Wednesday 11 January 2012

கவிஞனை தேடி..

புதியதோர் கவிஞன் செய்வோம் என்றொரு நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவது விசாலி கண்ணதாசன். திறமையுள்ள கவிஞர்களை தேடி ஊக்குவிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். அகஸ்மாத்தாக நேற்று இதை பார்க்க நேர்ந்தது. வசூல்ராஜாவில் கமல் சொல்வது போல், "வட்டி கலக்கிட்டடா காபி", மார்க்கபந்து மூணாவது சந்து" ரீதியில் கவிதைகள். செந்தமிழ்தாசன் என்றொரு ஆர்வக்கோளாறு நபர் சொன்ன கவிதையை கேட்டு மாரடைப்பே வந்துவிட்டது. "அன்று கண்ணதாசன் இன்று செந்தமிழ்தாசன் கண்டெடுத்தது விசாலி கண்ணதாசன்" என்று ஏதோ சொல்லிக்கொண்டே போனார். அரை மணி நேரம் நிகழ்ச்சியை பார்த்து நான் புரிந்து கொண்டது, தமிழ்நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை காதல் தோல்வி சந்தித்துள்ளது. கவிதை முழுதும் காதலியும் அவள் குண நலன்களும் தான்.

விசாலியோ ஒவ்வொரு வருங்கால கவிஞரிடமும், "நான் எதிர்ப்பார்ப்பது மன்மதன் அம்பு படத்தில் வரும் சாம தான பேத தண்டம் நாலும் தோத்து போகும் போது தகிடதத்தாம்" போன்ற கவிதையை என்று அதையே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கவிதைகளில் இருந்து ஒன்றை சொல்லி விளக்க முயற்சித்திருக்கலாம். கவி சொல்ல வந்த சிலரின் பெயர்கள் "கவியரசு", "செந்தமிழ்தாசன்", "இலக்குவன்","தமிழரசி". சொல்லி வைத்து போல ஆண் கவிகள் எல்லாம் தாடி, ஜிப்பா சகிதமாக ஆஜர். ஜிப்பா இல்லையென்றால் ஒரு பழைய பான்ட் சட்டை. தமிழ்நாட்டின் வளரும் கவிகள் அனைவரும் ஏழை போலும்.

நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுஜாதா "மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம்" புத்தகத்தில் தான் குமுதம் இதழின் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து நடத்திய கவிஞர் தேடும் படலத்தை நகைச்சுவையுடன் விவரிக்கும் பகுதியை நினைத்துக் கொண்டேன். சுஜாதா சொல்வது போல, "நல்ல கவிஞர்களை இது போன்ற முயற்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்க முடியாது".