Monday 1 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் -1

இதற்கு முன் சில வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், துபாய் செல்வது குறித்து ஒரு உற்சாகம் கலந்த கவலை இருந்தது.உற்சாகத்துக்கு காரணம் சல்லிசான விலையில் கிடைக்கும் பேரிச்சம்பழம்(சென்னையில் லயன் டேட்ஸ் வாங்குபவர்களுக்கு தான் இந்த சிற்றின்பத்திற்க்கான காரணம் புரியும்),உலகின் மிக பெரிய கட்டிடமான Burj Dubai(இப்போது Burj Khalifa என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) திறக்கப்படும் போது நான் அங்கு இருப்பேன் மற்றும் சில அலுவல் சார்ந்த விஷயங்கள்.ஆனால், இதற்கு நடுவில் காப்பி உண்மையிலேயே ஒட்டக பாலில் தான் போடுவார்களோ, ஒரு வேலை அதை குடித்துவிட்டால் தென் தேசத்து வடமனான நம் ஆசாரம் கெட்டு போய் விடுமோ போன்ற Ph.d ரக கேள்விகள் ஒரு பக்கம் கவலை கொடுத்து கொண்டிருந்தன. இப்படி யோசித்துக்கொண்டே ஒரு வழியாக துபாய் வந்து சேர்ந்தேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) ஏழு ஊர்களை கொண்டது. அதில் ஒன்று துபாய். "Oil and Allied Products" மட்டுமே ஒரு கட்டத்தில் வருமானத்திற்கு நம்பியிருந்த துபாய் இன்று அதன் மொத்த வருமானத்தில் ஆறு சதர்விகிதத்தை மட்டுமே அதிலிருந்து பெறுகிறது. துபாயின் பொருளாதாரம் இப்போது முக்கியமாக சுற்றுலா, நிதி சார்ந்த பணிகள் மற்றும் கட்டுமான துறையில் இருந்து வருகிறது. எண்ணை கிணறுகளை நம்பி இருந்த துபாய் பொருளாதாரத்தை மாற்றிய பெருமை துபாயின் முன்னாள் துணை ஜனாதிபதியும் பிரதமருமான துபாயை ஆளும் Al Maktoum குடும்பத்தின் Sheikh Rashid bin Saeed Al Maktoum அவர்களையே சேரும். இவர் தற்போது உயிரோடு இல்லை. இவர் மூன்றாவது மகன் Sheikh Mohammed bin Rashid Al Maktoum தான் துபாயின் தற்போதைய பிரதமர்.

"My grandfather rode a camel, my father rode a camel, I drive a Mercedes, my son drives a Land Rover, his son will drive a Land Rover, but his son will ride a camel."

இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு மேல் துபாய் எண்ணை கிணறுகள் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது என்று புரிந்து konda Sheikh Rashid bin Saeed Al Maktoum அவர்கள் சொன்ன வார்த்தைகளை இவை . "Visionary" என்ற ஆங்கில வார்த்தைக்கு Sheikh Rashid bin Saeed Al Maktoum போன்றவர்கள் நல்ல உதாரணம். இவர் மகனும் தற்போதைய பிரதமருமான Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்களை தன் தந்தையை காட்டிலும் "aggressive" என சொல்லலாம். "தலைவர்களின் அகராதியில் முடியாது என்ற சொல்லே இல்லை" என்கிறார். தன் பேச்சின் மூலம் மக்களளுக்கு நிறைய ஊக்கமூட்டுகிறார். இதை எல்லாம் நம் ஊரில் ராகுல் காந்தி கூட தானே செய்கிறார் என்று உடனே கப்பித்தனமாக கேள்வி கேட்கக்கூடாது.ராகுல் காந்தி சொல்கிறார்.ஆனால், ஷேக் சொல்வதோடு நிற்காமல் செய்கிறார். Sheikh Mohammed bin Rashid Al Maktoum அவர்களை பற்றியும் அவர் எடுத்துக்கூறுகளை(quotes) பற்றியும் மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும். இதை எல்லாம் நம் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் பார்ப்பார்கள் என்று நம்புவோமாக.

Dubai Airport Free Zone(DAFZA) என்னும் இடத்தில் இருந்தது என் அலுவலகம். முதல் நாள் பேருந்து வழித்தடங்கள் தெரியாது என்பதால் ஒரு டாக்ஸி பிடித்தேன். டாக்ஸி ஓட்டுனர் கேரளாவை சேர்ந்தவர். இங்கு "God's own country" மக்களை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். இவர்கள் இல்லாவிட்டால் அரபு நாடுகள் ஸ்தம்பித்து விடும் என்று நினைக்கிறேன். இவர்கள் குரல் ஒலிக்காத இடமே இல்லை இங்கு. புதிதாக துபாய் வந்த உங்களுக்கு தவறான தொலைபேசி அழைப்பு கூட இவர்களிடமிருந்து தான் வரும். நீங்கள் அது தவறான அழைப்பு என்று சொல்லக்கூட விடமால் உங்களை தங்கள் சொந்தகாரர் என்று நினைத்து, குசலம் விசாரித்து கொச்சியில் உங்களை நம்பி அவர்கள் வாங்கியிருக்கிற கடன் வரை சொல்லுவார்கள். பின்னர் தான் பதிலே காணுமே என்று நீங்கள் யார் என்று கேட்பார்கள். டீக்கடை நடத்துவதில் இருந்து அரபு ஷேக்குகளுக்கு பணம் சம்பாதித்து தருவது வரை இவர்கள் பங்கேற்பு உண்டு.

தமிழர்கள் இவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் உள்ளனர். தமிழகத்தின் தென்கோடியில் இருந்து தன் குடும்பம் வாங்கியிருக்கும் ஒரு லட்ச ரூபாய் கடனை அடைக்க இங்கு ஓடி வரும் இளைஞர்கள் பலரை இங்குள்ள கட்டுமான வளாகங்களில்(Construction Sites) பார்க்கலாம். அதே போல் நாற்பது லட்ச ரூபாய் வீட்டை சென்னையில் வாங்கிவிட்டு மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வரும் தமிழர்களை தகவல் தொழில்நுட்பம், கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகங்களில் பார்க்கலாம்.

(இன்னும் பேசுவேன்)

1 comment:

வடுவூர் குமார் said...

சொல்லுங்க‌ சொல்லுங்க‌ ... ந‌ன்றாக‌ போகுது.