Tuesday 22 May 2012

மேற்கிலிருந்து கற்றதும்/பெற்றதும்

சிகாகோ நகரிலிருந்து Fort Lauderdale வரும் விமானத்தில் அவரை சந்தித்தேன். அவர் பெயர் Dennis Tino. அவர் மனைவி பெயர் Norma. பொதுவாக ஐரோப்பா, அமெரிக்கா இரண்டு இடங்களிலுமே நான் பார்த்த விஷயம், விமானத்திலோ, ரயிலிலோ அருகில் இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி பேசி விடுவார்கள். இவரும் விதிவிலக்கல்ல. என்னிடம் ஹலோ சொல்லி பேச ஆரம்பித்தார். அவர் கையில் "Dearborn Stories" என்றொரு புத்தகம் இருந்தது. Dearborn, மிச்சிகன் நகரை சேர்ந்தது. Henry Ford பிறந்த ஊர். அங்கு தான் Ford தலைமையகம் உள்ளது.


என்னிடம் Dearborn பற்றி கூறி அந்த புத்தகத்தை படி என்றார். Dearborn பகுதியில் பல காலமாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்கள் ஊரின் நினைவுகளை அந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். தன் தாத்தா முதலாம் ஹென்றி போர்டுடன் வேலை செய்தது, ஹென்றி போர்ட் அந்த ஊர் மக்களுக்காக செய்த நன்மைகள், மூன்று தலைமுறையாக அதே ஊரில் வாழ்பவர்கள், இல்லத்தின் ஒரு குறிப்பிட்ட அறையில் 1900 ஆம் ஆண்டு பிறந்து 1973 ஆம் ஆண்டு உயிர் நீத்த தன் பாட்டனாரை பற்றிய பேரனின் கதை, இரண்டாம் உலகப் போரின் போது Dearborn நகர் எப்படி இருந்தது என்று ஒரு மணி நேரத்தில் நிறைய கதைகள் படித்திருந்தேன்.


டென்னிஸ் என்னை தோளில் தொட்டு, புத்தகம் எப்படி என்றார்? நான் சிரித்தபடி, நீங்கள் இந்த புத்தகத்தை படித்தாயிற்றா என்றேன்? இல்லை என்றார். என் நெஞ்சை கனக்கச் செய்த சில பக்கங்களை காட்டி, படியுங்கள் என்றேன். அவ்வப்போது தன் மனைவியை அருகில் அழைத்து காட்டி முத்தமிட்டபடி படித்து பழைய நினைவுகளில் இருவரும் மூழ்கினர். கொஞ்ச நேரம் கண் மூடியபடி இருந்தேன். இதைப்போல மாம்பலம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் வாசிகள் புத்தகம் கொண்டு வந்தால் என்னவென்று தோன்றியது. பாலகுமாரனின் அப்பம், வடை, தயிர்சாதம் இந்த வகை புத்தகம். மூன்று தலைமுறைகளை பற்றிய கதை. ஒரே வித்தியாசம் பாலகுமாரன் புத்தகம் கற்பனை. Dearborn Stories உண்மை. இந்த தலைமுறை கொஞ்சம் பிரயாசை செய்து தேடினால் நமக்கும் நிறைய Dearborn கிடைக்கும்.


என் தந்தை தஞ்சை பற்றிய தன் பால்ய நாட்களை அடிக்கடி சொல்லுவார். ஒரு வீச கொத்தவரங்காய் ஓரணா. மூணு கிலோ நல்லெண்ணெய் ரெண்டனா. எண்பளது(தஞ்சை பகுதியில் அந்த நாளில் வாழ்ந்தவர்கள் எண்பதை எண்பளது என்பார்கள்) ருபாய் சம்பளத்துல பத்து பேர் இருக்கற குடும்பம் ஒரு மாசம் முழுக்க சாப்பிடலாம். எல்லா கறிகாயும் கொல்லைப்புறமே பயிர் பண்ணுவோம். முருங்கைக்காய், புடலங்காய், வெண்டை எல்லாம் கொல்லைல தான். கண்டத்திப்பிலி ரசம், விளாம்பழ ஓடு ரசம், சாம்பார், வெத்தக்கொழம்பு, பொரியல், கூட்டுன்னு பத்து வகையா டெய்லி சாப்பாடு. பெரிய கோவில் உற்சவம், முத்துப் பல்லாக்கு, திருவையாறு சப்தஸ்தானம், கருத்த்தட்டாங்குடி சப்தஸ்தானம், முஸ்லிம்கள் கொண்டாடற சந்தன கூடு அப்படின்னு வருஷம் பூரா விழா தான்.


முத்துப் பல்லாகுக்கு M.P.N.சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரம். ராத்திரி பூரா நாலு வீதியும் சுத்தி வந்து வாசிப்பா. ஒடம்புல சட்டை போட மாட்டான். ஹோட்டல்ல காபி ஆத்தறவன் ராத்திரி கச்சேரில துளி கூட சுருதி பிசகாம தாளம் போடுவான். கார்த்திகை வந்தா வடவாறு, குடமுருட்டி, காவேரி எல்லாத்துலயும் தண்ணி கரைபுரண்டு ஓடும். அதுல விளையாடுவோம். யார் வீட்டுக்கு போனாலும் சாப்பாடு உண்டு. பள்ளிகூடத்துல வாத்தியார் சாயந்தரம் சாப்ட்டு முடிச்ச பாத்திரத்தை எங்க கிட்ட சொல்லி வீட்ல கொடுக்க சொல்லிடு வேற எங்கயாவது போய்டுவார். அவர் வீட்டுக்கு போனா மாமி ரெண்டு அடை வாத்து போடுவா. ஒரு அடை ஒன்றரை இன்ச் இருக்கும். ரெண்டு சாப்டா ராத்திரி சாப்பிட முடியாது. தொட்டுக்க காலம்பறது ரச வண்டல் இருக்கும். அந்த காலமே தனி என்பார்.


நிச்சயம் இந்த கதைகள் சென்னையிலும் உண்டு. ஏன் நம் பிள்ளை பிராயத்து கதைகளே எத்தனை உண்டு? Dearborn Stories போன்ற மேற்கின் நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை.டென்னிஸ் நார்மாவை தழுவிக்கொண்டு தன் பழைய நினைவுகளில் மூழ்கிய அந்த நிமிடங்களை எண்ணி சிலிர்க்கின்றேன். நம்மூராக இருந்தால் மனைவி, "போறும் போறும், உங்களை கட்டிண்டு நான் பட்ட பாடு" என்று சொல்லியிருக்க கூடும். நம் திருமண குறுந்தகடை கூட நாம் FF செய்யாமல் ஒரு முறை பார்த்திருப்போமா? ஒரு ஞாயிறு நம் குழந்தைகளுடன் அதை அமர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமா? அதை பார்க்கும் போது மனைவியின் முகத்தில் ஏற்படும் நாணத்தை கண்டு களிப்புறும் தருணங்களுக்கு என்ன விலை கொடுக்கக் கூடும்?

2 comments:

Partha said...

Vasu,

Unga appa unga kitta share pannina antha kalathu vishayangala padikompothu romba santhosama iruku.
Thanks for sharing... eppai ellam vazhnthu irukom :)

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing