Friday 9 January 2009

Satyam Fiasco

ஒரே வாக்கியம் தான் சொல்ல தோன்றுகிறது. கம்பெனி பேருக்கும் கம்பெனியில் நடந்ததற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. இத்தனை பெரிய மோசடியின் விளைவு என்ன?

1. உலக அரங்கில் மென்பொருள் துறையால் நமக்கு கிடைத்த பெருமைகள் கொஞ்சம் அடி வாங்கும்.

2. இனி பாலன்ஸ் ஷீட்டை நம்பி ஒரு நிறுவனத்தின் பங்கை யாரும் வாங்க மாட்டார்கள்.

3. தணிக்கை செய்யும் நிறுவனங்கள் மீது நம்பிக்கை குறையும்.

4. பங்குதாரர்கள் இருந்த போதிலும் அவர்களுடன் கலந்து எந்த முடிவும் எடுக்கப்படாததால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய நிறுவனங்களில் மூதலீடு செய்ய அஞ்சுவார்கள்.

இது போல இன்னும் பல.

அதற்குள், ராமலிங்க ராஜுவை ஏன் கைது செய்யவில்லை, அவருக்கு ராஜசேகர ரெட்டி அரசு ஆதரவு இருக்கிறதா என்று பல வதந்திகள் உலவ ஆரம்பித்து விட்டன. 53000தொழிலாளர்களை ஏமாற்றிய ஒருவர் என்ன தான் அரசு மற்றும் காவல் துறையிடமிருந்து தப்பித்தாலும் அவர் ஏமாற்றிய அப்பாவி தொழிலாளர்களின் சாபமும் அவர் தம் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கண்ணீரும் அவரை சும்மா விடுமா என்ன?

Wednesday 7 January 2009

கமல் நிகழ மறுத்த அற்புதம்.. தோன்றியவை..

வாசு,

உன்னுடைய கோபம் தெரிகிறது..ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால்..

1. கமலை சாரு தன் நெருங்கிய சகாவாகவே கருதுகிறார்.கமலை ஸஹஃருதய்ராகவே பாவிக்கிறார். கொள்கையிலும், வாழ்வியல் கொள்கைகளை தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்கும் சில பிரபலங்களில் கமழும் ஒருவர் என்பது எல்லோரும் / சாருவும் அறிந்த உண்மை. சாரு இதுவரை விஜயகாந்த் / சரத்குமார் / சத்யராஜ் போன்றவர்களை பற்றி 2 - 3 வரிகளுக்கு மேல் எழுதுவதே இல்லை. Chaaru is just ignoring them. மற்ற நடிகர்களை பற்றி சாரு கவலை படவே இல்லை.

2. சாருவின் ரசிகத்தன்மையே அக்கட்டுரையில் பிரதிபலிக்கிறது.

3. விருமாண்டி "பருத்தி வீரனின்" தோல்வி அடைந்த version என்றே சாரு கூறுகிறார். இருக்கட்டுமே , விருமாண்டி கமலின் பலப்பல அவதாரங்களில் ஒன்று. அந்த அவதாரத்தில் அவர் வெற்றி அடைய வில்லை. ஆமிர்

4. எனக்கு தெரிந்த வரை சாரு சொல்லுவது
1. "கமல் ஒரு சிறந்த நடிகர்"
2."ஆமிர் , பாலா, சுப்பிரமணியபுரம் சசிகுமார்" போன்றவர்கள் சிறந்த இயக்குனர்கள்.
3. கமல் இந்த இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும்.

மேற்கூறிய மூன்று வரிகளை சாரு ரஜினிகாந்த், விஜயகாந்த், முரளி, அஜித், விஜய் ,பிரசாந்த், அருண் பாண்டியன், j.k.ரித்தீஷ், பிரபு போன்றவர்களை நோக்கி சொல்ல முடியாது என்பதால் அவர் கமலுக்கு ' மட்டும் ' சொல்கிறார்.

Tuesday 6 January 2009

கமல்ஹாசன்-நிகழ மறுத்த அற்புதம்-ஓர் எதிர்வினை(3)

சாரு மேலும் தொடர்கிறார்:

கமல் படங்களில் கையாளப்படும் சமூகப் பிரச்சினைகள் சராசரித் தன்மையோடு இருப்பதன் மற்றொரு காரணம், கமல் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள். உதாரணமாக, தசாவதாரத்தின் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் அமிதாப் பச்சன் நடித்து உலக அளவில் பேசப்பட்டு வரும் லாஸ்ட் லியர் வெளியாகியுள்ளது. இதை இயக்கியவர் ரிதுபர்னோ கோஷ். வங்காள மாற்று சினிமாவில் ( alternate cinema) ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பெயர். அமிதாப் பச்சன் என்ற இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரிதுபர்னோ கோஷ் என்ற யாருக்குமே தெரியாத ஒரு வங்காள இளைஞனை நோக்கி ஓட வேண்டிய அவசியம் என்ன? சீரியஸ் சினிமா பற்றிய அமிதாபின் அக்கறை.

கமல்ஹாசனால் இப்படி ஒரு இளைஞனிடம் பணியாற்ற முடியுமா? பிரச்சினை என்னவென்றால், கமலுக்கு இளைஞர்களுடனும், சம காலத்தோடும் தொடர்பே அற்று விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (ஆனால் கமலின் நண்பராக இருந்த சுஜாதாவின் எழுத்து அவரது கடைசிக் காலம் வரை இளமைத் துடிப்புடனும், சமகாலத் தன்மையோடும் விளங்கியது என்பதை இங்கே நாம் ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்). ஏஸி காரில் செல்லும் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு டவுன் பஸ்ஸில் செல்லும் கொடுமை பற்றி ஏதாவது தெரியுமா? அந்த அளவுக்குக் கமலும் தனது சமகாலத்திலிருந்தும், சமகாலப் பிரச்சினைகளிலிருந்தும் அந்நியமாகி விட்டார் என்று அவரது படங்களிலிருந்து தெரிகிறது.

விருமாண்டி என்ற படத்தையும், இதே கதைக் களனைக் கொண்ட பருத்தி வீரனையும் எடுத்துக் கொள்வோம். உலக சினிமாவை அறிந்த கமல்ஹாசனின் ’ விருமாண்டி ’ ஒரு சராசரி கமர்ஷியல் படமாகவும், உலக சினிமா பற்றி எதுவுமே அறியாத அமீரின் ’ பருத்தி வீரன் ’ ஒரு கலைப் படைப்பாகவும் உருவானது எப்படி? சினிமாக்காரர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான அதிர்ஷ்டமா? இல்லை. கமல் மட்டும் அல்ல; எத்தனையோ ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த யாருமே அமீர் உருவாக்கியது போன்றதொரு கலைப் படைப்பை உருவாக்கியதில்லை என்பதுதான் நிஜம். அமீர் மட்டுமல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய பாரதிராஜாவும் கூட உலக சினிமா புத்திஜீவி அல்ல என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தனக்கு இலக்கியமும் தெரியாது என்று மற்றொரு அதிர்ச்சியையும் தருகிறார் அமீர். மறுபடியும் பாரதிராஜா கதைதான். அவரும் சமகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் அல்ல. ஆனால் கமலுக்கு ஞானக் கூத்தனிலிருந்து மனுஷ்ய புத்திரன் வரை நண்பர்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஒரு கலைப் படைப்புமே வெறும் அறிவினால் மட்டுமே உருவாகக் கூடியதல்ல. ’ அப்படியானால் வேறு என்ன தேவைப் படுகிறது? வாழ்க்கை பற்றிய கூரிய அவதானமா? ’ என்றெல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. ஏனென்றால் அது ஒவ்வொரு கலைஞனுக்கும் வேறு படுகிறது.

பருத்தி வீரனைப் போல் அல்லாமல் விருமாண்டி தோற்றுப் போனதற்கு மற்றொரு காரணம், கமலின் தன்முனைப்பு. விருமாண்டியில் மட்டும் அல்ல; கமலின் எல்லாப் படங்களிலுமே அவர் தன்னையே முன்னிறுத்திக் கொள்கிறார். அவரது படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்கள் அடிபட்டுப் போய் கமல்ஹாசன் என்ற பிரம்மாண்டமான நட்சத்திரமே நம் முன் ரூபமெடுக்கிறார். இதனாலேயே அவருடைய நோக்கம் வெற்றியடையாமல் போகிறது. ஹே ராம், ஆளவந்தான், தசாவதாரம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இதைத்தான் ஆரம்பத்தில் இமேஜ் பொறி என்று குறிப்பிட்டேன். இப்போது ரிதுபர்னோ கோஷுக்கு வருவோம். யாருக்குமே தெரியாத இந்த வங்காள இளைஞனின் இருப்பிடத்தை நோக்கி மும்பையிலிருந்து கொல்கொத்தா நோக்கிச் செல்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலக கேட்டைக் கூட ரிதுபர்னோ கோஷ் போன்ற ஒரு இளம் இயக்குனரால் தொட முடியுமா என்பது சந்தேகம்.

கமலும் அவரது சகாவான ரஜினியைப் போலவே நடிகர் என்ற இடத்திலிருந்து நட்சத்திரம் என்ற தந்த கோபுரத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். 1978- ஆம் ஆண்டு தீபாவளி அன்று ஐந்து படங்கள் வெளியாயின. அதில் அவள் அப்படித்தான், சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா? என்ற மூன்று படங்களில் கமல் ஹீரோ. ஆனால் அதே நாளில் வெளிவந்த பாலச்சந்தரின் தப்புத் தாளங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் கமல் சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளனாக வருகிறார். இதை கமல் அவரது குருநாதரான பாலச்சந்தருக்காக அப்போது செய்தார். இப்படி தனது ஹீரோ அந்தஸ்தைத் துறந்து விட்டு ஒரு நடிகனாக மட்டுமே கமல் இப்போது இதைச் செய்யத் துணிவாரா? அமிதாப் செய்கிறார்.

மேலும் ஒரு விஷயம், கமலின் குருநாதர் பாலச்சந்தர் பற்றி. நேற்று வந்த ரிதுபர்னோ கோஷ் பற்றியும், ஷ்யாம் பெனகலின் சமீபத்திய படம் வெல்கம் டு சஜ்ஜன்பூர் பற்றியும், சந்தோஷ் சிவனின் தஹான் பற்றியும் உலக சினிமா அரங்கில் விவாதிக்கிறார்கள். காரணம், இவர்கள் சினிமாவை ஒரு கலையாக வெளிப்படுத்தியவர்கள். ஆனால் பாலச்சந்தர்? தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்காவது இந்த இயக்குனர் சிகரத்தின் பெயர் தெரியுமா? பாலச்சந்தர் பற்றி 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெங்கட் சாமிநாதன் கூறினார், “பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சுதான் பாலச்சந்தர் ” என்று. இப்படிப் பட்ட ஒருவரை குருநாதராக வரித்துக் கொண்டு எங்கிருந்து சீரியஸ் சினிமாவை உருவாக்குவது?

இப்போதும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை. கமல்ஹாசன் தன்னை ஒரு நட்சத்திரம் என்பதை மறந்து விட்டு, அமீர், சசிகுமார் போன்ற இயக்குனர்களிடம் தன்னை ஒரு அறிமுக நடிகனைப் போல் முழுமையாக ஒப்படைத்தால் உலக அளவில் கவனத்தைத் திருப்பக் கூடிய கலைப் படைப்புகளை உருவாக்க முடியும்.

இறுதியாக, இவ்வளவு விமர்சனங்களையும் கமல்ஹாசன் என்பதால் மட்டுமே திறந்த மனதுடன் முன் வைத்திருக்கிறேன் ; அவரை எனது சஹ்ருதயர் என்று கருதுவதால். வேறு நடிகர் என்றால் ஒரு வார்த்தை பேசி இருக்க மாட்டேன்.

பாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. அது பணம். Drona என்று அபிஷேக் பச்சன் நடித்த படம் சமீபத்தில் வெளிவந்தது. வந்த வேகத்தில் பொட்டிக்கு போனது. படத்தின் செலவு 70 கோடி. Goldie Behl(காதலர் தினம் மற்றும் பாம்பே பட ஹம்மா ஹம்மா புகழ் சோனாலி பிந்த்ரேயின் கணவர்) தான் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். Drona படம் வெளியாகும் முன்பே மூன்று படங்களை அறிவித்தார். Drona படத்திற்கு முன் அவர் கம்பெனி ரோஸ் மூவிஸ் தயாரித்த இரண்டு படங்களும் தோல்வி. Drona படமும் தோல்வி. ஆனால் இன்னும் மூன்று படங்கள் அறிவித்துள்ளார். எங்கே இருந்து வருகிறது பணம்? தெரியவில்லை.

தசாவதாரம் ஊத்தி கொண்டு இருந்தால் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அடுத்த படம் எடுக்க இரண்டு ஆண்டுகளாவது ஆகி இருக்கும். ஆக மொத்ததில், பாலிவுட் ஹாலிவுட் போல மாறிவிட்டது. அதாவது, படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அடுத்த படத்திற்கு சென்று விடுகிறார்கள்.தமிழ் சினிமாவில் அந்த நிலை இல்லை.(ஜென்டில்மேன்,காதலன் படங்களை எடுத்த K.T.குஞ்சுமோன் இருக்கிற இடம் தெரியவில்லை)

The Last Lear படத்தை எடுத்து கொள்வோம்.இந்தியாவில் படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. அன்பே சிவமும், மகாநதியுமே ஓடாத தமிழ்நாட்டில் கமலை வைத்து The Last Lear போல ஒரு படம் எடுத்தால் தயாரிப்பாளர் நேரே திருப்பதி போய் மொட்டை தான் போடணும்.கமல் The Last Lear போன்ற படங்களில் நடித்தால் சந்தோசம் தான். ஆனால், தமிழ்நாட்டில் சாரு மாதிரி நாலு பேர் பார்ப்பார்கள். தயாரிப்பாளர் கதி என்ன?

தயாரிப்பாளருக்கு செலவு அதிகம் வைக்காமல் படம் எடுப்பவர் என்று K.S.ரவிகுமாரை கூறுவார்கள். அது மட்டும் இல்லாமல்,அவர் இயக்கிய படங்களின் வெற்றி சதர்விகிதம் ஏறக்குறைய 70%. அதாவது,10 படங்கள் இயக்கினால் அதில் 7 வெற்றி. அவரை போன்ற ஒரு இயக்குனரை வைத்து எடுத்தால் தான் தயாரிப்பாளர் நாலு காசு பார்க்க முடியும்.

இயக்குனர் பாலு மகேந்திரா உலக சினிமா பற்றி நிறையவே ஞானம் உள்ளவர் தான். அவரால் எத்தனை நல்ல படம் எடுக்க முடிந்தது? அவரை நம்பி யார் பணம் போட்டார்கள்? ஒரு கட்டத்தில் நொந்து போய் "நீங்கள் கேட்டவை" என்று ஒரு பக்கா மசாலா படம் எடுத்தார்.படம் சூப்பர்ஹிட்.

சரி, சாரு சொல்லும் அமீருக்கு வருவோம். அமீர் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். மௌனம் பேசியதே சுமாரான ஹிட், ராம் மற்றும் பருத்தி வீரன் சூப்பர்ஹிட். பருத்தி வீரன் உலகத்தரம் வாய்ந்த ஒரு கலைப்படைப்பு என்கிறார் நம் எழுத்தாளர். மௌனம் பேசியதே மற்றும் ராம் பற்றி அவர் பேசவில்லை. எனக்கு இலக்கியம், உலகத்தரம் பற்றி எல்லாம் தெரியாது அதனால் நான் பருத்தி வீரனை பற்றி சாரு கூறும் எதையும் மறுக்கவில்லை. ஆனால், பருத்தி வீரன் என்ற ஒரு படத்தை எடுத்து கொண்டு கோடம்பாக்கத்தில் அமீர் அளவுக்கு யாரும் ஒரு படைப்பை கொடுக்கவில்லை என்பது முட்டாள்தனத்தின் உச்சம். பருத்தி வீரன் கமர்ஷியலாக தமிழ்நாடு முழுவதும் வெற்றி. அதற்கு அர்த்தம் தமிழர்கள் அனைவருக்கும் உலக சினிமா தெரியும் என்பதா?

கமல் இமேஜ் பொறியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் என்பது ஏற்க முடியாத வாதம். இமேஜ் என்பது என்ன? தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி படங்கள் பண்ணுவது. ரஜினி, விஜய், சிம்பு, விஜயகாந்த் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஹே ராம், அன்பே சிவம், பேசும்படம், மகாநதி, குருதிப்புனல், ராஜபார்வை என்று ஒவ்வொரு படத்திற்கும் மாறுதல் காட்டிய ஒருவரை எப்படி இமேஜ் பொறியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் என்று கூற முடியும்?

இப்போதும் கமல் "A Wednesday" என்ற ஹிந்தி படத்தை தமிழில் செய்ய போகிறார் என்று பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நசுருதீன் ஷா மற்றும் அனுபம் கேர் இணைந்து நடித்தனர். இதில் நசுருதீன் ஷா வேடத்தில் கமலும் அனுபம் கேர் நடித்த வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றங்களை முயற்சித்து பார்ப்பதில் கமலை தவிர யாருக்கு தமிழ் சினிமாவில் ஆசை இருக்க முடியும்? ஆனால், அப்படிப்பட்ட பரிட்சையில் இறங்கும் போது படத்திற்கு பணம் போட்ட தயாரிப்பாளரையும் நினைத்து கொள்ள வேண்டும். உலகத்தரம் வாய்ந்த சினிமா எடுக்காவிட்டால் பரவாயில்லை. படம் கொடுக்கும் தோல்வியில் தயாரிப்பாளர் உலகை விட்டு போய் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Monday 5 January 2009

கமல்ஹாசன்-நிகழ மறுத்த அற்புதம்-ஓர் எதிர்வினை(2)

சாரு கமலை பற்றி கூறும் அடுத்த குறையை பார்ப்போம்.

கமல்ஹாசன் தனது முன்னோடியான சிவாஜி கணேசனின் பாதையையே பின்பற்றுவதுதான் அவரது முயற்சிகள் தோல்வியடைவதற்கான காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் கணேசனுக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம், கமலுக்கு உலக சினிமா தெரியும் என்பதுதான். இருந்தாலும், இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. காரணம், கமல் தனது உலக சினிமா அறிவைத் தமிழ் சினிமாவை செழுமைப் படுத்துவதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, நகலெடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார். உதாரணம், நாயகன் (1987) படத்தில் கமல் தலையைக் கோதும் ஸ்டைல் கூட காட்ஃபாதரில் (1972) மார்லன் ப்ராண்டோ தனது தலையைக் கோதும் மேனரிஸத்திலிருந்து அப்பட்டமாக நகல் எடுத்துக் கொண்டதுதான். நாயகனோடு முடியவில்லை இந்த நகல் சமாச்சாரம்; தேவர் மகனிலும் (1992) அது தொடர்ந்தது.

கமலின் அவ்வை சண்முகி (1996) ராபின் வில்லியம்ஸ் நடித்த Mrs. Doubtfire என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கமலின் உலக சினிமா அறிவு இப்படி நகலெடுக்க மட்டும்தான் பயன்படுகிறது என்றால், தான் வாழும் சமூக, அரசியல், கலாச்சார சூழலை அவர் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்; எவ்வாறு தனது படங்களில் கையாளுகிறார் என்று பார்த்தால் அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. குருதிப் புனலில் (1996) வரும் நகஸல் போராளி ஒரு சிறுமியைப் பாலியல் நோக்கத்துடன் பார்க்கிறான். அவனுடைய மனைவி ஒரு விபச்சாரியைப் போல் சித்தரிக்கப் படுகிறாள்.

வன்முறையைத் தங்கள் வழியாகக் கொண்டு போராடும் தீவிரவாதிகளோடு ஒருவருக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அந்தத் தீவிரவாதிக்கும் ஒரு ஜேப்படித் திருடனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? மனித வெடிகுண்டாக மாறி மக்களைக் கொல்லும் ஒரு தீவிரவாதி நிச்சயமாக ஒரு சமூக விரோதிதான். ஆனால் அவன் தான் நம்பும் ஒரு கொள்கைக்காகத்தானே தன்னையே சாகடித்துக் கொள்ளத் தயாராகிறான்? அப்படியானால் அவன் ஒரு ஐடியலிஸ்ட்தானே? இந்தப் புரிதல் இல்லாமல் ஒரு சராசரி மனிதனின் பார்வையோடு அணுகியதால்தான் குருதிப் புனலில் வரும் போராளி கேவலமான முறையில் சித்திரிக்கப் பட்டிருகிறான்.

சராசரி மனிதனின் பார்வை என்றால் என்ன என்ற சந்தேகம் எழலாம். இதோ உதாரணம்: வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியா சிறப்பாக இருந்தது; ராஜாங்கம் நன்றாக நடந்தது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும். (பாகிஸ்தானில் ஏதோ ரொம்ப அற்புதமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது போல் இவர்களுக்கு நினைப்பு!)

இப்படிப்பட்ட சராசரி மனிதனின் அணுகுமுறைதான் கமலின் பல்வேறு படங்களில் வெளிப்படுகிறது. தசாவதாரத்தில் வரும் முஸ்லீம் பாத்திரம் மற்றொரு உதாரணம்.


கமல் பிராண்டோவை நகல் எடுப்பதாக கூறுகிறார் சாரு. நாயகனுக்கு முன் பல படங்களில் நடித்தார் கமல். அவற்றை பற்றி அவர் பேசவில்லை. உதாரணமாக, வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் கமலின் நடிப்பு யாரை சார்ந்து இருந்தது? சலங்கை ஒலி, மூன்றாம்பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் இவை எல்லாம் நாயகனுக்கு முன் வந்தவை. இந்த படங்களில் கமலின் நடிப்பு பிராண்டோவை பார்த்து வந்ததா? மர்லன் பிராண்டோ இறந்த பொது கமல் rediff வலைத்தளத்திற்கு பேட்டி அளித்தார். அதில் "I am the son of Brando" என்றார். வெளிப்படையாக இப்படி சொல்லும் ஒருவர் பிராண்டோவை ஓரிரு காட்சிகளில் நகல் எடுப்பதில் என்ன தவறு?

Mrs.Doubtfire படத்தின் கருவும் அவ்வை ஷண்முகியின் கருவும் ஒன்று. Avvai Shanmugi is not a plagiarized version of Mrs.Doubtfire. அப்படி பார்த்தால் ஷோலே படம் அகிரா குரோசவாவின் seven samurai திரைப்பட தழுவல். சென்ற வருடம் தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன் திரைப்படம் இத்தாலிய படமான The Bicycle Thief படத்தின் தழுவல்.

குருதிப்புனல் Drohkaal என்ற இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக். அது தமிழில் டப் செய்ய பட்டது. சராசரி தமிழன் நக்சல் போராளியை பற்றி இப்படி எல்லாம் சிந்திப்பான் என்று கமல் நினைக்கவில்லை.மேலும்,சாருவுக்கு நக்சல் போராளியை இப்படி காட்டினால் பிடிக்காது என்பதும் கமலுக்கு தெரியவில்லை. ஐயோ பாவம், கமலுக்கு உலக சினிமா ஞானமும் சாரு அளவுக்கு இல்லை, தமிழ் சினிமா பற்றியும் சாரு அளவுக்கு தெரியவில்லை.ஒன்று செய்யலாம். மர்மயோகி வெளியாகும் போது சாருவுக்கு பிடித்த மாதிரி ஒன்றும் தமிழர்களுக்கு பிடித்த மாதிரி ஒன்றுமாக கமலை இரண்டு மர்மயோகிகள் செய்து கொடுக்க சொல்லலாம். அல்லது, கமல் சாரு அளவுக்கு வெட்டியாக இருக்கும் போது சாருவுக்கு ஒரு போன் செய்து மர்மயோகி படத்தின் கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கேட்கலாம். எப்படியோ, தமிழ் சினிமா உலக அரங்கில் பேசப்பட வேண்டும். அதை நிஜமாக்க தமிழ் எழுத்தாளர் சாருவால் தான் முடியும்.
(தொடரும்)

கமல்ஹாசன்-நிகழ மறுத்த அற்புதம்-ஓர் எதிர்வினை

தமிழ் திரையுலகில் கமலை போல் பாவப்பட்ட நடிகர் யாருமே கிடையாது. படிக்காத பாமரன் முதல் அறிவுஜீவிகள் வரை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யும் நடிகர் அவர் ஒருவர் தான். பாருங்களேன், இரண்டு நாட்களுக்கு முன் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர்(இவரை தமிழ்நாட்டில் ஒரு 50 பேருக்கு தெரிந்து இருக்கலாம்) தனது வலைமனையில் கமலை பற்றி விமர்சித்திருக்கிறார். கமல்ஹாசனை எப்படி விமர்சிக்கலாம் என்பது என் பிரச்சனை இல்லை. யார் விமர்சிப்பது என்பது தான் பிரச்சனை.

வடிவேலு ஒரு படத்தில் எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக இருப்பது போல் நடிப்பார். இருக்கிற இடத்தை விட்டு நகர கூட மாட்டார். அந்த அளவுக்கு மோசம் இல்லை ஆனால் இந்த சாரு என்ற எழுத்தாளர் நிஜ வாழ்கையில் வடிவேலு படத்தில் நடித்ததை போன்ற ஒரு பாத்திரம். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. சாரு தான் காலை முதல் மாலை வரை செய்ததை "குட்டிகதைகள்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடுவார். அப்படி வெளியிடுவதால், அவர் நண்பர்கள் அவரை தமிழ்நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர் என்பார்கள். இப்படி இருபத்திநான்கு மணி நேரமும் உழைக்கும் நமது உலக மகா எழுத்தாளர் கமலை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.


"தமிழ்நாட்டில் உருவாகும் எந்த ஒரு பிரபலமான நபரும் இந்த இமேஜ் என்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல் இருந்ததில்லை. சினிமாவை எடுத்துக் கொண்டால், சிவாஜி. (எம்ஜியார் அரசியலுக்குள் போய் விட்டதால் அவரை விட்டு விடுவோம்). சிவாஜியைத் தமிழ்நாடே நடிகர் திலகம் என்று கொண்டாடியது. ஆனால் அவருடைய பெயர் தமிழ்நாட்டு எல்லையை விட்டு வெளியே தெரியவில்லை. உண்மையிலேயே உலகின் தலைசிறந்த எந்த நடிகனோடும் ஒப்பிடும் அளவுக்கு நடிப்புத் திறமை கொண்ட கணேசன் தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே தரத்தில் மிகத் தாழ்ந்த வர்த்தக சினிமாவிலேயே தொடர்ந்து நடித்ததன் காரணமாக இன்று சாதாரண ஆட்களால் கூடப் பகடி செய்யப் படும் அளவுக்கு கேலிப் பொருள் ஆகி விட்டார். தனது கடைசிக் காலத்தில் அவர் நடித்த ’ முதல் மரியாதை ’ என்ற படம் மட்டுமே அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது என்றால் அது அவரது நீண்ட கால சினிமா அனுபவத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்!

காரணம், உலகின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராக விளங்கினாலும் சிவாஜிக்கு உலகின் தரமான சினிமா பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்காதது மட்டும் அல்ல; சினிமா மேதைகளுள் ஒருவராக உலகமே கொண்டாடும் சத்யஜித் ரேயை சிவாஜியும், எம்ஜியாரும், ராஜ் கபூரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள் என்பது வரலாறு.

சிவாஜியை அடிக்கடி பலரும் மார்லன் ப்ராண்டாவோடு ஒப்பிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்லன் ப்ராண்டோ A Street Car Named Desire (1951), Julies Ceasar (1953), On The Waterfront (1954) போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களைத் தந்து கொண்டிருந்த போது சிவாஜி எதிர் பாராதது, கூண்டுக் கிளி, தூக்குத் தூக்கி, மனோகரா போன்ற வர்த்தக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். ’ மனோகரா தமிழ் சினிமாவின் முக்கியமான படமாயிற்றே? ’ என்று சிலர் கேட்கலாம். அந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய ’ பொறுத்தது போதும் பொங்கியெழு ’ போன்ற வசனங்களும், பின்னர் அவர் முதல் மந்திரியாக ஆனதும் திராவிட இயக்க வரலாற்றில் வேண்டுமானால் முக்கியமான நிகழ்வாக இருக்கலாமே ஒழிய உலக சினிமா வரலாற்றில் இது போன்ற படங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. கவனியுங்கள். மனோகரா வெளியான ஆண்டு 1954. இதற்கு அடுத்த ஆண்டு வெளியான சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி உலக சினிமாவின் காவியங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பின்னணியை அறிந்து கொண்டால்தான் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் இடத்தையும், சினிமாவின் உலக நாயகனாக விரும்பும் அவரது ஆர்வத்தில் இருக்கக்கூடிய அசட்டுத்தனத்தையும் புரிந்து கொள்ள முடியும்."


தனது எழுத்தை 50 பேர் படித்தால் தான் தமிழ்நாட்டின் தலை சிறந்த எழுத்தாளன். ஆனால் 45ஆண்டுகள் திரையுலகில் இருந்து பல படங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலகநாயகன் என்று பெயர் எடுக்க ஆசைபட்டால் அது அசட்டுத்தனம். என்ன நியாயம் இது?

கமலை உலகநாயகன் என்று அழைக்க சொல்லி அவர் கேட்கவில்லை. மேலும், உலகநாயகன் என்று அழைக்க நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உலக நடிகர்களில் நடனம், இசை, பாட்டு, நடிப்பு என்று அனைத்திலும் திறமை உள்ளவர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் நிச்சயம் அதில் கமல் முதல் இடத்தில் இருப்பார். அதற்காக, அவரை உலகநாயகன் என்று அழைக்கலாம். உலகிலேயே நடிப்புக்காக அதிகம் விருதுகள் வாங்கியவர் என்று கமலை சொல்கிறது விக்கிபீடியா. அதற்காக அவரை உலகநாயகன் என்று அழைக்கலாம். சும்மா இருக்கும் சாருவை என்ன சொல்லி அழைப்பது?

பதேர் பாஞ்சாலி உலக காவியம் தான். ஆனால், அதே வங்காள மொழியில் பல குப்பை படங்களும் உள்ளன/வருகின்றன. அதற்காக வங்காள மக்கள் அந்த படங்களை பார்ப்பதில்லையா என்ன? மகாநதி, அன்பே சிவம் போன்றவை மசாலா இல்லாத நல்ல படங்கள் தான். அந்த படங்களை யார் பார்த்தார்கள்? அன்பே சிவம் வந்த 15 நாளில் மீண்டும் பொட்டிக்கு போனது. படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படம் நஷ்டம் அடைந்தால் சாரு வீட்டுக்கா வர முடியும்? கமலிடம் தான் போக வேண்டும். நிலைமை அப்படி இருக்க, படத்தில் மக்கள் விரும்புவதை தான் காட்ட முடியுமே தவிர சாரு விரும்பும் உலகத்தரம் எல்லாம் கிடைக்காது. மேலும், சாருவின் தரம் என்ன என்பது அவர் எழுத்தை படிப்பவர்களுக்கு தெரியும்.

சிவாஜிக்கு நற்பெயர் வாங்கி கொடுத்த படம் "முதல் மரியாதை" மட்டும் தானாம். சிவாஜிக்கு உலக சினிமா தெரியாதாம்.உலக சினிமா தெரிந்தால் தான் நடிகனாக முடியும் என்றால் சாரு போன்ற அறிவுஜீவி தான் நடிக்க வேண்டும். ஆனால் அந்த கொடுமையை யார் பார்ப்பது?

(தொடரும்)