Wednesday, 14 September 2011

ஜெயமோகன் வலைதளத்திலிருந்து

இந்த கட்டுரையை படித்த பின் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. குறிப்பாக இந்த வரிகள்:

"நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும்"



என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார்.சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார்.

அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தன்னைப் பற்றிய மதிப்பீடே அவன் வெளிப்புறத்தில் சாதிக்கும் சாதனையை அடிப்படையாக வைத்துத்தான் எனில் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்க முடியாதவன் என்ன ஆவான்? அவனுக்கு இந்த சமூகம் எந்த வகையிலும் ஒத்து வராத ஒன்றாகி விடுமே?

நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்காமல் உள் நோக்கிய அகப்பயணம் மூலம் தானே தன்னைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயத்தை அடைந்து கொண்டார்கள். எனக்கு சரியாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை. நான் கேட்க‌ வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கே.ஆர்.மணி, மும்பை

அன்புள்ள மணி,

பக்கத்திலேயே ஒரு சங்கீதவித்வான் இருப்பார். அவரிடம் சென்று அந்த மளிகைக்கடைக்காரரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ‘பாட்டெல்லாம் கேப்பாரோ?’ என்பார். ‘இல்லை ‘ என்றார். ‘சரிதான் காட்டுப்பயல்…காது இருந்தா போருமா?’ என்பார்.

சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை பக்கத்துவீட்டுக்காரனின் கண்ணில் என்னவாகத் தெரிகிறது என்பதில் அர்த்தமே இல்லை.

மனிதர்களுக்கிடையே திறன்கள், ருசிகள் ஆகியவற்றில் பிறப்பிலேயே பெரும் இடைவெளி உள்ளது. அதை ஒட்டியே அவர் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும் அமைகின்றன. மளிகைக்கடைக்காரர் அறிவார்ந்த விஷயங்களில் ஏன் ஈடுபடக்கூடாது என்பது ஊருயிர் ஏன் பறக்கக்கூடாது என்று கேட்பது போல. அதற்குச் சிறகு அளிக்கப்படவில்லை என்பதே பதில். கீதை சொல்வதை வைத்துப்பார்த்தால் அதற்கான தன்னறம் [சுவதர்மம்] ஊர்ந்து வாழ்வதே. ஆகவே ஊர்வதே இயல்பானது, அதுவே மேன்மையானது பறப்பன எல்லாம் அசட்டுத்தனமானவை என்றெல்லாம் அது ஒரு சுயபுரிதலை அல்லது சுயநியாயப்படுத்தலை உருவாக்கிக்கொண்டுமிருக்கும்.

ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாகப் பார்க்கப்படும், ஏனென்றால் அதனால் ஒரு திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன் இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலே தன்னறம். அதுவே நிறைவைத்தரும்.

முப்பதாண்டுக்காலம் வணிகத்தில் பெருவெற்றியை ஈட்டிவிட்டுத் தன் உள்ளம் கோரும் நிறைவு அதில் இல்லை என்பதனால் விவசாயத்துக்குத் திரும்பியவர்களை, சேவைக்கு வந்தவர்களை நாம் அறிவோம். அவர்களுடைய உண்மையான தளத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு நம்பர் ஒன் மளிகைக்கடைக்காரர் ‘பணத்தையும் தொழிலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கான், லூசுப்பய’ என்று சொல்லக்கூடும்.

அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள்தான் பலர். அதில் வெற்றிகொள்ளும்போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததுமே அந்த எக்களிப்பு வந்துவிடுகிறது. நான் இவர்களிலேயே இருவகையினரைக் காண்கிறேன்.

ரயில்களில் முதல்வகுப்பு கூபேக்களில் வரும் புதுப்பணக்காரர்கள், நிறையப் பணமீட்டும் டாக்டர்கள் போன்ற தொழில்நிபுணர்கள் ஒருவகை. அதிலும் டாக்டர்களில் வசூல்ராஜாக்கள் பெரும்பாலும் முதல்தலைமுறையில்தான் பணத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உண்டு. இந்த ஆசாமிகள் சுயததும்பலால் நிறைந்திருப்பார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’காசு வச்சிருக்கேன்ல’ என்றபாவனை.

