Sunday 27 July 2008

அகமதாபாத், பெங்களுரு குண்டு வெடிப்பு சம்பவங்கள்

பத்திரிகைகளுக்கு இரண்டு வாரத்திற்கு தேவையான செய்தி கிடைத்துவிட்டது. சென்ற வாரம் பாராளுமன்றத்தில் நடந்த கூத்துக்களை மக்கள் இன்னும் மறக்காத நிலையில், அகமதாபாத் மற்றும் பெங்களுருவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரசியல்வாதிகள் நெஞ்சில் பாலை வார்த்து இருக்கும். பின்னே, பாராளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் பத்தே மாதங்கள் இருக்கும் நிலையில் இப்படி எதாவது நடந்தால் தான் விலைவாசி ஏற்றம், எம்பிக்களுக்கு பணம் கொடுத்த வழக்கு இதையெல்லாம் மக்கள் மறப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மைனாரிட்டி மக்களை கவர இந்த மாதிரி சம்பவங்கள் நடந்தால் தான் சௌகர்யமாக இருக்கும். உதாரணமாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது "பா.ஜா.க ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தான் குண்டு வெடிப்பு நடந்ததே தவிர காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் இல்லை, ஆகையால் தேச பாதுகாப்பு நலன் கருதி காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்" என்று சொல்வதை கேட்க நேர்ந்தால் ஆச்சர்யப்பட தேவையில்லை.

மேலே சொன்னவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய அமைப்பின் உறுப்பினர்கள் ஏன் இதை செய்தார்கள், அவர்கள் படும் துன்பங்கள் என்னென்ன, அவர்களை இந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்திற்கு தள்ளியது நாமே என்று காஷ்மீரில் இருந்து குரல் கொடுப்பார்கள்(இத்தருணத்தில் முஹம்மத் அப்சலை நினைவுப்படுத்தி கொள்வோம்).

இதை எல்லாம் சகித்துக்கொண்டு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் வீட்டில் உட்கார்ந்தபடி நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள குறைகளையும், இந்த சிஸ்டம் இப்படியேவா இருக்கும், யாராவது மாத்துவா என்று மற்றவரை கை காட்டும் பொதுஜனமாகிய நமக்கு ஒரு "ஷொட்டு" வைத்து கொள்வோம்.

வாழ்க இந்திய ஜனநாயகம்.

No comments: