Friday 5 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் - கடைசிப் பகுதி

இபன் பதுதா பண் கடை கட்டிடம்(Ibn Battuta Mall) என்ற பெயரை ஒரு பேருந்தில் பார்த்த போது இந்த பெயரை எங்கோ கேட்டு இருக்கிறோமே என்று யோசித்தேன். பிறகு தான் சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய இபன் பதுதாவின் "Rihla" என்ற அற்புதமான பயணக்கட்டுரை நினைவுக்கு வந்தது.அதே போல் நான்சி அஜ்ரம் பாடல்களை பல அரேபிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேட்டேன்.இவர்களை அறிமுகப்படுத்திய சாருவுக்கு நன்றி

கதாநாயகன் படத்தில் வரும் பாண்டியராஜன் மற்றும் எஸ்.வி.சேகர் போல இந்தியர்கள் பலர் ஷேக் டிரஸ் போட்டுக்கொண்டு மலபார்/காஜா பீடி புகையும் வாயோடு பார்த்த உடனே அவர்கள் ஷேக் இல்லை என்று தெரிகிற மாதிரி துபாயில் உலவுகிறார்கள்.
பள்ளி தொடங்கி இளங்கலை/முதுகலை பட்டம் வாங்கும் வரை கக்கூஸ் சுவர்களில் எழுதிப் பழகிய தமிழன் துபாய் சென்றவுடன் அதை மறந்து விடுவானா?

"மலையாள பெண்களை பார்த்த மாத்திரத்தில் பற்றி எரியும் தன் உடல் வேட்கை பற்றியும், அரேபிய/தமிழ்/மலையாள பெண்களின் அங்கங்களை வரைந்து பாகங்களை குறிப்பிட்டு ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும் துபாய் பேருந்து இருக்கைகள் அவனுக்கு பெரிய அளவில் உதவுகின்றன".

நம்மூர் மக்களின் அடக்க முடியாத காம இச்சையின் விளைவால்,துபாய் அரசு "Al Qusais" போன்ற கேம்புகள் இருக்கும் பகுதிக்கு விடும் பேருந்து இருக்கைகளை விரைவில் பேனா மற்றும் பென்சிலால் எழுத முடியாதபடி மாற்றியமைக்க வாய்ப்புண்டு.ஆனால், தமிழனை பாராட்ட வேண்டும். காமத்தோடு நிற்காமல், அரேபியர் மற்றும் மலையாளிகளை பச்சை பச்சையாக திட்டுவது, கவிதை எழுதுவது என்று பாரபட்சம் பார்க்காமல் எழுதித் தள்ளுகிறார்கள்.

இறுதியாக, துபாய் அரசு வீட்டுப் பிராணிகள் வளர்ப்பதில் ஏதேனும் தடை விதித்திருக்கிறதா என்று தெரியவில்லை.நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லும் இளைஞர்/யுவதிகளோ அல்லது நாய் வாக்கிங் அழைத்துச் செல்லும் தொப்பை மாமா/மாமிகளையோ துபாயில் பார்க்கவே முடியவில்லை.

Wednesday 3 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் - 3

தொழிலாளர்கள் பற்றி கூறினேன் அல்லவா? இங்குள்ள மற்ற தரப்பினரின் வாழ்க்கை முறை என்ன? அரசு அலுவலராய் இருந்தாலொழிய ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேர உழைப்பு துபாயில் சர்வ சாதாரணம். தினமும் பனிரெண்டு மணி நேரம் வீதம் ஆறு நாள் உழைக்கும் துபாய் மக்களின் வெள்ளிக்கிழமை பொழுதுபோக்கு, தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ "Malls" எனப்படும் "Pin to Pistol" விற்கப்படும் அங்காடிகளுக்கு சென்று "Window Shopping" செய்வது தான். இதுவும் ஒரு கட்டத்தில் அலுத்துவிடும். அதன் பிறகு வீட்டில் அமர்ந்து "டிவிடி" பார்க்க வேண்டியது தான்.

துபாய் மக்களுக்கே கூட தங்கள் அரசின் மீது ஒரு பெரிய குறை இருக்கும் என்றால் அது எதற்கெடுத்தாலும் ஏன் அமெரிக்காவை மாதிரியாக கொண்டு செயல்படுகிறோம் என்பதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பெரிய கட்டிடமா, இதோ பார் அதை விட பெரிதாக ஒன்று என் ஊரில் என்று உலகத்தையே தன் பக்கம் திருப்பும் வெட்டி பந்தா துபாய் அரசாங்கத்திற்கு நிறையவே உண்டு. எடுக்கறது பிச்சை ஆனா சாப்டா தாஜ் ஹோட்டலில் தான் என்று நம்ம ஊரில் சிலர் இருப்பார்கள் அல்லவா?(கோகுல், உனக்கு இங்கே சாரு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)அந்த மாதிரி விபரீதமான போக்கு துபாய் அரசுக்கு.