இவர்கள் ரயிலில் ஒருவரைச் சந்தித்ததுமே அவரது பொருளியல்நிலையை அறிய முயல்வார்கள். சமூகத்தொடர்புகளைக் கேட்பார்கள். அதன் பின்னர் தன்னுடைய பணம் , சமூகத்தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘புதுசா ஸ்கோடா ஒண்ணு வாங்கினேன்…என்னமோ தெரியல, அப்பப்ப சிக்கிக்குது…’ ‘போனவாட்டி இப்டித்தான் ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாங்காக் போயிருந்தப்ப பாத்தீங்கன்னா…’

நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப்பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனை. மிதப்பாக இருப்பார்கள். ஒரேசமயம் அலட்சியமாகவும் அடக்கமாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் திமிராகவும் பண்பாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் நுண்ணிய ரசனையுடையவர்களாகத் தோற்றமளிக்கவும் வேண்டும், மிகமிக லௌகீகருசிகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்த முரணியக்கத்தை நெடுங்காலப்பழக்கம் மூலம் கற்றுத்தேர்ந்தவர்கள்.

இந்த இருசாராருக்குமே நரகம் என்ற ஒன்று உண்டு, அது அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம்தான். ஒருமுறை ஒரு நட்சத்திரவிடுதியில் இருவர் பேசிக்கொண்டிருக்க நான் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இருவருமே ஏதோ தொழிலதிபர்பிள்ளைகள். சட்டென்று கமல்ஹாசன் அங்கே வந்தார். அந்தக் கூடமே அவரை நோக்கித் திரும்பியது. பெரும்புகழ் மட்டுமே அளிக்கும் கம்பீரமும் தோரணையுமாக கமல் எல்லாரிடமும் நாலைந்து சொற்கள் பேசி சென்றார்.

அவர் சென்றதுமே இவர்கள் இருவரும் முகம் சிவந்து ஏதோ ஜென்மவிரோதியைப்பற்றிப் பேசுவதுபோல அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வசைகள், அவதூறுகள், இளக்காரங்கள், நக்கல்கள். எனக்குப் பரிதாபம் வந்து தொண்டையை அடைத்தது. எவ்வளவு எளிய மனிதர்கள். எவ்வளவு சாமானியர்கள். அவர்களுக்கான நரகம் அவர்கள் அருகே எப்போதுமே உள்ளது. அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்கமுடியாது. உங்கள் மளிகைக்கடைக்காரரின் அருகிலேயே அவரைவிடக் கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் இன்னொரு வியாபாரி இருந்து இவரைக் கனவிலும் நினைவிலும் கொத்திப்பிடுங்கிக்கொண்டிருப்பார்.

ஆம், இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அகங்காரம் அடிபட்டுக்கொண்டும் இருக்கும். உண்மையான இன்பமென்பது இயற்கையால் அளிக்கப்படவே இல்லை. புலனின்பங்கள் கிடைக்கலாம். ஆனால் மனிதன் விசித்திரமான பிராணி. பத்தாயிரம் வருடப் பண்பாடு அவனுள் உருவாக்கிய தன்னுணர்வு காரணமாக அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும்போதாது, அது பிற எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் அவன் புலன்கள் சுவையையே அறிவதில்லை.

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறார் சாக்ரடீஸ். படைப்பாக்கத்தின் இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள். அந்தத் தருணங்களை அடைவதற்கு இந்த மனிதர்களுக்கு அவர்கள் கைகளில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.

லௌகீகம் முக்கியமே அல்ல என்று நான் சொல்லமாட்டேன். அது பலசமயங்களில் ஏணிப்படி. அதிலேறிச் சென்றே அதற்கப்பாற்பட்ட விஷயங்களைத் தொடமுடியும். ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்?

மரங்கள் செறிந்த இந்த மாபெரும் காட்டுக்கு மூவகை உயிர்களும் எப்படியோ தேவைப்படுகின்றன, அவ்வளவுதான்.

Saturday, 10 September 2011

யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் இரண்டு

(மறுநாள் ஷூட்டிங் தொடர்கிறது)

கெளதம்: சார், இப்போ கதை உங்களுக்கு தெரியும். first நீங்களும் ஹீரோயினும் இருக்கற scenes shoot பண்ண போறோம், அப்பறம் வில்லன், நீங்க and ஹீரோயின், finally நீங்க and வில்லன். Let's go for the first shot. நேத்து சொன்ன மாதிரி ஹீரோயின் உங்க மடில இருக்காங்க..flashback start ஆகுது ..assistant come here..tell him the dialogues..

