Thursday 22 March 2012

பாரதியின் முரசு கவிதை - சில வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்

வேதமறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாயக்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சிலமூடர் நல்ல மாதரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை; அவை பேருக்கொரு நிறமாகும்

சம்பால் நிறமொரு குட்டி; கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி; வெள்ளை பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவையாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும் சொல்லலாமோ?