Sunday, 30 October 2011

நண்பன்


நண்பர் ஒருவர் மேலே உள்ள புகைப்படத்தை முகநூலில்(Facebook) கொடுத்து இதை பற்றி எதாவது பதிவு எழுதும் எண்ணம் உள்ளதா என்று கேட்டிருந்தார். அவருக்காக இது.

புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றுவது, "இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தான் என்று ஸ்ரீகாந்தும், ஜீவாவும் கை காட்டுவது போலவும், இல்லை இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று விஜய் சொல்வது போலவும் உள்ளது". கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுக்கிறார்கள். அதன் வெற்றி, தோல்வியை பற்றி நாம் பேசத்
தேவையில்லை இருந்தாலும் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு இந்தியத் திரைப்படம் என்பதால் அதை தமிழில் எடுக்கும் போது மூலப் படத்தின் Originality பாழாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

வெற்றிக்கு முக்கியக் காரணம் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அபிஜத் ஜோஷியுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்தவரும் அவரே. பொதுவாக படத்தொகுப்பாளருக்கு இயக்குனரின் பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 3 Idiots படத்தை பொறுத்தவரை அதன் தொகுப்பாளரும் ராஜ்குமார் ஹிரானி தான். இயக்குனரே படத்தை எடிட் செய்வது காட்சிகளுக்கு வலு கொடுக்கிறது. Rashomon, Seven Samurai போன்ற படங்களை இயக்கிய உலக புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனரான அகிரா குரோசவா தன் படத்தொகுப்பாளருடன் பல நாட்கள் படதொகுப்பறையில் நேரத்தை செலவிடுவார் என்று படித்திருக்கிறேன்.

ஷங்கர் கைதேர்ந்த இயக்குனர். அவர் கலையில் நமக்கு சந்தேகம் இல்லை. இருந்தாலும் அமீர் கானால் அமரத்துவம் பெற்ற ராஞ்சோ பாத்திரத்தை விஜய் செய்கிறார் எனும் போது விஜய்யின் பழைய படங்களை பார்த்தவர்கள் என்கிற முறையில் நம்மை பீதி பற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை. சாத்தூர்(Chattur) வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று படித்த போது அதே பீதி பன்மடங்கு அதிகமாக தொற்றிக்கொண்டது. ஓமி வைத்யா என்ற நடிகர் அந்த பாத்திரத்தை மூலப் படத்தில் செய்திருந்தார். இயக்குனரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரம்.

ராஞ்சோ மிஷின்கள்(Machines) பற்றி தன் பேராசிரியருக்கு விளக்கும் காட்சி, படிப்பது எப்படி என்று ராஞ்சோ கல்லூரி முதல்வரான போமன் இரானிக்கும் சக மாணவர்களுக்கும் அளிக்கும் விளக்கம், வயிறு புண்ணாக சாத்தூர்(Chattur) சிரிக்க வைக்கும் பலாத்கார் காட்சி போன்றவற்றை ஷங்கர் தமிழில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். தமிழில் கல்லூரி வாழ்வை மையமாக கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும்(தலைவாசல், நம்மவர், காதல் தேசம் ஆகியவை சில உதாரணங்கள்) அவற்றில் காதல், வன்முறை போன்றவையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. 3 Idiots முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கல்லூரிகளையும் நம் கல்வி முறையையும் சாடியது. நம்மில் பலர் மனதில் நினைப்பதை திரையில் காட்டியதே அதன் அமோக வெற்றிக்கு காரணம். இளைய தளபதி குறித்த பயம் இருந்தாலும் நானும் நண்பனுக்காக காத்திருக்கிறேன்.

Thursday, 27 October 2011

தி.ஜானகிராமன்

தி.ஜா அல்லது தி.ஜா.ரா எனப்படும் தி.ஜானகிராமன்  1921-இல் பிறந்தவர் , பிறந்தது பழைய தஞ்சை மாவட்ட தேவங்குடி.தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.சுமார் 10 நாவல்கள் பல சிறுகதை தொகுப்புகள் மேடை நாடகங்கள் பயண நூல்கள் என ஒரு வட்டம். இதற்கு மேலும் அவர் படைப்புகளை பற்றி அறிமுகபடுத்துமளவிற்கு எனக்கு படிப்பில்லை.

