Monday 13 June 2011

ஏழாம் உலகம், நான் கடவுள்

சில படங்கள் நம்மை தூங்க விடாது. அதற்கு பிரதான காரணம் அந்த படத்தின் பாத்திரங்களை நடிகர்கள் வழங்கும் விதம். உதாரணமாக, இன்றும் மூன்றாம்பிறை இறுதிக் காட்சியில் கமலை பார்க்கும் போது யாராவது ஸ்ரீதேவியிடம் சென்று "நீ பைத்தியமா இருந்தபோ உன்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டது இந்த சீனு தான், அவனை இப்படி விட்டுட்டு போறியே" என்று கேட்கக்கூடாதா என்று தோன்றும்(பாலு மகேந்திராவிடம் இந்த காட்சி பற்றி ஒரு முறை கேட்ட போது, "அந்த காலகட்டத்தில் எனக்குள் ஒரு பெரிய சோகம் இருந்தது. அதை வெளிக்கொண்டு வரும் விதமாக அந்த காட்சியை அமைத்தேன்" என்றார்). ஒரு புதினத்தை படிக்கும் போது இப்படி ஒரு உணர்வு ஏற்படுமாயின் அது அந்த புத்தகத்தின் வெற்றி அல்லவா?

நான் கடவுளின் கருவான ஏழாம் உலகம் படிப்பவரின் மனதை கனக்க செய்யும் புதினம்.
ஏழாம் உலகத்தை படித்து முடித்த போது அதை திரைக்காக பாலா மாற்றிய விதம் வியப்பை தந்தது. நாவல் என்றாலே கதாபாத்திரங்கள் நிறைய உண்டு அதிலும் ஏழாம் உலகம் அமைந்துள்ள களத்தில் கதை மாந்தர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், ஏழாம் உலகம் படித்த பின் நான் கடவுளை பார்த்தால் பாலா நாவலில் இருந்து மிகச் சில பாத்திரங்களையே படத்திற்காக எடுத்திருப்பதை உணர முடியும். ராமையன், குருவி, மாங்காண்டி சாமி(கை, கால் இல்லாமல் ஒரு சாமி வருமே)போன்ற இரண்டு மூன்று நாவல் பாத்திரங்கள் தான் நான் கடவுளில். போத்திவேலு பண்டாரத்தின் லேசான சாயல் கொண்ட பாத்திரம் முருகன்.மற்றபடி ஆர்யா, பூஜா பாத்திரங்கள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம்.

ஏழாம் உலகத்திற்கும் நான் கடவுளுக்கும் உண்டான பொதுவான அம்சங்களில் ஒன்று நகைச்சுவை. படத்தில் "மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க" என்று டி.எம்.எஸ் பாடலை மலையடிவாரத்தில் கேட்கும் அந்த பிச்சைக்கார கூட்ட சிறுவன் ஒருவன், "இவன் யார்ரா, நமக்கு மேல பொலம்பறான், விட்டா நம்ம கூட வந்து ஒக்காந்துருவான் போல இருக்கு என்பான். இதைப் போன்ற இடங்கள் நாவலில் நிறைய உண்டு.

ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்கும் குய்யன் என்னும் பாத்திரம், "ஜோதிலட்சுமி மாதிரி இருக்கா, இவளை எல்லாம் மகாலட்சுமின்னு கூப்படறோம். நாக்கு புளுத்து போக போகுது" என்று சொல்லும். சிறிது நேரம் கழித்து குய்யன் நக்கலாக,"அம்மா தாயே மகாலட்சுமி, தேவடியா மவளே, பிச்சை போடுமா" என்பான். நாவலில் அகமுதுகுட்டி பாத்திரமும் ஜெயமோகனின் நக்கல் கலந்த நகைச்சுவையை பிரயோகம் செய்ய உருவாக்கப்பட்டது. அவன் பேசும் ஆங்கிலமும், அதன் காரணத்தால் சிநேகம் கொள்ளும் ஏட்டையாவும், அவன் பேசும் ஆங்கிலத்தால் கவரப்பட்டு அவனுக்கு ராமையன் வில்ஸ் சிகரட் வாங்கித் தரும் இடங்களும் சூப்பர்.

உருப்படிகளை வாங்க வரும் மலையாள தரகன் கதாப்பாத்திரத்திற்கு படத்தில் நகைச்சுவை அதிகம் கிடையாது. ஆனால், நாவலில் நிறைய உண்டு. அதிலும் மாங்காண்டி சாமி பாடும் பாடல்களை கேட்டு அவரை அறுபதாயிரம் ரூபாய்க்கு போத்திவேலுப் பண்டாரத்திடம் வாங்கி அவரை சாமியாராக உபயோகித்து பக்தர்களிடம் பணம் வசூலிக்க திட்டம் போடும் மலையாள தரகன் கடைசியில் அவரை போத்திவேலு பண்டரத்திடமே இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பான். ஏனென்று பண்டாரம் கேட்க, "சாமிக்கு கரண்ட் ஷாக், ஆசனவாயில மிளகா எல்லாம் வெச்சு பாத்தாச்சு, சாமி பாட மாட்டேன்குது" என்பான். இதை கேட்கும் குய்யன், "அங்க பால், பழம், வெண்ணை எல்லாம் கொடுத்தாங்க, சாமிக்கு அதை எல்லாம் சாப்பிட்டு குசு தான் வந்துச்சு. பாட்டு வரல" என்பான்.

பார்வையாளர் நலன் கருதி, பாலா படத்தில் மிகக் குறைந்த அளவிலேயே ஏழாம் உலக வாசிகள் தினம் கடக்கும் துன்பங்களை காண்பித்திருப்பார். அதற்கே நம்மூரில் விமர்சனங்கள் எழுந்தன. நாவலில் இருக்கும் சில பகுதிகளை படமெடுத்திருந்தால் சென்சார் பயந்திருப்பார்கள். ராமையன் தன் தொடை சதை பிளந்திருக்கும் இடத்தில காசை சேர்த்து வைப்பது, அதிலிருந்து வடை வாங்க ஐந்து ரூபாய் எடுத்துத் தர, அதை முகர்ந்து பார்க்கும் போத்திவேலு பண்டாரத்தின் ஆள் ஒருவன், குறையுள்ள உருப்படிகளை ஜனிக்க கண், ஒரு கை இல்லாத முத்தம்மையை புணர போத்திவேலு பண்டாரம் ஏற்பாடு செய்யும் ஆட்கள், மலம் குவிந்திருக்கும் இடத்தில் முத்தம்மையை புணரும் கூனன் போன்ற காட்சிகளை படிக்கும் போது மீண்டும் எங்காவது இனி இதுபோன்ற மக்களை சந்தித்தால் நிச்சயம் அவர்களை அடித்து விரட்ட தோன்றாது.

நிஜ வாழ்க்கை கஷ்டங்களை மறக்க மக்கள் நாடும் சாதனம் தான் சினிமா. இதில் மீண்டும் எதற்கு மரணம், அழுகை போன்றவற்றை காண்பிக்க வேண்டும்? மக்கள் சினிமாவிற்கு வருவதே மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க தான் என்று கூறும் இயக்குனர்கள் உண்டு. உண்மை தான். ஆனால், கற்பனையிலேயே வாழ்வது சாத்தியம் இல்லையே. நிஜம் தரும் சூடு புரிய வேண்டுமே. அதற்கு ஏழாம் உலகம் போன்ற கதைகளை படம் எடுக்க வேண்டும். இன்று ஹிந்தி சினிமாவில் அனுராக் கஷ்யப், மதுர் பண்டர்கர், விஷால் பரத்வாஜ் போன்றவர்களின் படங்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன? நிஜ வாழ்கையை பிரதிபலிப்பதால் தானே? அவை வணிக ரீதியாகவும் வெற்றியே.

3 comments:

Gokul said...

//"நீ பைத்தியமா இருந்தபோ உன்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டது இந்த சுப்பிரமணி தான்,//

எனகென்னவோ அந்த நாய்க்குட்டி பேர்தான் சுப்பிரமணி போல தோணுது!

Vasu. said...

Gokul,

உன் Tester புத்திய காட்டிட்ட இல்ல? இவ்வளோ பெரிய பதிவுல நான் கமல் பேரு சீனுக்கு பதிலா சுப்பிரமணி அப்படின்னு போட்டது மட்டும் தான் உன் கண்ணுல பட்டு இருக்கு? மனுஷனா நீயெல்லாம்?

Gokul said...

ok.

//கமலை பார்க்கும் போது யாராவது ஸ்ரீதேவியிடம் சென்று "நீ பைத்தியமா இருந்தபோ உன்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டது இந்த சீனு தான், அவனை இப்படி விட்டுட்டு போறியே//

Works fine!

Bug Verified.

:-)