Saturday 23 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஆதங்கங்கள், பாராட்டுக்கள் ,ஐயங்கள்...

போன பதிவில் என்னுடைய சந்தேகங்கள்/கேள்விகளை கேட்ட பின்பும் சில ஆதங்கங்கள், பாராட்டுக்கள் ,ஐயங்கள் மிச்சமிருக்கின்றன .....

படத்தில் ஆரம்பத்தில் சோழர்களை பற்றி பின்னணி குரல் ஒலிக்கும்போது  சோழர்களை சோளர்கள் என்றே ஒலிக்கின்றது, இது ஒருவகையில் சரித்திர படம் , அதனால் இந்த படத்திலாவது ழ என்று ஒழிக்க கூடாதா... சூர்யா கூட "அவ எவ்வளவு அளகுன்னா அவ்வளவு அளகு" என்றே அளைகிறார்.

தமிளை சாரி தமிழை தாய்மொழியாக கொண்ட பெரும்பாலான மக்களால் (நடிகர், பின்னணி குரல் குடுப்பவர் உட்பட ) பேச முடியாத ஒரு வார்த்தை தமிழில் இருப்பது தேவையா? அல்லது அந்த அழகான வார்த்தையை பயன்படுத்த முடியாத அளவு நாம் அவ்வளவு சோம்பேறி கூட்டமா?

இந்த படத்தில் நான் ரசித்த இன்னொரு அம்சம், அந்த சோழர்கள் கூட்டத்தில் ஒரு நொடி ஆடும் அலிகளின் கூட்டம், செல்வா ராகவன் , நீங்கள் அந்த ஒரு நொடிக்காக நிச்சயம் நிறைய படித்திருப்பீர்கள் , excellent.

இந்த படத்தில் நான் ரசித்த மற்றொரு விஷயம், பார்த்திபன் மனைவியாக வரும் கதாபாத்திரம் அதற்கான நடிகை தேர்வு. அவரை ஒரு ராணியாக மிக அழகாக காண்பிக்காமல் ஒரு தமிழ்ப்பெண்ணாக காண்பித்து இருக்கிறார் செல்வராகவன். 12-ஆம் நூற்றாண்டின் பதிபக்தியை அந்த கதாபாத்திரமும் அற்புதமாக வெளிபடுத்துகிறது.

ஆனால் அந்த யதார்த்தத்தை ரீமா சென் விஷயத்தில் காண்பிக்க முடியவில்லை - அந்த பாண்டிய தேச பெண் மிகவும் வெள்ளையாக தமிழுக்கு மிக அன்னியமாக இருக்கிறார் , ஒரு வங்காளி வேறு எப்படி இருப்பார்.

இந்த நிலைக்கு காரணம், தமிழ் பெண்களா, தமிழ் ஆண்களா, தமிழகத்தில் நிலவும் ஆணாதிக்கமா (அப்படி சொல்ல முடியாது , மற்ற துறைகளில், தமிழக பெண்கள் முன்னேறிய இருக்கின்றனர்), தமிழ் பெண்களின் தாழ்வு மனப்பான்மையா, இல்லை தமிழ் ஆண்களின் பிற்போக்கான சிந்தனையா இல்லை தமிழ் ஆண்களின் வெள்ளைத்தோல் வெறியா  தெரியவில்லை.

அது எப்படி யதார்த்தம் பார்க்கும் எந்த இயக்குனரும் வேறு வழி இல்லாமல் வேற்று மாநில பெண்களை கதாநாயகியாக போடும் அவலம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. தமிழ் ஹீரோ தமிழ், தமிழன் என்று சொல்லலாம், நாங்க எல்லாம் லோக்கல் என்று பேசி முன்வரிசை, பின்வரிசை என்று எல்லா வரிசையையும் கவரலாம், ஆனால் பெண்கள் நாங்க எல்லாம் லோகல்பா என்று கருப்பாக இருக்க முடியாது, ஏனெனில் எல்லா லோகல்களுக்கும் கனவு மட்டும் சிவப்பாக இருக்கும். தமிழ் பெண்களுக்கு கனவு கருப்பாக இருக்க வேண்டும் , இல்லை என்றால் அவள் திமிர் பிடித்தவள்.

இந்த படத்தில் நான் கவனித்த மற்றொரு விஷயம் 'குதிரை', இந்த 'சரித்திர' படத்தில் சோழரிடம் 'குதிரைகள்' இல்லை. அதே போல் இறுதியில் பார்த்திபன் பார்வையில் வரும் shadowed  தீவட்டிகள் ஏந்திய மரக்கலமும் சூப்பர்.

ஒரு பேட்டியில் வைரமுத்து சொல்லி இருந்தார் , இப்போது பாடல்கள் கனமாக இல்லை , ஏனெனில் கதைக்கருவோ , கதைக்களமோ சிச்சுவோஷனோ கனமாக இருக்க வேண்டும் , அதை பொறுத்துதான் பாடல் அமையும்.

இந்த படத்தில் ஒரு பாடல்,இந்த பாடலின் situation என்ன?

சுமார் 800 ஆண்டுகளாக சோழ மண்ணை பிரிந்து வாழும் மக்களின் அவலத்தை , அந்த மக்களின் அரசன் பாடுவது.

இவ்வளவு கனமான situation கொடுத்தால்தான் , வைரமுத்து போன்ற கவிஞருக்கு

தாய் தின்ற மண்ணே , ஒரு பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்.............................

நெல்லாடிய நிலமெங்கே , சொல்லாடிய அவைஎங்கே
வில்லாடிய களமெங்கே , கல்லாடியே சிலை எங்கே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது  நாசி

சிலைவழி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும் ...


போன்ற வரிகள் வரும், வந்து இருக்கிறது.


தமிழில் வந்த முதல் சரித்திர கதை என்று பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவலை சொல்லுவார்கள் (இதை படிப்பவர்கள் தயவு செய்து சாண்டில்யனையும், கல்கியையும் எழுதியதை சரித்திர நாவல் என்று நினைத்துக்கொண்டு இருக்காதிர்கள், பிரபஞ்சனின் கதையையும் படித்து பாருங்கள்..), செல்வ ராகவன் அதே போல் தமிழின் முதல் சரித்திர கதை எடுத்த பெருமையை கொண்டிருப்பார் , ஆனால் அதை நவீன காலத்தோடு சேர்த்ததில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், எதிர்காலத்தில் அவருக்கே உரிய உக்கிரத்தோடும், உழைப்போடும் , உண்மையோடும் எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

செல்வ ராகவன் போன்ற இயக்குனர்கள் காலத்துக்கு முன்பே வந்து விட்டனரோ தெரியவில்லை, அவர் ஒரு lower middle class கதையை எடுத்தாலும் (7G), தற்கால தமிழக அரசியலின் அடிநாதமான பணப்புழக்கதிற்க்கான ரவுடி அமைப்பை பற்றி படம் எடுத்தாலும் (புதுப்பேட்டை) அவரால் மேல்பூச்சு பூசவே முடியவில்லை, கதாநாயகன் அல்லது கதாநாயகி சிறுநீர் கழிக்கின்றனர், காமத்தோடு பெண் மேல் ஆணோ, ஆண் மேல் பெண்ணோ தொடையை தூக்கி போடுகின்றனர், பயத்தில் , காமத்தில் உடல் உதறுகிறது... ஆனால் இதனை தமிழ் மக்கள் தங்கள் வழக்கமான 'குடும்பத்துடன் பார்க்கும் கலாச்சாரத்தில்' வைத்து பார்த்து நெளிகின்றனர் , அதனால் புதுபேட்டையும் பெண்கள் வராததினால் தோல்வியை தழுவியது, ஆ.ஒருவனுக்கும் பெண்கள் கூட்டம் கம்மி என்று சொல்கின்றனர்....

Tuesday 19 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - இடைவெளிக்கு பிறகு.....

முதலில் செல்வராகவனுக்கு ஒரு பாராட்டு, அவருடைய உழைப்பிற்கு. உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம்.

ஒரு விஜய் குத்து பாட்டிற்கு சோழ நாட்டின் ராணியை டான்ஸ் ஆட வைக்க வேண்டும் என்ற மாஜிக் ரியலிசம் ஒரு தமிழ் இயக்குனருக்கு தோன்றுவது உண்மையிலே ஸ்வாரஸ்யம்.

கதைக்களம், சரித்திர கதையை நவீனத்துடன் சேர்க்க எடுத்த முயற்சி என்று பிரமிக்க வைத்து இருக்கிறார்.பல விமர்சனங்கள் வைக்கலாம், பல குறைகளை சொல்லலாம் , ஆனால் தமிழில் இது ஒரு முக்கியமான படம்.

இனி கதை,

முதல் 15 நிமிடங்களை பார்க்காமல் விட்டு விட்டோமென்றால் படத்தில் என்ன நடக்கிறது என்று புரிவதற்கு வெகு நேரமாகும்.சுமார் 800 ஆண்டுகளாக உலகத்திற்கு தெரியாமல் இருக்கும் erstwhile சோழ ராஜ்ய அரச வாரிசையும் , மக்களின் வாரிசையும் தேடி போகும் ஆராய்ச்சியாளர் மற்றும் erstwhile பாண்டிய அரச வம்சத்து பெண்ணை பற்றிய கதை.

ஒரு தமிழ் படத்திற்கான பட்ஜெட்டில் முடிந்த அளவு சிறப்பாக graphics பண்ணி இருக்கிறார்கள்.

கதையை விரிவாக சொல்ல மாட்டேன், மிகச்சரியாக சொல்லவும்  முடியவில்லை. அதனால் என்னுடைய கேள்விகள் மட்டுமே இயக்குனருக்கு

ஒரு மத்திய அமைச்சரின் உறவினரும்,project leader-மான ரீமா சென்னிடமும், ஒரு archelogist-மான ஆண்ட்ரியாவிடமும் கூலியாக வரும் செல்வா கப்பலில் அவ்வளவு கூத்தடிக்க முடியுமா? என்னதான் சினிமா என்றாலும் ஒரு யதார்த்தம் இருக்க வேண்டாமா?

பாண்டிய அரச வம்சத்தை சேர்ந்தவரும்,Indian archelogy department - ஐ சேர்ந்தவருமான ரீமா சென்னிற்கு அவ்வளவு explicit நடன அசைவு தேவையா?

கப்பலில் இருக்கும் வினோத உயிரினங்கள் , பழங்குடி கிராமம், சர்ப்பம், பசி, தாகம் மற்றும் புதை குழி என ஏழு தடைகள் ஓகே.ஆனால் புதை குழி வரைக்கும் கூடவே வந்த , கார்த்தியின் ஆட்கள் எங்கே?

அந்த புதைகுழி / நிழல் (தமிழ் சினிமாவிற்கு மட்டும்) புதிது, ரசிக்க கூடியதாகவே இருக்கிறது.

எல்லோரும் சொல்கிறார்கள் இரண்டாம் பாதி போர் / ரசிக்கும்படி இல்லை என்று, ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை , தமிழ் சினிமாவின் முக்கியமான காட்சிகள் அதில் வருகிறது.

சோழ அரசனாக பார்த்திபன், கறுத்த, பெருத்த உருவம் நன்றாக பொருந்துகிறது.

இந்த படத்தில் ஒரு முக்கிய குறை, இந்த மாயாஜாலத்தை நம்புகிறதா இல்லையா என்பதை சரியாக சொல்லவில்லை. ஏழு தடைகளிலும் மாயாஜாலம் இல்லை, மனித தொழில் நுட்பம்தான் இருக்கிறது , ஆனால் ரீமா சென் சோழ தூதியாக (தூதனுக்கு எதிர்பதம்!?) மாறும்போது முதுகில் புலி வடிவம் வந்து மறைகிறது, ஒளி பரவுகிறது, எப்படி?

இதில் சரித்திரத்தில் ஆர்வம் இருக்கும் ஒருவனாக எனக்கு எரிச்சல் ஊட்டுபவை

- இதில் சோழர்களை மனித மாமிசம் சாப்பிடும் ஆட்களாக காட்டுகிறார். இது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியது, கம்ப ராமாயணம் அரங்கேறிய, இந்தியாவில் முதன் முதலாய் Navy வைத்து இருந்த, 1000 சிவாலயங்கள் எழுப்பிய, தஞ்சையில் ராஜா ராஜேஸ்வரம் என்ற மாபெரும் கோவிலை எழுப்பிய, குடவோலை என்ற ஜனநாயக முறையை கிராம நிர்வாகத்திற்கு வைத்து இருந்த ஒரு நாகரிகத்தில் இருந்து பிரிந்த மனிதர்கள் , நர மாமிசம் சாப்பிடும்படி மாறுவரா? நாகரீகம் கீழிருந்து மேல் போகும், மேலிருந்து கீழ் போகுமா? very pessimistic approach...மேலும் அந்த மக்கள் ஆதிவாசிகள் இல்லை, 12-நூற்றாண்டை சேர்ந்தவர், நாகரீகத்தில் ஆதிவாசிகளை விட மேம்பட்டவர்.

-பார்த்திபனுக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாக காண்பிக்கிறார்கள் , இவ்வளவு எதார்த்தமாக செல்வா ராகவன் சரித்திரத்தை காண்பிப்பவர், பொதுவாக மன்னனுக்கு இருக்கும் (குறைந்த பட்சம்) பத்து இருபது வாரிசுகளையாவது காண்பித்து இருக்க வேண்டும் :-) .அந்த கூட்டத்தில் இருப்பவரிலே பார்த்திபனும், குலகுருவும்தான் திரு நீறு அணிந்து இருக்கின்றனர்.

-மேலும் அந்த மக்கள் கூட்டத்தில் பார்த்திபன் தவிர வேறு யாரும் பேசவே இல்லையே ஏன்? பார்த்திபன் மட்டும் நெல், சொல் , வில், கல் என்று அருமையாக பாடுகிறார், மற்றவர்கள் ஊமையாக இருக்கின்றனர் (ஒரே ஒரு காட்சியில் ஒரு சிறுவன் கார்த்தியிடம் சுத்தமான தமிழில் பேசுகிறான்).

-இத்தனை கேள்விகள் கேட்டாலும், நான் இதை ஒரு வித்தியாசமான மாறுபட்ட subaltern history  வருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

-க்ளைமாசில் இந்திய ராணுவத்துடன் (?!) ரீமா சென் போரிடுகிறார் , எந்த உடையில்? பன்னிரெண்டாம் நூற்றாண்டின் உடையில்........., ஏன் செல்வா ராகவனுக்கு கொலை வெறி?

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் தமிழ் 50% தான் புரிகிறது, தியட்டரில் நல்ல அமைதி.

நடுவில் பார்த்திபனும் , ரீமாசென்னும் பாடுகிறார்கள் , அதில் ரீமா சென் தெலுங்கில் பாடுகிறார், சுத்தமான தமிழ் சரித்திர படத்தில் ஏன் தெலுங்கு பாட்டு? ஏனெனில் , பிற்கால சோழர்களில் பிற்பகுதியினர் (குலோத்துங்க சோழன் உட்பட) தெலுங்கு சோழர்கள், கீழை சாளுக்கியருடன் மிக பலமான திருமண உறவு வைத்து இருந்தனர், அதனால் அங்கே தெலுங்கு வரிகள் வருகிறது (சோழ இளவலான பார்த்திபன் நம்ப வேண்டுமென ரீமா சென் கதாபாத்திரத்தின் தந்திரம்) - இது நான் புரிந்து கொண்டது .. இதுவே உண்மையென நினைக்கிறேன், ஆனால் இதனை தமிழ் கூறும் நல்லுலகம் எப்படி எதிர்க்கொள்ளும் என்று தெரியவில்லை.






செல்வராகவன் கமலின் பாதையில் போகிறார், அவர் சிந்தனை ஓட்டத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு காட்சியில் வசனமில்லாமல் சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்றும் நினைக்கிறார், மேஜர் சுந்தர்ராஜன் என்றநடிகரை ஒரு வசனத்தை ஆங்கிலத்தில் சொல்லி அதையே தமிழில் சொல்ல வைத்த மாநிலம் இது, அதை புரிந்து படம் எடுத்தால் வசூல் பார்க்கலாம்.

மற்றபடி ஜி.வீ. பிரகாஷின் உழைப்பு இசையில் தெரிந்தாலும், யுவன் ஷங்கர் ராஜா இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

சோழ வம்சத்தை 21-ம் நூற்றாண்டில் கற்பனை செய்வதற்கே ஒரு 'தில்' வேண்டும் , அது செல்வராகவனுக்கு நிறையவே இருக்கிறது.

ஒருமுறை இயக்குனர் சேரன் சொன்னார் , ஒரு நல்ல படம் உங்களை தூங்க விடாது என்று .. அது உண்மைதான்.