Friday 8 May 2009

காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் - 3

காங்கிரஸ் கூட்டணியை பேசுவதற்கு முன்னால் கூட்டணி தலைகளை பார்ப்போம்
- முலாயம் சிங்
- லாலு பிரசாத்
- ராம் விலாஸ் பஸ்வான்
- மம்தா பானர்ஜீ
- கருணாநிதி

எல்லாமே பெரிய தலைகள்...

மேலும் நான் ஏற்கனவே சொன்னபடி மூன்றாம் அணியில் உள்ள பலரும் காங்கிரசை ஆதரிக்க தயங்க மாட்டார்கள் தெலுகுதேசம் போன்ற கட்சியினரை தவிர.நிலையான ஆட்சி எங்கே கிடைக்கும் என்பதை இதனை படிப்பவர் உணர்ந்து கொள்ளலாம்.

இப்போது உள்ள காங்கிரஸ் அரசில் தமிழகத்தின் நிலையை பற்றி பார்ப்போம்,

காபினட் அமைச்சர்கள் - 5
துணை அமைச்சர்கள் - 7

ஆக 12 அமைச்சர்கள் , அதுவும் ஒரு இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து!

இதன் மூலம் தமிழ் நாட்டிற்கு எத்தனை லாபம் என்று யாருமே யோசிக்க தயாரில்லை, எப்போதும்
உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே சிந்திப்பதுதான் தமிழ்நாட்டிற்கு வந்த சாபக்கேடு போலும்.

எவ்வளவு மேம்பாலங்கள் , ரயில் தண்டவாள பணிகள், தமிழிற்கு செம்மொழி அந்தஸ்து, கடல் சார் கல்வி பல்கலை கழகம் இன்னும் என்னனவோ.

ஆக, இத்தனையும் செய்தும் மக்களுக்கு அது கண்ணில் தெரியவில்லை. மூளையை தீர்மானமாக
உபயோகிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டனர் போலும்.

இதன் மூலம் சோனியா ஈழத்தமிழரை கொல்லுவதை நான் நியாயபடுத்தவில்லை மாறாக இவ்வளவு செல்வாக்கு இருந்தே ஒன்றும் செய்ய முடியாத தமிழக அரசு, செல்வாக்கே இல்லாமல் அல்லது பலமான மத்திய அரசு இல்லாமல் ஈழத்தில் என்ன செய்ய முடியும் என்றே கேட்கிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஈழப்போர் நிறுத்தலில் இந்திய பங்கீடு ஏதாவது இருக்குமானால் அது பாரதிய ஜனதாவால் மட்டுமே முடியும் இதை தி.க முதல் சீமான் வரை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் தி.மு.க அரசு இதை மக்களுக்கு எடுத்து சொல்ல மறுத்துவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

இந்த முறையும் தி.மு.க கூட்டணிக்கு 39 தொகுதிகள் வந்தால் முதல் நிபந்தனையாக ஈழப்போர் நிறுத்தம் என்பதை வைக்கலாமே, அதன் பொருட்டே ஆதரவு என்று சொல்லலாமே.ராணுவ அமைச்சகத்தையும் , வெளி விவகாரதுறையையும் வாங்கலாமே. இதுவேதான் நிபந்தனை என்றால் சோனியா நிச்சயம் ஒத்துக்கொள்வார்.

இதன் மூலம் ஈழப்போர் நிறுத்தம் + தமிழகத்திற்கு வழக்கம் போல மத்திய அமைச்சரவையில்
செல்வாக்கு என இரண்டுமே பெறலாம்.

ஆனால் தமிழ்நாட்டினர் வழக்கம் போல 39 எம்.பிக்களை ஒரே கட்சியில் தேர்வு செய்தால் நலம் ,
ஏனெனில் அந்த 39 என்பது பெரிய தொகை , எந்த கூட்டணியில் இருந்தாலும் நமக்கு தேவையான மத்திய அமைச்சரவை கிடைக்கும் , இதில் விஜயகாந்த் புகுந்து குட்டையை குழப்பாதவரை..பார்ப்போம்.

இதனை படிப்பவர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், நான் ஈழத்தமிழரின் எதிர் திசையில் இருப்பவனல்ல, நானும் அங்கே போர் நிறுத்தம் செய்வதைதான் விரும்புகிறேன் ஆனால் அதற்கு காங்கிரசை தோற்கடிப்பதுதான் ஒரே வழி என்பதில்தான் நான் மாறுபடுகின்றேன்.

