Thursday 10 February 2011

வலைமனை பற்றி பாலகுமாரன்

சமீபத்தில் பாலகுமாரனின் "புருஷவதம்" நாவலை பல்சுவை நாவலில் படித்தேன். நாவலுக்கு முன்பு ஒரு கேள்வி பதில் பகுதி இருந்தது , அதில் ஒரு கேள்வி "நீங்கள் ஏன் இணைய தளத்தில் பேசுவதில்லை?". இதற்கான பதிலின் சுருக்கம் இதோ,

1. கணினியை இயக்கும் பொறுமை எனக்கில்லை. இணையதளத்தில் / வலைபின்னலில் போய் பின்னூட்டம் இடுவது ஒரு போதை.
2. இணையத்தில் ஆத்திரமூட்டுவதர்கென்றே பல கிறுக்குத்தனமான மனிதர்கள் இருக்கிறார்கள் , அந்த ஆத்திரமூட்டலில் சிக்கி கொண்டால் பதிலுக்கு ஆத்திரப்பட்டு அந்த வலைப்பின்னல் முழுவதும் நாறடிப்போம்.
3. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள் என்று ஒதுங்கி விட்டால் இந்த வலைபின்னல் சண்டைகள் வராது.
4.எனது புத்தகத்தை வாசகர்கள் நிச்சயம் தேடி படிப்பார்கள், அப்படி படிப்பவர்கள் ஐந்து அல்லது பத்து சதவீதம் நேரே பார்க்கும்போது பாராட்டுவார்கள் , அது போதுமானது.
5.விலாசம் தெரிந்து பாராட்டுபவர் வீட்டிற்கு போக வேண்டியதில்லை.
6.எதிரே நின்று வாசகர் பாராட்டுகின்ற போதே அந்த பாரட்டுதலில் இருந்து விலகி அவரை பார்த்து கொண்டு இருப்பது சுகமானது.
7.ஒரு புதினத்தை எழுதும்போதே இது இன்னவிதமான வாசகரை தொடும் என்று நான் அறிவேன்.
8.வலைபின்னலில் பாராட்டை எதிர்பார்த்து போகிற மனப்பான்மை அதிகம் ஏற்படுகிறது.
9. எனவே வலையும் வேண்டாம் பின்னலும் வேண்டாம்.

இதுதான் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் கூற்று.

நான் எதையும் கூட்டவோ குறைக்கவோ இல்லை.

இதில் என்ன பிரச்சனை என்றால் அந்த பதில் முழுவதும் நான் எதிர்பார்த்த வார்த்தை வரவே இல்லை அந்த வார்த்தை "விமர்சனம்". ஆம் , விமர்சனம் என்ற வார்த்தையே வரவில்லை. எழுத்து சித்தர் எதிர்பார்ப்பது ஒன்றேதான் , அது பாராட்டு ,

அது வலைமைனையில் இல்லையென்றால் அது மிகவும் "ஆத்திரமூட்டும்" மக்களின் கூட்டம்.

பின்னூட்டத்தில் ஆத்திரமூட்டும் வாசகங்கள் வரும்.. இல்லையென்று எவரும் சொல்ல முடியாது . ஆனால் அவரின் மற்ற வார்த்தைகளும், அவரின் புதினங்களும் ஆச்சர்யமூட்டும் வகையில் வேறுபடுகின்றது.

பாலா சொல்கிறார் "எதிரே நின்று வாசகர் பாராட்டுகின்ற போதே அந்த பாரட்டுதலில் இருந்து விலகி அவரை பார்த்து கொண்டு இருப்பது சுகமானது.", இது விமர்சனத்திற்கு (ஆத்திரமூட்டும் பின்னூட்டுங்களுக்கு) பொருந்தாதா? சாதாரண மனிதருக்கு வேண்டுமானால் பொருந்தாமல் இருக்கலாம் , ஆனால் சித்தருக்குமா?

கனிவு நிறைந்த பார்வையோடு  புகைப்படங்கள் , ஒரு துறவிக்குரிய தோற்றம், "நான் தெளிவடைந்து விட்டேன்" என்ற முழக்கம். பாராட்டும் மனிதரை தள்ளி நின்று பார்க்கும் 'பக்குவம்'.எல்லாம் இருந்தும் விமர்சனம் என்ற வார்த்தையே அவரின் வாயில் இருந்து வராதது துரதிர்ஷ்டமே.இத்தனைக்கும் அந்த புதினம் முழுவதும் அவர் அலசி இருப்பது மனம், கர்வம், மனோசக்தி , அகந்தை போன்றவற்றை.

புருஷவதம் நாவலின் இரண்டாம் பாகத்திலும் இப்படி ஒரு கேள்வி பதில் ,

கேள்வி: நீங்கள் ஏன் இலக்கிய கூட்டம் எங்கள் ஊரில் நடத்த கூடாது?

இதற்கான பதிலின் சுருக்கம்:

(i) ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காருவதற்கு எனக்கு பிடிக்கவில்லை.
(ii) மேலும் இலக்கிய கூட்டங்கள் எல்லாம் வெறுமே பரஸ்பரம் புகழுகின்ற விஷயமாகவே இருக்கின்றன(!!?)
(iii) எதிர்பாராது எங்கேனும் வாசகரை சந்திக்கும்போது அவர்கள் சொல்லும் பாராட்டு போதுமானது.

பாராட்டு, பாராட்டு,பாராட்டு, பாராட்டு,பாராட்டு, பாராட்டு,பாராட்டு, பாராட்டு .................

இணையத்தில் ஆயிரமாயிரம் விமர்சனங்களை பார்க்கும் சாரு, ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரை நினைத்து கொண்டேன்.....