Wednesday 4 May 2011

நளினகாந்தி

இயக்குனர் பாலச்சந்தர் சிந்து பைரவி படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாலகுமாரனிடம் சொன்னாராம், "ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கற ஏ.சி கார். அதுல கத்ரி கோபால்நாத் சாக்ஸ் கேட்டுண்டே பிரயாணம் பண்ணனும். அந்த சுகத்துக்காக எவ்வளோ வேணாலும் உழைக்கலாம் தெரியுமோ?"."இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" புத்தகத்தில் மேலே சொன்ன வரிகள் வரும். பாலச்சந்தர் சொன்னது நூறு சதவீத உண்மை.

என் விஷயத்தில் கத்ரிக்கு பதிலாக டி.எம்.கிருஷ்ணா. தியாகையர் நளினகாந்தி ராகத்தில் அமைத்த "மனவ்யாலகிம்" கிருதியை டி.எம்.கிருஷ்ணா பாட
கேட்டுக்கொண்டு இன்று காலை வந்த போது பாலச்சந்தர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன. இளையராஜா நளினகாந்தியை அட்சரம் பிசகாமல் உள்வாங்கி "மனவ்யாலகிம்" போலவே அமைத்த பாடல் தான் கலைஞன் படத்தில் யேசுதாஸ்-ஜானகி பாடிய "என்தன்
நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா". நான் அறிந்த வரை நளினகாந்தியில் பிரபலமான திரைப்பாடல் இது தான்.

நேருக்கு நேர் படத்தில் இடம் பெற்ற "மனம் விரும்புதே", அந்நியன் படத்தில் "அண்டங்காக்கா", கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஹரிஹரன்-மகாலட்சுமி பாடிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", கற்க கசடற படத்தில் வரும் "நூதனா", ஜெயம் படத்தில் "திருவிழான்னு வந்தா" போன்றவையும் நளினகாந்தி என்றே நினைக்கிறேன்.