Thursday 7 May 2009

தேர்தலும் தொழில்நுட்பமும்

முதல் முறையாக இந்த தேர்தலில் தான் தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை நான் கண்கூடாக பார்க்கிறேன். நான் EVM(Electronic Voting Machine) பற்றி கூறவில்லை. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இன்டர்நெட், மொபைல் போன்ற தகவல் சாதனங்களை உபயோகிக்கும் முறை பற்றி கூறுகிறேன். நேற்று என் நண்பருக்கு 91-40-44620160 என்கிற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. எடுத்தவுடன்,
"நான் உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்" என்று அம்மாவின் குரல்.ஆடிப்போய்விட்டார் நண்பர்.அ.தி.மு.க தலைமை ஜெயலலிதா அவர்களின் வாய்சை பதிவு செய்து அவர் நம்மிடம் ஒட்டு கேட்பது போல் மொபைல் மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

இதே போல் info@mdmkonline.com என்கிற முகவரியிலிருந்து தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்று ஒரு பெரிய மின்னஞ்சல் எனக்கு வந்தது. கேப்டன் விஜயகாந்த் யாஹூவில் விளம்பரம் கொடுக்கிறார். இதைத் தவிர அத்வானி, சோனியா, ராகுல் காந்தி போன்றவர்களின் இணையதளம் என்று இந்த தேர்தல் தகவல் தொழில்நுட்பத்தை குறிப்பாக கணினி சார்ந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்தி கொண்டுள்ளது.

Tuesday 5 May 2009

Fourth Estate in India


"In old days men had the rack. Now they have the press. That is an improvement certainly. But still it is very bad, and wrong, and demoralizing. Somebody — was it Burke? — called journalism the fourth estate. That was true at the time no doubt. But at the present moment it is the only estate. It has eaten up the other three. The Lords Temporal say nothing, the Lords Spiritual have nothing to say, and the House of Commons has nothing to say and says it. We are dominated by Journalism."

-Oscar Wilde


இவை Oscar Wilde இங்கிலாந்து இதழியல்(ஜர்னலிசம் என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் இதழியல் தானே?) துறையை பற்றி கூறியவை. அவர் வாழ்ந்த காலகட்டம் 1854-1900. அப்போதே இப்படி சொல்லியிருக்கிறார். சரி, இங்கிலாந்தை விடுவோம். நம்ம ஊருக்கு வருவோம். செய்திகளை வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை மற்றும் இன்டர்நெட் மூலம் தெரியப்படுத்தும் இதழியல் துறை இந்தியாவில் எப்படி இருக்கிறது?

குற்றம் - நடந்தது என்ன?,நிஜம்,பெண்கள் கற்பழிப்பு - பீதியில் உறையும் கிராமம், கண்ணழகி நடிகையின் கிழக்கு கடற்கரை சாலை பின்னிரவு விசிட்டின் பின்னணி என்ன? போன்ற மக்களை சுண்டி இழுக்கும் இலக்கிய தரம் வாய்ந்த தலைப்புகளுடன் கன ஜோராக இதழியல் வியாபாரம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடக்கிறது.

இதை பற்றி பேசும் போது மும்பை தாக்குதல் சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்த தாக்குதல் நடந்த பின் இஸ்ரேல் நம் நாட்டை கேட்டது ஒன்று தான். "போலீஸ், கமாண்டோ ஆகியோரின் அணுகுமுறையை ஏன் டிவி,வானொலி,இன்டர்நெட் என்று ஒன்று விடாமல் வெளியிட அனுமதித்தீர்கள் ? உள்ளே இருந்த தீவிரவாதிகளுக்கு இந்த செய்திகளை எல்லாம் நீங்களே கொடுத்து உதவி செய்யலாமா என்றார்கள்?". யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அரசால் தொலைகாட்சி, பத்திரிகை என்று யாரையும் தடை செய்ய முடியவில்லை.இவர்கள் அரசை தாண்டி போய்விட்டார்கள். மேலும், இதை நடத்துபவர்கள் பெரும்புள்ளிகள்.அவர்களை பகைத்துக்கொள்ள அரசால் முடியாது.

