Monday 5 May 2008

சடங்குகள்

இது பற்றி பற்பல பெரியோர்கள் கருத்து கூறி உள்ளனர். ஆனாலும் நான் யோசித்து பார்த்த வரையில் ஜாதி ஒழிய் ஒரு முக்கியமான நடவடிக்கையாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் "சடங்குகளை ஒழிப்பது".

இன்று intercaste marriages நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே இந்த சடங்குகள்தான். இந்த சடங்குகள் ஒரு நடைமுறை வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகின்றன.

கல்யாணத்தன்று முந்தின தினம் உங்கள் ஜாதியில் என்ன சடங்குகள் செய்வார்கள்? எங்கள் ஜாதியில் என்ன சடங்குகள் செய்வார்கள் என்ற பிரச்சனையில் இருந்தே மற்ற பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

நிச்சயதார்த்தத்தில் ஆரம்பிக்கும் சடங்கு கல்யாணம்,முதலிரவு,கல்யாணம் முடிந்து 2-3 நாட்களில் நடைபெறும் சடங்குகள், வளைகாப்பு, குழந்தை பிறந்தால் செய்யும் சீர் வரிசை மற்றும் மற்ற சடங்குகள், அந்த குழந்தை பூப்பெய்தினால் செய்யும் சடங்குகள், 60-ம் கல்யாணத்தில் செய்யப்படும் சடங்குகள்,இறந்தால் இறந்த உடனே செய்யப்படும் சடங்குகள், 3-ம் நாள் செய்யப்படும் சடங்குகள் 11-ம் நாள் செய்யப்படும் சடங்குகள், வருடா வருடம் செய்யும் திவசம் எனப்படும் சடங்கு என பிறப்பது முதல் இறப்பது வரை சடங்குகள், இந்த சடங்குகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்றால் இல்லை, ஒவ்வோவொரு சாதிக்கும் ஒவ்வொரு முறை.அதுவும் ஒவ்வொரு உட்பிரிவிற்கும் ஒவ்வொரு முறை. இதில் FC,BC,MBC,SC/ST என்ற வேறுபாடே கிடையாது.

ஒருவன் காதலித்து அவன் ஜாதியை விட்டு மற்ற ஜாதி பெண்ணை மணந்தால் அந்த ஜோடி ஒவ்வொரு வீட்டு விழாவையும் இந்த குழப்பத்தை கடந்தே செய்ய வேண்டும், இந்த லட்சணத்தில் சுற்றியுள்ள 'பழக்க வழக்கங்களில்' நம்பிக்கை உடையவர்கள் இருந்துவிட்டால் போச்! அவர்கள் ஒவ்வோவொரு முறையும் கூனி குறுக வேண்டியதுதான்.அப்படியே காதல் திருமணம் செய்து கொண்டாலும் கணவன் மனைவி இருவரில் ஒருவர் மற்றவர் வீட்டு சடங்குகளை பின்பற்றுவார் (பெரும்பாலும் இது மனைவியாகவே இருக்கும்).

சடங்குகளை ஒழிப்பது மட்டுமே சாதியை ஒழித்து விடும் என்று கூற வில்லை, ஆனால் சடங்குகள் மறுப்பது ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.சடங்குகள்,ஒரு கண்ணுக்கு தெரியாத விலங்கு அதை நாம் கழட்டி போட வேண்டும் என்றே சொல்லுகிறேன்.

இந்த சடங்குகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் inter caste திருமணங்கள் பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

கலாச்சாரம், பாரத பண்பாடு,பழமை,பக்தி,கலை எல்லாமே எல்லோருக்கும் பொதுவாக இருந்தால்தான் இங்கே மனிதன் மனிதனாக வாழ முடியும். நேற்றுவரை கலாச்சாரம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தவை எல்லாம் இன்று ஜாதியை ஊக்குவிக்கும் ஒரு விஷயமாகவே இருப்பதை என்னால் உணர முடிகிறது.

