Monday 16 January 2012

பார்த்தசாரதி - ஒரு விளக்கம்

வெள்ளியன்று மாலை ஜெயா டிவியின் மார்கழி மாத நிகழ்ச்சியில் டாக்டர்.சுதா சேஷையன் அவர்கள் கீதை குறித்து பேசிக்கொண்டிருந்தார். "திருதிராட்டிரனுக்கு புறப்பார்வை கிடைத்தது ஆனால் அதை சஞ்சயனுக்கு கொடுத்து விட்டான் அவன் ஆனால் கடைசி வரை அவன் அகக்கண் திறக்கவே இல்லை, மாறாக அர்ஜுனனுக்கு அகக்கண் திறந்தது அதுவே கீதை பிறக்க வழியாயிற்று" என்றார்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் பார்த்தசாரதி என்கிற நாமத்திற்கு ஒரு அற்புதமான விளக்கம் தந்தார். இதுநாள் வரை "பார்த்தனுக்கு சாரதி" ஆகையால் பார்த்தசாரதி என்று கேட்டு வந்துள்ளோம். சுதா சேஷையன் அவர்களோ, "குந்தி சூரசேனன் மகள். சூரசேனனின் மகன் தான் கிருஷ்ணரின் தந்தை வசுதேவர். ஆகையால், கிருஷ்ணரின் அத்தை குந்தி. வாரிசு இல்லாத குந்திபோஜ மகாராஜாவுக்கு தத்து மகளாக தரப் பட்டாள் ப்ரிதா. அதனால் குந்தி என்ற பெயர்.

குந்தியின் இயற்பெயர் ப்ரிதா. ப்ரிதா என்றால் பூமி. ப்ரிதையின் மகன் அர்ஜுனன். பூமியின் மகன் அர்ஜுனன். ஆக, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாது பூமியில் பிறந்த நம் அனைவருக்கும் சாரதியாக கண்ணன் அருளியதே கீதை. இதைப் படிக்கும் போது வரும் உணர்வு எத்தகையது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சுதா சேஷையன் சொன்ன விதம் மெய் சிலிர்க்க வைத்தது.

No comments: