Sunday, 17 April 2011

The White Tiger

2008 ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகாவின் "The White Tiger" படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை படித்த பகுதிகள் முழுதும் இந்தியா மீதான தாக்குதல் தான். சில நாட்களுக்கு முன்பு தான் ஜெமோ தனது பதிவு ஒன்றில் காசியில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல என்று எழுதியிருந்தார். அதற்கு மாறாக கங்கை நோய்களின் மொத்த வடிவம் போன்ற வரிகள் இதில்.

இந்த புத்தகத்திற்கு எதற்காக புக்கர் பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. புக்கர் வென்ற மற்ற இந்தியர்களான அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், நைபால் போன்றவர்களும் அரவிந்த் போல "india bashing" செய்து தான் அதை வென்றார்களா
என்று தெரிந்து கொள்ள அவர்களையும் படிக்க வேண்டும்.படிக்க முடியாவிட்டாலும் ஜெமோவிற்கு ஒரு மின்னஞ்சல் எழுதியாவது கேட்க வேண்டும்

Saturday, 16 April 2011

மரணம்



இரண்டு வாரங்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவு வீடு திரும்பும் போது ஏதோ ஒரு எப்.எம் அலைவரிசையில் டி.எம்.எஸ் உணர்ச்சிகரமாக பாடிக்கொண்டிருந்தார்.

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

ஏழு வயது சிறுவனாக தாயின் சிதைக்கு எரியூட்ட நின்ற அந்த கணங்கள் கண் முன் வந்து போனது. ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் தொண்டை குழியை அடைத்தது. இந்த நிமிடம் என்னை மரணம் தழுவினால் என்ன நடக்கும் என்று யோசித்தேன். வெறும் சடலமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாய் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கழுத்தை கட்டிக்கொள்ளும் குழந்தை அதே பாசத்துடன் என் சடலத்தை கட்டிக்கொள்ளுமா என்று யோசித்தேன்.

இரண்டு நாட்களுக்கு இந்த பாடலே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக இதையெல்லாம் மறந்து அன்றாட பிரச்சனைகளுக்கள் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும் போது அதெப்படி நீ என்னை மறக்கலாம் என்று மரணம் என்னை கோபித்துக் கொள்வது போல் இருந்தது நான் படித்த அந்த செய்தி.

"பாடகி சித்ரா அவர்களின் மகள் துபாய் நீச்சல் குளம் ஒன்றில் மரணம்".
உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும் என்பது நியதி. ஆனால், தன் குரலால் உலகை எல்லாம் மயங்க செய்த சித்ரா, அடக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் விளங்கும் சித்ரா, எப்போதும் இறைவன் நாமம் சொல்லும் சித்ரா, கடுகளவும் பிறர்க்கு தீது நினைக்காத சித்ரா, அவருக்கா இந்த தண்டனை?

அன்பே சிவம் படத்தில் சொல்வது போல், "என்ன மாதிரி கடவுள் இது?" பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் துயரப்பட்டு அதன் பின் பிறந்த குழந்தை. அதுவும் "autism" குறைபாடுள்ள குழந்தை. எதற்கு பத்து வருடங்கள் அவரை துன்புறுத்தி, பின்னர் குறையோடு ஒரு பிள்ளையை கொடுத்து அதையும் எட்டு வயதில் பிடுங்கிக் கொள்ள வேண்டும்? பூமியில் இருந்து கொண்டு செல்ல ஆட்களுக்கா பஞ்சம்?

உறவை பிரிந்து வாடும் சித்ரா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு நம் அனுதாபங்கள்.

Saturday, 9 April 2011

ரலேகன் சித்தி

ரலேகன் சித்தி என்ற அந்த கிராமத்தை மது ஆக்கிரமித்திருந்தது. மதுவை ஒழித்தால் அன்றி முன்னேற்றம் ஏற்படாது என்று அந்த மனிதருக்கு புரிந்தது.மக்கள் தெய்வத்திற்கு பயப்படுவார்கள் என்பதால் அவர்களை கோவிலில் ஒருங்கிணைத்து "மதுவை தீண்டமாட்டோம்" என்று சபதம் ஏற்க செய்தார். சாராய விற்பனை செய்த முப்பது கடைகள் மூடப்பட்டன."விற்றே தீருவோம், முடிந்ததை பார்" என்று சூளுரைத்த சாராய வியாபாரிகள் சிலரின் கடைகள் அந்த கிராமத்து இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆனால், இதையும் மீறி கிராம மக்கள் சிலர், அக்கம் பக்கம் இருந்த ஊர்களில் இருந்து மது வாங்கி அருந்தினர். அப்படி செய்த பனிரெண்டு பேரை கிராம மக்கள் ஊர் நடுவே கம்பத்தில் கட்டி வைத்து நையப் புடைத்தனர். அப்போது அந்த மனிதர் சொன்னார், "ஒரு தாய் தன் குழந்தை உடல் நலம் குன்றி திணறும் வேளையில் அதற்கு கசப்பான மருந்தை தருகிறாள். குழந்தைக்கு மருந்து பிடிக்காது என்ற போதிலும் அந்த குழந்தையின் நலம் கருதியே மருந்து திணிக்கப்படுகிறது. இந்த பனிரெண்டு பேருக்கு கொடுத்த தண்டனை அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும்.

அய்யா கிசன் பாபத் பாபுராவ் ஹசாரே அவர்களே, காந்தியவாதியாக இருந்த போதிலும் "ரௌத்திரம் பழக" வேண்டிய சூழ்நிலை வந்த போது அதை செய்தீர்கள். இன்று அப்படிப்பட்ட மருந்தே இந்த தேசத்திற்கு தேவைப்படுகிறது. வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற காந்தியம் உதவியது. நம்மவர்களிடம் நம்மை காத்துக்கொள்ள காந்தியம் உதவுமா என்று தெரியவில்லை. உங்கள் சித்தாந்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.