விளைவு? வாங்கியிருக்கும் கடன் வளர்ந்து கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை. பக்கத்தில் இருக்கும் அபுதாபி தான் தற்போது கடன் கொடுத்து உதவி இருக்கிறது. ஆனால், துபாய் பிரதமர் சங்கத்தை எப்படியும் கடனில் இருந்து மீட்டு விடுவேன் என்கிறார். குதிரை பந்தய விற்பன்னர் அல்லவா அவர்? எப்படியும் ஜாக்பாட் அடித்தே தீருவது என்று மீண்டும் மீண்டும் கோதாவில் இறங்குகிறார்(கடன் வாங்குகிறார்).

நான் மேலே சொன்னது போல வானளாவிய கட்டிடங்கள் மட்டுமல்லாமல், துபாய் மெட்ரோ, ஒவ்வொரு தரிப்பு இடத்திலும்(bus stop) குளிர்சாதன வசதி, அமெரிக்க போலீஸ் மாதிரி அதி நவீன கார் என்று வெள்ளைகாரனா நம்மளா, ஒரு கை பாத்துடலாம் என்று கொலைவெறியோடு துபாய் முன்னேற்ற பாதையில் செல்கிறது. துபாய் போன்ற நல்ல போக்குவரத்து வசதி கொண்ட ஊருக்கு இந்த மெட்ரோ போன்ற விஷயங்கள் தேவையா என்று தெரியவில்லை. மேலும் தொண்ணூறு சதர்விகித துபாய் மக்கள் கார் வைத்துக்கொண்டு இருப்பவர்கள். "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்" என்பது போல் அதுவும் போட்டிக்கான ஒரு விஷயம் என்றே தோன்றுகிறது எனக்கு. ஆனால், நான் இந்த ஒன்றரை மாத துபாய் அனுபவத்தை வைத்துக்கொண்டு இதை பற்றி பேசக்கூடாது.அங்கேயே இருப்பவர்களுக்கு தான் அதன் உண்மையான அவசியம் தெரியும்.
(இன்னும் பேசுவேன்)

Tuesday 2 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் - 2

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இதர ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக துபாய் அரசு ஊருக்கு வெளியே லேபர் கேம்ப்ஸ்(Labour Camps) என்று ஒன்றை
அமைத்திருக்கிறார்கள்.ஒரு முறை தவறான பேருந்தில் ஏறி இந்த கேம்ப் ஒன்றிற்கு சென்றுவிட்டேன். மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தியில் பெயர்ப்பலகை கொண்ட முடி திருத்தும் கடைகள், நகை கடைகள், பொட்டிக்கடை, காய்கறி அங்காடி, துரித உணவு விடுதிகள் என்று இந்த கேம்ப் துபாய்க்குள் இன்னொரு குட்டி(ஆனால் அழுக்கு)துபாய் போல் இருந்தது.

இந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருக்கும் அலுவலகங்கள், காலை ஒரு வேன் அனுப்பி அவர்களிடம் பணிபுரிபவர்களை அழைத்து செல்லும். பனிரெண்டு மணி நேர வேலை முடிந்தவுடன் மீண்டும் வேனில் ஏற்றி இங்கே கொண்டு வந்து அடைத்துவிடும். சனிக்கிழமை தொடங்கி வியாழன் வரை இவர்களின் தினசரி வாழ்க்கை இது தான். வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை. ஆக, வடிவேலு கேட்பது போல் "துபாய்ல நீ எங்க இருந்த?" என்று கேட்டால் பெரும்பாலும் பதில் Al Qusais Camp அல்லது Al Quoz camp என்று தான் வரும்.

ஐந்து வருடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இங்கு வரும் தொழிலாளர்களுக்கு அண்ணன், தம்பி எல்லாம் இந்த கேம்பில் இருக்கும் நண்பர்கள் தான். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு செல்லலாம். செலவு கருதி இரண்டு வருடம் முடிந்த பின்பு கூட பலர் செல்வதில்லை.ஐந்து வருடம் முடியட்டும் என்று காத்திருக்கிறார்கள்.அப்படியும் போக மனமில்லாமல் இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்று பின் விளைவுகள் பற்றி தெரியாமல் ஓவர்ஸ்டே செய்து துபாய் ஜெயிலுக்கு செல்கிறார்கள்.

இவர் மனைவியோ குடும்பத்தாரோ மூன்று மாதம் காத்திருந்து பார்த்துவிட்டு போன் கூட செய்யவில்லையே என்று கவலைப்பட்டு கிராம அதிகாரியை சந்தித்து அவரை "கவனித்து" அவர் மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொண்டு, பின்னர் அவர் அரசிடம் பேசி, அவர்கள் துபாய் அரசை தொடர்பு கொண்டு பேசி சம்பந்தப்பட்ட நபரை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் முன் அவர் துபாய் ஜெயிலில் குறைந்தது ஒரு வருடம் இருந்திருப்பார்.

நான் வழக்கமாக மதிய உணவிற்கு செல்லும் சங்கீத உணவக சர்வர் ஒருவர் சொன்னார், "நான் இங்க வந்து நாலு வருஷம் ஆகுது.என் பையன் இப்போ தான் பள்ளிக்கூடம் போறான்.அவன் பொறந்த உடனே நான் இங்க வந்துட்டேன்.போன்ல கூட பேச மாட்டேன்கறான்.அவனுக்கு நான் யாருன்னு தெரியல.அவங்க அம்மா கிட்ட போனை கொடுத்துட்டு ஓடிப் போயிடறான்.அடுத்த வருஷம் போய் தான் பாக்கணும்".பாத்ரூம் போய் வருகிறேன் என்று சொல்லி சென்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு வந்தேன்.

பேருந்தில் கூட நிறைய தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். பெரும்பாலும் பேச்சு வாங்கிய கடன் பற்றியும் அதனால் தன மனைவி/குடும்பம் அங்கு படும் அவமானத்தை பற்றியே இருக்கும். ஒரு முறை டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்த போது அருகில் இருவர் பேசுவதை கேட்க நேர்ந்தது. இருவரும் நண்பர்கள் போலும். ஒருவர் சொன்னார் "எங்க அத்தாச்சி கிட்ட பத்து(பத்தாயிரம்) ரூபா வாங்கினேன். அவங்க பிள்ளை என் பொண்டாட்டிய ரோட்ல பாத்து பணத்தை கேட்டு இருக்கான். என் பொண்டாட்டி "அதான் சீக்கரம் கொடுக்கறோம்னு சொன்னோமே, வாரத்துக்கு ஏழு நாளுமா கேப்பீங்க" அப்படின்னு சொல்லியிருக்கா. உடனே அவளை அறைஞ்சிட்டானம். அப்பறம் என் தம்பி மச்சான் எல்லாம் போய் சண்டை போட்டு இருக்காங்க. ரெண்டு மாசம் முன்னாடி போன் செஞ்சப்போ சொன்ன என் பொண்டாட்டி. இப்போ என்ன ஆச்சுனு தெரில. அடுத்த வாரம் போன் பண்ணனும்".

(இன்னும் பேசுவேன்)

Monday 1 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் -1

இதற்கு முன் சில வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், துபாய் செல்வது குறித்து ஒரு உற்சாகம் கலந்த கவலை இருந்தது.உற்சாகத்துக்கு காரணம் சல்லிசான விலையில் கிடைக்கும் பேரிச்சம்பழம்(சென்னையில் லயன் டேட்ஸ் வாங்குபவர்களுக்கு தான் இந்த சிற்றின்பத்திற்க்கான காரணம் புரியும்),உலகின் மிக பெரிய கட்டிடமான Burj Dubai(இப்போது Burj Khalifa என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) திறக்கப்படும் போது நான் அங்கு இருப்பேன் மற்றும் சில அலுவல் சார்ந்த விஷயங்கள்.ஆனால், இதற்கு நடுவில் காப்பி உண்மையிலேயே ஒட்டக பாலில் தான் போடுவார்களோ, ஒரு வேலை அதை குடித்துவிட்டால் தென் தேசத்து வடமனான நம் ஆசாரம் கெட்டு போய் விடுமோ போன்ற Ph.d ரக கேள்விகள் ஒரு பக்கம் கவலை கொடுத்து கொண்டிருந்தன. இப்படி யோசித்துக்கொண்டே ஒரு வழியாக துபாய் வந்து சேர்ந்தேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) ஏழு ஊர்களை கொண்டது. அதில் ஒன்று துபாய். "Oil and Allied Products" மட்டுமே ஒரு கட்டத்தில் வருமானத்திற்கு நம்பியிருந்த துபாய் இன்று அதன் மொத்த வருமானத்தில் ஆறு சதர்விகிதத்தை மட்டுமே அதிலிருந்து பெறுகிறது. துபாயின் பொருளாதாரம் இப்போது முக்கியமாக சுற்றுலா, நிதி சார்ந்த பணிகள் மற்றும் கட்டுமான துறையில் இருந்து வருகிறது. எண்ணை கிணறுகளை நம்பி இருந்த துபாய் பொருளாதாரத்தை மாற்றிய பெருமை துபாயின் முன்னாள் துணை ஜனாதிபதியும் பிரதமருமான துபாயை ஆளும் Al Maktoum குடும்பத்தின் Sheikh Rashid bin Saeed Al Maktoum அவர்களையே சேரும். இவர் தற்போது உயிரோடு இல்லை. இவர் மூன்றாவது மகன் Sheikh Mohammed bin Rashid Al Maktoum தான் துபாயின் தற்போதைய பிரதமர்.

"My grandfather rode a camel, my father rode a camel, I drive a Mercedes, my son drives a Land Rover, his son will drive a Land Rover, but his son will ride a camel."

இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு மேல் துபாய் எண்ணை கிணறுகள் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது என்று புரிந்து konda Sheikh Rashid bin Saeed Al Maktoum அவர்கள் சொன்ன வார்த்தைகளை இவை . "Visionary" என்ற ஆங்கில வார்த்தைக்கு Sheikh Rashid bin Saeed Al Maktoum போன்றவர்கள் நல்ல உதாரணம். இவர் மகனும் தற்போதைய பிரதமருமான Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்களை தன் தந்தையை காட்டிலும் "aggressive" என சொல்லலாம். "தலைவர்களின் அகராதியில் முடியாது என்ற சொல்லே இல்லை" என்கிறார். தன் பேச்சின் மூலம் மக்களளுக்கு நிறைய ஊக்கமூட்டுகிறார். இதை எல்லாம் நம் ஊரில் ராகுல் காந்தி கூட தானே செய்கிறார் என்று உடனே கப்பித்தனமாக கேள்வி கேட்கக்கூடாது.ராகுல் காந்தி சொல்கிறார்.ஆனால், ஷேக் சொல்வதோடு நிற்காமல் செய்கிறார். Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்களை பற்றியும் அவர் எடுத்துக்கூறுகளை(quotes) பற்றியும் மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும். இதை எல்லாம் நம் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் பார்ப்பார்கள் என்று நம்புவோமாக.

Dubai Airport Free Zone(DAFZA) என்னும் இடத்தில் இருந்தது என் அலுவலகம். முதல் நாள் பேருந்து வழித்தடங்கள் தெரியாது என்பதால் ஒரு டாக்ஸி பிடித்தேன். டாக்ஸி ஓட்டுனர் கேரளாவை சேர்ந்தவர். இங்கு "God's own country" மக்களை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். இவர்கள் இல்லாவிட்டால் அரபு நாடுகள் ஸ்தம்பித்து விடும் என்று நினைக்கிறேன். இவர்கள் குரல் ஒலிக்காத இடமே இல்லை இங்கு. புதிதாக துபாய் வந்த உங்களுக்கு தவறான தொலைபேசி அழைப்பு கூட இவர்களிடமிருந்து தான் வரும். நீங்கள் அது தவறான அழைப்பு என்று சொல்லக்கூட விடமால் உங்களை தங்கள் சொந்தகாரர் என்று நினைத்து, குசலம் விசாரித்து கொச்சியில் உங்களை நம்பி அவர்கள் வாங்கியிருக்கிற கடன் வரை சொல்லுவார்கள். பின்னர் தான் பதிலே காணுமே என்று நீங்கள் யார் என்று கேட்பார்கள். டீக்கடை நடத்துவதில் இருந்து அரபு ஷேக்குகளுக்கு பணம் சம்பாதித்து தருவது வரை இவர்கள் பங்கேற்பு உண்டு.

தமிழர்கள் இவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் உள்ளனர். தமிழகத்தின் தென்கோடியில் இருந்து தன் குடும்பம் வாங்கியிருக்கும் ஒரு லட்ச ரூபாய் கடனை அடைக்க இங்கு ஓடி வரும் இளைஞர்கள் பலரை இங்குள்ள கட்டுமான வளாகங்களில்(Construction Sites) பார்க்கலாம். அதே போல் நாற்பது லட்ச ரூபாய் வீட்டை சென்னையில் வாங்கிவிட்டு மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வரும் தமிழர்களை தகவல் தொழில்நுட்பம், கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகங்களில் பார்க்கலாம்.

(இன்னும் பேசுவேன்)