Assistant: கண்ணுல கோவம், பதட்டம். "i dont believe this..i just dont believe this.."

விஜய்:(கோவமாக) கெளதம் , என்ன இவரு நான் நடிகனானத நம்ப முடிலேன்னு சொல்றாரு..என்னை கிண்டல் பண்றாரு இவரு..ஒழுங்கா டயலாக் மட்டும் சொல்ல சொல்லுங்க..

கெளதம்: Sir, அது தான் டயலாக்.

விஜய்: தப்பா நெனைக்காதீங்க ..எனக்கு பஞ்ச் டயலாக் சொல்லி ஆரம்பிக்கறது தான் ராசி..அது மட்டும் இல்லாம, முதல் வார்த்தையே இங்கிலீஷ்ல இருந்தா, படம் பூரா இப்படி தான் இருக்கும்னு ரசிகர்கள் எழுந்து போய்டுவாங்க..முழுக்க தமிழ்ல பண்ணாலே இண்டர்வெலுக்கு அப்பறம் தியேட்டர் கூட்டறவங்க மட்டும் தான் பாக்கறாங்க..அப்படி தனியா பார்த்த ஒன்னு ரெண்டு பேரு ஜென்னி கண்டு செத்து போனதா சேதி வந்தது..வேணாம் இந்த ரிஸ்க்..

கெளதம்: (கடுப்புடன்)என்ன சார் நீங்க..இப்போ பஞ்ச் டயலாக் எழுத யாரை கூப்படறது? பேசாம இந்த டயலாக் சொல்லுங்க. பின்னாடி பாக்கலாம்.

விஜய்: நீங்க இப்படி சொல்வீங்க அப்படின்னு தான் நானே சில டயலாக் எழுதி கொண்டு வந்திருக்கேன்..

கெளதம்: (முகம் முழுக்க பீதியில்) என்ன சார் சொல்றீங்க? பஞ்ச் டயலாக் எழுதி இருக்கீங்களா?

விஜய்: வெவ்வேறு சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்கேன். சொல்றேன் கேளுங்க.

இது வந்து வில்லனோட ஆள் யார்டா யோஹான் அப்படின்னு தேடி வரும் போது பேசறதுக்காக.."யார் அடிச்சா பேகான் பட்ட கரப்பான் மாதிரி துடிக்கிறியோ அவன் தான் யோஹான்"

இது வந்து என்னை தாய்மார்கள் எல்லாம் புகழறா மாதிரி. ரோட்ல நான் நடந்து போறேன், ஒரு அம்மா தன் பிள்ளைக்கு என்னை காட்டி சோறு ஊட்டுது. அப்போ ஊருக்கு புதுசா வர ஒருத்தன் அந்த அம்மாகிட்ட கேக்கறான் ஏன் என்னை காமிச்சு சோறு ஊட்டறீங்கனு, அப்போ அந்த அம்மா சொல்லுது, "சந்திரனை காமிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினது
அந்த காலம். யோஹானை காட்டி ஊட்டறது இந்த காலம். ஏன்னா இருட்டா இருக்கிற எங்க ஊருக்கு நிலா இந்த யோஹான் தானே." மின் வெட்டு பிரச்சனைய லேசா சுட்டிக் காட்றேன். எப்படி?

கிளைமாக்ஸ்ல இதே அம்மா வில்லன் கிட்ட சொல்லுது, "இந்தியா விட்ட ராக்கெட்டு சந்திரயான். அன்னை ஷோபா பெத்து போட்ட புல்லட்டு எங்க யோஹான்."

இன்னொரு எடத்துல பாருங்க, நானும் ஹீரோயினும் நாசா உள்ள நடந்து போறோம். அங்க இருக்கற ராக்கெட் எல்லாம் என்னை பாத்து பயந்து ஒளிஞ்சுகுது. அப்போ ஹீரோயின் கேக்கறாங்க, ஏன் எல்லா ராக்கெட்டும் உங்கள பாத்து ஒளியுதுன்னு.நான் என் ஸ்டைல்ல வாய்குள்ள நாக்க துழாவி மண்டைய ஆட்டிகிட்டே சிரிக்கிறேன்.

