Monday 30 January 2012

19B

முன்னுரை:

குமுதத்தில் முன்பெல்லாம் ஒரு பக்க கதை என்று வெளிவரும். இப்போது வருகிறதா என்று தெரியாது. இது அந்த வகை முயற்சி.

இப்படி ஒரு பேரழகியை கைப்பிடிப்போம் என்று கார்த்திக் நினைக்கவே இல்லை. "ஏன்டா, ஐ.டி கம்பெனில வேலை செய்யற பசங்க எல்லாம் என்னமா பிகர் கரெக்ட் பண்றாங்க, நீ ஏன் இப்படி தத்தியா இருக்க" என்று ஸ்வேதா சகட்டுமேனிக்கு கிண்டல் செய்வாள். ஸ்வேதா அவன் தங்கை. இந்த நிமிடம் அவளை பார்த்து "எப்படி பிடிச்சேன் பாத்தியா?" என்று கேட்கத் தோன்றியது. ஆனால், யாரோ "நாழியாச்சு நாழியாச்சு" என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். குரலின் சொந்தக்காரரை தேட விழைய, அம்மா எதிரே வந்தாள். "ஆபீஸ் போக வேண்டாம், நாழியாச்சு எழுந்திருடா" என்றாள்.

இன்னிக்கு என்ன ஆபீஸ்மா என்று கைவீசி அவளிடம் சொல்ல, அருகில் இருந்த மடிக்கணினி மீது கைபட்டு அது Hibernate நிலையில் இருந்து உயிர்ப்பெற்று முனகியது. அடச்சே, அத்தனையும் கனவு. ஐயோ, கேளம்பாக்கம் செல்லும் எட்டு மணி 19B ஏ.சி பேருந்தை பிடிக்க வேண்டுமே, மணி என்னவோ என்றெண்ணி கைபேசியை எடுக்க வால்பேப்பர் அசின் சிரித்துக்கொண்டே ஏழேகால் என்றாள். இந்த பேருந்தை விட்டால் அவ்வளவுதான், மத்ய கைலாஷ் ஆரம்பித்து சோளிங்கநல்லூர் வரை டிராபிக் இருக்கும் என்ற நினைப்பே கவலை தர, கனவில் வந்த அழகியின் முகத்தை மீண்டும் நினைவு கொண்டு வர யத்தனித்தபடி கார்த்திக் தன் காலையை துவங்கினான்.

ஒரு வழியாக கார்த்திக் தி.நகர் டெர்மினஸ் வரவும் பேருந்தை ஓட்டுனர் அங்கிருந்து வெளியே எடுத்து வரவும் சரியாக இருந்தது. உள்ளே இரண்டொரு இருக்கை காலியாக இருக்க, ஒன்றில் தன்னை பொருத்திக் கொண்டான். பேருந்து சைதை தாண்டி மத்ய கைலாஷை அடைந்தது. நின்று கொண்டிருந்த ஓரிருவர் அங்கு இடம் கிடைத்து அமர, தன் இருக்கைக்கு நாலைந்து வரிசை முன் அவனை நோக்கி உட்கார்ந்தபடி இருந்த அந்த பெண்ணின் முகம் தெரிந்தது.கல்லூரி மாணவி போல் இருந்தாள். ஜன்னலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கனவில் பார்த்த பெண் போல் அசரடிக்கும் அழகில்லை என்றாலும் நன்றாகவே இருந்தாள். அவள் குணாதிசயங்கள் பல இவளுக்கு பொருந்துவது போல் கார்த்திக்கிற்கு தோன்றியது.

மயில் பச்சை நிற சுடிதார், அழகான கழுத்தில் ஒரு ஒற்றைச் செயின், ஐ-லைனர் உபயத்தில் நெற்றியில் இருந்த பாம்பு வடிவ பொட்டு என்று அனைத்தும் அவனுக்கு பிடித்த விஷயங்கள். ஆள் ஆர்வமே இல்லாத ஒரு ஏரி அருகில் மெல்லிய மழை சாரல் வீசும் மாலையில் அவளுடன் நடப்பது போல் மனக் காமிராவை ஓட்டத் துவங்கினான். "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று யேசுதாசின் குரல் கேட்டது.

ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தவள் பேருந்திற்குள் பார்வையை துழாவி கார்த்திக்கிடம் நிறுத்தினாள். அவள் தன்னை பார்த்து புன்னகைப்பது போல் பட்டது கார்த்திக்கிற்கு. கற்பனையை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் அவளை பார்க்க, அட, நிஜம் தான். நம்மை பார்த்து தான் சிரிக்கிறாள். பேருந்து சிறுசேரியை நெருங்கிக் கொண்டிருந்தது. கார்த்திக் இறங்க ஆயுத்தமானான். மயில் பச்சை சுடிதாரும் இறங்க தயாராவதை கண்டான். அவள் இறங்கியவுடன் அவளிடம் சென்று ஏன் தன்னை பார்த்து சிரித்தாள் என்று கேட்க வேண்டும். இங்கே எங்கு படிக்கிறாள் அல்லது பணி செய்கிறாள் என்று தெரிந்தால் பேசி பழக வசதியாய் இருக்கும்.

இவனை தொடர்ந்து அவளும் இறங்கினாள். அவளே முன்னே வந்து, "நீங்க கார்த்திக் தானே? என்றாள். தொடர்ந்து, "என்ன அண்ணா பார்கறீங்க? நான் ஸ்வேதா பிரண்டு காயத்ரி. உங்க வீட்டுக்கு கூட வந்திருக்கேனே. ஸ்வேதா எப்படி இருக்கா? ரொம்ப நாள் ஆச்சுண்ணா அவளோட பேசி. எனக்கு இங்க ஜாப் கிடைச்சு இருக்கு. இன்னிக்கு தான் ஜாயின் பண்றேன். வீட்ல ஆன்ட்டி, அங்கிள் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கண்ணா" என்று பொரிந்து விட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள். கார்த்திக் காதில் "அண்ணா" என்ற வார்த்தை மட்டும் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தது.

Sunday 29 January 2012

எப்படி சாக வேண்டும்?

பாரத ரத்னா எம்.ஜி.ஆர் இறந்தது 25-12-1987.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி , ப்ரெசிடென்ட் ஆர்.வெங்கட்ராமன், வைஸ் ப்ரெசிடென்ட் ஷங்கர் தயாள் ஷர்மா மூவரும் தனி விமானங்களில் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள், இது போன்று இந்த மூன்று பதவியில் இருப்பவர்களில் ஒரே நேரத்தில் டெல்லியை விட்டு கிளம்பியதில்லை.

மத்திய அரசு தன் எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்தது, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா , கோவா , ஹரியானா,மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களும் விடுமுறை அறிவித்தன.

ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் முதல்வர் குண்டு ராவ், காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா , குஜராத் முதல்வர் அமர்சிங் சௌத்ரி, முன்னாள் குடியரசு தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீலங்கா அரசின் சார்பில், மந்திரி தொண்டைமான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஹிந்தி நடிகர்கள் திலிப்குமார், தேவ் ஆனந்த, பிரான்,தர்மேந்திரா,ஹேமாமாலினி , பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் , நாகேஸ்வரராவ் , ராஜ்குமார் மற்றும் தமிழ் தெலுகு கன்னட மலையாள திரையுலகத்தினர் பலர் வந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் , மலேசியா ரஷ்ய நாடுகளின் பார்லிமென்ட்களில் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன.

திருச்செந்தூர், திருப்பதி, திருவேற்காடு , பார்த்தசாரதி பெருமாள், காஞ்சிபுரம் உள்பட பல கோவில்களில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடைய கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா , கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரம் ரசிகர்கள் அவர் இறந்த துக்கதிற்காக மொட்டை அடித்துக்கொண்டனர்.

இந்தியாவின் எல்லா மாநில சட்ட சபைகளிலும் அவர் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தூர்தர்ஷன் ,தமிழகத்தில் செய்த முதல் நேரடி ஒளிபரப்பு,அவர் இறுதி யாத்திரைக்குதான்.

தமிழக அமைச்சர்கள் தவிர, பூட்டா சிங், நரசிம்ம ராவ் ,பா.சிதம்பரம் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.இறுதி ஊர்வலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  டிசம்பர் 25, 1987 மதியம் 1:20க்கு இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. ராணுவ வண்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது, அண்ணா சாலை , ஜெமினி, கதீட்ரல் ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் கடற்கரைக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. வழி நெடுக ஹெலிகாப்ட்டர் மூலம் எம்.ஜி.ஆர் உடல் மீது மலர் தூவப்பட்டது.

இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் சுமார் ஐந்து லட்சம் தோட்ட தொழிலாளர்கள் துக்கம் அனுஷ்டித்து பணிக்கு செல்லவில்லை. N.T.ராமராவ், குண்டுராவ் , டீ.ஜி.பி ராஜேந்திரன் , போலீஸ் கமிஷனர் தேவாரம் ஆகியோர் இராணுவத்தினரோடு சேர்ந்து கயிற்றை பிடித்து அவரது உடல் அடங்கிய சந்தன பெட்டியை கீழே இறக்கினார்கள். வழி நெடுக கட்டிடங்களில் இருந்து பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கூட்டத்தின் நெரிசலில் ஐந்து பேர் சிக்கி இறந்தனர். எம்.ஜி.ஆர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில்  இறந்தோர் நான்கு பேர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டோர் 25 பேர்.

எம்.ஜி.ஆர் இறந்தபின் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.

-எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் நூலில் இருந்து