Thursday 17 November 2011

திமலா-2

உடன் பணிபுரியும் நண்பரின் திருமணம் திருப்பதியில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ரொம்ப நாளாக இரண்டு பிரார்த்தனைகள்(மொட்டை மற்றும் திருப்பதி-திருமலா நடை பயணம்) பாக்கி இருந்ததால் இந்த சந்தர்ப்பதில் அதை முடித்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச் சென்றேன். ஸ்கார்பியோ ஒன்றை எடுத்துக்கொண்டு எட்டு பேர் சென்றோம். புழலில் ஒரு திருமண வரவேற்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து தடா, காலஹஸ்தி மார்கமாக திருப்பதி சென்றோம். திருப்பதி சென்றடைந்த போது இரவு மணி பதினொன்று. நண்பர் தெலுங்கர் என்பதால் இரவு முஹுர்த்தம். ஆனால், நாங்கள் சென்ற போது முஹுர்த்தம் முடிந்து மணமக்கள் உணவிற்கு செல்ல தயாராக இருந்தனர். நாங்களும் உணவருந்தி மண்டபத்திலேயே தங்கினோம்.

காலை ஐந்தரை மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு நடை பயணத்தை துவங்கினோம். காளிகோபுரம் சென்றடைவதற்குள் நுரை தள்ளிவிட்டது. ஒரு பத்து லெமன் சால்ட் ஜூஸ், லிம்கா, புளிப்பு மிட்டாய் எல்லாம் உண்டு புத்துணர்ச்சி பெற்று மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் தான் 200ml பானங்கள். குடித்தால் திருப்தியே இல்லை. திருப்பதியில் கோக், பெப்சி, லிம்கா என்று சகலமும் 300ml. ஆந்திராவில் தமிழ் நன்றாகவே புரிகிறது. அதுவும் திருப்பதி இன்று ஒரு சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது. ஆந்திர அரசோ அல்லது தேவஸ்தானமோ நடைபாதையில் உள்ள ஆழ்வார்கள் சிலையை செப்பனிட வேண்டும். ஆழ்வார்கள் எல்லாம் அநியாயத்துக்கு விழுப்புண் பெற்று ஆள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து இருக்கிறார்கள்.

ஒரு வழியாக நான்கு மணி நேரத்திற்கு பிறகு காலை பத்து மணிக்கு திருமலை வந்து சேர்ந்தேன். ஜனங்களின் செண்டிமெண்ட் அறிந்த நல்ல மார்க்கெட்டிங் நபர் ஒருவர் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டு, "ஏழுமலையானை பார்க்க ஏழு மலை தாண்டி வரீங்க, அதனால ஏழு கற்பூரம் வாங்கி கடைசி படில கொளுத்துங்க. எல்லா கஷ்டமும் தீரும். ஏழு கற்பூரம் பத்து ரூபாய்" என்று தெலுங்கில் விற்றுக் கொண்டிருந்தார். பெரும்பாலான கூட்டம் ஏழு கற்பூரம் வாங்கி கொளுத்தியது. கடைசி படி கொழுந்து விட்டு எரிந்தது. அதற்குள் ஒரு கூட்டம் அந்த இடத்தில் தேங்காய் வெட்டி, குங்குமம், சந்தனம், மஞ்சள் எல்லாம் நிறைய கொட்டி அங்கேயே ஒரு சின்ன வேங்கடவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.உடன் இருந்த நண்பர் ஒருவர், "ஏங்க, இவன் டாக்ஸ் பிரச்சனை இல்லாம ஒரு மாசத்துக்கு முப்பதாயிரம் சம்பாதிப்பான் போல இருக்கே, நம்ம வேணா நடுவுல எதாவது படில நின்னு இத பண்ணலாம்" என்றார்.

மொட்டையடிக்க தேவஸ்தானம் வசூலிப்பது பத்து ரூபாய். மொட்டை அடித்தவர் பணியை செய்துகொண்டே என் காதில் "பொதுவா வரவங்க நூறு ரூபா தருவாங்க, பாத்து செய்யுங்க" என்றார் . விவரமாக இருபது ருபாய் மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றதால், "நான் ரொம்ப ஏழைங்க, இவ்வளோ தான் முடியும்" என்று இருபது ரூபாயை நீட்டினேன். அவ்வளவு நேரம் தமிழில் பேசியவர், தெலுங்கில் ஏதோ சொல்லியபடி அதை வாங்கிக்கொண்டார்.

நான் மொட்டையடித்து முடித்து நடந்து வருவோருக்கான சிறப்பு வரிசையில் சென்று நின்ற போது மணி பதினொன்று. ஆறு மணி நேரம் கழித்து ஐந்து மணிக்கு தரிசனம் கிடைத்தது. பெருமாளை சேவிக்க நின்ற கூட்டத்திற்கு கொஞ்சம் குறைவாக உண்டியல் கூட்டம் இருந்தது. பத்மநாப சுவாமி இவரை ஓவர்டேக் செய்துவிட்டாரே என்று பக்தர்களுக்கு வருத்தம் போலாம். உண்டியலை சுற்றி பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர். லட்டு வாங்க புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இருபது வரிசைக்கு மேல் உள்ளது இதில்.தங்கு தடையின்றி லட்டு பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வழியாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பி திருப்பதி வந்தோம். அனைவரும் கடும் பசியில் இருக்க, நண்பர் ஒருவர் இங்கே "சிந்து இன்டர்நேஷனல்" ஹோட்டல் இருக்கு, எல்லாம் கிடைக்கும், ருசியும் நல்லா இருக்கும், அங்க சாப்பிடலாம் என்றார். சரியென்று சென்றோம். எங்க கெட்ட நேரம், சப்பாத்தி, பிரைட் ரைஸ் தவிர எதுவும் இல்லை என்றார் ஹோட்டல் சிப்பந்தி. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. வேண்டுமானால் சைட் டிஷ் ஆர்டர் செய்துக்கொள்ளுங்கள் என்றார். ஒரு சப்பாத்தி மட்டும் இருபத்திநான்கு ரூபாய் என்றார். ஹோட்டலை சிபாரிசு செய்த நண்பரை சபித்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.

இந்த பதிவிற்கு ஏன் திமலா என்று பெயர் என்பதை அறிய கோகுல் எழுதிய திமலா பதிவை படியுங்கள்.