அப்போ ஒரு ராக்கெட் ஹீரோயின் முன்னாடி வந்து சொல்லுது, "நான் தான் இந்த தறுதலைகளுக்கு(மத்த ராக்கெட் எல்லாம் காமிச்சி) எல்லாம் "தலை". "எங்களுக்கு எல்லாம் பின்னாடி நெருப்பு வெச்சா தான் பறப்போம். ஆனா, யோஹான் பார்வை பட்டா அந்த நெருப்பே பத்தடி பின்னால போகும். அவரு பார்வை பட்டு நாங்க பஸ்பமாயிட கூடாது இல்ல..அதான்..

கிளைமாக்ஸ்ல ஹீரோயின காப்பாத்திட்டு வில்லன பார்த்து சொல்ற டயலாக் இது.
"நீ விடற ராக்கெட் செவ்வாய்ல போய் எறங்கும்னு உன்னால காரண்டி கொடுக்க முடியுமா? ஆனா, இவ செவ்வாய்ல இருந்து வந்து எறங்குற வார்த்தை எல்லாத்துலயும் என் பேரு இருக்கும்னு என்னால காரண்டி கொடுக்க முடியும். இப்போ சொல்லு, உன் ராக்கெட்டு பெரிசா இல்ல என் மார்க்கெட்டு பெரிசா?"

விஜய்: எப்படி சார் இருக்கு டயலாக் எல்லாம்?

கௌதம்: சார், The X-Files: Fight the Future, Hannibal, Catch me if you can, The Kingdom, The Punisher, Mississippi Burning, Face/Off எல்லாத்தையும் பார்த்து ஒரு மாதிரி இந்த கதைய ரெடி செஞ்சிருக்கேன்.கொஞ்சம் தயவு பண்ணுங்க.

(நொந்து போய்)சரி சார், மொதல்ல சாங்க்ஸ் ஷூட் பண்ணலாம். அப்பறம் We'll can the scenes. மொதல்ல ஒரு romantic number.உங்களுக்கும் ஹீரோயினுக்கும் லவ் ஆகற time. தாமரை lyrics. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். பாம்பே ஜெயஸ்ரீ and Krish பாடறாங்க. Assistant, read out the lyrics.

Assistant:
காற்றாக வந்தெனை இடை மறித்தான் என் பூமுகம் தன்னில் இதழ் பதித்தான்
என் குறுக்கின் குறுக்கு சந்துகளில் விரல்களால் வேகம் பிடித்தான்
நாணம் என் தேகம் மேல் படர என் பெண்மை சிதற..

விஜய்: நிறுத்துங்க..இதுல என்னை பத்தி எதுவுமே இல்லையே..என்ன சார் பாட்டு இது?

கௌதம்: இது காதல் பாட்டு. உங்கள பத்தி என்ன சொல்ல முடியும்?

விஜய்: நீங்க குருவி, சுறா இந்த படங்கள் எல்லாம் பார்க்கல போல இருக்கு? அதுல காதல் பாட்டுல கூட என்னை புகழ்வாங்க.

"இன்ப போரிலே நீ எந்தன் இளைய தளபதி, இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி, நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை, உன்னை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை".

எப்பேர்பட்ட காவிய வரிகள்? இதுல எல்லாம் காதல் இல்லையா? காதலோடு சேர்த்து என்னமா புகழ்ந்திருக்காங்க என்னை? இது மாதிரி எழுத முடியாதா?

கௌதம்: எழுதலாம் சார், ஆனா இந்த பாட்டுக்கு எதுக்கு அதெல்லாம்? இது ஒரு தலைவன் தலைவி காதல் வசப்பட்டு பாடற பாட்டு.

விஜய்: அதெல்லாம் வேண்டாம் சார். சரி, இதை விடுங்க. என் ஒபெனிங் சாங் என்ன ஆச்சு? அதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லல.

கௌதம்: சார், நீங்க ஒரு middle aged detective.உங்களுக்கு என்ன சார் ஒபெனிங் சாங் வெக்கறது?

விஜய்: சார், ஒபெனிங் சாங் இல்லேனா நான் செத்துடுவேன். என் பையன வேற ஒபெனிங் சாங்ல நடிக்க வெக்கறேனு சொல்லியிருக்கேன். எதாச்சும் பண்ணுங்க சார்.