பயண நூல்களை தவிர்த்து மிகப்பெரும்பாலான கதைகள்,தமிழ்நாட்டு காவிரிக்கரை (உலராத காவிரி),பிராமண சமூகம்,ஒரு 'புருவம் உயர்த்தும்' உறவு முறை என சுற்றி வருபவை.ஆனால் இங்கே நான் சொல்லபோவது அவரின் எழுத்து நடை.

நான் படித்த புனைக்கதைகள் , நான் ரசித்த கதைகள் பல மிச்சங்களை  விட்டு செல்லும்.  சில சமயம் பிரமிப்புக்களை (விஷ்ணுபுரம் போல) , சில சமயம் ஆச்சர்யங்களை, திகைப்பை (ஜீரோ டிகிரி போல) சில சமயங்கள் சில படிப்பினைகளை (வெகு சில பாலகுமாரன் நாவல்கள் போல),பரவசத்தை (சில சுஜாதா நாவல் / கட்டுரை போல) ஆனால் தி.ஜா.வை படிக்கும்போது வருவது ஆசுவாசம்,இதுதான் சரியான சொல் என்று நினைக்கிறேன், மூச்சு திணறி தண்ணீரில் எழுந்தால் வரும் ஆசுவாசம் போல.

தி.ஜாவின் கதைகளை படிக்கும்போது  நீங்கள் தமிழை நேசித்தால்,பேரரசு படங்களை ரசிக்காதவராக இருந்தால்,அநாவசிய political correctness பார்க்காதவராக இருந்தால்  உங்களுக்கு நிச்சயம் இவர் காட்டும் வாழ்க்கை பிடிக்கும்.

இவரின் எழுத்து நடையை ஒரு வார்த்தையை வைத்து சொல்வதாக இருந்தால்,இவர் மொழியிலேயே சொல்லலாம் "நறுவிசு", நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மிக மிக எளிய விஷயங்களையே கூர்ந்து கவனிக்கும் அழகுனர்ச்சியே இவரது பெரும் பலம். வீடுகளை,மனிதர்களை, உடைகளை, உணவுகளை, உறவுகளை, மரங்களை, செடிகளை, வீதிகளை, காலங்களை, வானை, பூமியை ,வாசனையை , பெண்ணை, ஆணை, குழந்தையை , குழந்தைதனத்தை, பணத்தை, பாரம்பரியத்தை, ரயிலை, பூவை, காயை ,கனியை, பசுமையை, வளமையை, மேட்டிமைதனத்தை, பக்தியை, மேன்மையை, பாலுணர்ச்சியை, கை கால் போன்ற உடல் உறுப்புக்களை, பெண்மையை , ஆண்மையை இவர் விவரிக்கும் விதமே இவரது பலம். கார்மே (Gourmet) என்று சொல்லலாமா? இல்லை sensualist என்று சொல்லலாம்!

ஒரு உதாரணம் பாருங்களேன், அவர் ஒரு தஞ்சை கிராமத்தின் ஒரு வசதியான வீட்டை விவரிக்கிறார்,

