Saturday 25 August 2012

துக்ளக் கேள்வி-பதில்

துக்ளக் இந்த வார இதழில் இடம்பெற்ற சில கேள்விகளும் அதற்கான சோவின் சுவாரசியமான பதில்களும்:

1. "கொஞ்சமாகத் திருடுங்கள், கொள்ளையடிக்காதீர்கள்" என்று அதிகாரிகளுக்கு உத்திரப் பிரதேசப் பொதுப் பணித்துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ் கூறியுள்ளது பற்றி..?

மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் யாராவது இது பற்றி வியப்புத் தெரிவித்திருந்தால், பரவாயில்லை. நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே இது பற்றி ஆச்சர்யப்படுகிறீர்களே, அது எப்படி? நமக்குத்தான் இது தெரிந்த விஷயமாயிற்றே! வழக்கமான விஷயமாயிற்றே! பல வருடங்களுக்கு முன்பாகவே கலைஞர் 'புறங்கையைத்தானே நக்கினோம், தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா? இதற்காக தண்டனையா?' என்று கூறி மக்களிடம் மன்றாடவில்லையா? அவ்வளவு தெளிவாக அவரே கூறி விட்ட விஷயத்தை இப்போது காப்பி அடித்து உத்திரப் பிரதேச அமைச்சர் பேசுகிறார். நீங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள். சொல்லப் போனால், கலைஞரின் காப்பிரைட்டை மீறியதற்காக உத்திரப் பிரதேச அமைச்சர் மீது வழக்குத் தொடர வேண்டும்.

2.இனி லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுடன் பேசப்போவதில்லை என்று அன்னா ஹசாரே அறிவித்து விட்டாரே? ஏன்?

ஊரில் எத்தனையோ சிறுவர்கள் 'காய்' விட்டுக் கொள்வார்கள், பிறகு 'பழம்' விட்டுக் கொள்வார்கள். இதையெல்லாம் நாம் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? விடுங்கள்.

3. ராகுல் காந்தி பிரதமராவதற்கு அவரிடம் உள்ள தகுதிகள் போதுமா?

தாராளமாக போதும். சொல்லப் போனால் வேண்டிய தகுதியை விட, மிக அதிகமான தகுதியே ராகுல் காந்தியிடம் இருக்கிறது. பிரதமர் ஆவதற்கு வேண்டிய தகுதி வயது. ராகுல் காந்தி அந்த தகுதியை மீறிய தகுதி படைத்தவர். அவருக்கு வயதாகிறதே!

4.டெஸோவுக்கு எதிராக இலங்கை அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கலைஞர் தெரிவித்துள்ளாரே?

முன்பெல்லாம் இலங்கை விவகாரத்தில் கலைஞர் மத்திய அரசுக்கு தான் பயப்பட்டார். இப்பொழுது இலங்கை அரசுக்கும் பயப்படத் தொடங்கி விட்டார். 'நாங்கள் நடத்துகின்ற டெஸோ, இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல; அப்படியிருக்க அது இலங்கை அரசுக்கு எதிரானது என்று அங்கே யாரோ பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்; அதை இலங்கை அரசு நம்பக் கூடாது' என்று மன்றாடி இருக்கிறார் அவர். டெல்லியிலாவது அவருக்கு பதவிகள் இருக்கின்றன. இலங்கையில் பதவிகள் கூட இல்லை. அப்படியிருக்க ஏன் அவர் இப்படி அஞ்சுகிறார் என்பது புரியவில்லை.