நான் சிங்கப்பூரில் ஒரு ஆறு மாத காலம் இருந்தேன். "The Straits Times" என்று ஒரே ஒரு ஆங்கில பேப்பர் தான் தினசரி அங்கே வெளிவரும். இதைத் தவிர சில உண்டு. ஆனால் மக்கள் அதிகம் வாங்குவது Straits Times தான். நான் கேள்விப்பட்ட வரை சிங்கப்பூரில் அரசின் அனுமதி இல்லாமல் எந்த செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட முடியாது. சிலர் இதை பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனலாம். ஆனால், சுதந்திரத்தை கொடுத்து விட்டு நம் நாடு போல் கஷ்டப்படுவதை விட இது எவ்வளவோ மேல்.

நிஜம், குற்றம்-நடந்தது என்ன போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் ஆனால் அவை educative ஆக இருக்கும். உதாரணமாக, கொள்ளை நடந்த விதம், வீட்டில் உள்ளவர்கள் செய்த எந்த தவறால் அது நடந்தது, அதை எப்படி தடுத்து இருக்கலாம் போன்றவை. சாமியாரின் பித்தலாட்டம்,பேய் உள்ள கிராமத்தில் ஒரு நாள் தங்குவது போன்ற கீழ்த்தரமான செய்திகளை எல்லாம் டிவியில் பார்க்க முடியாது. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளில் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.

சினிமாவில் வரும் காட்சிகளை சென்சார் செய்ய ஒரு துறை இருப்பது போல் இந்தியாவில் பத்திரிகைகளுக்கு எதாவது அமைப்பு உள்ளதா என்று தெரியவில்லை.அப்படி ஒன்று இருந்தால் அதையும் தாண்டி எப்படி சில பத்திரிகைகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற செய்திகளை பிரசுரிக்கின்றன என்று புரியவில்லை.

மீண்டும் மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு வருவோம். அந்த தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்ட ஒரே குற்றவாளியான கசாபின் நடவடிக்கைகள் பற்றி நம்மூர் பத்திரிகைகள் எழுதாத நாள் இல்லை. Close Up பேஸ்ட் கேட்டார் கசாப். படிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட கசாபின் மனு தள்ளுபடி என்று உப்பு சப்பு இல்லாத செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் கசாபை எதோ விடுதலை போராட்ட வீரர் அளவுக்கு சித்தரிக்கின்றன பத்திரிகைகள்.இதெல்லாம் கூட பரவாயில்லை. கசாபின் வயது என்ன என்று தெரிந்துகொள்ள நடத்தப்படும் சோதனைகள் குறித்து விலாவாரியான தகவல்கள். கொஞ்சம் விட்டால் "எப்படி எப்படி சமைஞ்சது எப்படி - கசாபின் கண்ணீர் கதை" என்று ஒரு தலைப்பு கொடுத்து தொடர்கதை ஆரம்பிப்பார்கள் போலும். இவர்கள் இப்படி உசுப்பேற்றி கசாப் அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் சரி.

Monday 4 May 2009

காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்-2

மூன்றாம் அணியில் யார் யார் இருப்பது...

அண்ணா தி.மு.க,தெலுகு தேசம்,சி.பி.எம்,பகுஜன் சமாஜ், தெலிங்கானா ராஷ்ட்ர சமிதி,தேவே கவுடாவின் ஜனதா தளம் ,பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் சில கட்சிகள்.

இதில் மாயாவதியும் ஜெயலலிதாவும் மட்டுமே அதிக இடங்களை வெல்லக்கூடிய சாத்தியங்களை வைத்துக்கொண்டு இருக்கின்றனர் .

இப்போதுள்ள நிலையில் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு ஏன் என்றால் போதுமான இடங்கள் வந்தாலும் இந்த கூட்டணியின் ஒற்றுமை குறித்து நாம் யோசிக்க வேண்டும், முக்கியமாக "ஜெயலலிதா X மாயாவதி " இதற்கிடையில் தேவே கௌடா....எனவே அப்படியே ஆட்சி அமைத்தாலும் அதற்கான ஆயுள் மிகவும் குறைவு.


தேவே கௌடா
ஆதரவில் ஆட்சி அமைக்கும்படி இருந்தால் என்ன என்ன செய்வார் என்பதை சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் செய்து காட்டினார்.