"வீட்டில் ஒரு குளிர்ச்சி. வெளியே வெள்ளையாய் காய்கறி வெயிலின் வெப்பமே படாத ஒரு குளிர்ச்சி. வழவழவென்று கூடம் தாவாரம் எல்லாம் சிவப்பு சிமிண்டு. கூடத்தையும், தாழ்வாரத்தையும் பிரிக்கிற கூடத்தில் நான்கு தேக்கு தூண்கள். கூடத்துக்கு மேல் ஓட்டு போட்டு இருந்தது. மாடி.அங்கு அறைகள் இருப்பது போலிருந்தது. இடைகழி நிலைக்கு இந்த பக்கம் மாடிப்படி. மாடியும் பிறகு சார்ப்பும் இருந்ததால் முற்றம் அகலமின்றி குறுகியிருந்தது. முற்றத்திற்கு மேலே கம்பி கம்பிகிராதி. முற்றத்தின் ஓரத்தில் ஒரு ஜாதிக்கொடி கிளம்பி மேலே கம்பிமீது படர்ந்திருந்தது.முற்றத்தில் ஒரு ஓரமாக சுவரை ஒட்டி ஒரு உயரத்தில் புதைத்த சந்தனக்கல்.கிளி கொஞ்சுகிற வீடு-புதிதாக கட்டினாற்போல ஒரு நறுவிசு. வர்ணம் அடித்த ஜன்னல்கள்.கிணற்றுக்கு பக்கத்தில் சுவரோரமாக மல்லிகை செடி நாலு - துளசி செடி - திருநீர்றுபச்சை எல்லாம் ஒரு குட்டை சிமென்ட் சுவருகுள்ளாக நிரப்பியிருந்த மண்ணில் வளர்ந்திருந்தன. இடது பக்கம் வாழைத்தோட்டம்- நிலைக்கு நேராக நடைபாதை - பாதையில் நடந்தால் - நலிந்து வாழைகள் தார் போட்டு அறுக்க காத்திருந்தன - பாதை ஒரு வாய்க்காலில் போய் முடிந்தது - வாய்க்காலில் தண்ணீரின் மந்த ஓட்டம்-அப்பால் பெரிய தோட்டம் வாழை , எலுமிச்சை, கொய்யா , துரிஞ்சிகள் தோட்டம் முழுவதும் கொத்தி போட்டிருந்தது.மதமதவென்று மரங்களுக்கெல்லாம் ஒரு வளர்த்தி. ஒரே நிழல்."


இது போன்ற வீட்டில் நான் இருந்ததில்லை, இனிமேல் இருக்க போவதும் இல்லை, இது போன்ற ஒரு வீடு 2011-இல் தமிழ்நாட்டில் எங்காவது இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

ஒரு பெண் பாத்திரத்தை அறிமுகபடுத்தும்போது இப்படி விவரிக்கிறார்,"உனக்கு நான் சளைத்தவளா என்று ஒரு எடுப்பு. செதுக்கின முகம். காலையும், கையையும் , விரல்களையும் நாள் முழுதும் பார்த்து கொண்டிருக்க வேண்டும். நறுக்கின மூக்கு நுனி. இந்த சமையல் அறைக்குப் பிறக்காதது போன்ற ஒரு பெருமித பார்வை, நடை. ஆனால் அவள் சமைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்க தோணும். அவள் சமையலின் மனத்தையும் ருசியையும் நுகர்கிறபோது எனக்கு இதுவும் வரும், உங்களையெல்லாம் விட நன்றாக வரும் என்று சொல்வது போலிருக்கும். இவளை பார்த்தால் இருபது வயது போல, முப்பது வயதுபோல - நாற்பது வயது போல - ஐம்பது வயது போல - பத்து வயது போல - எல்லா வயதும் தெரிகிற தோற்றம்.

ஒரு பெண்ணை பார்த்து இருபது வயது போல , முப்பது வயது போல நாற்பது வயது போல என்று எப்படி சொல்ல தோணும  , அப்படி சொல்லி மீண்டும் பத்து வயது போல என்று சொல்ல தோணுமா ? இப்படி விவரிக்க எந்த விதமான கற்பனை வேண்டும் ? எழுதும்போது யாரை நினைத்து எழுதி இருப்பார்?

இவர் கதைகளில் நான் ரசித்து படிக்கும் இன்னொரு விஷயம், இவர் மத்தியானங்களை , இளமாலைகளை விவரிக்கும் பாங்கு,

பெரும்பாலும் படைப்பாளிகள் மதியங்களை விட்டு விடுவார்கள் நேரா போய் ரைட்ல திரும்பின மாலைதான், மாலை நேரத்து மயக்கம்தான், அப்புறம் ஒரு லெப்ட் திரும்பினா இரவும் அதன் மர்மங்களும். ஆனால் தி.ஜா முற்பகலையும் , பிற்பகலையும் அப்போது மனித மனம் கொள்ளும் அமைதியையும் வெகு லாவகமாக படம் பிடிப்பார். ஒரு விடுமுறை நாளின் தூங்கி எழுந்த பிற்பகல் (ஒரு 3 மணியை எடுத்துக்கொள்ளுங்கள்) எப்படி இருக்கும்?அப்போது மனதிற்குகந்த துணையின் பேச்சும், காப்பியும் பேச்சின் ஊடாக இருக்கும் காதலும், ஒரு நிம்மதியும் , நிறைவும் ..தி.ஜாவின் உலகில் நுழைந்து விட்டீர்கள்.

சாரு ஒருமுறை தி.ஜாவிடம் சொன்னாராம் "நீங்கள் ஒரு refined பாலகுமாரன்" என்று, அது உண்மைதான்.இவர் refined-ஆக இருப்பதற்கு காரணங்கள் இரண்டு

ஒன்று ,இவர் வாழ்ந்த காலகட்டம் , சுதந்திரம் வாங்கி முதல் இருபது ஆண்டுகளே இவரது காலம், கதைக்களனும் அப்போதுதான். இன்றைய உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இவரது நாவல்கள் வாசகருக்கு 'மயிலிறகு வருடுவது போல' கொசுக்கடி போல இருக்கும்.

இரண்டாவது,இவர் எழுத்தை தன் தொழிலாக வைத்துக்கொள்ளவில்லை ,அதனால் பாலகுமரானுக்கு வந்த வணிக நெருக்கடிகள் இவருக்கு இல்லை.அதனால் அதீத உணர்சிகள் சொல்ல தேவையில்லை, டமார் என்று காலில் விழ வேண்டாம், காமத்தையும் வஞ்சத்தையும் பிசைந்து சொல்ல வேண்டாம் , ரஜினி படம் போல 'Rise and Rise of Hero' கதை சொல்ல தேவையில்லை.

தி.ஜா கதையை போலவே நடுவில் ஆரம்பித்து நடுவில் முடிக்கிறேன். இன்னும் தோன்றினால் பார்ப்போம்.

Tuesday, 25 October 2011

தீபாவளி நிகழ்ச்சிகள்-அரைச்ச மாவை அரைப்போமா?

தொலைக்காட்சியில் எந்த அலைவரிசைக்கு சென்றாலும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல். விதி விலக்காக தெரிவது பொதிகை மட்டுமே. இந்த நிகழ்ச்சி பட்டியலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய், சன், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகளின் format ஒன்று தான். காலை மங்கள இசை, எதாவது நடிகர் அல்லது நடிகையின் பேட்டி, தீபாவளியன்று திரைக்கு வரும் படம் பற்றி அதன் நடிகர், நடிகை, இயக்குனருடன் ஒரு நிகழ்ச்சி, பட்டிமன்றம், மீண்டும் நடிகர்/நடிகை பேட்டி, சிறப்பு திரைப்படம் etc etc..

இந்த நிகழ்ச்சிகளைத் தான் பார்ப்பேன் என்று நாமெல்லாம் என்ன சங்கல்பமா செய்து கொண்டிருக்கிறோம்? கொஞ்சம் மாறுதலான நிகழ்ச்சிகளை அளித்தால் என்ன? உதாரணமாக தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மக்கள் அதை எப்படி கொண்டாடுகிறார்கள், அவர்கள் தீபாவளி கொண்டாடும் கதை என்ன என்று ஒரு கவரேஜ் செய்யலாம். மருத்துவம், போலீஸ் போன்ற துறையினருக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை விடுமுறை எதுவும் இல்லை. சில பிரபல மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களின் குடும்பத்தினரை பிரத்யேகமாக பேட்டி காணலாம். இந்த பேட்டியின் வாயிலாக அவர்கள் பணியில் உள்ள தங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறலாம்.

பார்வை இழந்தவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் போன்றவர்கள் பிரபலங்களுடன் சில மணி நேரம் தீபாவளி கொண்டாட வழி செய்து அதை படமாக்கி ஒளிபரப்பலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்று அறிஞர் பெருமக்களை வரவழைத்து அதைப் பற்றி பேசச் செய்து தமிழ் மறந்த இன்றைய தலைமுறையினருக்கு இலக்கிய அறிமுகம் செய்யலாம். இதை மட்டுமே ஒளிப்பரப்பினால் வருமானம் தேறாது என்பது உண்மைதான். இருந்தாலும் இப்படி ஒன்றிண்டு நிகழ்ச்சிகள் தயாரித்து ஒளிபரப்புவதில் தவறில்லையே?