உரையை படிக்க ஆரம்பிச்சுட்டார் , ஒரு 3 நிமிஷம் கழிச்சு அந்த உரையில் "போர்ச்சுக்கல் மொழி பேசும் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளின் உறுப்பினர் இங்கு இருப்பது.." அப்படின்னு வந்துச்சு , அப்பாவும் நம்ம தாத்தாவுக்கு தெரியலை ஆனா ஐ.நாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி அதை கண்டுபிடிச்சுட்டார் (இப்பவே கண்ணை கட்டுதே..). நம்ம கிருஷ்ணா தாத்தாகிட்ட (பத்திரிக்கை) பஞ்சாயத்து ஆபீஸ் ஆளுங்க கேட்டப்போ அவரு சொன்னது என்னன்னா "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா".

ராஜாதிராஜ சோழன்

சோழ சக்கரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் பற்றி அறிந்தவர்கள் அவருக்கு வாரிசான ராஜாதிராஜனை பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாம் அனைவரும் ராஜராஜ சோழன் --> ராஜேந்திர சோழன் , அதற்கு பிறகு குலோத்துங்க சோழன் என்று தாவி விடுகிறோம். உண்மையில் ராஜேந்திர சோழனுடைய மகன் ராஜாதிராஜ சோழன் , நிகரற்ற போர்வீரர், தன்னுடைய பெரிய பாட்டனார் ஆதித்த கரிகாலன் போலவே அகால மரணம் அடைந்தவர்  (ஆனால் பாட்டனார் போல சதியால் இல்லாமல் , போர்களத்தில் வீரமரணம் அடைந்தவர்).

ராஜ ராஜன் காலத்திலேயே
ராஜேந்திர சோழர், முக்கிய பொறுப்புகளை ஏற்று மாதண்ட நாயகராக விளங்கியது போலவே , ராஜேந்திரன் காலத்தில் ராஜாதி ராஜனும் மாதண்ட நாயகனாக விளங்கினார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசன் விக்ரமபாஹு, பாண்டிய இளவரசன் விக்கிரம பாண்டியன் மற்றும் வட இந்திய (கன்னோஜின்) அரசன் ஜகத்பாலன் ஆகியோரை அழித்தார்.

இவரின் முக்கிய பங்கு , சோழர்களின் முக்கிய பரம்பரை எதிரிகளான மேலை (கல்யாணி) சாளுக்கியருடனான போர்களே. கி.பி.1046 ஆண்டில் கல்யாணி சாளுக்கியர் , கீழை (வேங்கி) சாளுக்கியரை மேல் ஆதிக்கம் கொள்வதை தடுக்க , பெரும் படையுடன் கிளம்பி கிருஷ்ணா நதிக்கரையில் (கடலோர ஆந்திரமாக இருக்கலாம்) தண்னடா என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி பெற்று, சாளுக்கியரின் கோட்டையை தீக்கிரையாக்கினார்.

ஆனால் ராஜாதிராஜனின் மிகப்பெரிய (போர்வீரனாக) சாதனை மேலை சாளுக்கியரை தோற்கடித்து அவர்களின் தலைநகரமான கல்யானியையே (தற்போது பசவ கல்யான் என்ற சிற்றூராக ஹைதராபாதிற்கு அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பிதார் மாவட்டத்தில் இருக்கிறது) சூறையாடி , தீக்கிரையாக்கி "விஜயராஜேந்திரா"(கவனிக்கவும் விஜய.டி.ராஜேந்திரா அல்ல) என்ற பட்டம் பெற்றார்.

இவர் கல்யாணி சாளுக்கியர் உடனான கொப்பல் (தற்போது கொப்பலா) என்ற இடத்தில் நடந்த போரில் (கி.பி 1053-1054) வீரமரணம் அடைந்தார். இவரை தொடர்ந்து ராஜகேசரி  ராஜேந்திர சோழன் (II) அரச வாரிசு ஆனார்.