ஜெயலலிதா ஆதரவில் ஆட்சி அமைத்தால் அவர் என்ன என்ன செய்வார் என்பதை 1998 பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது செய்து காட்டினார்.

நாம் பத்து வருடங்களுக்கு முன்னாள் தேவே கௌடா பிரதம மந்திரி பதவிக்கு வந்த போது எவ்வளவு நிலையான ஆட்சி அமைந்தது என்றும் பார்த்தோம்.

வரப்போகும் நம்பர் கேமில் சி.பி.எம் மற்றும் சி.பி.எம்-(ம) போன்றோர் காங்கிரசை ஆதரிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றன என்பதை அவர்கள் இப்போதே சொல்லி இருக்கின்றார்கள்.மீண்டும் ஒரு குதிரை பேரத்தில் காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி ஆட்சி அமைக்க சாத்தியங்கள் பிரகாசமாக இருக்கின்றன.

எனவே மூன்றாம் அணியை பொறுத்தவரை ஆட்சியே அமைந்தாலும் அதற்கான ஆயுள் மிகவும் குறைவாகதான் இருக்கும்.

அடுத்து இருப்பது காங்கிரஸ் கூட்டணி....

-தொடரும்...

Sunday 3 May 2009

காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்-1


இப்போது தமிழ்நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான ஒரு அலை அடிக்கிறது, அதாவது காங்கிரசை எதிர்க்க வேண்டும், காங்கிரஸ் தமிழ்நாட்டில் இல்லாமல் போக வேண்டும் என்று ஒரு சாரார் மிகவும் தீர்மானமாக இருக்கின்றனர்.

இது சரியா?

இதனால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று பார்ப்போம். இந்தியாவிலேயே காங்கிரசுக்கு ஒரு உருப்படியான கூட்டணி அமைந்தது தமிழ்நாட்டிலும் பெங்காலிளும்தான் (அதாவது கௌரவமான தொகுதி பங்கீடு) (ஆந்திராவிலும் கர்நாடாகவிலும் காங்கிரஸ் அதன் சொந்த பலத்திலேயே நிற்கிறது). எனவே தி.மு.க கூட்டணி காங்கிரசுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. தமிழ்நாடும் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது.

முதலில் காங்கிரசினால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கும்

1. பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
2. Third front கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.

மேற்கண்ட இரண்டு option-களுமே கூட்டணி ஆட்சிதான் தவிர்த்து abosolute mejority ஆட்சி அல்ல.

எந்த ஆட்சி அமைந்தாலும் அ.தி.மு.க , பா.ம.க , பிரஜா ராஜ்யம், தெலுங்கு தேசம், ஜனதா தளம் (s),பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி , ராஷ்ட்ரிய ஜனதா தள் போன்ற பிராந்திய கட்சிகள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் , அவரவர் பலத்திற்கு ஏற்ப.இதில் எந்த கட்சியும் பாரதிய ஜனதா கூட்டணியில் இல்லை என்பது தெரிந்த விஷயம். எனவே எவர் ஆட்சி அமைக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல இந்த கட்சிகள் தமது ஆதரவு / எதிர்ப்பு நிலையை மாற்றிக்கொள்ளும்.

இப்போது இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து பாரதிய ஜனதாவை ஆட்சியில் ஏற்றலாம் , ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு ஏனென்றால் காங்கிரசுடன் ஒரு முக்கிய எதிர்க்கட்சியான கம்யுனிசட்டுகளும் இந்த கூட்டணிக்கு எதிர்த்தே வாக்களிப்பர். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை பற்றி கவலை இல்லை , அவர்களும் அ.தி.மு.க தெலுகு தேசம் போல பெரிய கொள்கை எல்லாம் இல்லாத கட்சிகள், மேலும் தனக்கு மந்திரி சபையில் எந்த portfolio வரும் என்பதில்தான் குறிக்கோள்களுடன் இருக்கும் , லாலு பிரசாத்,ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்களும் இதே ரகம்தான், மேலும் பா.ஜா. கூட்டணிக்கு வருவதை விட காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பானது (மதச்சார்பின்மை மதச்சார்பின்மை...),முலாயம் சிங்கும் atleast home minister-ஆக வருவதற்கு ஆசைப்படுவார்.

எனவே எல்லாம் கொடுத்துவிட்டு பா.ஜா ஆட்சிக்கு வர வேண்டும், இந்த லட்சணத்தில் இலங்கையை கண்டிக்க வேண்டும், போகாத ஊருக்கு வழி கேட்பது மாதிரிதான் இதுவும்.முலாயம் சிங், லாலு மாயாவதி போன்றவர்கள் இலங்கை யுத்தத்தை 'அர்ஜென்டினாவுக்கும்' 'பொலிவியாவிர்கும்' நடக்கும் யுத்தம் போலவே பார்ப்பர்.

இதில் அ.தி.மு.க கூட்டணியும் இடம் பெறும்,இந்த இடத்தில் ஜெயலலிதாவின் குணத்தை நாம் நினைவு படுத்திக்கொண்டு பார்க்க வேண்டும், அதாவது அவருக்கு மத்திய அரசிடம் பேசி அதன் ஒரு பகுதியாக இருந்து பழக்கமில்லை , அதற்கு அவரின் குணாதிசயம் ஒத்துக்கொள்ளாது, இனிமேல் அதுபோல் நடந்தால் அது அதிசயமே , இந்த லட்சணத்தில் அவர் "தனி ஈழம் அமைத்து தரப்படும்" என்று வேறு கூறுகிறார், எனவே ஈழ பிரச்சினை அடிப்படையில் அவர் மத்திய அரசை கவிழ்க்கவே பார்ப்பார் (அதனை ராமதாஸ் எதிர்ப்பார், வைகோ ஆதரிப்பார் ... தலை சுத்துதுடா சாமி..) தவிர உருப்படியான ஒரு செயலை செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

எனவே பா.ஜ கூட்டணி வருவது மிகவும் கடினம் ஏன் என்றால்,

0.பா.ஜ வை தவிர பெரிய கட்சிகள் கூட்டணியில் இல்லை.

1. பா.ஜ விற்கு போதிய அளவில் சீட்கள் (அதாவது 190-200 என்ற அளவில்),வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

2. அத்வானி இப்போது கையில் எடுத்து இருக்கும் சுவிஸ் பாங்க் கருப்பு பணம் விவகாரம் எல்லோருக்கும் (அதாவது பெரும்பான்மையான அரசியல்வாதிகளுக்கு) எரிச்சல் தரக்கூடிய விஷயம்.

3. பா.ஜ விற்கு ஆதரவு கொடுப்பது நீண்ட கால நலன்களுக்கு பல கட்சிகளுக்கு எதிரானது.தங்களது minority vote bank போகக்கூடும் என்று அஞ்சுவார்கள்.(லாலு, ராம்விலாஸ் பஸ்வான் முலாயம் , இவர்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில்)

4.அப்படியே ஆட்சி அமைத்தாலும் மாயாவதியோ லாலுவோ பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவார்கள்.

5.கம்யுனிசட்டுகளின் ஆதரவு கிடைக்காது

அடுத்து மூன்றாம் அணி ஆட்சி...

-தொடரும்

பஸ் கட்டண காமெடி

கடந்த வெள்ளியன்று மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் ஏறியவர்களுக்கு சந்தோஷம் கலந்த அதிர்ச்சி. வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, எக்ஸ்பிரஸ் அனைத்திலும் கட்டணம் குறைக்கப்பட்டிருந்தது. தமிழக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு இது வந்தது. தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா இது தேர்தலை மனதில் கொண்டு செய்யப்பட்ட மாற்றம் என்றும் இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்றும் கூறினார்.

இந்த பேருந்து கட்டண மாற்றத்தை பின் விளைவுகளை யோசித்து திட்டமிட்டு செய்திருந்த கலைஞர் அரசு சும்மா விடுமா? போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு உடனே ஒரு அறிக்கை விட்டார். அதில், "கட்டண மாற்றம் கொண்டு வர அரசு ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆனால் இப்போது அப்படி எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை என்பதால் இது அரசு செய்த மாற்றம் இல்லை. மாநகர போக்குவரத்து துறையின் தலைமை அதிகாரி(Managing Director) தானே இந்த மாற்றங்களை செய்திருக்கலாம் என்று ஒரு போடு போட்டார்". இதை தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வழிமொழிந்தார்.

இந்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி இதற்கு இன்று மதியம் மூன்று மணிக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

நேரு, ஸ்ரீபதி இருவரும் அம்புகள்.எய்தவனை தேர்தல் ஆணையம் நெருங்க முடியுமா?