ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல இசையமைப்பாளரா? ஆஸ்கார் அவருக்கு கொடுத்தது சரியா என்று அமெரிக்க மக்கள் கூட கவலைப்படவில்லை ஆனால் வலைமனைகளில் அவரையும் அவரது இசையையும் விமர்சித்து நமது மக்கள் எழுதுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக நமக்குள் இருக்கும் பிரிவினை கலாச்சாரம் அதிர்ச்சியளிக்கிறது. பல வலைமனைகளில் வட இந்தியர்கள் O.P.Nayyar, R.D.Burman போன்றவர்களின் கால் தூசு பெறமாட்டார் ரஹ்மான் என்றும் அவர் இசையில் சத்தமே மேலோங்கி இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழர்கள் மிகவும் கீழ்த்தரமான முறையில் பதிலளித்துள்ளனர்.
எனது கேள்வி ஒன்று தான். இசையை பற்றி சுமாரான அறிவு கூட இல்லாத நாமெல்லாம் இதை பற்றி எப்படி பேச முடியும்? இதை பற்றி மட்டும் அல்ல பெரும்பாலான விஷயங்களில் நாம் தெரிவிக்கும் கருத்து அந்த விஷயத்தை பற்றி முழுதும் தெரியாமல் கூறப்படுவது. உதாரணமாக, பக்கத்துக்கு வீட்டுக்காரர் நெஞ்சு லேசாக வலிக்கிறது என்று சொன்னால் உடனே அவருக்கு இதய அறுவை சிகிச்சை பற்றி ஒரு பாடம் நடத்துகிறோம். அவருக்கு வந்தது வாயு பிரச்சனையாக இருக்கலாம் ஆனால் நமக்கு அதை பற்றி எல்லாம் நமக்கு கவலையில்லை. நமக்கு தோன்றுவதை அவர் மேல் திணித்து விட வேண்டும்.
அதோடு அவரை விட்டோமா? இல்லை. அவர் இன்சூரன்ஸ் செய்திருக்கிறாரா, எந்த கம்பெனியின் இன்சூரன்ஸ், அது நல்லதா/கெட்டதா என்று அவர் கேட்காமலேயே அவருக்கு அட்வைஸ் செய்கிறோம். அதையும் மீறி அவர் எனக்கு எதுக்கு சார் இதை எல்லாம் சொல்றீங்க என்றால், "உங்க மேல ஒரு அக்கறை தான் சார்" என்போம். உண்மையில் நமக்கு அக்கறை எல்லாம் இல்லை. வடிவேலு பாஷையில் சொன்னால் "அவர் நொந்து நூலாவதை பார்ப்பதில் நமக்கு ஒரு கிளுகிளுப்பு".
எனக்கு தெரிந்து இந்தியர்கள் அதிகம் கருத்து சொல்லாமல் மௌனம் சாதிப்பது இரண்டு விஷயத்தில் தான். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் எதாவது சாதனை செய்ததாக செய்தி வெளியிட்டால் பேசாமல் இருக்கிறோம். ஏனென்றால் நமக்கு அதை பற்றி எதுவும் தெரியாது. இரண்டாவது பாலியல் சமாசாரங்களில். இதற்கு காரணம் நமக்கு சமுகத்தின் மீதுள்ள பயம். இதைத் தவிர காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஒசாமா முதல் ஒபாமா வரை நமக்கு கருத்து சொல்வது என்றால் அவ்வளவு ஆசை.