Monday 4 July 2011

மகத்தான சந்திப்பு



ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,

அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,

வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை

நகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,

இருவருமே சகோதரிகள், Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறாக்குஞசுகளைப் போல இருந்தார்கள்,

அவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப் பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,

நடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை

எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.

அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,

வலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,

உடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,

பிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,

பெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்துப் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,

இவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்

சிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்

இருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,

வானவன் மாதேவிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு தசைச் சிதைவு நோய் அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்

.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,

வானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்
எங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,

ஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்

இந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர் என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்

அவரைத்தொடர்ந்து வல்லபி சொன்னார்

அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்

அவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி

அதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது

தனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து

நான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள், அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,

அந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது

அவர்கள்’ஆதவ் அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில் ‘ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்

மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்�
பராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவர்கள் கண்களில் மின்னுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்

நேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.

புத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,

புத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை,

,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும் நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து

வானவன் மாதேவி வல்லபி இருவரும் படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில் கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,

எல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.
தொடர்புக்கு:
ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust
கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,
எழில் நகர், போடிநாயக்கன்பட்டி,
சேலம் – 636005,
அலைபேசி : 99763 99403 .9976399409

நன்றி: www.sramakrishnan.com