Sunday 7 November 2010

தீபாவளி நிகழ்ச்சிகள்

பொதிகை தவிர்த்து மற்ற சேனல்கள் விளம்பரங்களுக்கு நடுவில் சில நிகழ்ச்சிகளை "சான்ட்விச்" செய்திருந்தன என்றே சொல்ல வேண்டும். பொதிகையில் கவிஞர் வாலியின் பேட்டி ருசிகரம். அரங்கில் இருந்த இளைஞர்/யுவதிகள் கேள்வி கணைகள் தொடுக்க வாலி அனாயாசமாக அவற்றை கையாண்டார். நீங்கள் மூன்று தலைமுறைகளாக எழுதி வருகிறீர்கள், இந்த மூன்று தலைமுறையில் உங்கள் பாடலுக்கு சிறப்பாக நடித்த நடிகர்களை சொல்லுங்கள் என்றார் ஒரு பெண். யோசைனையே செய்யாமல் சிவாஜி என்றார். தற்போது கமலை சொல்லலாம் என்றார். தனக்கு வாலி என்ற பெயரை வைத்துக்கொண்ட காரணத்தையும் அதோடு தொடர்புடைய நகைச்சுவையான நிகழ்ச்சி ஒன்றையும் குறிப்பிட்டார். ஒரு விளம்பரம் கூட இல்லாமல் பார்க்க முடிந்த நிகழ்ச்சி.

பொதிகையில் இருந்து தாவி அப்படியே "Koffee with Anu" பக்கம் சென்றால் சிறுப்பு விருந்தினர் நம்ம கமல். சித்தப்பாவை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார் அனு. ஆனால், அந்த சாயலே இல்லாமல் ஒரு விருந்தினர் போலவே கேள்விகள் இருந்தன. வழக்கம் போல் கமல் முடிவில் நாத்திக பிரச்சாரம் செய்தார். "மக்களின் தெய்வங்கள்" என்ற நூலை குறிப்பிட்டார் கமல். ஆனால் அதை எழுதியவரின் பெயரை கவனிக்க தவறிவிட்டேன். இந்தப் பதிவை படிப்பவர்கள் தெரிந்தால் கூறவும். புகைப்படங்கள் பகுதியில் சிறப்பாக இருந்தது. அதே போல் கமலை ஒரு கவிஞனாய் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தன், வாலி போன்றவர்கள் பாராட்டினார்கள். அந்த பகுதிக்கு முத்தாய்ப்பாய் ஞானசம்பந்தன் "கல்லும் சொல்லாதோ கதை" என்று ஒரு வரியை சொல்லி அதில் கமலை ஒரு வெண்பா புனைய சொல்ல, கமலும் கலக்கினார். ஒரு திரைக்கதை வல்லுனராய் கமல் பற்றி கே.பி பேசினார். கே.பி திரைக்கதைக்கு நரி, காக்கா, வடை கதையை வைத்து சொன்ன உவமை அற்புதம்.

மதியம் ஜெயா தொலைக்காட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தன் கமலை சந்தித்து தமிழ் குறித்து உரையாடினார். ஞானசம்பந்தன் கமலை அளவுக்கு மீறி புகழ்ந்ததும் கமலின் "மொக்கையும்" தாங்க முடியாததால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.மீண்டும் ஜெயாவில் மாலை நான்கரை மணிக்கு "Kings in Concert" நிகழ்ச்சி. ஹரிஹரனும் ஷங்கர் மகாதேவனும் பின்னிப் பெடலேடுத்தார்கள். "கண்டேன் காதலை" படத்தின் "கொக்கே கொக்கே பூவை போடு" பாடலின் அந்த "ஓஓஓஓ" ஸ்வரத்தை ஹரிஹரன் பாடியதை பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

No comments: