Thursday 29 July 2010

நெகிழ்ச்சி

இன்று காலை பிரீமொண்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் ரயிலில் பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர் படித்துக் கொண்டிருந்தது "அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன்".சில வரிகள் படித்தார். புன்னகைத்தார். ஜன்னல் வழியே இயற்கை அழகை பார்த்தார். மீண்டும் சில வரிகளை படித்து ரசித்தார். தன் காதலி/மனைவி பற்றி நினைத்தாரோ என்று எண்ணினேன்.பேச நினைத்தேன் ஆனால் பேசவில்லை.அவர் செய்கையை ரசித்தபடி பயணித்தேன்.பதினைந்தாயிரம் மயிலுக்கு அப்பால் படிக்கும் போது தமிழ் கொடுக்கும் கிறக்கம் தனி தான். அதை சொற்களில் அடைப்பது கடினம்.

Sunday 25 July 2010

Inception

இங்குள்ள IMAX திரையரங்கில் இன்று இந்த படத்தை பார்த்தேன். பத்து வருடமாக இந்த கதையை மனதில் வைத்திருந்தாராம் இயக்குனர் Christopher Nolan. Gravity, Infinity, Psychology இவையெல்லாம் என்னவென்று தெரிந்தால் தான் படம் கொஞ்சமாவது புரியும். படம் முழுதும் nested for loop பற்றிய நினைவு எழுந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. கனவுக்குள் ஒரு கனவு, அதற்குள் இன்னொன்று என்று செல்கிறது படம். எது நிஜம், எது கனவு என்றே தெரியவில்லை.

வரும் வழியில் நண்பர் ஒருவர்(வழக்கமான தாழ்வு மனப்பான்மையில்)இது போன்ற படங்கள் ஏன் இந்தியாவில் வருவதில்லை என்றார்? எனக்கென்னவோ அந்த யோசனையே அபத்தமாக இருந்தது. இந்த படம் எல்லாம் புரிகிற அளவுக்கு அமெரிக்க பார்வையாளர்கள் புத்திசாலிகளா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. இந்தியாவில் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டிய மனிதர் அய்யா அப்துல் கலாம் அவர்கள். அவர் தானே நம்மை எல்லாம் நிறைய கனவு காணுங்கள் என்று சொன்னார்.