Saturday 12 November 2011

கோபுலு



வெள்ளியன்று ஹிந்து நாளிதழுடன் வந்த Friday Review இணைப்பில் Art world's Famous Five என்கிற தலைப்பில் மணியன் செல்வம்(பிரபல ஓவியர் மணியனின் மகன்)சில நாட்களுக்கு முன் சென்னை தக்கர் பாபா வித்யாலயத்தில் K.மாதவன், ராஜம், சில்பி, கோபுலு மற்றும் தன தந்தை மணியன் ஆகிய ஐவரை பற்றி அவர்களின் ஓவியங்களுடன் நிகழ்த்திய பேச்சு வந்திருந்தது. அதில் கோபுலு வரைந்திருந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.

கும்பகோணம் கலைப் பள்ளியில் படித்து விட்டு வேலைக்காக சென்னை வந்த கோபாலனின் திறமையை அறிந்து கொண்ட ஆனந்த விகடன் மாலி அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவரே கோபுலு என்ற நாமத்தையும் தந்தார்.அதன் பின் தேவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரின் தலைமையில் விகடனில் பணி புரிந்தார் கோபுலு. இருபது வருடங்கள் ஆனந்த விகடனில் இருந்தார் கோபுலு.

குங்குமம்(புத்தகம்), சன் டிவி, ஸ்ரீராம் சிட்ஸ் ஆகிய நிறுவனங்களின் முத்திரை கோபுலுவின் கைவண்ணம். பக்கவாதம் வந்து வலது கை பாதிக்க பட்ட போதும் இடது கையால் ஓவியங்கள் வரைந்தார் கோபுலு.

Wednesday 9 November 2011

தாயும் மகளும்



தாயும் மகளும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வம், அப்படி இருந்தாலும் தாய் பல ஆண்டுகாலமாக காத்திருந்த ஒரு இலக்கியப்பரிசை மகள் வென்றுவிடுவது சந்தோஷமும் உள்ளார்ந்த வலியும் தரும் ஒரு நிகழ்வு, இலக்கியத்தின் விசித்திரத்தைப் போலவே இலக்கியவாதிகளின் வாழ்விலும் விசித்திரங்கள் நிறையவே இருக்கின்றன

மூன்று முறை புக்கர் பரிசிற்கான இறுதிபட்டியலில் இடம் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான அனிதா தேசாய் அந்த விருதைப்பெறவில்லை, ஆனால் அவளது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான The Inheritance of Lossற்கு புக்கர் பரிசை வென்றுவிட்டார், ஆனாலும் என்றாவது தானும் அந்த விருதை வெல்வேன் என்ற கனவோடு காத்திருக்கிறார் 75 வயதான அனிதா தேசாய்,

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மேல்தட்டு இந்திய சமூக வாழ்க்கையை தான் கதைக்களமாக்க் கொண்டிருக்கிறார்கள், முக்கியக் காரணம் அவர்கள் அதிலிருந்து உருவானவர்கள், விதிவிலக்கானவர்களும் கூட மேற்கத்திய வாசகர்களைக் கவனத்தில் கொண்டு அவியலான ஒரு இந்திய சமூகவாழ்க்கையை எழுதிப் போயிருக்கிறார்கள்,

சுவாரஸ்யம் தான் இவர்கள் எழுத்தின் ஒரே பலம், பகடி செய்வதில் ஆங்கில இந்திய நாவல்களுக்கு என்று தனிபாணியிருக்கிறது, அதில் ஒருவர் ஆர்.கே.நாராயணன்,

இன்னொரு வகை எழுத்திருக்கிறது, அது தத்துவார்த்தமாக வாழ்க்கையை ஆராய்வது, மெய்தேடல், இந்திய ஞானம் மற்றும் துறவு வாழ்க்கை, ஞானமரபின் நவீன அடையாளங்களைக் காணுவது என்று நாவலின் ஊடே மேலோட்டமான தளத்தில் தனது அறிவுத்திறனை வெளிக்காட்டுவது,

மூன்றாவது வகை தனது வேர்களைத் தேடுவது, தனது பூர்வீகம் குறித்தோ முன்னோர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே போனார்கள், என்னவானார்கள் என்று அடையாளத்தை தேடும் சுயசரிதைத் தன்மை கொண்ட எழுத்துகள்,

நான்காவது வகை சமகால இந்திய சமூக, அரசியல், பன்னாட்டுகலாச்சாரச் சூழலை ஊடுபாவாகக் கொண்டு தனிமனித எத்தனிப்புகள். காதல், கல்யாணம், மணமுறிவு, ஐடி கம்பெனி வேலை, சுற்றுபுறச் சூழல் விழிப்புணர்வு, மாற்று அரசியல், இந்திய புராணீகத்தின் மறுவாசிப்பு என்று கலந்து கட்டி அடிக்கும் ஜனரஞ்சக எழுத்து, இதன் ஒரு பிரதிநிதியே சேதன் பகத், சுவாரஸ்யமான கதை சொல்லுதலும், தெறிக்கும் கேலியும் மட்டுமே அவரது எழுத்தில் இருக்கின்றன, பெரும்பாலும் இந்தி நடிகர்களை மனதில் வைத்துக் கொண்டு ஹிந்தி சினிமாவிற்கு ஏற்ற கதாபாத்திரங்களையே தனது நாவல் எழுதுகிறார். சேத்தன் பகத்தின் மனைவி தமிழ்பெண் என்பதால் நாவல்களில் மயிலாப்பூர் கலாச்சாரத்தைக் கேலி செய்வதை சேர்த்துக் கொள்கிறார். ஐஐஎம்மில் இருந்து வெளிவந்து நாவலாசிரியர் ஆனவர் என்பதால் பல ஐஐஎம்கள் வேலையை உதறி நாவலாசிரியர்களாகி இந்திய ஆங்கில இலக்கிய உலகினை நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள், நல்லவேளை தமிழ்வாசகர்கள் ஆங்கில இந்திய நாவல்களை அதிகம் வாசிப்பதில்லை,

ஆங்கில நாவல்களுக்கு விமர்சனம் எழுதுகின்றவர்களின் பாசரங்கும் பொய்யான அறிவுஜீவி தோற்றமும் மிகுந்த எரிச்சலூட்டக்கூடியது, தான் கற்றுக்கொண்ட சகல இலக்கிய சொற்களையும். அரசியல் மற்றும் கருத்தியியல் சார்ந்த பிரயோகங்களையும் கலந்து கட்டி விமர்சனம் எழுதி எந்த ஒரு குப்பையான நாவலையும் உலகதரமானது என்பது போலக் காட்டிவிடுவார்கள், கடந்த பத்து வருசத்தில் ஆங்கில இந்திய நாவல் பற்றி ஒரு நல்ல விமர்சன கட்டுரையை கூட ஆங்கிலத்தில் நான் வாசித்ததேயில்லை, அத்தனையும் சுயபுகழ்ச்சிகள், துதிபாடுதல்கள், அல்லது வெறுப்பை கக்குபவை,

விமர்சனம் எழுதித் தருவதை தொழில்முறையாக கொண்டவர்கள் வேறு பெருகிவிட்டார்கள், அவர்களுக்கு பணம் மற்றும் குடிவிருந்து தாராளமாகக் கொடுத்தால் நாவலைப்பாராட்டி தங்களுக்கு தொடர்பில் உள்ள இதழ்களில் அரைப்பக்க விமர்சனம் எழுதுவார்கள், பெரும்பான்மை ஞாயிறு இணைப்பு இலக்கிய கட்டுரைகளின் தரம் இவ்வளவே,

அனிதா தேசாய் இதிலிருந்து சற்று மாறுபட்டவர், இந்தியாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் வாழ்பவர், இந்தியாவில் என் எழுத்திற்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்னை குறைவாகவே வாசித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார், அவரது எழுத்து உயர்தட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் பேசிய போதும் நுட்பமாக புனைவின் சாத்தியங்களை எழுத்தில் உருவாக்கி காட்டியிருக்கின்றன

இவரது மலைமேல் நெருப்பு நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் அசோகமித்ரன், இந்த நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது, ஆங்கில இந்திய நாவல்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்று,

அனிதா தேசாய் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படவில்லை, சா.தேவதாஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், கிரண்தேசாய் விருது பெற்ற போது அதை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்தன, ஆனால் அவளது நாவலை விட பன்மடங்கு சிறப்பானது அனிதா தேசாயின் நாவல்கள், அவற்றை இன்றைய தலைமுறை கவனம் கொள்ளவேயில்லை,

அனிதா தேசாயிடம் இருப்பது ஒரிஜினலான கதை சொல்லும் தன்மை, சுயமான தேடல், கிரண்தேசாயிடம் இருப்பது இரவல் சரக்கு, அவர் கதையைச் செய்கிறார், இந்தியாவைப்பற்றி எழுதும் போது என்னவெல்லாம் கதைக்குள் போடவேண்டும் பட்டியலை தயார் செய்து கொண்டு கதையை உருவாக்குகிறார்

அனிதா தேசாயிடம் இருந்த நிசப்தமும் உள்ளார்ந்த தனிமையின் விகசிப்பும் கவித்துவமும் புனைவின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்ற தவிப்பும் அவரிடமில்லை,

தாயும் மகளும் தங்களது படைப்புகளைப் பற்றி விவாதித்துக் கொள்வதேயில்லை என்று ஒரு நேர்காணலில் கிரண்தேசாய் குறிப்பிடுகிறார்

சிறுவயதில் அம்மாவிற்கு என்று தனியே ஒரு அகஉலகம் இருந்தது என்று தனக்குத் தெரியும், ஆனால் அந்த எழுத்தின் வலிமை எனக்கு தெரியாது, அம்மா தனது படைப்புகள் குறித்து வீட்டில் விவாதிப்பதில்லை, அதை தனது ரகசியமாக தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்தார், நானும் ஒரு நாவலை எழுதும்போது அதைப்பற்றி அம்மாவிடம் விவாதிப்பதில்லை, அம்மா எனது நாவல்கள் பற்றி கருத்துச் சொல்வதுமில்லை என்றும் அந்த நேர்காணலில் கிரண் தேசாய் சொல்கிறார்

அனிதா தேசாய் நுட்பமான வாசகரும் கூட, அவருக்கு தனது மகளின் எழுத்து எப்படிப்பட்டது என்று நன்றாக தெரிந்திருக்கும் தானே, இது தான் நெருக்கடியின் உச்சகட்டம், பதில்சொல்லாமல் தனக்குள்ளாகவே ஒடுங்கிக் கொண்டுவிட்டார் அனிதா தேசாய்.

அனிதா தேசாயின் நாவல் Journey to Ithaca மாறுபட்ட ஒரு நாவல், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம்மும் அன்னையின் வாழ்வும் இதன் கதைக்களத்தில் ஒன்றாக உள்ளது, இதாகா நகரத்தைத் தேடி வருபவர்களுக்கு அந்நகரம் எதையும் தருவதில்லை, தொலைதூரங்களில் இருந்து அந்த நகரத்திற்கு பயணம் செய்து வரும் பயணஅனுபவமே நகரம் தரும் மிகப்பெரிய பரிசு என்பார்கள், அந்த மனநிலையைப் பிரதானமாக கொண்டு அனிதா தேசாய் நாவலை எழுதியிருக்கிறார்,

எனக்கு இந்திய பெண் எழுத்தாளர்களில் மிகவும் பிடித்தவர் நால்வர், ஒன்று குர்அதுல் ஐன் ஹைதர்(Qurratulain Hyder), உருதுமொழி நாவல் எழுதியவர், இவரது புகழ்பெற்ற நாவல் அக்னிநதி, மற்றவர் இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai ) இவரது சிறுகதைகள் அற்புதமானவை, இவரும் உருது எழுத்தாளரே, மகேஸ்வதா தேவி (Mahasweta Devi) வங்காள நாவலாசிரியர், இவரது நாவல்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கான போராட்டச் செயல்பாடுகள் முக்கியமானவை, மற்றவர் கமலா தாஸ், மாதவிக்குட்டி என்ற பெயரில் கதைகள் எழுதியவர், கேரளாவைச் சேர்ந்தவர், முக்கிய கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர், இந்த நால்வருமே அசலான மொழியையும் தனக்கான தனி அகவுலகையும் வெளிப்பாட்டு திறனையும் கொண்ருந்தவர்கள், முன்னோடி சாதனையாளர்கள்,

ஒளிரும் நியான் விளக்குகளின் பகட்டான வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்டுகொள்ளாமல் போய்விடும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆகவே அசலான படைப்புகள் கண்டுகொள்ளப்படாமலே தான் போகும்.

ஆனால் எங்கோ ஒரு மூலையில் எவரோ ஒருவர் தனிமையோடு வானத்து நட்சத்திரத்தைப் பார்த்து வியந்தபடியே தானிருப்பார் என்ற உண்மை தான் பலரையும் தொடர்ந்து எழுத
வைத்துக் கொண்டிருக்கிறது.

Source: www.sramakrishnan.com

Sunday 6 November 2011

முதல்வருக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு முதல்வர் அவர்களே,

சில மாதங்களுக்கு முன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது "ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சி பெற இயலாது. ஐந்தாண்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற இன்னொரு ஐந்தாண்டுகள் தேவை. கடன் சுமையில் இருந்த தமிழகத்தை நான் 2001 ஆம் ஆண்டு ஆட்சி ஏற்ற பின் செப்பனிட்டு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், ஆம் ஆண்டு 2006 ஆட்சி மாறியதால் மீண்டும் தமிழகம் பின் தங்கி விட்டது" என்றீர்கள்.

சரி, அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் அறிவிக்கும் திட்டங்கள் அல்லது எடுக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று மீண்டும் மீண்டும் திராவிட கழகங்களுக்கே ஓட்டளிக்கும் மாங்காய் மடையனான குடிமகன் எனக்கு புரியவில்லை. வடிவேலு ஒரு படத்தில் சூப்பர் சுப்பு என்று பெயரில் அரசியல்வாதியாக வருவார். தமிழகத்திற்கு ஏன் மத்திய அரசின் நிதி மற்றும் மற்ற நன்மை தரும் திட்டங்கள் கிடைப்பதில்லை என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு, "தமிழகம் இந்தியாவின் அடிப்பகுதியில் உள்ளது. அதை அப்படியே தூக்கி டெல்லி அருகே வைத்து விட்டால் நமக்கு எல்லா நன்மையையும் கிடைக்கும்" என்பார்.

அந்த காட்சிக்கு சற்றும் குறைவில்லாமல் ஹாஸ்யம் உள்ளது உங்கள் திட்டங்களில். விழி பிதுங்கும் பிரச்சனைகள் பல இருக்க, அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு. இதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? ஆசியாவின் பெரிய மருத்துவமனை என்று அழைக்கப்படும் ஜி.ஹெச் எந்த நிலையில் உள்ளது என்று நமக்கு தெரியாதா? அங்கு சென்று வைத்தியம் பெற்றுக்கொள்ளும் தைரியம் உங்களுக்கு உள்ளதா? மக்கள் மக்கள் என்று உருகும் நீங்கள் ஒரு முறை நேரம் கிடைத்தால் யாருக்கும் சொல்லாமல், யாரையும் அழைத்துச் செல்லாமல் ஜி.ஹெச்சின் மூலை முடுக்குக்கெல்லாம் சென்று பாருங்கள். மக்கள் வாழும் நிலை என்று நன்றாகவே புரியும். இப்போது நீங்கள் அறிவித்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனை அதே நிலையை தான் அடையும். ஏற்கனவே எழும்பூரில் உள்ள தாய்-சேய் நல அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் உட்பட சகல அலங்கோலங்களுக்கும் அரங்கேறுவது நான் அனைவரும் அறிந்ததே.

ஆட்சியேற்ற ஆறு மாதத்தில் ஆறு அமைச்சர்கள் மாற்றம். என்ன அவசியம் ஏற்பட்டது இந்த மாற்றம் கொண்டு வர? எப்போது தனக்கு வேலை போகும் என்ற நினைப்பிலேயே இருக்கும் ஒரு அமைச்சர் தன் வசம் உள்ள துறையின் நிர்வாகத்தை எப்படி சிறப்புடன் செய்ய முடியும்? அப்படி ஒருவர் தகுதியானவர் இல்லை எனில் ஏன் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது?

தி.மு.க அரசின் திட்டங்களை ஒழிப்பதும், தி.மு.கவினரை சிறையில் அடைப்பதும் மட்டுமே இந்த ஆறு மாதங்களில் அரசின் சாதனையாக மக்களாகிய எங்கள் கண்களில் தெரிகிறது. ஒரு வேளை வேறு எதாவது நல்ல திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மேலே சொன்ன தி.மு.க விஷயம் அதை மழுங்கடித்துவிட்டது. சென்ற ஆட்சியில் தவறுகள் இருந்தாலும் அதை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவதுடன் இந்த அரசின் கடமை நிறைவு பெறுகிறது. முழு நேரமும் யாரை கைது செய்யலாம், யார் வீட்டில் சோதனை போடலாம் என்று யோசிப்பதால் என்ன பயன்?

கோடிக்கணக்கில் செலவழித்து மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். பெய்து வரும் மழையின் விளைவாக காலரா, வாந்தி, பேதி என்று நோய்கள் வரிசை கட்ட ஆரம்பிக்குமே, அதை கையாள தமிழக மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா என்று உங்கள் சுகாதாரத் துறை அமைச்சரை கேட்டீர்களா? அது சரி, சுகாதாரத் துறை அமைச்சர் யார்?

நீங்கள் தினமும் செல்லும் போயஸ் கார்டன் - தலைமை செயலகம் சாலையை தவிர சென்னை நகரின் மற்ற சாலைகளில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பை பெற்றீர்களா? ஒரு முறை பெரும்பாக்கம் ஆரம்பித்து போயஸ் கார்டன் சென்று பாருங்கள். ஆஹா, என்ன ஒரு அனுபவம் அது? தினம் ரூபாய் 35 சுங்கச்சாவடியில் செலுத்தி அந்த சாலையை பயன்படுத்தும் எங்களை போன்றவர்கள் பாக்கியசாலிகள்.

பெருகி வரும் சென்னை மற்றும் தமிழக போக்குவரத்து நெரிசலை சமாளிக்க என்ன செய்வதாக உத்தேசம்? இன்று எதாவது திட்டம் போட்டால் தான் ஐந்து வருடத்திற்கு பின் அந்த நெரிசலை சமாளிக்க இயலும். சென்னை சுற்றுப்புறங்களில் உங்கள் அல்லக்கைகள் செய்யும் அட்டூழியங்கள் தெரியுமா உங்களுக்கு? தெருவோர வியாபாரிகளிடம் உங்கள் பேரை சொல்லி வசூல் வேட்டை, உங்கள் கட்சிக்கொடியை காரில் மாட்டிக்கொண்டு சுங்கச்சாவடியில் வரி செலுத்தாமல் செல்வது, கவுன்சிலர் போன்ற கட்சியின் கடைநிலை ஆட்கள் ஆடு, மாடுகளை சாலைகளில் அலைய விட்டு போக்குவரத்தை பாதிப்பது, இதை தட்டிக் கேட்பவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது என்று பல.

வெளிநாட்டினர் தினம் வந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட ஓவர்ப்ரிட்ஜ் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதை இடித்துவிட்டு உபயோகப்படும் வகையில் ஒன்றை உருவாக்கலாம். அண்ணா நூலகத்தை மூடும் அக்கறையில் ஒரு பத்து சதர்விகிதம் இதற்கெல்லாம் செலவழித்தால் நன்றாக இருக்கும்.

மக்கள் அன்றாடும் சந்திக்கும் பிரச்சனைகள் பல உள்ளன. அவை உங்கள் கவனத்திற்கு வர நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மக்களை காப்பேன் என்று சூளுரைப்பது எந்தப் பயனும் தராது.

இப்படிக்கு,
தமிழகம் என்றாவது வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நம்பும் ஒரு சராசரி குடிமகன்