Saturday 3 January 2009

எம்.ஜி.ஆர் - 2


1960-ல் இருந்து அடுத்த 12 ஆண்டுகள் எம்.ஜி.ஆரின் பொற்காலம். இந்த 12 ஆண்டுகளில் அவர் சம்பளத்தை பேரம் பேசும் ஒரு திரைப்பட நடிகரில் இருந்து தமிழகத்தின் ஒரு முக்கியமான V.I.P-ஆக மாறினார். அவரே தமிழ் திரைப்பட வசூல் சக்கரவர்த்தி.


இரண்டாவது மனைவி காலமானார். அதாவது அவர் எம்.ஜி.ஆரின் விஸ்வரூப வளர்ச்சியை பார்க்காமலேயே இறந்துவிட்டார்.


1960-களில் மத்தியில் ஒரே நாளில் வெளி வந்த படங்கள்தான் சிவாஜியின் "கர்ணன்" மற்றும் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன்". கர்ணன் தோல்வி, வேட்டைக்காரன் சுப்பர் ஹிட்.


இத்தனைக்கும் கர்ணன் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம். சிவாஜியின் மிகச்சிறந்த நடிப்பில் வெளி வந்த படம்.


தனது பல வருட அனுபவத்தில் மக்களின் குறிப்பாக படத்தை ஓட வைக்கும் அடித்தட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை எம்.ஜி.ஆர் எப்படி பூர்த்தி செய்தார் என்பதற்கு மேற்கூறிய படங்கள் ஒரு சாட்சி. மிகச்சிறந்த நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு, நல்ல இசை எல்லாம் இருந்தும் மக்கள் கர்ணன் என்ற ஒரு தோல்வியடைந்த கதாபாத்திரத்தை விட வேட்டைக்காரன் என்ற வெற்றியாளனையே விரும்பினர்.


இந்த காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆர் தனது பிம்பத்தை உரமிட்டு வளர்த்தினார்.


எம்.ஜி.ஆர் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டார்.

எம்.ஜி.ஆர் குடி, சிகரெட், வெற்றிலை கூட போட மாட்டார்.

எம்.ஜி.ஆர் உண்மையே பேசுவார்.

எம்.ஜி.ஆர் ஏழைகளின் தோழன்.

எம்.ஜி.ஆர் அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்பார்.

எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு உதவி செய்வார்.

கடையேழு வள்ளல்களுக்கு அடுத்தபடியான எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்....போன்றவை மக்களிடையே எம்.ஜி.ஆரை பற்றிய பிம்பத்தில் சில பாகங்கள்.


எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் ஒரு நிச்சயமான சக்தி என்று இருக்கும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அது ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரின் சக்தியை வெளிச்சம் போட்டு காண்பித்தது.
1967-ல் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆருக்கு உச்சரிப்பு போனது.
இப்போது அவர் தனது பழுதடைந்த தொண்டையுடன் தமிழ் சினிமாவின் "சிம்மக்குரலோனுடன்" போட்டி போட வேண்டிய சூழ்நிலை!
தனது கடந்த கால இமேஜ் மற்றும் சினமாவின் வியாபார நுணுக்கம் போன்றவற்றை கொண்டே அவர் தன் பழுதடைந்த குரலை அவர் வென்றார்.
இதன் பிறகு வந்த எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்திலும்


கேமரா

உடைகள் (குறிப்பாக கதா நாயகியரின் உடை)

இசை பாடல் வரிகள்

கதா நாயகியரின் கவர்ச்சி


போன்றவற்றில்அவர் கவனம் செலுத்தினார்.
ஆக 1967-ல் இருந்து அதாவது தனது 50-வது வயதில் இருந்து அவர் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கிசு கிசு வந்த போது எம்.ஜி.ஆரின் வயது 50.உலகம் சுற்றும் ' வாலிபன்' வரும்போது தலைவரின் வயது "55".
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், அவரின் பிறந்த வருடம் 1917 என்று சொன்னாலும், அதற்கான ஆதாரம் என்று ஒன்றும் கிடையாது.... அவர் தன் வயதை குறைக்க வேண்டி 4-5 வருடங்கள் குறைத்து சொல்லி இருக்கலாம் (அவர் இருந்த துறை அப்படி...!) அப்படி பார்த்தால் 1967-ல் அவரின் வயது 55 , உலகம் சுற்றும் வாலிபனில் அவரின் வயது 60!.




1 comment:

முரளிகண்ணன் said...

\\இதன் பிறகு வந்த எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்திலும்
கேமராஉடைகள் (குறிப்பாக கதா நாயகியரின் உடை)இசை பாடல் வரிகள்கதா நாயகியரின் கவர்ச்சி
போன்றவற்றில்அவர் கவனம் செலுத்தினார்\\

மிக்க சரி