நமது சடங்குகள், நம்பிக்கைகள், பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது எல்லாமே ஜாதியை ஆதரிக்க கூடியவைதான்.

ஆனால் இந்த "negation of rituals" என்ற விஷயத்தை எங்கே இருந்து ஆரம்பிப்பது?

நிச்சயம் பெரியார் கட்சிகரர்களால் இதை செய்ய முடியாது. அவர்கள் இந்த விஷயத்தை வன்முறை ஆக்கிவிட்டனர். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்பதையே இன்று நடக்கும் திருமணங்கள் காண்பிக்கின்றன.

சடங்குகள் அல்லா திருமணத்தை அவர்கள் அரசியல் விழாவாக செய்து விட்டனர், அதன் மூலம் திருமணம் நடப்பதற்கு ஒன்று சடங்குகள் வேண்டும் இல்லை என்றால் நல்ல பேச்சாளர்கள் வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.

ஏன் திராவிட ஆட்சியில் ஜாதி ஒழிப்பை பற்றி பள்ளிகளில் பலமான பாடம் இல்லை? நான் படித்தவரை 1-ஆம் வகுப்பிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை இந்த விஷயத்தை பற்றி குறிப்பே இல்லை (அல்லது மிகவும் மேம்போக்காக உள்ளது). இதை அரசியல் ரீதியாக யோசித்தால் அந்த விவாதம் நீண்டு போகும் என்பதனால், இனிமேல் இதை எப்படி சரி செய்வது என்று யோசிப்பதே உத்தமம்.

சடங்குகளை ஒழிப்பதற்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய விளம்பரம், ஒரு இயக்கம் தேவை.இதற்கு அரசாங்கத்தின் உதவியை விட NGO எனப்படும் தனிப்பட்ட நிறுவனங்களே உதவியே நிறைய தேவை.


தமிழ் சினிமாவை இந்த சடங்குகளை ஒழிப்பதற்கு மிகத்திறமையாக பயன்படுத்தலாம்.(சினிமா கதநாயகர்களை கடவுளாக பார்த்த சமயத்திலேயே இதை செய்து இருக்க வேண்டும்.).ஆனால் தமிழ் படைப்புலகம் இதற்கு நேர் எதிர்மாறான திசையில் செல்கிறது.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலங்களில் அது ஜாதி என ஒன்று இருப்பதையே திரையில் காண்பிக்கவில்லை, இப்போது அதை போற்றுகிறது, ஆதரிக்கிறது. நல்ல வேளையாக சின்ன கவுண்டர் தேவர் மகன் போன்ற படங்களை தொடர்ந்து படங்கள் அம்மாதிரி வரவில்லை. மேலும் தமிழ் சினிமா சடங்குகளை ஆதரிக்கிறது போற்றுகிறது.

காதல் படங்களையே எடுத்து தள்ளும் ஒரு ஊடகம், அந்த காதல் திருமணத்தில் முடிந்தால் எழக்கூடிய சடங்குகள் தொடர்பாக வரும் பிரச்சனைகளை பற்றி உருப்படியாக எந்த படத்திலும் காண்பித்தது இல்லை.

நான் இங்கு எழுதியதை போல 1000 மடங்கு வீரியமாக,கனமாக,ஆழமாக பெரியார் எழுதி வைத்து இருக்கிறார், படித்து பார்த்தால் நியாயமாகவே இருக்கிறது.

I.T துறையில் பிரபலமான வார்த்தை process improvement, இதை வெள்ளைகாரர்கள் வாழ்க்கைக்கும் பயன்படுத்துகிறார்கள் நாம் appraisal என்ற விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அவர்களிற்கு வாழ்க்கை கிடைக்கிறது நமக்கு appraisal-லில் சற்று நல்ல hike கிடைக்கிறது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறோம்.

சுபம்

1 comment:

Gokul said...

---------------------