Sunday 7 November 2010

வாலி, சுஜாதா

பொதிகையில் வாலி தன் பால்ய கால நினைவுகள் பற்றி பேசும் போது ஸ்ரீரங்கத்தையும் சுஜாதாவையும் குறிப்பிட்டார். கேட்டவுடன் சுஜாதா பற்றிய நினைவுகள் பீறிட, கற்றும் பெற்றதும் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி.

வாலியின் "பாண்டவர் பூமிக்கு" பாராட்டு விழ மூப்பனார் தலைமையில் பாரதிய வித்யா பவனில் நடந்தது. நான் போனபோது, உள்ளே நுழைய முடியாதபடி கூட்டமாக இருந்ததால் கற்பகாம்பாள் மெஸ்ஸில் காபி சாப்பிட்டுவிட்டு மெரீனாவில் வாக் போகும் போது வாலியை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தேன்.

வாலி என் சிறு வயது ஸ்ரீரங்கத்து சிநேகிதர். என் அண்ணன் கிச்சாயிக்கு கொஞ்சம் சீனியர். மேலச்சித்திரை வீதிக்காரர். அவரை நான் கெடிகார ராமையாவின் வீட்டில் ஜனனி சீனிவாசனை சந்திக்க வரும் போது பார்த்திருக்கிறேன். கொஞ்சம் ஜூனியர் என்பதால் எங்களையெல்லாம் அவர்கள் இலக்கிய சர்ச்சையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். வாலியை பற்றி அதிகம் அறியப்படாத இரண்டு விஷயங்கள்...அவர் பெயரும் ரங்கராஜன், நன்றாக படம் என்பதே(ஆர்ட் ஸ்கூலில் படித்ததாக படித்த ஞாபகம்). எங்கள் "தென்றல்" கையெழுத்துப் பத்திரிகைக்குள் ஒரு மலர் போட்ட போது அவர் வரைந்த சித்திரம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

நாங்கள் பகுதி நேரத்தில் தான் இலக்கியமும் கலையும் பேசினோம். வாலி அப்போதே எதாவது சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்திலே இருக்கிறார். ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் நாடகம் போடுவார். திருச்சி வானொலி நிலையத்திற்கு நாடகங்கள் எழுதுவார், நடிப்பார். அப்போதே பாடல்களும் எழுதி இருக்கலாம். பின்னர் சென்னை சென்று கிருஷ்ணா பிக்சர்ஸ், கே.எஸ்.ஜி போன்றவர்களின் ஆரம்ப ஆதரவுடன் கஷ்டப்பட்டு முன்னேறியதை "புதியபார்வையில்" விஸ்தாரமாக எழுதியிருக்கிறார்.அந்த நாட்களில் அவருடன் எனக்கு தொடர்பு விட்டுப் போனது.

டெல்லியில் இருக்கும் போது "கற்பகம்" படத்தில் "அத்தைமடி மெத்தையடி" என்று தாலாட்டுப் பாட்டு மூலம் அவர் முதலில் பிரபலமானது('டேய், இவரை எனக்கு தெரியுமடா' வகையில்) பெருமையாக இருந்தது. கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் தனக்கென அடையாளம் தேடிக்கொண்டதும், எம்.ஜி.யாரின் நாட்களில் ஏறக்குறைய கழகத்துக் கொள்கை விளக்கமாக "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" போன்ற எளிய பாடல்கள் எழுதியதும், அரசியல் மாறுதல்களை எதிர்ப்பார்த்தோ என்னவோ..அந்த மூன்றெழுத்தும் கடமை என்று பின்குறிப்பிட்டதால் அந்தப் பாட்டு காலம் கடந்ததும், கண்ணதாசனுக்கு பின் திரை இசையில் மற்ற கவிஞர்கள் கொண்டு வந்த மாறுதல்களையும் மக்கள் ரசனையில் ஏற்ப்பட்ட திருப்பங்களையும் சமாளித்துத் தான் தாடி வளர்த்தாலும் தன் பாடல்களுக்கு தாடி வளராமல் பார்த்துக் கொண்டதும், மகாதேவனில் இருந்து ரஹ்மான் வரை தாக்குப்பிடித்ததும் மரத்தான் கவிஞர் வாலியின் சாதனைகள்.

புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் இல்லாத, பகுதி நேர எதுகைகள் கொண்ட ஓர் எளிய கவிதை வடிவத்தை தனக்கே அமைத்துக்கொண்டார். அதன் லேசான சந்தத்துடன் ராமாயண, மகாபாரதங்களை எழுதியது அவர் வாழ்வின் முத்தாய்ப்பான சம்பவங்கள். வாலியின் இதிகாச முயற்சிகளை நம் நாட்டுப்புறக் கதை பாடல்களுக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. புராணக் கதைகளைக் காவிய வடிவில் சொல்லாமல் இன்றைய உடனடி தமிழனும் புரிந்து பகிர்ந்து கொள்ளும்படி, கொச்சைப்படுத்தாமல் எளிமைப் படுத்தியிருக்கிறார். இந்த முறை நம் பாரம்பரியத்தில் உள்ளதே. "ஐவர் ராசாக்கள் கதை" போன்ற நம் நாட்டார் கதைப் பாடல்கள் இதையேதான் செய்தன.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங் கானம் நண்ணி புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்-இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினான் அரசன்

என்று கம்பம் விஸ்தாரமாக அறுசீர் விருத்தத்தில் சொன்னதை "பரதனுக்கு ராஜ்யம், ராமனுக்கு பூஜ்யம்" என்று இரண்டே வரிகளில் சொன்னார் வாலி. வாழ்த்துக்கள்.

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கற்றதும் பெற்றதும் தவறாமல் படித்தேன். மீள்வாசிப்பு அதுவும் வாலி பற்றி அருமையான அனுபவம்.

Vasu. said...

யோகன்,
வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.