Monday 14 May 2012

என்ன எழுதுவது?

ஆங்கிலத்தில் "Writer's Block" என்று சொல்லுவார்கள். நாங்கள் இரண்டு பேர் இருப்பதால் Apostrophe இல்லாமல் நிஜமாகவே "Writers Block" என்று தான் சொல்ல வேண்டும். அது சரி, இதையெல்லாம் நிஜ Writer சொன்னால் பரவாயில்லை, உனக்கென்ன என்கிறீர்களா? உண்மை தான். மிகுந்த வேலைப் பளு என்றாலும் எழுத முடியாத காரணம் அது ஒன்று மட்டும் இல்லை. சொந்த பிரச்சனைகளும் முக்கிய காரணம். தற்போது இருபது நாட்கள் அமெரிக்க பயணம் என்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில் கொஞ்சம் எழுதலாம் என்று உட்கார்ந்து விட்டேன். நிறைய விஷயங்கள் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எழுத நினைத்திருந்த விஷயங்கள் இப்போது மறந்துவிட்டன. சரி, நினைவில் இருப்பதை பதிவிடுகிறேன்.


மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த மாதம் சென்னையை அடுத்த எருக்கஞ்சேரியில் குப்பை எரிப்பதால் புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகள் அந்த பகுதியையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் பாதிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக கூறியிருந்தார். சொன்னவர் பெயர் நினைவில் இல்லை என்றாலும் சொன்ன விஷயம் மறக்கக் கூடியது அல்ல. ஒரு போபால் மட்டும் தான் வெளியே தெரிந்துள்ளது. அதைப்போல பல உண்டு இந்தியாவில். அரசின் கவனத்திற்கு இதை யாராவது(இந்த வார்த்தையை அழுத்தம் கொடுத்து படிக்கவும்) எடுத்துச் செல்வார்கள் என்று நம்புவோம். அல்லது, Erin Brokovich படம் போல எதாவது நடந்தால் உண்டு.


மற்றபடி, சென்ற பதிவிற்கும் இதற்குமிடையே பதிவிடும் அளவிற்கு முக்கிய நடப்புகள் என்ன என்று யோசிக்கிறேன். சட்டசபையில் நெரிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல் என்ற தலைப்பில் நடத்தப்படும் தி.மு.க கூட்டங்கள், அழகிரி-ஸ்டாலின் மோதல், மதுரை ஆதீனம்-நித்தியானந்தா காமெடி, ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன் தான் சென்று தங்க வேண்டிய இடத்தை அபகரித்ததாக பிரதீபா பதில் மீது கூறப்பட்ட புகார், எடியூரப்பா போன்றவை சராசரி விஷயங்களே. அவற்றை சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.


அமீர் கானின் "சத்யமேவ் ஜெயதே" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. திரைப்பட தொழிலில் உள்ள அவர் நண்பர்கள் உட்பட பலரும் அவர் நிகழ்ச்சியை ரசித்து பாராட்டியுள்ளனர். முதல் வாரம் "பெண் சிசுக்களை கருவில் அழிப்பதை" பற்றியது. ராஜஸ்தானில் மருத்துவர் பட்டம் பெறாத பலர் பெண்களுக்கு இந்த கருக்கலைப்பை செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் இந்நிகழ்ச்சி குறித்த பல தகவல்களை படிக்க முடிந்தது. நடிகை லக்ஷ்மி நடத்திய "இது கதையல்ல நிஜம்" போன்ற நிகழ்ச்சி. அமீர் கானின் சமூக உணர்வு பாராட்டத்தக்கது. முதலில் Coca Cola விளம்பரங்களில் நடித்த அவர் தற்போது அதன் இந்திய வடிவத்தின் தரம் சரியில்லை என்று அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவரை போல பல பெரிய நட்சத்திரங்கள் இது போன்ற சமூக சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பணம் என்பது இரண்டாம் பட்சமே என்று அமீர் கான் சொல்லாமல் சொல்லி விட்டார்.


இங்கு அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. நவம்பர் ஆறாம் தேதி தேர்தல். இந்தியாவில் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் அரசியலில் நிற்கிறார்கள், இதை போல வேறெந்த நாட்டிலும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது தேர்தலில் Presidential Primaries என்று கூறப்படும் முதல் கட்ட தேர்தல் நடப்புகளில் Keith Rusell Judd என்கிற கைதி அமெரிக்காவின் West Virginia மாகாணத்தில் ஒபாமாவின் ஓட்டில் 41% பெற்றுள்ளார். Keith Juddd ஜனாதிபதி வேட்பாளராக ஆகலாமா கூடாதா என்று ஏகப்பட்ட சர்ச்சை இங்கே.


எதாவது எழுத வேண்டுமே என்று ஒரு பதிவு போட்டாயிற்று. ஒரு தரமான பதிவுடன் வெகு விரைவில் சந்திக்கிறேன். நன்றி.

3 comments:

Gokul said...

Vasu,

You drew a full circle with the recent events...

Vasu. said...

http://www.jeyamohan.in/?p=27310

Gokul said...

Yes,

That program has created some vibes across places..