(கௌதம் எதுவும் சொல்லாமல் எழுந்து செல்கிறார். படப்பிடிப்பு தளத்தில் குழப்பம் நிலவுகிறது. கௌதம் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இரண்டு மணி நேரம் பொறுத்து பேரரசுடன் வருகிறார்)

கௌதம்: இவரு தான் இந்த படத்தை எடுக்க தகுதியான டைரக்டர். நீங்க இவர் கூடவே வேலை செய்யுங்க.

பேரரசு: தளபதி நான் வந்துட்டேன் இல்ல. கவலையே படாதீங்க. படத்தோட தலைப்ப மொதல்ல மாத்துவோம். "யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்". கீழ கேப்ஷன், "கிரகம் தான் மனுஷன பிடிக்கும் இவன் வந்த கிரகதுக்கே கிரகம் பிடிக்கும்".

விஜய்: இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன்.

பேரரசு: கிளைமாக்ஸ்ல பறந்து வர ராக்கெட்டை கால்ல உதைச்சு வேற எடத்துக்கு அனுபறீங்க. ஹீரோயினை ஒளிச்சு வெச்சு இருக்கற ராக்கெட் கிட்ட பத்து நிமிஷம் பஞ்ச் டயலாக் பேசி திருத்தறீங்க. வில்லன் விஞ்ஞானிய அடிச்சு அவன் அவங்கம்மா கிட்ட குடிச்ச பால காக்க வெக்கறீங்க. அந்த பால குடம் குடமா எடுத்து உங்க படத்துக்கு அபிஷேகம் பண்றாங்க மக்கள் எல்லாம். அப்படின்னு போட்டு அதோட படத்தை முடிக்கறோம்.

(விஜய்யும் பேரரசும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். கௌதம் மூர்ச்சையாகிறார்)

Wednesday, 7 September 2011

விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்

மாயவரம் - கும்பகோணம் சாலையில் திருவிடைமருதூர் அருகில் அமைந்துள்ளது கோவிந்தபுரம். தக்ஷிண பண்டரிபுரம் என்று பெயரும் உண்டு. இங்கு அமைக்கப்பட்டுள்ளது விட்டல் ருக்மிணி சமஸ்தான் என்னும் மிகப்பெரிய பாண்டுரங்கன் திருக்கோயில். நேற்று இங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அற்புதமான கலையழகுடன் கட்டப்பட்டுள்ள கோவில். கோவிலில் உண்டியல் இல்லை. பாண்டுரங்கனுக்கும் ருக்மிணி தாயாருக்கும் அர்ச்சனை, பூஜை எல்லாம் கிடையாது. துளசி மட்டும் வாங்கிச் சென்று கொடுக்கலாம். ரங்கன் மற்றும் தாயாரின் பாதம் தொட்டு வேண்டிக்கொள்ளும் படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுவர் மற்றும் கதவேங்கும் ஹரிதாஸ் கிரி மற்றும் ஞானனந்தரின் சிற்பங்கள். பக்கத்தில் பசுக்களை பராமரிக்க கோசாலை. சற்றுத் தள்ளி போதேந்த்றாள் மடத்தில் பித்ரு காரியங்கள் செய்ய தேவையான வசதிகள்.

நேற்று வார நாள் என்பதால் கூட்டம் அறவே இல்லை. சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் அள்ளும் என்றார்கள். பாண்டுரங்கனை தரிசித்து விட்டு கீழே இறங்கி வந்தவுடன் இளஞ்சூட்டில் நிறைய காய்கறிகளுடன் சாம்பார் சாதமும் தொட்டுக் கொள்ள அரை வேக்காட்டில் சுண்டலும் தந்தார்கள். இருந்த பசிக்கு அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. விஜய் டிவி புகழ் விட்டல் தாஸ் மகாராஜ் தான் இந்த கோயிலை ஸ்தாபித்துள்ளார். கோவிலுக்கு பிரைவேட் செக்யூரிட்டி சர்வீஸ், போட்டோ எடுக்க எங்குமே அனுமதி இல்லை. கோசாலை, பக்தர்கள் வந்து தங்கி சேவை செய்ய பெரிய தங்குமிடம், உட்கார்ந்து பஜனை செய்ய இடம் என்று பல ஏக்கரில் பாண்டுரங்கன் விரிந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் இந்த இடத்தை சுற்றியுள்ள நிலங்களின் விலை விண்ணை எட்டும். நான் திரும்பி வரும் வழியில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுவதை கண்டேன். ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய ஸ்தலம். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள்.