Thursday 4 August 2011

அமெரிக்காவில் ஆவணி ஆவிட்டம்

ஆகஸ்ட் பதிமூன்று ஆவணி ஆவிட்டம்(யஜுர் வேதம்), பதினாலு காயத்ரி ஜபம். சில வருடங்களுக்கு முன் ஆவணி ஆவிட்டத்திற்கு Sunnyvale பகுதியில் இருந்தேன். அங்கிருந்த ஹிந்து கோயில் சென்று பூணூல் மாற்றிக்கொண்டு காலை உணவிற்கு கோவிலில் ஓசியில் சுடச்சுட கிடைத்த பொங்கல்-கொத்சு ஒரு பிடி பிடித்து விட்டு இரை உண்ட மலைப்பாம்பை போல நகர முடியாமல் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.அது "வாலிப வயசு".

இந்த வருடம் நான் இருக்கும் Elizabethtown பகுதியில் கோவில் எதுவும் இல்லை. அருகில் உள்ள Louisville நகரில் உண்டு. ஆனால் இங்கிருந்து Louisville நாற்பது மையில்.டாக்ஸி எடுத்துக்கொண்டு சென்று வந்தால் 200 டாலர். இதையெல்லாம் மனதில் கொண்டு சென்னையில் இருந்து வரும் போதே வேஷ்டி, தர்பை, பவித்ரம், கூர்ச்சம் பஞ்ச பாத்திரம் எல்லாம் எடுத்து வந்தாயிற்று.நேரே மந்திரத்தை ஓதி பூணூல் மாற்ற வேண்டியது தான்.

ஆனால் மந்திரம் ஓதுவதில் ஒரு குழுப்பம். இந்தியாவாக இருந்தால் சங்கல்பம் செய்யும் போது "மமோ பார்த்த சமஸ்த துரித..பாரத வருஷே, பரதக் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்த்தே சகப்தே அஸ்மின்னு வர்தமானே வ்யவஹாரிக்கே.." என்று சொல்லிவிடலாம். இங்கிருந்து கொண்டு எப்படி பாரத வருஷம் பரத கண்டம் என்று சொல்வது?. கர வருஷம், ஸ்திர வாஸரம்(சனிக்கிழமை), நக்ஷத்திரம் எல்லாம் கூட ஓகே ஆனால் "பாரத" பிரச்சனை மட்டும் நீங்கவில்லை. இரண்டு நாளாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ரொம்ப வருடமாய் இங்கிருக்கும் நண்பர் ஒருவரை அலைபேசியில் அழைத்து "நீங்க எப்படி பண்றீங்க?" என்றேன்.

அவர் வடிவேலு கிரி படத்தில் சொல்லும் கணபதி ஐயர் போல் சிம்பிளாய், "அமெரிக்க வருஷே, அமெரிக்க கண்டே..அவ்வளோதான்" என்றார். நெஜமா வாத்தியார்(ஐயர்) இங்க அப்படி தான் சொல்வாரா? என்றேன். அவர் சொன்னார், "வாசு, இங்க எல்லாம் நம்ம வசதி தான். உனக்கே தெரியும், நியாயமா பார்த்தா ஆவணி ஆவிட்டம் ஹோமம் பண்ணனும். இங்க வீட்ல அவ்வளோ நெருப்பு கொளுத்தி புகை வந்தா, NYPD, LAPD எல்லாம் வந்துருவான். அதனால, ஹோமம் பண்ண முடியாது. உலகத்தோட இந்த பக்கத்துல இருக்கறதால அமெரிக்க வருஷம், கண்டம் அவ்வளோதான்". எங்க இருந்தா என்ன, பண்ணனும்" என்றார். அதுவும் சரி தான் என்று பட்டது.

No comments: