Sunday 22 July 2012

மெர்க்குரிப் பூக்களும் மாருதியும்

பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் படித்திருக்கிறீர்களா? ஒரு தொழிற்சங்க போராட்டத்தை களமாக கொண்ட கதை. சென்னை சிம்ப்சன் நிறுவனத்தில் நடந்த ஒரு போராட்டத்தை மையமாக கொண்டது என்று நினைக்கிறேன். நான் பல முறை ரசித்து வாசித்த கதைகளில் ஒன்று. சாவித்திரி, கணேசன், கோபாலன், சியாமளி, ரங்கஸ்வாமி, சங்கரன் கதாபாத்திரங்களை மறக்கவே முடியாது. கணேசன் போராட்ட களத்தில் கொலை செய்யப்பட கதை அங்கிருந்து நகர்கிறது.

மனேசர் என்னும் ஊரில் மாருதி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தற்போது நடந்து வரும் போராட்டம் பற்றி நீங்கள் படித்து வருகிறீர்கள் என்றால், மெர்க்குரிப் பூக்கள் படிக்க வேண்டியதில்லை. HR துறையை சேர்ந்த General Manager ஒருவர் கொல்லப் பட்டிருக்கிறார். மூவாயிரம் தொழிலாளர்கள் எங்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மாருதி நிறுவனத்தின் இந்திய தலைவர் R.C.பார்கவா, "காவல் துறை முழு விசாரணை முடிக்கும் வரை தொழிற்சாலை மூடப்படும்" என்று அறிவித்துள்ளார்.தொழிற்சங்கமோ இந்த வன்முறைக்கு காரணம் நிர்வாகம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்பீடோமீட்டர் தயார் செய்யும் கோயம்புத்துரை சார்ந்த Pricol நிறுவனத்தில் நடந்த தொழிற்சங்க போராட்டத்தில் அதன் மனிதவளத் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.தொழிற்சங்க போராட்டங்கள் வன்முறையில் முடிவது தொடர்ந்து பல காலமாக நடந்து வருகிறது. அரசு தரப்பில் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதாக தெரியவில்லை. வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே(அவர் தானே அமைச்சர்?), மாருதி நிறுவன விஷயம் குறித்து வாய் கூட திறக்கவில்லை.

கொலை செய்யப்பட்டுள்ள மாருதி நிறுவன அதிகாரி தான் மெர்க்குரிப் பூக்கள் கணேசன். கதையில் அவன் மனைவி சாவித்திரி மிகுந்த தைரியமும் சிந்திக்கும் திறனும் உள்ளவளாக சிருஷ்டிக்க பட்டிருப்பாள். நிஜ சாவித்திரி எப்படியோ? என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?

No comments: